என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mizoram"

    சட்டசபை தேர்தல் நடைபெற்ற தெலுங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் இன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. #AssemblyElections
    ஐதராபாத்:

    சட்டசபை தேர்தல் நடைபெற்ற தெலுங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் இன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார்? என்பது இன்று பிற்பகலில் தெரிந்துவிடும்.

    90 இடங்களை கொண்ட சத்தீஷ்கார் மாநில சட்டசபைக்கு நவம்பர் 12 மற்றும் 20-ந்தேதிகளில் இரு கட்டங்களாகவும், 230 இடங்களை கொண்ட மத்தியபிரதேச சட்டசபைக்கும், 40 இடங்களை கொண்ட மிசோரம் சட்டசபைக்கும் நவம்பர் 28-ந் தேதியும் தேர்தல் நடைபெற்றது.



    119 இடங்களை கொண்ட தெலுங்கானா சட்டசபைக்கும், 200 இடங்களை கொண்ட ராஜஸ்தான் சட்டசபைக்கும் கடந்த 7-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. ராஜஸ்தானில் ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணம் அடைந்ததால் 199 தொகுதிகளில் தேர்தல் நடந்தது.

    இந்த 5 மாநிலங்களிலும் மொத்தம் 679 சட்டசபை தொகுதிகள் உள்ளன. 8,500-க்கும் அதிகமான வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஒரு லட்சத்து 74 ஆயிரத்துக்கும் அதிகமாக வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. ஓட்டுப்பதிவுக்கு பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

    5 மாநிலங்களிலும் இன்று (செவ்வாய்க்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது. இதையொட்டி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த மாநிலங்களில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்பது இன்று பிற்பகலில் தெரிந்து விடும்.

    தெலுங்கானா மாநிலத்தை பொறுத்தவரை, அங்கு முதல்-மந்திரியாக இருந்த தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் தலைவர் சந்திரசேகர ராவ் சட்டசபையை முன்கூட்டியே கலைத்துவிட்டு தேர்தலை சந்தித்தார். தெலுங்கானா ராஷ்டிர சமிதி, காங்கிரஸ்-தெலுங்குதேசம், பாரதீய ஜனதா ஆகிய 3 அணிகள் போட்டியிட்டன. இங்கு மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் 1,821 வேட்பாளர் போட்டியிட்டனர். இங்கு 43 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஆளும் பாரதீய ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவியது.

    மிசோரம் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சியான மிசோ தேசிய முன்னணி ஆகியவை மொத்தம் உள்ள 40 தொகுதிகளிலும் போட்டியிட்டன. பாரதீய ஜனதா 39 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது. அங்கு 13 மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

    தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு இருப்பதாகவும், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் மாநிலங்களில் யாருக்கு வெற்றி? என்பதில் இழுபறி ஏற்படலாம் என்றும், தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி வெற்றியை தக்கவைத்துக்கொள்ளும் என்றும் தெரியவந்து இருக்கிறது.

    இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் இந்த 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவு நாடு முழுவதும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இந்த 5 மாநில தேர்தல் முடிவு ஒரு முன்னோட்டமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

    கடந்த 2014-ம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களில் மொத்தம் உள்ள 65 தொகுதிகளில் 63 தொகுதிகளை பாரதீய ஜனதா கைப்பற்றியது. இந்த மாநிலங்களில் தற்போது பாரதீய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது.

    எனவே இந்த 3 மாநிலங்களின் தேர்தல் முடிவு பாரதீய ஜனதா கட்சியை பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. #AssemblyElections
    மிசோரம் மாநிலத்தில் இன்று நடைபெற்ற சட்டசபை தேர்தலில் சுமார் 70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன. #MizoramAssemblyElections
    ஐஸ்வால்:

    மிசோரம் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களில் இன்று சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்பட்டது.

    40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் மாநிலத்தில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் காலையிலேயே வாக்குச்சாவடிகளுக்கு வந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர். 
     
    கிராமப்புறம் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் காலையில் வாக்குப்பதிவு சற்று மந்தமாக இருந்தது. அதன்பின்னர் வாக்காளர்கள் வருகை படிப்படியாக அதிகரித்தது. தலைநகர் ஐஸ்வால் உள்ளிட்ட இடங்களில் வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் வாக்காளர்கள் காத்திருந்து வாக்களித்தனர்.



    மிசோரம் மாநில காங்கிரஸ் துணைத்தலைவர் சி.எல்.ருவாலா, ஐஸ்வால் தெற்கு-2 வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். முன்னாள் முதல் மந்திரியும் எதிர்க்கட்சியான மிசோ தேசிய முன்னணி தலைவருமான ஜோரம்தங்கா காலை 7 மணிக்கே ஐஸ்வால் வடக்கு-2 தொகுதிக்கு உட்பட்ட ராம்லன் வாக்குச்சாவடிக்கு வந்து ஓட்டு போட்டார். 

    இந்நிலையில், மாலை 5 மணியுடன் அங்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது.  இன்றைய தேர்தலில் சுமார் 71 சதவீத வாக்குகள் பதிவானதாக மாநில தேர்தல் அதிகாரி ஆஷிஷ் குந்த்ரா தெரிவித்துள்ளார். #MizoramAssemblyElections
    மத்திய பிரதேசம் மற்றும் மிசோரம் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. #MadhyaPradeshElections #MizoramElections
    இந்தூர்:

    மத்தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் அறிவித்தது. அதன்படி சத்தீஸ்கரில் நவம்பர் 12 மற்றும் 20-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துவிட்டது.

    இந்நிலையில் மத்தியப் பிரதேசம் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள 230 தொகுதிகளிலும், மிசோரமில் உள்ள 40 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் காலை முதலே வாக்குச்சாவடிகளுக்கு சென்று ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.

    மத்திய பிரதேசத்தில் மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைகிறது. மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள தொகுதிகளில் காலை 7 மணிக்கே வாக்குப்பதிவு தொடங்கியதால், பிற்பகல் 3 மணிக்கு நிறைவடையும். மத்திய பாதுகாப்பு படையினர் உட்பட 1.80 லட்சம் பேர் தேர்தலில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

    மிசோரம் மாநிலத்தை பொருத்தவரை அனைத்து தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 4 மணிக்கு நிறைவடைகிறது.

    இந்த இரு மாநில தேர்தல்களின் வாக்குகளும் டிசம்பர் 11-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் தெரியும். மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான ஆட்சியை தக்கவைக்க பாஜக  தீவிரம் காட்டுகிறது.  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும் அங்கு முகாமிட்டு சூறாவளி பிரசாரம் செய்தனர்.



    மிசோரம் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் முனைப்புடன் பாஜக தீவிர பிரசாரம் செய்திருக்கிறது. ஆட்சியைத் தக்க வைக்க காங்கிரஸ் கட்சியும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டது.

    மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என கட்சியின் மாநில தலைவர் கமல் நாத் நம்பிக்கை தெரிவித்தார். மத்திய பிரதேச மக்கள் மீது நம்பிக்கை இருப்பதாகவும், அப்பாவி மக்களை பாஜக நீண்ட காலம் சுரண்டியதாகவும் அவர் குற்றம்சாட்டினார். #MadhyaPradeshElections #MizoramElections

    மிசோரம் மாநிலத்தில் தொழில் வளர்ச்சி பெருகவும், வெளிமாநிலத்தினர் குடியேறுவதை தடுப்பதற்காகவும் 15 குழந்தைகளுக்கு மேல் பெற்று கொள்ளும் பெண்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கப்படும் என்று சமூக அமைப்பு அறிவித்துள்ளது.
    ஐஸ்வால்:

    இந்தியாவில் மக்கள் தொகை 130 கோடியை தாண்டி சென்று விட்டதால் மக்கள் தொகையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக குடும்ப கட்டுப்பாடு திட்டங்கள் கொண்டு வரப்பட்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    ஆனால், சில ஜாதி, இன அமைப்புகள் தங்கள் சமூகத்தினர் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறுவதும் ஆங்காங்கே நடக்கிறது.

    இந்த நிலையில் மிசோரம் மாநிலத்தை சேர்ந்த ஒரு அமைப்பு தங்கள் மக்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறி இருக்கிறது. மேலும் 15 குழந்தைகளுக்கு மேல் பெற்று கொள்ளும் பெண்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

    இந்த அறிவிப்பை அந்த மாநிலத்தை சேர்ந்த யோங் மிசோ சங்கம் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.

    இந்தியாவிலேயே மக்கள் அடர்த்தி குறைவான மாநிலங்களில் 2-வது இடத்தை மிசோரம் பெற்றுள்ளது. இதில் முதலிடத்தில் அருணாசல பிரதேசம் இருக்கிறது.

    மிசோரம் மாநிலத்தில் ஒரு சதுர கி.மீட்டர் பரப்பளவில் 52 பேர் மட்டுமே வசிக்கிறார்கள். இந்தியாவில் தேசிய சராசரிப்படி சதுர கி.மீட்டருக்கு 382 பேர் வசிக்கின்றனர். மிசோராமில் இந்த விகிதாச்சாரம் மிக குறைவாக இருப்பதால் மாநில மக்கள் அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டு கொள்வதாக யோங் மிசோ சங்கத்தின் தலைவர் வன்லால் ருதா தெரிவித்து இருக்கிறார்.

    மேலும் இது பற்றி அவர் கூறியதாவது:-

    மிசோரம் மாநிலத்தில் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். கடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது தேசிய அளவில் மக்கள் தொகை அதிகரிப்பு விகிதம் 2.35 சதவீதமாக இருந்தது. ஆனால், மிசோராமில் மக்கள் தொகை அதிகரிப்பு சதவீதம் 1.6 மட்டுமே இருந்தது.

    பீகார், உத்தரபிரதேச மாநிலங்களில் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை ஒப்பிடும் போது, நாங்கள் மிகவும் பின்தங்கி இருக்கிறோம். இங்கு மக்கள் தொகை அதிகரித்தால் இதன் மூலம் தொழில் வளரும். மிசோராமில் போதிய தொழிலாளர்கள் இல்லாததால் வெளி மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் குடி பெருகிறார்கள். மாநிலத்திலேயே இதற்கு தேவையான மக்கள் இருந்தால் வெளிமாநில குடியேற்றங்கள் இங்கு வராது.

    தற்போது வங்காள தேசத்தில் இருந்து அசாம் வழியாக ஏராளமானோர் குடியேறுகிறார்கள். அதே போல் மியான்மர் நாட்டில் இருந்தும் இங்கு சட்ட விரோதமாக குடியேறுகின்றனர்.

    இந்த மாநிலத்தில் ஏராளமான நிலப்பரப்பு இருப்பதால் அவர்கள் இங்கு குடியேறி ஆக்கிரமித்து கொள்ளும் நிலை இருக்கிறது.

    இந்த குடியேற்றங்கள் நடக்காமல் இருக்க வேண்டும் என்றால் எங்கள் மக்கள் தொகை அதிகரிக்க வேண்டும். இதற்காகத்தான் எங்கள் பெண்களை அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளும்படி ஊக்குவிக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    மிசோரம் மாநிலத்தில் தொடர்ந்து பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நிலச்சரிவு ஏற்பட்டு இரண்டடுக்கு மாடி வீடு சரிந்த விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #MizoramLandslide
    அய்ஸ்வால்:

    மிசோரம் மாநிலத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்யும் மழையினால் சில மாவட்டங்களில் ஆறுகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து பாய்கிறது.

    இந்நிலையில், லுங்கேலி மாவட்டத்தில் குடியிருப்பு பகுதிகளின் வழியாக பாய்ந்தோடிய வெள்ள நீரால் மண் அரிப்பு ஏற்பட்டு, இரண்டு மாடிகளை கொண்ட ஒரு வீடு குவியலாக சரிந்து விழுந்தது.

    இந்த விபத்தில் அந்த வீட்டில் குடியிருந்த பத்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 4 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.  #MizoramLandslide 
    ஒடிசா மற்றும் மிசோரம் மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். #OdishaGovernor #MizoramGovernor

    புதுடெல்லி:

    பீகார் மாநில ஆளுநரான சத்ய பால் மாலிக்,  ஒடிசா மாநிலத்தின் ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில், ஒடிசா மாநிலத்தின் புதிய ஆளுநராக பேராசிரியர் கணேஷி லால் நியமிக்கப்பட்டுள்ளார். 

    மேலும் மிசோரம் மாநிலத்தின் புதிய ஆளுநராக கேரள மாநில முன்னாள் பா.ஜ.க. தலைவர் கும்மணம் ராஜசேகரனை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். #OdishaGovernor #MizoramGovernor
    மிசோரம் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. #MizoramLandslide
    ஐசால்:

    வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரம் மாநிலத்தின் ஐசால் மாவட்டத்தில் இன்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. சீமாபாக் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள சில வீடுகள் மண்ணில் புதைந்தன. இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களின் உடல்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாக ஐசால் மாவட்ட எஸ்.பி. தெரிவித்தார்.

    அதேசமயம், நிலச்சரிவு ஏற்பட்டபோது காணாமல் போனவர்களில் மேலும் சிலர் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர்களும் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. எனவே, உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது. #MizoramLandslide
    ×