என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Puducherry"

    • தொகுதியில் எந்த பிரச்சனைக்கும் எங்களை அணுகலாம்.
    • மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் காங்கிரசுக்கு ஓட்டு போட வேண்டும்.

    தமிழகம், புதுவைக்கான சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.

    தேர்தலுக்கான முன் ஏற்பாடுகளை அரசியல் கட்சிகள் தொடங்கி விட்டன. எந்தெந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பு, வேட்பாளர் யார்? என்ற ஆலோசனையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக உள்ளன.

    அதேபோல் முன்னாள் எம்.எல்.ஏக்கள் மற்றும் புதிய வேட்பாளர்கள் மக்களை சந்திக்க தொடங்கி விட்டனர். கட்சி தாவல் படலங்களும் அரங்கேற தொடங்கியுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி இழந்த செல்வாக்கை பெற்று புதுவை காங்கிரசின் கோட்டை என்பதை நிலை நாட்ட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளனர்.

    இதனால் மற்ற கட்சிகளை விட ஒரு படி மேலே சென்று தேர்தல் பிரசாரத்தையே தொடங்கியுள்ளனர். புதுவை நெல்லித்தோப்பு தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திய அரசியலமைப்பை காப்போம் பிரசார பொதுகூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

    கூட்டத்தில் பேசிய முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால் காங்கிரசுக்கு ஓட்டு போடுங்கள் என வாக்கு சேகரிக்கும் பணியை தொடங்கினார். அவர் மேலும் பேசியதாவது:-

    ரங்கசாமி ஆட்சியில் என்ன செய்துள்ளார்? கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினாரா? தேர்தல் தினத்தில் கொடுக்கும் பணத்தை வைத்து முடிவெடுத்தால் உங்கள் வாழ்க்கை இருண்டு விடும். யாருக்கு ஓட்டு போட்டால் தொகுதி வளர்ச்சியடையும் என சிந்திக்க வேண்டும்.

    தொகுதியில் எந்த பிரச்சனைக்கும் எங்களை அணுகலாம். வரும் தேர்தலில் காங்கிரசுக்கு வாக்களியுங்கள். மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் காங்கிரசுக்கு ஓட்டு போட வேண்டும். உங்களுக்கு வேண்டியதை செய்து தருவோம்.

    இவ்வாறு நாராயணசாமி பேசினார்.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பெத்தபெருமாள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், கார்த்திகேயன், சீனியர் துணைத்தலைவர் தேவதாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • முத்ரா கடன் திட்டத்திற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தனர்.
    • நாடு முழுவதும் 52 கோடி பேர் பயனடைந்து இருக்கிறார்.

    புதுச்சேரி:

    பிரதம மந்திரியின் முத்ரா கடன் திட்டம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவு அடைந்துள்ளது. இதையொட்டி இந்தியன் வங்கி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட முத்ரா கடன் திட்ட பயனாளிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி புதுச்சேரி கவர்னர் மாளிகையில் நடந்தது. விழாவிற்கு கவர்னர் கைலாஷ்நாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயனாளிகளுடன் கலந்துரையாடல் நடத்தினார்.

    அப்போது பயனாளிகள் முத்ரா வங்கிக் கடன் தங்கள் வாழ்க்கையில் மறுமலர்ச்சி கொண்டு வந்ததாக கூறினர். மேலும் குறைந்த வட்டியில் தொழில் முன்னேற்ற ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்டதுடன், தற்போது மற்றவர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கி உதவி வருவதையும் உருக்கமாக எடுத்துக் கூறினர். முத்ரா கடன் திட்டத்திற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தனர்.

    தொடர்ந்து கவர்னர் கைலாஷ்நாதன் பேசும்போது முத்ரா கடன் திட்டத்தால் பயன் பெற்றவர்கள் மற்றவர்களுக்கும் இதுகுறித்து எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்த திட்டத்தில் தற்போது ரூ.40 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் 52 கோடி பேர் பயனடைந்து இருக்கிறார். குறிப்பாக இளைஞர்கள், பெண்கள் அதிகளவில் பயனடைந்து இருக்கிறார்கள். இந்த திட்டம் அதன் இலக்கை நோக்கி சரியாக சென்று கொண்டு இருக்கிறது என்று கூறிய படி கவர்னர் கைலாஷ்நாதன் உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார். பின்னர் கண் கண்ணாடியை கழற்றி விட்டு கண்ணீரை துடைத்தார்.

    தொடர்ந்து புதிய பயனாளிகளுக்கு முத்ரா கடன் வழங்குவதற்கான ஆணைகளை கவர்னர் வழங்கினார்.

    • போலீஸ் சிறப்பு உதவி சப்-இன்ஸ்பெக்டர் சத்தியராஜ் மற்றும் போலீசார் கடற்கரை சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • 3 பேரையும் போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரிக்கு தினந்தோறும் வெளி மாநிலங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். அவர்கள் புதுச்சேரி கடற்கரை அழகை ரசிப்பது வழக்கம்.

    இதற்கிடையே புதுச்சேரி கடற்கரைக்கு வருகைதரும் சுற்றுலா பயணிகளை வாலிபர்கள் கேலி கிண்டல் செய்து ரகளையில் ஈடுபடுவதாக ஒதியஞ்சாலை போலீசாருக்கு புகார் வந்தது.

    போலீஸ் சிறப்பு உதவி சப்-இன்ஸ்பெக்டர் சத்தியராஜ் மற்றும் போலீசார் கடற்கரை சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்குள்ள டூயூப்ளக்ஸ் சிலை அருகே மதுபோதையில் 3 வாலிபர்கள் சுற்றுலா பயணிகளிடம் ரகளையில் ஈடுபட்டனர். போலீசார் எச்சரித்தும் அவர்கள் அங்கிருந்து செல்லவில்லை.

    இதையடுத்து 3 பேரையும் போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியை சேர்ந்த அஜித்குமார் (வயது 27), ராமநாதபுரம் அடுதாகுடியை சேர்ந்த முகேஷ் (26), புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி பகுதியை சேர்ந்த மணிகண்டன் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    இதேபோல் கடற்கரை சாலையில் சீகல்ஸ் ஓட்டல் அருகே குடிபோதையில் பொதுமக்களிடம் ரகளை செய்த திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்த பிரசாத் (30), புதுக்கோட்டை மாவட்டம் போஸ் நகரை சேர்ந்த கருப்பையா (29) ஆகியோரை கைது செய்தனர்.

    • ஏற்கனவே முதலமைச்சர் ரங்கசாமி வீட்டுக்கு 2 முறை இமெயில் மூலம் மிரட்டல் வந்தது.
    • பிரெஞ்சு தூதரகம், முல்லா வீதியில் உள்ள பள்ளிவாசலுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த சில வாரங்களாக கவர்னர் மாளிகை, முதலமைச்சர் ரங்கசாமி வீடு, பிரெஞ்சு தூதரகம், ஜிப்மர் ஆஸ்பத்திரி மற்றும் அரசு அலுவலகங்கள், தனியார் விடுதிகளுக்கு தொடர்ந்து இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வருகிறது.

    இமெயில் மூலம் மிரட்டல் விடுபவர் யார்? என்பதை கண்டறிவது சவாலாக உருவெடுத்துள்ளது. புதுவை சைபர் கிரைம் போலீசார் மத்திய சைபர் கிரமை் போலீசார் உதவியை நாடியுள்ளனர்.

    மிரட்டல் புரளி என்றாலும், தொடர்ந்து போலீசார் மிரட்டல் வரும் இடங்களுக்கு சென்று வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாயுடன் சோதனை நடத்துகின்றனர். ஏற்கனவே முதலமைச்சர் ரங்கசாமி வீட்டுக்கு 2 முறை இமெயில் மூலம் மிரட்டல் வந்தது.

    இந்நிலையில் இன்று காலையில் டி.ஜி.பி. அலுவலக மெயிலுக்கு முதலமைச்சர் ரங்கசாமியின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் வந்தது.

    இதையடுத்து கோரிமேடு போலீசார் திலாசுப்பேட்டை மற்றும் கோரிமேடு அப்பா பைத்தியம் சுவாமிகள் கோவில் வளாகத்தில் உள்ள முதலமைச்சர் ரங்கசாமியின் வீடுகளில் சோதனை நடத்தினர். வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு இந்த சோதனை நடந்தது. இதில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.

    இதனிடையே ஜிப்மர் மருத்துவமனைக்கும் இமெயில் மூலம் மிரட்டல் வந்தது. இதுதொடர்பாக ஜிப்மர் நிர்வாகம் கோரிமேடு போலீசுக்கு தகவல் கொடுத்தது. போலீசார் ஜிப்மரில் சோதனை நடத்தினர்.

    இதேபோல பிரெஞ்சு தூதரகம், முல்லா வீதியில் உள்ள பள்ளிவாசலுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இங்கும் போலீசார் சோதனை நடத்தினர். இந்த தொடர் வெடிகுண்டு மிரட்டலை விடுக்கும் நபரை கண்டு பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

    • விசா ஏற்கனவே காலாவதியானதும் தெரியவந்துள்ளது.
    • லாஸ்பேட்டை மற்றும் மாகி போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    புதுச்சேரி:

    காஷ்மீர் மாநிலம் பகல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரி ழந்தனர். இந்த சம்பவத்துக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது.

    பல்வேறு விசாக்களில் இந்தியா வந்த பாகிஸ்தானியர் வெளியேற காலக்கெடு நிர்ணயித்தது. 'சார்க்' விசாவில் வந்தவர்கள் ஏப்ரல் 26-ந் தேதிக்குள்ளும், இதர விசாக்களில் வந்தவர்கள் 27-ந்தேதிக்குள்ளும், மருத்துவ விசாவில் வந்தவர்கள் 29-ந் தேதிக்குள்ளும் வெளியேறகெடு விதிக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் புதுச்சேரி மாநிலத்தில் 2 பாகிஸ்தானியர்கள் தங்கி வசித்து வந்தது தெரியவந்தது. புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஹனீப்கான் (வயது 39). இவருக்கும் பாகிஸ்தானை சேர்ந்த உறவினரான பஷியா பானு (38) என்பவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். திருமணத்துக்கு பின் பஷியா பானு புதுச்சேரியில் கணவருடன் வசித்து வந்தார்.

    இதேபோல் புதுச்சேரி பிராந்தியமான மாகிக்கு பாகிஸ்தானை சேர்ந்த பஷீர் (65) என்பவர் 2016-ம் ஆண்டு மருத்துவ சிகிச்சைக்கான விசாவில் வந்தார். அதன்பின் அவர் மாகியில் தங்கிவிட்டார்.

    இந்த நிலையில் பஷியா பானு, பஷீர் ஆகியோர் இந்தியாவில் இருந்து வெளியேற புதுச்சேரி வெளிநாட்டினர் பதிவு அலுவலக அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இது தொடர்பாக அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் இவர்களின் விசா ஏற்கனவே காலாவதியானதும் தெரியவந்துள்ளது.

    இது தொடர்பாக லாஸ்பேட்டை மற்றும் மாகி போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • போலீஸ் சூப்பிரண்டு ரகுநாயகம், இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையில் போலீசார் ஆளுநர் மாளிகையில் சோதனை நடத்தினர்.
    • ஆளுநர் மாளிகை தற்காலிகமாக இடம் பெயருகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் தொடர்ந்து வருகிறது.

    ஆளுநர் மாளிகை, முதலமைச்சர் வீடு, பிரெஞ்சு தூதரகம், கலெக்டர் அலுவலகம் ஆகிய இடங்களுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

    தொடர்ந்து கடந்த வாரத்தில் நட்சத்திர விடுதிகள், ரெஸ்டாரண்ட்டுகள் ஆகியவற்றுக்கும் வெடிகுண்டு மிரட்டல் இமெயில் மூலம் வந்தது.

    போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர். ஆனால் இதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது. இருப்பினும் மிரட்டல் தொடர் கதையாகி உள்ளது.

    வெடிகுண்டு மிரட்டல் நபரை போலீசார் கண்டறிய முடியவில்லை. புதுவை சைபர் கிரைம் போலீசாரால் துப்புதுலக்க முடியவில்லை. இதனையடுத்து மத்திய சைபர் கிரைம் போலீசார் உதவியை நாடியுள்ளனர்.

    இந்த நிலையில் இன்று புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு இமெயிலில் ஒரு தகவல் வந்தது. அதில், ஆளுநர் மாளிகையில் வெடிகுண்டு இருப்பதாகவும் சிறிது நேரத்தில் வெடிக்கும் என தகவல் இருந்தது.

    இதுகுறித்து பெரியக்கடை போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். போலீஸ் சூப்பிரண்டு ரகுநாயகம், இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையில் போலீசார் ஆளுநர் மாளிகையில் சோதனை நடத்தினர். வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் ஆகியவற்றுடன் சோதனை நடந்தது. இறுதியில் வெடிகுண்டு புரளி என்பது தெரிய வந்தது.

    இதனிடையே ஆளுநர் மாளிகை தற்காலிகமாக இடம் பெயருகிறது. இதற்கான கணபதி ஹோமம் இன்று அதிகாலை கடற்கரை சாலையில் உள்ள கலாச்சார மையத்தில் நடந்தது.

    இதனால் ஆளுநர் கைலாஷ்நாதன் மற்றும் அவரது குடும்பத்தினர், ஆளுநர் மாளிகை அதிகாரிகள் தற்காலிக ஆளுநர் மாளிகையில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உச்சநீதி மன்றத்தை பா.ஜ.க. எம்.பி.க்கள் மிரட்டுகின்றனர்.
    • துணை ஜனாதிபதி உச்சநீதி மன்றம் செயல்பாடு குறித்து கருத்து தெரிவித்திருப்பது வேதனை.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக அரசுக்கு சாதகமாக கவர்னர் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை பா.ஜ.க.வினர் கண்டிக்கின்றனர். உச்சநீதி மன்றத்தை பா.ஜ.க. எம்.பி.க்கள் மிரட்டுகின்றனர். அரசியல் அமைப்பு சட்டத்தையே சிதைக்க வேண்டும் என்பதற்கான முயற்சிகளை எடுத்து கொண்டிருக்கிறார்கள்.

    பாராளுமன்றம் பெரியதா அல்லது உச்சநீதி மன்றம் பெரியதா என்ற கேள்வியை எழுப்பு கின்றார்கள். அது பேசும் பொருளாக மாறியுள்ளது. துணை ஜனாதிபதி உச்சநீதி மன்றம் செயல்பாடு குறித்து கருத்து தெரிவித்திருப்பது வேதனையானது.

    இதை கண்டித்தும், அரசியலமைப்பை பாதுகாக்கவும் மே 1-ந் தேதி புதுச்சேரியில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும்.

    மே 3-ந் தேதி முதல் 10-ம் தேதி வரை மாவட்ட ரீதியில் நேஷனல் ஹெரால்டு நாளிதழ் வழக்கு விபரத்தை தெரிவிக்கும் வகையில் போராட்டம் நடத்தப்படும். மே 11-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை வேலை வாய்ப்பின்மை, விலைவாசி உயர்வை கண்டித்து தொகுதிதோறும் போராட்டம் நடத்தப்படும். மே 21-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை வீடுகள் தேடிச்சென்று மக்களை சந்திப்பு நடத்தப்படும்

    இவ்வாறு வைத்திலிங்கம் எம்.பி. கூறினார்.

    • ஓட்டலில் தங்கியிருந்த சுற்றுலா பயணிகள், ஊழியர்களை வெளியேற்றி அறை அறையாக சோதனை நடத்தினர்.
    • போலீசார் 2 ஓட்டல்களுக்கும் இரு பிரிவாக பிரிந்து சென்று சோதனை நடத்தினர்.

    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த சில வாரங்களாக அரசு அலுவலகங்களுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

    கவர்னர் மாளிகை, கலெக்டர் அலுவலகம், ஜிப்மர் மருத்துவமனை, பிரெஞ்சு துாதரகம் ஆகிய அலுவலகங்களுக்கு மின் அஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இந்த அலுவலகங்களில் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் மூலம் அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தினர்.

    சோதனையில் புரளி என தெரிய வந்தது. தொடர்ந்து வந்த மிரட்டலை அலட்சியம் செய்ய முடியாமல் போலீசார் தவித்தனர். மின் அஞ்சல் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலை அனுப்பியது யார்? என போலீசாரால் கண்டறிய முடியவில்லை.

    இதனால் புதுவை சைபர் கிரைம் உதவியை நாடினர். அவர்கள் மத்திய சைபர் கிரைம் போலீசார் உதவியை நாடியுள்ளனர். இதில் மிரட்டல் விடுத்த நபரை கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரை போலீசார் கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இதுவரை அரசு அலுவலகங்களை குறிவைத்து மிரட்டல் விடுத்து வந்த மர்ம ஆசாமி தற்போது முதலமைச்சர் வீடு மற்றும் தனியார் நட்சத்திர ஓட்டல்களுக்கு மின் அஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள முதலமைச்சர் ரங்கசாமி வீட்டுக்கு விரைந்து சென்றனர். அப்போது முதலமைச்சர் ரங்கசாமி வீட்டில் இல்லை.

    தொடர்ந்து அந்த வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் அங்குலம், அங்குலமாக வெடி சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.

    இதுபோல் புதுவை கடற்கரை சாலையில் உள்ள புரோமனன்ட், அஜந்தா சந்திப்பில் உள்ள செண்பகா ஆகிய நட்சத்திர ஓட்டல்களுக்கும் இன்று காலை மின் அஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

    இதையடுத்து போலீசார் 2 ஓட்டல்களுக்கும் இரு பிரிவாக பிரிந்து சென்று சோதனை நடத்தினர்.

    ஓட்டலில் தங்கியிருந்த சுற்றுலா பயணிகள், ஊழியர்களை வெளியேற்றி அறை, அறையாகவும், சோதனை நடத்தினர். ரெஸ்டாரெண்ட், சமையல் அறை, பார், கார் பார்க்கிங் ஆகியவற்றில் அங்குலம், அங்குலமாக வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.

    மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. 2 மணி நேரம் சோதனை நடத்தியும்வெடிகுண்டு ஏதும் கிடைக்கவில்லை. இது புரளி என தெரிய வந்தது. ஒருபுறம் போலீசார் நிம்மதியடைந்தாலும், இது போல தொடர் மிரட்டலால் போலீசார் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    முதலமைச்சர் ரங்கசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பிளாஸ்டிக் பொருட்களை கட்டுப்படுத்துவது பற்றி அனைத்து மாநிலங்களும் 2024-ம் ஆண்டுக்கான அறிக்கையை சமர்ப்பித்தது.
    • 15 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    நாடு முழுவதும் கடந்த 2022-ம் ஆண்டு ஒருமுறை பயன்படுத்தும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

    இந்த தடை உத்தரவு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் எவ்வாறு அமல்படுத்தப்படுகிறது என்பது குறித்து மத்திய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை அமைச்சகம் 6 மாதத்திற்கு ஒருமுறை ஆய்வு கூட்டம் நடத்தி வருகிறது.

    இந்த கூட்டத்தில் அனைத்து மாநில தலைமை செயலாளர்கள், சுற்றுச்சூழல் துறை செயலாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    கடந்த மாதம் 27-ந்தேதி தேசிய சிறப்பு ஆய்வு கூட்டம் டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை கட்டுப்படுத்துவது பற்றி அனைத்து மாநிலங்களும் 2024-ம் ஆண்டுக்கான அறிக்கையை சமர்ப்பித்தது.

    அதில் பிளாஸ்டிக் பறிமுதல் செய்ததில் தேசிய அளவில் புதுச்சேரி மாநிலம் முதலிடமும், பிளாஸ்டிக்கை கட்டுப்படுத்துவதில் 3-வது இடத்தையும் பிடித்துள்ளது. இங்கு கடந்த 2024-ம் ஆண்டில் பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் மற்றும் கடைகளில் 1,305 ஆய்வுகள் நடத்தப்பட்டு, சுமார் 15 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.15 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    தேசிய அளவில் டெல்லி முதலிடமும், மராட்டியம் 2-வது இடமும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    • புதுச்சேரி முழுவதும் பரவலாக மிதமான மழை பெய்தது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்தே கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    புதுச்சேரியில் தினமும் சராசரியாக 96 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வருகிறது. இரவு நேரங்களிலும் வெப்பச்சலனம் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் தூக்கம் இழந்து தவிக்கும் நிலை உள்ளது.

    வெயிலின் தாக்கத்தை சமாளிக்க பொதுமக்கள் இளநீர், நுங்கு, தர்பூசணி, கிர்ணி, பழச்சாறு உள்ளிட்டவற்றை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். இதனால் அவற்றின் விற்பனை அதிகரித்து வருகிறது.

    இதற்கிடையே புதுச்சேரியில் நேற்று அதிகபட்சமாக 96.26 டிகிரி பாரன்ஹீட பதிவானது. இந்நிலையில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, அதே பகுதியில் வலுவிழந்தது. இருப்பினும், அதே மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலவுகிறது.

    இதன் காரணமாக, 11-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.

    அதன்படி நேற்று இரவு 9 மணியளவில் புதுச்சேரி முழுவதும் பரவலாக மிதமான மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிச்சியான சூழல் நிலவியது. திடீரென பெய்த மழையால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியில் மழையில் நனைந்தபடியே சென்றனர்.

    • புதுச்சேரியில் அரசின் பெரும்பாலான பஸ்கள் இயங்கவில்லை.
    • புதுவையை பொறுத்தவரை தனியார் பஸ்களே அதிகம்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசின் சார்பு நிறுவனமான சாலை போக்குவரத்து கழகத்தின் (பி.ஆர்.டி.சி.) சார்பில் நகரம், கிராமம், வெளிமாநில பகுதிகளான சென்னை, பெங்களூரு, குமுளி, கடலூர், நாகர்கோவில், மாகி, திருப்பதி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    அரசு போக்குவரத்து கழகத்தில் சுமார் 40 ஊழியர்கள் மட்டும்தான் நிரந்தர பணியாளர்களாக உள்ளனர். டிரைவர், கண்டக்டர், பணிமனை ஊழியர்கள் என சுமார் 130-க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த ஊழியர்களாக உள்ளனர். இவர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி தொடர்ந்து பல ஆண்டாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    அவ்வப்போது பணி நிரந்தரம் கோரி போராட்டமும் நடத்திவந்தனர். அரசு சார்பில் உறுதிமொழி அளித்தவுடன் போராட்டம் கைவிடப்படும்.

    இந்த நிலையில் பணி நிரந்தரம் செய்யக்கோரி இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக ஒப்பந்த ஊழியர்கள் அறிவித்திருந்தனர். இதற்காக சங்கத்தின் சார்பில் வேலைநிறுத்த நோட்டீசை நிர்வாகத்திடம் வழங்கியிருந்தனர்.

    இதன்படி இன்று காலை ஒப்பந்த ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இதனால் புதுச்சேரியில் அரசின் பெரும்பாலான பஸ்கள் இயங்கவில்லை. புதுச்சேரி நகரம், கிராமப்புறங்களுக்கு இடையே இயக்கப்படும் பஸ்கள் முழுமையாக ஓடவில்லை. காலை நேரத்தில் சென்னைக்கு மட்டும் நிரந்தர பணியாளர்கள் மூலம் பஸ்கள் இயக்கப்பட்டது.

    நிரந்தர பணியாளர்கள் எண்ணிக்கையில் குறைவாகவும், ஷிப்ட் முறையில் பணியாற்றுவதாலும் அனைத்து பஸ்களையும் இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. புதுவையை பொறுத்தவரை தனியார் பஸ்களே அதிகம். தமிழக அரசின் பஸ்கள் புதுவையில் இருந்தும், அண்டை மாவட்டங்களில் இருந்தும் புதுச்சேரி வழியாக இயக்கப்படுகிறது.

    இதனால் பயணிகள் பெரும் அவதிக்கு ஆளாகவில்லை. இருப்பினும் புதுச்சேரியின் கிராமப்புற பகுதிகளில் தனியார் பஸ்கள் செல்லாத பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள் இயங்காததால் உட்புற கிராமப்புற மக்கள் புதுச்சேரிக்கு வந்து செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகினர்.

    போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த ஊழியர்கள் புதிய பஸ்நிலையம் பின்புறம் உள்ள பணி மனை முன்பு திரண்டு பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • புதுச்சேரியை மீண்டும் காங்கிரசின் கோட்டை என உறுதிப்படுத்த காங்கிரஸ் முயற்சிகள் எடுத்து வருகிறது.
    • கூட்டணியை பற்றி கவலைப்படாமல் காங்கிரஸ் அடுத்தகட்ட நகர்வுக்கு முன்னேறி செல்கிறது.

    புதுச்சேரி:

    அகில இந்திய அளவில் பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து போட்டியிட்டாலும், மாநில அளவிலான தேர்தல்களில் கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது.

    டெல்லி மாநில தேர்தலில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரசும் எதிர் எதிரில் போட்டியிட்டது. அடுத்த ஆண்டில் பீகார், மேற்கு வங்காளம், தமிழ்நாடு, புதுச்சேரி என அடுத்தடுத்து மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

    தமிழகம், புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் இப்போதே அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள வியூகத்தை தொடங்கியுள்ளனர். காங்கிரஸ் கோட்டை என கருதப்பட்ட புதுச்சேரி கடந்த சட்டமன்ற தேர்தலில் கைநழுவி போனதோடு, 30 தொகுதிகளில் காங்கிரசுக்கு 2 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே கிடைத்து பலகீனமாகியுள்ளது.

    இதனால் புதுச்சேரியை மீண்டும் காங்கிரசின் கோட்டை என உறுதிப்படுத்த காங்கிரஸ் முயற்சிகள் எடுத்து வருகிறது. சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வேட்பாளரை வீழ்த்தி காங்கிரஸ் வெற்றி கண்டது.

    ஆனாலும் இந்த வெற்றியை காங்கிரசாரால் முழுமையாக தனதாக்கிக்கொள்ள முடியவில்லை. ஏனெனில் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியில் இடம்பெற்ற தி.மு.க. சரிபாதி தொகுதிகளை பிரித்து தேர்தல் பணிகளை மேற்கொண்டது.

    அதோடு, தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின், புதுச்சேரிக்கு வந்து தேர்தல் பிரசாரம் செய்தார்.

    இதுதான் காங்கிரசின் வெற்றிக்கு காரணம் என தி.மு.க. உரக்க குரல் கொடுத்து வருகிறது. அதோடு, சுமார் கால் நுாற்றாண்டாக ஆட்சியில் இல்லாத தி.மு.க., வருகிற சட்டமன்ற தேர்தலில் புதுச்சேரியை கைப்பற்றி ஆட்சியை பிடிக்க வேண்டும் என நினைக்கிறது.

    இதனால் அவ்வப்போது இந்தியா கூட்டணிக்கு தாங்கள்தான் தலைமை என்ற ரீதியில் தி.மு.க. பேசியும், செயல்பட்டும் வருகிறது. அதேநேரத்தில் தமிழகத்தில் இந்தியா கூட்டணிக்கு தி.மு.க. தலைமை தாங்குவதுபோல, புதுச்சேரிக்கு காங்கிரஸ்தான் தலைமை தாங்கும் என காங்கிரசார் அடித்து கூறி வருகின்றனர்.

    இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள பிரதான கட்சிகளான தி.மு.க.வும், காங்கிரசும் இப்படி மோதி கொள்ளும் சூழ்நிலையில், மற்ற கட்சிகளான இந்தியகம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு ஆகிய கட்சிகள் தனி ஆவர்த்தனம் செய்து வருகின்றன. ஆளும் என். ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. அரசை எதிர்த்து தனித்தனி போராட்டமும் நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே சமீபத்தில் புதுச்சேரிக்கு வந்த புதிய காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர், கூட்டணியை பற்றி காங்கிரசார் கவலைப்பட வேண்டாம். அனைத்து தொகுதியிலும் காங்கிரஸ் போட்டியிடும் என்ற நிலையில் தேர்தல் பணிகளை தொடங்குங்கள், பூத்களை வலுப்படுத்துங்கள் என கூறினார்.

    இதேபோல மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோரும் கூட்டணி பற்றி தேர்தலின்போது முடிவு செய்யலாம், அனைத்து தொகுதியிலும் காங்கிரஸ் தேர்தல் பணிகளை மேற்கொள்ளுங்கள் என அறிவுறுத்தினர்.

    எந்த தொகுதியில் யாருக்கு செல்வாக்கு உள்ளதோ? அவர்களுக்குத்தான் போட்டியிட வாய்ப்பு தரப்படும். கூட்டணி கட்சிகளின் தொகுதியாக இருந்தாலும், அந்த தொகுதியை காங்கிரசுக்கு கேட்டு பெறுவோம் என தெரிவித்துள்ளனர். அதோடு காங்கிரஸ் சார்பில் தொகுதிவாரியாக செயல்வீரர்கள் கூட்டமும் நடத்தி, கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கையும் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட அகில இந்திய தலைமை தனியார் நிறுவனம் மூலம் ரகசிய சர்வே நடத்தியுள்ளது. இதில், புதுவை, காரைக்காலில் 12 தொகுதிகள் காங்கிரசுக்கு சாதகமாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இது புதுச்சேரி காங்கிரசாருக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதில் ஒரு சில தொகுதிகள் தி.மு.க. போட்டியிட்டு, வெற்றி பெற்ற தொகுதிகள். இருப்பினும் இந்த தொகுதிகளில் பணிகளை தீவிரப்படுத்த கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது. மேலும் பெரும்பான்மை பெரும் வகையில் இன்னும் சில தொகுதிகளை சுட்டிக்காட்டி, அந்த தொகுதிகளிலும் கடுமையாக பணியாற்றும்படி கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.

    இதனால் கூட்டணியை பற்றி கவலைப்படாமல் காங்கிரஸ் அடுத்தகட்ட நகர்வுக்கு முன்னேறி செல்கிறது.

    ×