என் மலர்
நீங்கள் தேடியது "selvaperunthagai"
- பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றதிலிருந்தே தமிழ்நாட்டையும், தமிழர்களையும் ஜனநாயக விரோத திட்டங்கள் மூலம் வஞ்சித்து வருகிறது.
- தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய ரூ.4,034 கோடியை தராமல் கிராமப்புற மக்களின் வாழ்வில் விளையாடுகிறது ஒன்றிய அரசு.
சென்னை:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றதிலிருந்தே தமிழ்நாட்டையும், தமிழர்களையும் ஜனநாயக விரோத திட்டங்கள் மூலம் வஞ்சித்து வருகிறது.
இந்தி திணிப்பு, மும்மொழிக் கொள்கை, புயல், வெள்ளம் பாதித்த தமிழ்நாட்டின் மாவட்டங்களுக்கு பேரிடர் நிதி ஒதுக்காதது, தமிழ்நாட்டிற்கு பள்ளிக்கல்விக்காக ஒதுக்கிய நிதியை வழங்காமல் இருப்பது, உயிர்கொல்லி நீட் தேர்வால் அன்றாடம் தற்கொலைகள் அதிகரித்து கொண்டுள்ளது, இந்த கொடிய தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்காதது, மாநில திட்டங்களுக்கு ஒன்றிய நிதி ஒதுக்கீட்டில் பாராபட்சம் காட்டுவது, தமிழ்நாட்டிலிருந்து அதிகமான ஜி.எஸ்.டி வரி வருவாய் கிடைத்த போதும் நியாயமாக கிடைக்க வேண்டிய நிதியை வழங்காமல் இருப்பது,
பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு நெருக்கடியை கொடுப்பது, சென்னை மெட்ரோ 2ம் கட்டத்திற்கான நிதியை தாமதப்படுத்துவது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை, மகாத்மா காந்தி அவர்களது பெயரில் இருப்பதால் என்னவோ இத்திட்டதை முடக்க நினைக்கின்றது.
அவ்வகையில் தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய ரூ.4,034 கோடியை தராமல் கிராமப்புற மக்களின் வாழ்வில் விளையாடுகிறது ஒன்றிய அரசு.
இதுபோன்ற காரணங்களால் தமிழ்நாட்டிற்கு ஏப்ரல் 6-ந்தேதி வருகை தரும், பாரத பிரதமர் மோடியை கண்டித்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாவட்ட தலைவர்கள் மற்றும் எனது தலைமையில் சென்னையில் கருப்புகொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சவுக்கு சங்கரின் வீடு சூறையாடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சவுக்கு சங்கரின் வீடுசூறையாடப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள யூடியூபர் சவுக்கு சங்கரின் வீடு சூறையாடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூய்மை பணியாளர் குறித்து அவதூறாக பேசியதாக கூறி வீட்டில் நுழைந்த சிலர் பொருட்களை சூறையாடி கழிவுநீர் போன்றவற்றை வீடு முழுவதும் ஊற்றியுள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தனது வீடு சூறையாடப்பட்டதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும், போலீஸ் கமிஷ்னர் அருணும் தான் காரணம் என சவுக்கு சங்கர் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில், சவுக்கு சங்கர் வீட்டில் கழிவுநீர் ஊற்றப்பட்டு, சூறையாடப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சவுக்கு சனகர் குற்றசாட்டு தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த செல்வப்பெருந்தகை, "சவுக்கு சனகர் வீட்டில் கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவத்தை நான் கண்டிக்கிறேன். அதற்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. தூய்மை பணியாளர்களை கொச்சைப்படுத்தி அவர் பேசியதை ஏற்கமுடியாது. சவுக்கு சங்கர் வேண்டுமென்றே குற்றம் சாட்டுகிறார். சவுக்கு சங்கருக்கு வேண்டியவரை காங்கிரஸ் தலைவராக்க இதனை அவர் செய்கிறார். அவரது வீட்டில் கழிவுகளை வீசியவர்கள் காங்கிரஸ் உறுப்பினர் என்றால் நிரூபிக்கட்டும்" என்று தெரிவித்தார்.
- தொழில்நுட்ப கோளாறு காரணமாக RRB தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு
- ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தமிழக இளைஞர்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்.
நாடு முழுவதும் இன்று நடைபெறவிருந்த ரயில்வே உதவி லோகோ பைலட் தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டதால் தேர்வர்கள் அவதியடைந்தனர். இதனால், தமிழ்நாட்டில் இருந்து தெலங்கானாவுக்கு தேர்வு எழுதச் சென்ற 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் விரக்தியடைந்தனர்.
இந்நிலையில், ரெயில்வேயின் இந்த திடீர் முடிவை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "இளைஞர்களின் நலனில் அக்கறை இல்லாத ரயில்வே துறை. நாட்டில் இளநிலை நீட், யுஜிசி நெட் தேர்வு வினாத்தாள் கசிவால் ஏறத்தாழ 85 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டிருப்பதாக தலைவர் ராகுல்காந்தி அவர்கள் பதிவுசெய்தார். வினாத்தாள் கசிவிற்கு பிறகு, தற்போது உதவி லோகோ பைலட் தேர்வை நடத்தும் ஆர்ஆர்பியானது, தொழில்நுட்ப காரணங்களால் தேர்வை ரத்து செய்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது.
தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் தேர்வு மையம் அமைத்ததிருந்த போதும் மிகுந்த சிரமத்துடன் இன்று தேர்வு எழுத சென்றவர்களை அலைக்கழித்துள்ளது ரயில்வே துறை.
எதிர்கால கனவுடன் தேர்வு எழுதச் சென்ற இளைஞர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் கனவுகளை சிதைக்கின்றது ஒன்றிய ரயில்வே துறை. இளைஞர்களுக்கு ஏற்பட்டிருக்கிற மனவுளைச்சலுக்கு ஒன்றிய ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ்அவர்கள், இளைஞர்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
- அமைச்சர் செந்தில் பாலாஜியை முடக்க வேண்டுமென்ற நோக்கத்தில் இத்தகைய அடக்குமுறைகள் ஏவிவிடப்படுகிறது.
- அண்ணாமலை, அரசியல் விரோத உணர்ச்சி காரணமாக திடீர் திடீர் என போராட்டங்களை அறிவித்துக் கொண்டிருக்கிறார்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தடையை மீறி போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்ட சூழலில் அண்ணாமலை, ஊடகங்களில் பேசும் போது, இனிமேல் காவல்துறையினருக்கு அனுமதி கடிதம் அளிக்க மாட்டோம், பா.ஜ.க.வுக்கு மரியாதை அளிக்காத காவல்துறையினரை தூங்க விடமாட்டோம் என்று மிரட்டியதோடு, டாஸ்மாக் கடைகளில் பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் என்று அண்ணாமலை அறிவித்திருக்கிறார். பிரச்சனைகளை தேடி அதற்காக போராட்டம் நடத்த முற்படுகிற அண்ணாமலை புதுச்சேரி உள்ளிட்ட பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள மதுபானக் கடைகளை மூட போராட்டம் நடத்துமா ?
அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தமிழகத்தில் அமலாக்கத்துறையை தூண்டிவிட்டு வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஆற்றல்மிக்க அமைச்சர் செந்தில் பாலாஜியை முடக்க வேண்டுமென்ற நோக்கத்தில் இத்தகைய அடக்குமுறைகள் ஏவிவிடப்படுகிறது. இதை எதிர்கொள்கிற பேராற்றலும், துணிவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு இருக்கிறது.
தமிழக விரோத போக்கு காரணமாக பா.ஜ.க. காலூன்ற முடியாத நிலையில் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளும், தமிழக அரசின் மக்கள் நலன்சார்ந்த திட்டங்கள் மூலம் மக்களின் பேராதரவை பெற்று வருவதால் அதை சகித்துக் கொள்ள முடியாத அண்ணாமலை, அரசியல் விரோத உணர்ச்சி காரணமாக திடீர் திடீர் என போராட்டங்களை அறிவித்துக் கொண்டிருக்கிறார். போராட்டங்களை தேடி அலைந்து, அதை நடத்தி, ஊடகங்களின் விளம்பர வெளிச்சத்தை அண்ணாமலை பெறலாமே தவிர, தமிழ்நாட்டு மக்களின் ஆதரவை என்றுமே பெற முடியாது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- விண்ணப்பதாரர்களில் 90 சதவிகிதம் பேருக்கு தெலுங்கானாவில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
- ரெயில்வே தேர்வு வாரிய முடிவால் விண்ணப்பதாரர்களிடையே பரவலான குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ரெயில்வே துறையில் வேலை வாய்ப்புக்காக மார்ச் 19 அன்று உதவி லோகோ பைலட் தேர்வுக்கான கணினி அடிப்படையிலான தேர்வு எழுதும் தமிழ்நாட்டைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விண்ணப்பதாரர்களுக்கு ஆந்திர மாநிலத்தில் திருப்பதி, குண்டூர், காக்கிநாடா மற்றும் விசாகப்பட்டிணம் போன்ற நகரங்களிலும், தெலுங்கானா மாநிலத்தில் கரீம்நகர், ஐதராபாத், வாரங்கல் மற்றும் செகந்திராபாத் போன்ற நகரங்களிலும் 600 முதல் 1000 கி.மீ. தொலைவில் உள்ள தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
ெரயில்வே பாது காப்புப்படைக்கும் விண்ணப்பதாரர்களுக்கு தொலைதூரத்தில் ஒரே நகரத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்குவதை முன்னுரிமையாக கொண்ட ரெயில்வே தேர்வு வாரிய முடிவால் விண்ணப்பதாரர்களிடையே பரவலான குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதற்கான தேர்வு மார்ச் 18 அன்று உதவி லோகோ பைலட் தேர்வுக்கு ஒருநாள் முன்பு நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டை சேர்ந்த 50 சதவிகித விண்ணப்பதாரர்களுக்கு மற்ற மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருப்பது கடும் மனஉளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.
மார்ச் 19-ந் தேதி தேர்வு எழுதும் தமிழ்நாட்டைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களில் 90 சதவிகிதம் பேருக்கு தெலுங்கானாவில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இத்தகைய தேர்வு முறையின் காரணமாக தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் ரெயில்வே துறையில் வேலை பெறுவதற்கான தேர்வில் பங்கேற்க கடுமையான சிரமங்களையும், பொருட்செலவையும் ஏற்க வேண்டியுள்ளது.
எனவே, தமிழ்நாட்டு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ரெயில்வே துறையின் தேர்வுகள் அனைத்தும் சென்னை, மதுரை, கோயமுத்தூர், திருநெல்வேலி ஆகிய மையங்களில் நடத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- அஷ்வினி வைஷ்ணவ் அவர்கள், தமிழ் கலாச்சாரத்தை மிகவும் மதிக்கின்றோம் என்று வார்த்தை பந்தல் கட்டியிருக்கிறார்.
- தமிழ்நாட்டிற்கு கல்விக்கு, பேரிடர்நிதி தராமல் வஞ்சிப்பது, தமிழர்களை அவதூறாக பேசுவது என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
தெற்கு ரயில்வே உதவி லோகோ பைலட் 493 பணியிடங்களுக்கு 2ஆம் கட்டத்தேர்வு மார்ச் 19ல் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்வு அருகாமை மையங்களில் நடந்த நிலையில், 2ஆம் கட்ட தேர்வுக்கு தெலங்கானாவில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாட்டு தேர்வர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "இன்று(15.03.2025) திருப்பெரும்புதூர் விழா ஒன்றில் பேசிய ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ் அவர்கள், தமிழ் கலாச்சாரத்தை மிகவும் மதிக்கின்றோம் என்று வார்த்தை பந்தல் கட்டியிருக்கிறார். ஆனால், ஒன்றிய அரசு எப்போதும் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருக்கிறது என்பது இவர்களின் செயல்பாடுகளை கவனித்தால் புரியும்.
தமிழ்நாட்டிற்கு கல்விக்கு, பேரிடர்நிதி தராமல் வஞ்சிப்பது, தமிழர்களை அவதூறாக பேசுவது, வரிவருவாயில் குறைந்த அளவு நிதிஒதுக்குவது, தமிழ்மொழிக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவது, சென்னை வழியாக செல்லும் அனைத்து ரயில்களிலும் உள்ள முன்பதிவில்லாத பெட்டிகளை ஒன்றிய ரயில்வே துறை குறைக்க நடவடிக்கை எடுத்தது என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
தற்போது ரயில்வேயில் உதவி லோகோ பைலட் பணிக்கான முதற்கட்ட தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 6315 பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் இரண்டாம் நிலைத்தேர்வுக்கு இவர்களில் பலருக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையம் அமைத்துள்ளதாக தகவல் வருகிறது.
தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் தேர்வு எழுதி ஒன்றிய அரசு பணிகளுக்கு வராமல் தடுப்பதே இவர்களின் நோக்கம் என்று புரிகிறது. ஒன்றிய ரயில்வே துறையின் இச்செயலுக்கு எனது வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். வெளிமாநிலங்களில் தேர்வு மையம் அமைத்திருப்பதை உடனடியாக ரத்து செய்து தமிழ்நாட்டில் அவர்களை தேர்வு எழுத ஏற்பாடுகளை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
- மொழியை பாதுகாப்பதற்கு போராட வேண்டிய அவசியம் அப்போது இல்லை.
- 'ரூ' என்று மாற்றி இலச்சினை வெளியிட்டு தனது உணர்வினை வெளிப்படுத்தியுள்ளது தமிழ்நாடு அரசு.
தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிப் பொறுப்பில் இருந்த போது, 2010 ஆம் ஆண்டு ரூபாய் இலட்சினையை மாற்றியமைத்தது. அப்போது மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசு, எந்த மாநிலத்தின் மீதும் மும்மொழிக்கொள்கையை வலிந்து திணிக்கவில்லை. மொழியை பாதுகாப்பதற்கு போராட வேண்டிய அவசியம் அப்போது இல்லை.
ஆனால், தற்போது ஆட்சியில் இருக்கும் ஒன்றிய பாஜக அரசு ஜனநாயக விரோதமாக வலிந்து மும்மொழிக்கொள்கையை மாநிலங்கள் மீது திணிக்கின்றது.
அதை ஏற்றுக்கொண்டால்தான் நிதி தருவோம் என ஆணவத்துடன் செயல்படுகிறது. தமிழர்களையும், தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வசைபாடுகிறது.
மொழிக்கொள்கையில் தமிழ்நாடு கொண்ட கொள்கையும், உறுதியான நிலைப்பாட்டையும் சரி என்று மற்ற மாநிலங்கள் உணர்ந்து வருகிறது. அதை உரக்க வெளிப்படுத்தும் நேரமாக இது அமைந்து வருகிறது. அது அவசியமாகிறது. அதை உணர்ந்துதான், நாளை தாக்கல் செய்யப்படவுள்ள தமிழ்நாடு பட்ஜெட்டில் '₹'-க்கு பதில் 'ரூ' என்று மாற்றி இலச்சினை வெளியிட்டு தனது உணர்வினை வெளிப்படுத்தியுள்ளது தமிழ்நாடு அரசு.
தமிழர்கள் மீது வன்மம் கொண்டவர்களுக்கு இது பிடிக்காது. தமிழர்கள் இவ்விஷயத்தில் பெருமை கொள்ள வேண்டுமே தவிர, இந்திய இறையாண்மைக்கே பிரச்சனை வந்தது போல பிதற்றக்கூடாது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சட்டப்பேரவை காங்கிரஸ் குழு தலைவராக செல்வப்பெருந்ததை இருந்து வந்தார்.
- அந்த பதவிக்கு ராஜேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.எஸ். அழகிரி இருந்து வந்தார். இந்த நிலையில் தற்போது எம்.எல்.ஏ.-வாக இருக்கும் செல்வப்பெருந்தகை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சட்டப்பேரவை காங்கிரஸ் குழு தலைவராக செல்வப்பெருந்ததை இருந்து வந்த நிலையில், அந்த பதவிக்கு ராஜேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் இந்த மாற்றத்தை காங்கிரஸ் தலைமை செய்துள்ளது.
ஏற்கனவே இருந்த காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியின் பங்களிப்பை வெகுவாக பாராட்டுவதாக தெரிவித்துள்ளது.
- தமிழ்நாடு ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கிறது.
- பா.ஜனதாவால் உண்மை பேச முடியாது. அவர்கள் பொய்தான் கூறுவார்கள்.
சென்னை:
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டு உள்ளார்.
இதனையடுத்து சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அவர் வாழ்த்து பெற்றார். அப்போது சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் உடன் இருந்தார்.
அதன்பின்னர் சட்டசபை வளாகத்தில் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாடு ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கிறது. பேரிடர், கொரோனா என பல கட்டங்களை கடந்து பல புதிய திட்டங்களால் தமிழகத்தை உயர்த்தி வருகிறது. இந்த பட்ஜெட் சிறப்பானது.
பா.ஜனதாவால் உண்மை பேச முடியாது. அவர்கள் பொய்தான் கூறுவார்கள். மத்திய அரசின் வீடு வசதி திட்டம் குளறுபடியானது. இதில் அவர்கள் தோல்வி அடைந்து விட்டார்கள்.
விஜயதாரணி 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர். வக்கீல். பா.ஜனதா எப்படி என்றால் பிள்ளை பிடிக்கும் கட்சி. யார், யார் திறமையாக இருக்கிறார்களோ, விவரமாக இருக்கிறார்களோ அவர்களை பிடிக்கலாமா? என்று வலைவீசுவார்கள். அவர்கள் வீசும் வலைக்கு எங்கள் விஜயதாரணி சிக்க மாட்டார். அவர் புத்திசாலி.
ஒரு வழக்கு சம்பந்தமாக, டெல்லி போய் இருக்கிறார். உடனே பா.ஜனதா தலைவர்கள் அவரை சேர்த்துக்கொள்ளலாமா? என்று துடிக்கிறார்கள். அது நடக்காது. அவருக்கு (விஜயதாரணி) காங்கிரஸ் கட்சி மீது எந்த அதிருப்தியும் இல்லை. காங்கிரஸ் கட்சி அவருக்கு நிறைய செய்துள்ளது. இன்னும் செய்ய தயாராக இருக்கிறது.
இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறினார்.
இதற்கிடையே செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் அஜோய் குமார், அகில இந்திய செயலாளர் ஸ்ரீவெல்லபிரசாத் முன்னிலையில் நாளை (புதன்கிழமை) மாலை 3.30 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார்.
இந்த நிகழ்வில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் குமரிஅனந்தன், கே.வி.தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசர் எம்.பி., எம்.கிருஷ்ணசாமி ஆகியோர் பங்கேற்பார்கள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் கோபண்ணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- பாராளுமன்ற தேர்தல் வரை தற்போதைய தலைவர்களே நீடிப்பார்கள்.
- பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வு பற்றியும் மக்கள் மத்தியில் எடுத்து சொல்வோம்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை பொறுப்பேற்றுள்ளார். வழக்கமாக புதிய தலைவர்கள் பொறுப்பேற்றதும் தங்கள் ஆதரவாளர்களுக்கு பொறுப்புகள் வழங்குவார்கள். புதிதாக மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்படுவார்கள். அதன்படி புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டது. இதுபற்றி செல்வப்பெருந்தகையிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
இப்போதைக்கு மாவட்ட தலைவர்கள் மாற்றம் கிடையாது. பாராளுமன்ற தேர்தல் வரை தற்போதைய தலைவர்களே நீடிப்பார்கள். தேர்தலுக்கு பிறகு நிச்சயம் மாற்றம் இருக்கும். சிறப்பாக பணியாற்றுபவர்கள் தொடர்ந்து நீடிப்பார்கள். சரியாக பணியாற்றாதவர்கள் மாற்றப்படுவார்கள். அவர்களுக்கு பதிலாக புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்படுவார்கள்.
இது தேர்தல் காலம் ஒவ்வொரு மாவட்ட தலைவர்களும் தங்கள் முழு கவனத்தையும் தேர்தல் களத்தில் காட்டி இந்தியா கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும். தொடர்ந்து பதவியில் நீடிக்க இதுவும் அளவுகோலாக இருக்கும்.
சமூக வலைதள பிரசார அணியினருடன் நானும், மேலிட பொறுப்பாளர் அஜய்குமாரும் இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசித்தோம்.
சமூக வலைத்தளங்களில் பிரசாரத்தை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மோடி கொடுத்த வாக்குறுதிகளையும், அதை நிறைவேற்றாததையும், பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வு பற்றியும் மக்கள் மத்தியில் எடுத்து சொல்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈ.வி.கே. சம்பத்தின் 47-வது நினைவுதினத்தையொட்டி சத்திய மூர்த்தி பவனில் அவரது படத்துக்கு செல்வப்பெருந்தகை தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தங்கபாலு, திருநாவுக்கரசர் எம்.பி. கிருஷ்ணசாமி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார், டி.செல்வம், பொன்.கிருஷ்ண மூர்த்தி, ஓ.பி.சி.துணை தலைவர் சென்னை ரவி ராஜ், அகரம் கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- வாக்குறுதிகள் எதையும் இதுவரை நிறைவேற்றாமல் தமிழக மீனவர்களுக்கு எதிரான அரசாக ஒன்றிய பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது.
- மீனவர் போராட்டத்திற்கு தமிழக காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கிறது.
சென்னை:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து பிப்ரவரி 3 அன்று கடலுக்குச் சென்று கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இரண்டு விசைப்படகுகளை சிறைப்பிடித்து படகுகளிலிருந்த 23 மீனவர்களில் 20 மீனவர்களை மட்டும் விடுதலை செய்த இலங்கை நீதிமன்றம், 2 படகுகளின் ஓட்டுநர்களுக்கு தலா 6 மாதங்கள் சிறை தண்டனையும் ஒரு மீனவருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.
இதனால், ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 2013 ஆம் ஆண்டு பாம்பனில் பா.ஜ.க.வினர், சுஷ்மா சுவராஜ் தலைமையில் கடல் தாமரை மாநாடு நடத்தி, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீனவர்களுக்கென தனி அமைச்சகம், இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் கைது இருக்காது" என வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்தார்கள். அந்த வாக்குறுதிகள் எதையும் இதுவரை நிறைவேற்றாமல் தமிழக மீனவர்களுக்கு எதிரான அரசாக ஒன்றிய பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், ராமேஸ்வரம் மீனவர் சங்கங்களின் கூட்டமைப்பு தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டிக்கிற வகையில், பாரம்பரியமாக பங்கேற்கிற கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழாவை புறக்கணிப்பது எனவும், நாளை முதல் தொடர் உண்ணாவிரதமும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த மீனவர் போராட்டத்திற்கு தமிழக காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கிறது.
எனவே, நமது ஒன்றிய அரசு மற்றும் இலங்கை அரசின் தமிழக மீனவர்கள் மீதான விரோதப் போக்கை கண்டித்து எனது தலைமையில், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ். ராஜேஷ்குமார், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தேசியத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ ஆகியோர் முன்னிலையில், பிப்ரவரி 27 செவ்வாய்க்கிழமை அன்று காலை ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் கடலில் இறங்கி மனித சங்கிலி போராட்டமும், அதைத் தொடர்ந்து பிப்ரவரி 28 புதன்கிழமை அன்று காலை தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்ட வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தேசியத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ தலைமையில் கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். இந்தப் போராட்டங்கள் வெற்றி பெற அனைத்து மீனவ பெருமக்களும் பெருந்திரளாக பங்கேற்று மீனவ மக்களின் உரிமைகளை காக்க முன்வர வேண்டுமென அன்போடு அழைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தமிழகம் இந்த விவகாரத்தில் வஞ்சிக்கப்படுவதை தமிழ்நாடு காங்கிரஸ் ஒருபோதும் ஏற்காது.
- 22 தடுப்பணைகளை பாலாற்றுப்படுகையில் கட்டியுள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஆந்திர அரசு ஏற்கனவே சிறிதும், பெரிதுமாக இதுவரை 22 தடுப்பணைகளை பாலாற்றுப்படுகையில் கட்டியுள்ளது. மேலும் தற்போது 23 வது தடுப்பணை கட்டுவதற்கு ரூ 215 கோடி ஒதுக்கி அம்மாநில அரசு ஒப்புதல் அளித்து, ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி இதற்கான அடிக்கல் நாட்டியுள்ள செய்தி பேரதிர்ச்சியை தருகிறது. பாலாற்று நீரை நம்பி விவசாயம் செய்து வரும் நமது விவசாயப்பெருமக்கள் அனைவரும் ஆந்திர அரசின் இந்த எதேச்சதிகார முடிவை மிக கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். தமிழக அரசு உடனடியாக ஆந்திர அரசின் இந்த அடாவடித்தனத்தை தடுப்பதற்கு உச்சநீதிமன்றம் சென்று உரிய தடையாணை பெறுவது மட்டுமே இதற்கு ஒரு நிரந்தர தீர்வாக அமையும்.

அனைத்து நதிகளுடைய பாதுகாப்பும் மத்திய அரசின் கையில் உள்ளதால் பிரதமர் மோடி உடனடியாக இப்பிரச்சினையில் தலையிட்டு ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். தொடர்ந்து தமிழகம் இந்த விவகாரத்தில் வஞ்சிக்கப்படுவதை தமிழ்நாடு காங்கிரஸ் ஒருபோதும் ஏற்காது. தமிழக அரசும் உடனடியாக இப்பிரச்சினையில் சிறப்பு கவனம் செலுத்தி, ஆந்திர முதல்வரிடம் உடனடியாக பேசி தமிழக வட மாவட்ட விவசாயிகளின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.