என் மலர்
நீங்கள் தேடியது "selvaperunthagai"
- வருகிற 6-ந்தேதி அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்.
- ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஒன்றிய பா.ஜ.க. அரசு பிரதமர் மோடி தலைமையில் அமைந்து கடந்த 11 ஆண்டுகளாக இந்துத்துவா கொள்கையை பரப்புகிற நோக்கத்தில், மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. ஒன்றிய அரசின் திட்டங்கள் அனைத்துமே தென் மாநிலங்களில் குறிப்பாக, தமிழகத்தின் நலன்களுக்கு விரோதமாக திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
எனவே, பிரதமர் மோடி அரசின் 11 ஆண்டுகால தமிழக விரோத போக்கை கண்டிக்கிற வகையில், தமிழகம் வருகிற பிரதமர் மோடிக்கு எதிராக வருகிற 6-ந்தேதி அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும். சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பாக சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில், எனது தலைமையில் காலை 9.30 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று மோடிக்கு எதிராக எழுப்பப்படுகின்ற கண்டனக் குரல், தலைநகர் டெல்லியில் எதிரொலிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- இலங்கைக்கு கச்சத்தீவை கொடுத்தபோது 285 ஏக்கர் நிலத்தை கொடுத்து விட்டு 6500 கி.மீ. பரப்பளவை அவர் இந்திய நாட்டுக்கு வாங்கி கொடுத்தார்.
- தமிழக அரசு கொண்டு வந்துள்ள தீர்மானத்தை காங்கிரஸ் ஆதரிக்கிறது.
சென்னை:
தமிழக சட்டசபையில் கச்சத்தீவை மீட்க கோரும் தீர்மானத்தை ஆதரித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை பேசியதாவது:-
கச்சத்தீவு விவகாரத்தில் வரலாற்று உண்மைகளை மறைத்து விட்டு பலர் இங்கு பேசி இருக்கிறார்கள். மறைந்த பிரதமர் இந்திரா காந்தியை துர்காதேவி என்று பா.ஜ.க.வை சேர்ந்த வாஜ்பாயே புகழ்ந்துள்ளார். இலங்கைக்கு கச்சத்தீவை கொடுத்தபோது 285 ஏக்கர் நிலத்தை கொடுத்து விட்டு 6500 கி.மீ. பரப்பளவை அவர் இந்திய நாட்டுக்கு வாங்கி கொடுத்தார். இங்கு பேசியவர்கள் போடப்பட்ட ஒரு ஒப்பந்தத்தை மட்டுமே நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு மீனவர் கூட தாக்கப்பட மாட்டார். மீனவர் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்துவோம் என்று சொன்னார்கள்.
ஆனால் இன்று என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்பது அனைவருக்குமே தெரியும். தமிழக அரசு கொண்டு வந்துள்ள தீர்மானத்தை காங்கிரஸ் ஆதரிக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
செல்வப்பெருந்தகை தனது பேச்சின்போது மறைந்த தமிழக தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பற்றியும் பேசினார். இதற்கு எடப்பாடி பழனிசாமி உள்பட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவை குறிப்பில் இருந்து அதை நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுந்து முக்கியமான தீர்மானத்தின் மீது நாம் பேசிக்கொண்டு இருக்கிறோம். பா.ஜ.க. கட்சியும் இந்த தீர்மானத்தை ஆதரித்து உள்ளது. எனவே இதில் சர்ச்சைகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம் என்றார்.
இதைத்தொடர்ந்து செல்வப்பெருந்தகை குறிப்பிட்ட ஒரு கருத்து அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. செல்வப்பெருந்தகையின் கருத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்ட அ.தி.மு.க.வினர் அதன் பிறகு அமைதியானார்கள்.
- கச்சத்தீவு தனித்தீர்மானம் தொடர்பாக விவாதம் நடைபெற்றது.
- கச்சத்தீவு விவகாரத்திற்கும் ஜெயலலிதா சிகிச்சைக்கும் என்ன சம்பந்தம் உள்ளது?
கச்சத்தீவை மீண்டும் திரும்ப பெறுவதற்கான அரசின் தனித் தீர்மானத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டசபையில் கொண்டு வந்தார்.
தீர்மானத்தை முன்மொழிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "தமிழ்நாடு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிலைநாட்டிடவும், இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ஏற்படும் அனைத்து இன்னல்களை போக்கிடவும் கச்சத் தீவை மீண்டும் பெறுவதே நிரந்தர தீர்வாக அமையும்.
இதனை கருத்தில் கொண்டு, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து, கச்சத்தீவைத் திரும்பப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்" என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து கச்சத்தீவு தனித்தீர்மானம் தொடர்பாக விவாதம் நடைபெற்றது.
அப்போது பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டு சிகிச்சை அளிக்காதது ஏன்?
இந்திரா காந்தி இருந்திருந்தால் ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டு சிகிச்சை கொடுத்து இருப்பார். அமெரிக்காவில் எம்.ஜி.ஆருக்கு கொடுத்த சிகிச்சையை ஏன் ஜெயலலிதாவுக்கு கொடுக்கவில்லை? என்று அ.தி.மு.க.வினரிடம் கேள்வி எழுப்பினார்.
கச்சத்தீவு விவகாரத்திற்கும் ஜெயலலிதா சிகிச்சைக்கும் என்ன சம்பந்தம் உள்ளது? என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான விஷயங்களை பேரவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என அ.தி.மு.க.வினர் அமளியில் ஈடுபட்டனர்.
அ.தி.மு.க.வினரின் எதிர்ப்பை அடுத்து செல்வப்பெருந்தகை பேசிய கருத்துகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது.
- 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் வரவேண்டிய நிதி மத்திய அரசு இன்னும் ஒதுக்கவில்லை.
- தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நிதானமாகவும், பொறுமையாகவும் ஆதாரப்பூர்வமாகவும் பேச வேண்டும்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னை சத்திய மூர்த்தி பவனில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டுடன் திருத்தணி இணைந்த நாள் இன்று. அதற்காக போராடிய தியாகிகளை நினைவுகூர்ந்து புகழ் அஞ்சலி செலுத்துகிறோம் .
வருகிற 6-ந்தேதி பிரதமர் மோடி மதுரை வழியாக ராமேஸ்வரம் செல்கிறார். அவரது வருகையை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபடுவார்கள். ஏன் இந்த போராட்டம் என்று கேட்கிறார்கள்.
அடுத்த தலைமுறையை நல்ல முறையில் உருவாக்கும் கல்வித்துறையை சீரழித்து வருவதை கண்டிக்கிறோம். தமிழ்நாட்டில் உள்ள 52 கேந்திர வித்யாலயா பள்ளிகளில் ஆங்கிலம், இந்தி ஆகிய இருமொழி கொள்கைகள் தான் உள்ளன. இப்போது தேர்தல் வரும்போது மும்மொழி திட்டத்தை கொண்டு வருவது ஏன்?
100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் வரவேண்டிய நிதி மத்திய அரசு இன்னும் ஒதுக்கவில்லை. மத்திய அரசும் மாநில அரசும் சேர்ந்து நடத்தும் திட்டங்களுக்கு முறையாக நிதி ஒதுக்கப்படுவதில்லை. இவற்றை கண்டித்து தான் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்.
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நிதானமாகவும், பொறுமையாகவும் ஆதாரப்பூர்வமாகவும் பேச வேண்டும். யாரோ வாய்க்கு வந்தபடி கூறியதை கேட்டு அள்ளித் தெளிக்க கூடாது. டிக்கி நிறுவனம் என்பது இந்தியா முழுவதும் உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனத் திட்டத்தின் கீழ் கடந்த காலங்களில் கழிவுகளை அகற்றி விஷ வாயுத்தாக்கி உயிரிழந்த குடும்பத்தினரின் வாரிசுகளை தேர்வு செய்து அவர்களை தொழில்முனைவோர் ஆக்கியுள்ளனர். இதில் பணியாற்றும் ஒருவர் எனது உறவினர். அவ்வளவுதான் மற்றபடி எனக்கும் இந்தத் திட்டத்திற்கும் என்ன சம்பந்தம்? மேலும் சொல்லப் போனால் உங்கள் பிரதமர் மோடியே இந்த திட்டத்தை பாராட்டி இருக்கிறார். அவர் பாராட்டிய திட்டத்தை அண்ணாமலை தவறு நடந்திருப்பதாக குறை கூறுகிறார்.
100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு வர வேண்டிய நிதியை மத்திய அரசு கொடுக்கவில்லை. பா.ஜ.க. ஆளாத மாநிலங்கள் அனைத்திற்கும் இதுதான் நிலைமை. அதே போலதான் இந்த திட்டத்திலும் தவறு நடப்பதாக கூறுகிறார். உங்களிடம் விசாரணை அமைப்புகள் உள்ளன.
அதன் மூலம் உண்மையை அறிந்து பேச வேண்டும்.எதையும் அரைகுறையாக பேசக்கூடாது. இந்தத் திட்டத்தில் பல மாவட்டங்கள் சிறப்பாக செயல்பட்டது என தேர்வு செய்து மத்திய மோடி அரசு விருது வழங்கி இருக்கிறது. அப்படியானால் தவறாக இந்த விருதுகள் கொடுக்கப்பட்டதாக அண்ணாமலை சொல்கிறாரா?
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், முன்னாள் தலைவர்கள் கிருஷ்ணசாமி, தங்கபாலு, மாநில நிர்வாகிகள் கோபண்ணா, இதயத்துல்லா, தளபதி பாஸ்கர் மற்றும் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- கட்சியை வெளிப்படைத்தன்மையுடன் நடத்தி வருகிறோம் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்து இருந்தார்.
- பதவியில் இருந்து செல்வப்பெருந்தகை நீக்கப்பட்டால் தனக்கு ஆதரவு அளிக்க அவர் கேட்டு கொண்டுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு எதிராக கட்சியில் முக்கிய தலைவர்கள் காய் நகர்த்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையை மாற்ற வேண்டும் என்று தமிழக மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரை கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் சந்தித்து 25 மாவட்டத் தலைவர்கள், 2 எம்.எல்.ஏ.க்கள் புகார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக பதில் அளித்த செல்வப்பெருந்தகை, கட்சி விதிகளின்படி பதவிக்காலம் முடிந்த காலாவதியான தலைவர்கள் புகார் கூறுகிறார்கள். கட்சியை வெளிப்படைத்தன்மையுடன் நடத்தி வருகிறோம் என்று தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை பெற கார்த்தி சிதம்பரம், காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி ஆகியோர் காய் நகர்த்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கார்த்தி சிதம்பரம் தனது ஆதரவாளர்கள் மட்டுமல்லாது மறைந்த ஈ.வி.கே.எஸ். ஆதரவாளர்கள் மற்றும் திருநாவுக்கரசு ஆதரவாளர்களிடமும் ஆதரவு திரட்டி வருகிறார். பதவியில் இருந்து செல்வப்பெருந்தகை நீக்கப்பட்டால் தனக்கு ஆதரவு அளிக்க அவர் கேட்டு கொண்டுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி ராகுல் காந்தி, பிரியங்காவிடம் நெருக்கமாக இருப்பதால் பதவியை பெற்று விட உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
- பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றதிலிருந்தே தமிழ்நாட்டையும், தமிழர்களையும் ஜனநாயக விரோத திட்டங்கள் மூலம் வஞ்சித்து வருகிறது.
- தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய ரூ.4,034 கோடியை தராமல் கிராமப்புற மக்களின் வாழ்வில் விளையாடுகிறது ஒன்றிய அரசு.
சென்னை:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றதிலிருந்தே தமிழ்நாட்டையும், தமிழர்களையும் ஜனநாயக விரோத திட்டங்கள் மூலம் வஞ்சித்து வருகிறது.
இந்தி திணிப்பு, மும்மொழிக் கொள்கை, புயல், வெள்ளம் பாதித்த தமிழ்நாட்டின் மாவட்டங்களுக்கு பேரிடர் நிதி ஒதுக்காதது, தமிழ்நாட்டிற்கு பள்ளிக்கல்விக்காக ஒதுக்கிய நிதியை வழங்காமல் இருப்பது, உயிர்கொல்லி நீட் தேர்வால் அன்றாடம் தற்கொலைகள் அதிகரித்து கொண்டுள்ளது, இந்த கொடிய தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்காதது, மாநில திட்டங்களுக்கு ஒன்றிய நிதி ஒதுக்கீட்டில் பாராபட்சம் காட்டுவது, தமிழ்நாட்டிலிருந்து அதிகமான ஜி.எஸ்.டி வரி வருவாய் கிடைத்த போதும் நியாயமாக கிடைக்க வேண்டிய நிதியை வழங்காமல் இருப்பது,
பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு நெருக்கடியை கொடுப்பது, சென்னை மெட்ரோ 2ம் கட்டத்திற்கான நிதியை தாமதப்படுத்துவது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை, மகாத்மா காந்தி அவர்களது பெயரில் இருப்பதால் என்னவோ இத்திட்டதை முடக்க நினைக்கின்றது.
அவ்வகையில் தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய ரூ.4,034 கோடியை தராமல் கிராமப்புற மக்களின் வாழ்வில் விளையாடுகிறது ஒன்றிய அரசு.
இதுபோன்ற காரணங்களால் தமிழ்நாட்டிற்கு ஏப்ரல் 6-ந்தேதி வருகை தரும், பாரத பிரதமர் மோடியை கண்டித்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாவட்ட தலைவர்கள் மற்றும் எனது தலைமையில் சென்னையில் கருப்புகொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சவுக்கு சங்கரின் வீடு சூறையாடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சவுக்கு சங்கரின் வீடுசூறையாடப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள யூடியூபர் சவுக்கு சங்கரின் வீடு சூறையாடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூய்மை பணியாளர் குறித்து அவதூறாக பேசியதாக கூறி வீட்டில் நுழைந்த சிலர் பொருட்களை சூறையாடி கழிவுநீர் போன்றவற்றை வீடு முழுவதும் ஊற்றியுள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தனது வீடு சூறையாடப்பட்டதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும், போலீஸ் கமிஷ்னர் அருணும் தான் காரணம் என சவுக்கு சங்கர் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில், சவுக்கு சங்கர் வீட்டில் கழிவுநீர் ஊற்றப்பட்டு, சூறையாடப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சவுக்கு சனகர் குற்றசாட்டு தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த செல்வப்பெருந்தகை, "சவுக்கு சனகர் வீட்டில் கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவத்தை நான் கண்டிக்கிறேன். அதற்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. தூய்மை பணியாளர்களை கொச்சைப்படுத்தி அவர் பேசியதை ஏற்கமுடியாது. சவுக்கு சங்கர் வேண்டுமென்றே குற்றம் சாட்டுகிறார். சவுக்கு சங்கருக்கு வேண்டியவரை காங்கிரஸ் தலைவராக்க இதனை அவர் செய்கிறார். அவரது வீட்டில் கழிவுகளை வீசியவர்கள் காங்கிரஸ் உறுப்பினர் என்றால் நிரூபிக்கட்டும்" என்று தெரிவித்தார்.
- தொழில்நுட்ப கோளாறு காரணமாக RRB தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு
- ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தமிழக இளைஞர்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்.
நாடு முழுவதும் இன்று நடைபெறவிருந்த ரயில்வே உதவி லோகோ பைலட் தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டதால் தேர்வர்கள் அவதியடைந்தனர். இதனால், தமிழ்நாட்டில் இருந்து தெலங்கானாவுக்கு தேர்வு எழுதச் சென்ற 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் விரக்தியடைந்தனர்.
இந்நிலையில், ரெயில்வேயின் இந்த திடீர் முடிவை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "இளைஞர்களின் நலனில் அக்கறை இல்லாத ரயில்வே துறை. நாட்டில் இளநிலை நீட், யுஜிசி நெட் தேர்வு வினாத்தாள் கசிவால் ஏறத்தாழ 85 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டிருப்பதாக தலைவர் ராகுல்காந்தி அவர்கள் பதிவுசெய்தார். வினாத்தாள் கசிவிற்கு பிறகு, தற்போது உதவி லோகோ பைலட் தேர்வை நடத்தும் ஆர்ஆர்பியானது, தொழில்நுட்ப காரணங்களால் தேர்வை ரத்து செய்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது.
தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் தேர்வு மையம் அமைத்ததிருந்த போதும் மிகுந்த சிரமத்துடன் இன்று தேர்வு எழுத சென்றவர்களை அலைக்கழித்துள்ளது ரயில்வே துறை.
எதிர்கால கனவுடன் தேர்வு எழுதச் சென்ற இளைஞர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் கனவுகளை சிதைக்கின்றது ஒன்றிய ரயில்வே துறை. இளைஞர்களுக்கு ஏற்பட்டிருக்கிற மனவுளைச்சலுக்கு ஒன்றிய ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ்அவர்கள், இளைஞர்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
- அமைச்சர் செந்தில் பாலாஜியை முடக்க வேண்டுமென்ற நோக்கத்தில் இத்தகைய அடக்குமுறைகள் ஏவிவிடப்படுகிறது.
- அண்ணாமலை, அரசியல் விரோத உணர்ச்சி காரணமாக திடீர் திடீர் என போராட்டங்களை அறிவித்துக் கொண்டிருக்கிறார்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தடையை மீறி போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்ட சூழலில் அண்ணாமலை, ஊடகங்களில் பேசும் போது, இனிமேல் காவல்துறையினருக்கு அனுமதி கடிதம் அளிக்க மாட்டோம், பா.ஜ.க.வுக்கு மரியாதை அளிக்காத காவல்துறையினரை தூங்க விடமாட்டோம் என்று மிரட்டியதோடு, டாஸ்மாக் கடைகளில் பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் என்று அண்ணாமலை அறிவித்திருக்கிறார். பிரச்சனைகளை தேடி அதற்காக போராட்டம் நடத்த முற்படுகிற அண்ணாமலை புதுச்சேரி உள்ளிட்ட பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள மதுபானக் கடைகளை மூட போராட்டம் நடத்துமா ?
அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தமிழகத்தில் அமலாக்கத்துறையை தூண்டிவிட்டு வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஆற்றல்மிக்க அமைச்சர் செந்தில் பாலாஜியை முடக்க வேண்டுமென்ற நோக்கத்தில் இத்தகைய அடக்குமுறைகள் ஏவிவிடப்படுகிறது. இதை எதிர்கொள்கிற பேராற்றலும், துணிவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு இருக்கிறது.
தமிழக விரோத போக்கு காரணமாக பா.ஜ.க. காலூன்ற முடியாத நிலையில் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளும், தமிழக அரசின் மக்கள் நலன்சார்ந்த திட்டங்கள் மூலம் மக்களின் பேராதரவை பெற்று வருவதால் அதை சகித்துக் கொள்ள முடியாத அண்ணாமலை, அரசியல் விரோத உணர்ச்சி காரணமாக திடீர் திடீர் என போராட்டங்களை அறிவித்துக் கொண்டிருக்கிறார். போராட்டங்களை தேடி அலைந்து, அதை நடத்தி, ஊடகங்களின் விளம்பர வெளிச்சத்தை அண்ணாமலை பெறலாமே தவிர, தமிழ்நாட்டு மக்களின் ஆதரவை என்றுமே பெற முடியாது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- விண்ணப்பதாரர்களில் 90 சதவிகிதம் பேருக்கு தெலுங்கானாவில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
- ரெயில்வே தேர்வு வாரிய முடிவால் விண்ணப்பதாரர்களிடையே பரவலான குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ரெயில்வே துறையில் வேலை வாய்ப்புக்காக மார்ச் 19 அன்று உதவி லோகோ பைலட் தேர்வுக்கான கணினி அடிப்படையிலான தேர்வு எழுதும் தமிழ்நாட்டைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விண்ணப்பதாரர்களுக்கு ஆந்திர மாநிலத்தில் திருப்பதி, குண்டூர், காக்கிநாடா மற்றும் விசாகப்பட்டிணம் போன்ற நகரங்களிலும், தெலுங்கானா மாநிலத்தில் கரீம்நகர், ஐதராபாத், வாரங்கல் மற்றும் செகந்திராபாத் போன்ற நகரங்களிலும் 600 முதல் 1000 கி.மீ. தொலைவில் உள்ள தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
ெரயில்வே பாது காப்புப்படைக்கும் விண்ணப்பதாரர்களுக்கு தொலைதூரத்தில் ஒரே நகரத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்குவதை முன்னுரிமையாக கொண்ட ரெயில்வே தேர்வு வாரிய முடிவால் விண்ணப்பதாரர்களிடையே பரவலான குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதற்கான தேர்வு மார்ச் 18 அன்று உதவி லோகோ பைலட் தேர்வுக்கு ஒருநாள் முன்பு நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டை சேர்ந்த 50 சதவிகித விண்ணப்பதாரர்களுக்கு மற்ற மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருப்பது கடும் மனஉளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.
மார்ச் 19-ந் தேதி தேர்வு எழுதும் தமிழ்நாட்டைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களில் 90 சதவிகிதம் பேருக்கு தெலுங்கானாவில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இத்தகைய தேர்வு முறையின் காரணமாக தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் ரெயில்வே துறையில் வேலை பெறுவதற்கான தேர்வில் பங்கேற்க கடுமையான சிரமங்களையும், பொருட்செலவையும் ஏற்க வேண்டியுள்ளது.
எனவே, தமிழ்நாட்டு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ரெயில்வே துறையின் தேர்வுகள் அனைத்தும் சென்னை, மதுரை, கோயமுத்தூர், திருநெல்வேலி ஆகிய மையங்களில் நடத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- அஷ்வினி வைஷ்ணவ் அவர்கள், தமிழ் கலாச்சாரத்தை மிகவும் மதிக்கின்றோம் என்று வார்த்தை பந்தல் கட்டியிருக்கிறார்.
- தமிழ்நாட்டிற்கு கல்விக்கு, பேரிடர்நிதி தராமல் வஞ்சிப்பது, தமிழர்களை அவதூறாக பேசுவது என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
தெற்கு ரயில்வே உதவி லோகோ பைலட் 493 பணியிடங்களுக்கு 2ஆம் கட்டத்தேர்வு மார்ச் 19ல் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்வு அருகாமை மையங்களில் நடந்த நிலையில், 2ஆம் கட்ட தேர்வுக்கு தெலங்கானாவில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாட்டு தேர்வர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "இன்று(15.03.2025) திருப்பெரும்புதூர் விழா ஒன்றில் பேசிய ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ் அவர்கள், தமிழ் கலாச்சாரத்தை மிகவும் மதிக்கின்றோம் என்று வார்த்தை பந்தல் கட்டியிருக்கிறார். ஆனால், ஒன்றிய அரசு எப்போதும் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருக்கிறது என்பது இவர்களின் செயல்பாடுகளை கவனித்தால் புரியும்.
தமிழ்நாட்டிற்கு கல்விக்கு, பேரிடர்நிதி தராமல் வஞ்சிப்பது, தமிழர்களை அவதூறாக பேசுவது, வரிவருவாயில் குறைந்த அளவு நிதிஒதுக்குவது, தமிழ்மொழிக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவது, சென்னை வழியாக செல்லும் அனைத்து ரயில்களிலும் உள்ள முன்பதிவில்லாத பெட்டிகளை ஒன்றிய ரயில்வே துறை குறைக்க நடவடிக்கை எடுத்தது என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
தற்போது ரயில்வேயில் உதவி லோகோ பைலட் பணிக்கான முதற்கட்ட தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 6315 பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் இரண்டாம் நிலைத்தேர்வுக்கு இவர்களில் பலருக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையம் அமைத்துள்ளதாக தகவல் வருகிறது.
தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் தேர்வு எழுதி ஒன்றிய அரசு பணிகளுக்கு வராமல் தடுப்பதே இவர்களின் நோக்கம் என்று புரிகிறது. ஒன்றிய ரயில்வே துறையின் இச்செயலுக்கு எனது வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். வெளிமாநிலங்களில் தேர்வு மையம் அமைத்திருப்பதை உடனடியாக ரத்து செய்து தமிழ்நாட்டில் அவர்களை தேர்வு எழுத ஏற்பாடுகளை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
- மொழியை பாதுகாப்பதற்கு போராட வேண்டிய அவசியம் அப்போது இல்லை.
- 'ரூ' என்று மாற்றி இலச்சினை வெளியிட்டு தனது உணர்வினை வெளிப்படுத்தியுள்ளது தமிழ்நாடு அரசு.
தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிப் பொறுப்பில் இருந்த போது, 2010 ஆம் ஆண்டு ரூபாய் இலட்சினையை மாற்றியமைத்தது. அப்போது மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசு, எந்த மாநிலத்தின் மீதும் மும்மொழிக்கொள்கையை வலிந்து திணிக்கவில்லை. மொழியை பாதுகாப்பதற்கு போராட வேண்டிய அவசியம் அப்போது இல்லை.
ஆனால், தற்போது ஆட்சியில் இருக்கும் ஒன்றிய பாஜக அரசு ஜனநாயக விரோதமாக வலிந்து மும்மொழிக்கொள்கையை மாநிலங்கள் மீது திணிக்கின்றது.
அதை ஏற்றுக்கொண்டால்தான் நிதி தருவோம் என ஆணவத்துடன் செயல்படுகிறது. தமிழர்களையும், தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வசைபாடுகிறது.
மொழிக்கொள்கையில் தமிழ்நாடு கொண்ட கொள்கையும், உறுதியான நிலைப்பாட்டையும் சரி என்று மற்ற மாநிலங்கள் உணர்ந்து வருகிறது. அதை உரக்க வெளிப்படுத்தும் நேரமாக இது அமைந்து வருகிறது. அது அவசியமாகிறது. அதை உணர்ந்துதான், நாளை தாக்கல் செய்யப்படவுள்ள தமிழ்நாடு பட்ஜெட்டில் '₹'-க்கு பதில் 'ரூ' என்று மாற்றி இலச்சினை வெளியிட்டு தனது உணர்வினை வெளிப்படுத்தியுள்ளது தமிழ்நாடு அரசு.
தமிழர்கள் மீது வன்மம் கொண்டவர்களுக்கு இது பிடிக்காது. தமிழர்கள் இவ்விஷயத்தில் பெருமை கொள்ள வேண்டுமே தவிர, இந்திய இறையாண்மைக்கே பிரச்சனை வந்தது போல பிதற்றக்கூடாது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.