search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சித்தர்"

    திருநெல்வேலியில் இருந்து தென்காசி செல்லும் சாலையில் உள்ள மாறந்தை என்ற கிராமத்தில் அடங்கி உலகெல்லாம் அருள் வழங்குபவர் தான் ஸ்ரீசெட்டி சுவாமிகள்.
    திருநெல்வேலியில் இருந்து தென்காசி செல்லும் சாலையில் 14 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது மாறந்தை என்ற கிராமம். இங்கு அடங்கி உலகெல்லாம் அருள் வழங்குபவர் தான் ஸ்ரீசெட்டி சுவாமிகள். வயல்வெளியில் அழுது கொண்டிருந்த ஒரு குழந்தைக்கு மற்றொரு தாய் பால் கொடுத்த காரணத்தினால் இவ்வூர் ‘மாற்றான் தாய் நல்லூர்’ என அழைக்கப்பட்டது. இதுவே பிற்காலத்தில் ‘மாறந்தை’ என மருவியது.

    ராமநாதபுரம் மாவட்டம் காரைக்குடிபுதூரில் 1878-ல் பிறந்தவர் தவத்திரு செட்டி சுவாமி என்ற சற்குருநாத சுவாமிகள். இவர் தந்தையின் பெயர் முத்தையா செட்டியார். இவரின் நான்கு புதல்வர்களில் ஒருவர் தான் கருப்பன். தந்தையாரின் ஜவுளி கடையில் திருநீறு அணிந்து பக்தி பரவசமாகவே வேலை செய்வார்.

    பக்தியில் மிகவும் லயித்து விடக்கூடாது என இவருக்கு திருமணம் செய்து வைத்தனர். ஒரு ஆண் குழந்தை பிறந்தது. தெய்வத்தின் மீது ஈடுபாடுடன் இருந்த கருப்பன், வியாபரத்தின் மீதும் குடும்பத்தின் மீதும் பற்று இல்லாமலேயே விளங்கினார். எனவே யாருமில்லாத சமயத்தில் கடையில் ஜவுளிகளை நஷ்டத்துக்கு விற்று விட்டார். இதையறிந்த சகோதரர்கள் கோபமடைந்தனர். அவரை கண்டித்தனர்.

    கருப்பன் தனது மனைவி குழந்தையுடன் வடக்குநோக்கி கிளம்பினார். பல இடங்களில் தீர்த்த யாத்திரை மேற்கொண்டார். ஆங்காங்கே மகான்களை கண்டு தரிசனம் செய்தார். இறுதியில் ராமேஸ்வரம் வந்தடைந்தார். அங்கு சமாதி கொண்ட தாயுமான சுவாமிகள் பீடத்தில் அமர்ந்து, சிறிது காலம் தியானம் செய்தார். தொடர்ந்து திருச்செந்தூர் நோக்கி பயணமானார். அங்கே மூலவருக்கு பின்னால் குகைக்குள் அமைந்்துள்ள பஞ்சலிங்கத்தை தினமும் தவறாமல் பூஜித்தார். நாழிக்கிணறு அருகே பூவரசு மரத்தடியில் வட்டக் கல்லில் துறவு கோலத்துடன் மேற்கு நோக்கி அமர்ந்து பக்தர்களுக்கு அருள் வழங்க ஆரம்பித்தார்.

    இவரின் காதில் பெருந்துளையிட்ட தோற்றத்தினை கண்டு, அனைவரும் இவரை ‘ஸ்ரீசெட்டி சுவாமி’ என்று அழைத்தனர். அந்த பெயரே பிற்காலத்தில் அவருக்கு விளங்க ஆரம்பித்து விட்டது. பலர் இவருக்கு பழங்களை பரிசளித்தனர். அதை வாங்கி தானும் புசித்து விட்டு மீதியை, அங்கு வரும் ஏழைகளுக்கும் வழங்கினார்.

    எப்போதும் புன்சிரிப்புடன் பட்டினத்தார், தாயுமானவர் பாடலையும், தேவாரம், திருவாசகம், திருப்புகழ் முதலான பக்திப் பாடல்களைப் பாடிக்கொண்டிருப்பார். கண்களை மூடிக்கொண்டு ஆடாமல் அசையாமல் பத்மாசனமிட்டுச் சின்முத்திரை தாங்கி, சண்முகநாதனை நோக்கித் தவமேற்றுவார்.

    அவர் திருச்செந்தூரில் இருப்பதை அறிந்து, குடும்பத்தார் அவரை அழைத்தனர். எதையும் கண்டுகொள்ளாமல் அவர் கற்சிலைபோல் தவமேற்றிக் கொண்டிருந்தார். ஆனாலும் அவர்கள் அவரை விடவில்லை. எப்படியும் தங்களது வீட்டுக்கு கூட்டிச்சென்று விடவேண்டும் என முயற்சி செய்தனர்.

    குடும்பத்தார் கண்ணில் தென்படாத வகையில் கோவிலுக்குள் சென்று அமர்ந்து கொண்டார், ஸ்ரீசெட்டி சுவாமிகள். ஆனாலும் உறவினர்கள் கோவிலுக்குள் சென்று அவரை வலுக்கட்டாயமாக பிடித்து வில்லு வண்டியில் ஏற்றிச் சென்றனர். வண்டி குறிப்பிட்ட தூரத்தில் சென்றபோது, சிறுநீர் கழிக்க வேண்டும் என இறங்கியவர் மாயமாக மறைந்து விட்டார். கண்ணுக்கு எட்டிய தூரம் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. பட்டப்பகலில் காணாமல் போன அவர் சித்தராகி விட்டார் என புரிந்த உறவினர்கள், ஏமாற்றத்துடன் ஊருக்கு திரும்பி விட்டனர். அதே வேளையில் சுவாமி தென்திருப்பேரை அருகே ஒரு மரத்தின் அடியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.

    அதன் பின் அவ்வூரில் அமர்ந்து செந்தூர்முருகனை நோக்கி தவமேற்றினார். அதைக் கண்ட முருக பக்தர் அருணாசலம் என்பவர், சித்தருக்கு பணிவிடை செய்ய ஆரம்பித்தார். தென்திருப்பேரையில் இருந்தாலும், திருச்செந்தூர் முருகப்பெருமானை தரிசிக்க தினமும் சென்று வந்தார்.

    தென்திருப்பேரை ரவுண்டனாவில் கீழே படுத்துக் கிடந்தால் கூட, அப்படியே உயிரற்ற கட்டையாக தவம் செய்வார். ஒருநாள் சாலையோரம் அவர் படுத்துக்கிடப்பதை கவனிக்காமல் பாரத்துடன் வந்த மாட்டு வண்டி ஒன்று அவர் மீது ஏறிவிட்டது. வண்டிக்காரர் பதறியடித்துக் கொண்டு வந்து பார்த்தார். அப்போதும் தியானம் கலையாமல் அப்படியே இருந்தார் ஸ்ரீசெட்டி சுவாமிகள். இதனைக் கண்ட வண்டிக்காரர் ஆச்சரியத்தில் மூழ்கிப்போனார். சித்தரைப் பற்றி அக்கம் பக்கத்தில் கூறினார்.

    தென்திருப்பேரை அருணாசலம், சித்தருக்காக உணவு சமைத்து எடுத்து வருவார். அதை சிரித்துக் கொண்டே தான் வைத்திருக்கும் தகரப்போணியில் போடச்சொல்வார். அவர் சாப்பிட்ட பின் மீதியை அங்குள்ள ஏழை குழந்தைகளுக்கு கொடுப்பார். ஊர் மக்கள் பலர் இவருக்கு உணவு கொடுக்க ஆசைப்படுவர். அனைவரிடமும் சிரித்த முகத்துடன் உணவை பெற்றுக்கொள்வார். நாய்குட்டி சுவாமிகள், சேரகுளம் பண்ணையார், அனவரதநல்லூர் தேவாரம் சுந்தரபிள்ளை, தென் திருப்பேரை கிருஷ்ண அய்யங்கார், ராயர் சமுதாயத்தினர் உள்பட பலர் ஸ்ரீசெட்டி சித்தருக்கு பணிவிடை செய்து மகிழ்ந்திருக்கிறார்கள்.

    1915-ம் ஆண்டு சுவாமிகள் ஆழ்வார்திருநகரியை விட்டு திருநெல்வேலிக்கு வந்தார். தனக்குத் தேவை என்று தோன்றினால் கையிலுள்ள தகரப் போணியைப் பிச்சா பாத்திரமாகக் கொண்டு வீடுகளில் பிச்சை எடுப்பார். மாலை நேரத்தில் காந்திமதியம்பாளைத் தரிசித்துவிட்டு அங்குள்ள பொற்றாமரை குளக்கரையில் ஏகாந்தமாக படுத்துக்கிடப்பார். செட்டிச் சுவாமியைச் சூழ்ந்திருக்கும் சிவபக்தர்களுக்கு நல்வழிகள் கூறியும், பட்டினத்தார், தாயுமானவர் அருட்பாடல்களைச் சொல்லி அதற்குப் பொருளும் கூறுவார்.



    இவ்வேளையில் மாறந்தையைச் சேர்ந்த காசிநாத முதலியார், சுவாமியை சந்தித்துள்ளார். அவரின் ஆன்மிக செயலுக்கு அடிமையாகி, சித்தரின் சீடராகி விட்டார். பின்னர் தன்னோடு மாறந்தைக்கு வருமாறு அழைத்தார். ஆனால் மறுநாள் வருவதாக சுவாமி வாக்களித்தார்.

    இதற்கிடையில் சுவாமி வரும் தகவலை முதலியார் மாறந்தையில் பலரிடம் கூறினார். அவ்வூரை சேர்ந்த சுப்பிரமணிய ஆசாரி என்பவர், புதூர் சென்ற போது அங்கு பாடிக்கொண்டிருந்த ஸ்ரீசெட்டி சித்தரைக் கண்டார். ‘ஆகா.. இவர் முதலியார் கூறிய சுவாமிகள் போல அல்லவா உள்ளார்' என நினைத்து அவரை மாறந்தைக்கு அழைத்துள்ளார். அப்போதும் சுவாமிகள், ‘நாளை வருகிறேன்' என்று கூறியிருக்கிறார்.

    அந்த தகவலையும் அவர் ஊரில் போய் கூறினார். ஊரே.. சுவாமியின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.

    மறுநாள் அதிகாலை ஆசாரி வீட்டு முன்பு, கையில் தகரப்போணியை வைத்துக்கொண்டு, இடிப்பில் ஒரு துண்டு மட்டும் கட்டிய வண்ணம் செட்டி சுவாமிகள் நின்றார். அவரை வணங்கி வரவேற்றனர். ஆசாரி மனைவி கொடுத்த கஞ்சியை தனது தகரப்போணியில் வாங்கி, அதில் பாதியை குடித்து விட்டு, மீதியை அப்படியே வைத்துக்கொண்டார்.

    இதையறிந்த ஊர் பெரியவர்கள் ஓடோடி வந்தார்கள். காசி நாத முதலியார் தனது இல்லத்திற்கு அழைத்து, தக்க ஆசனத்தில் அமர வேண்டினார். சுவாமியோ தரையில் அமர்ந்து கொண்டார். வீட்டு ஓரத்தில் அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தார். பின் எதுவுமே பேசாமல் ஆலங்குளம் நோக்கி நடக்க ஆரம்பித்தார். வெண்கல பொட்டலில் பாழடைந்த மண்டபத்திலும், அத்தியூத்து என்னுமிடத்திலும் அமர்ந்து தியானிக்க ஆரம்பித்தார். ரோடு ரோடாக அலைந்த காரணத்தினால் இவரை ‘ரோட்டு சாமியார்' எனவும் அழைக்க ஆரம்பித்தனர்.

    மாறந்தைக்கு சுவாமி வரும் வேளையை எதிர்பார்த்து பக்தர்கள் காத்திருப்பார்கள். சில வேளையில் பட்டை ஓலையை எடுத்துக்கொண்டு சுவாமி ஊருக்குள் வருவார். பாகுபாடின்றி அனைத்து தெருக்களிலும் பிச்சை எடுப்பார். சிலர் ‘சைவ அம்சம் கொண்ட எங்கள் இடத்தில் மட்டும் பிச்சை எடுங்கள்’ எனக் கூறினர். அவர்களுக்கு சுவாமியிடம் இருந்து புன்சிரிப்பு மட்டுமே பதிலாகக் கிடைத்தது.

    ஸ்ரீசெட்டி சித்தரின் புகழை கேள்வி பட்டு திருநெல்வேலியில் இருந்து இரண்டு நண்பர்கள் சுவாமிக்கு பழம் வாங்கி கொண்டு வந்தனர். இருவரும் வேறு வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள். அதில் தாழ்த்தப்பட்டவர், ‘தான் யார் என்று கூறினால் பழத்தினை சுவாமி வாங்குவாரோ.. வாங்க மாட்டாரோ.. எனவே அவரிடம் நாம் யார் என்று கூறக்கூடாது' என அமைதியாக இருந்தார். சுவாமியை சந்தித்த போது, ‘யப்பா, உங்கள் ஜாதியை எல்லாம் நான் கேட்டேனா.. எல்லாருமே இந்த பூமியில் ஒன்றுதானப்பா.. ஜாதியை இறைவன் வைக்கவில்லை. நீங்கள் தான் வைத்துக்கொண்டீர்கள்' என கூறி சிரித்தார்.

    அவர் தந்த பழத்தினை சாப்பிட்டு விட்டு, மீதியை கொண்டு போய் உங்கள் குழந்தையிடம் கொடுங்கள்' என அனுப்பி வைத்தார்.

    ஆகா.. நாம் மனதில் நினைத்தது சுவாமிக்கு புரிந்து விட்டதே. என அதிர்ந்தவர்கள், சுவாமியின் அருள் வேண்டி நின்றனர்.

    ஜாதி சமயத்துக்கு அப்பாற்பட்டு சுவாமியை காண பக்தர்கள் புதூர் மடத்துக்கு வருவதை வாடிக்கையாக கொண்டனர்.

    காலங்கள் கடந்தது. சுவாமியின் கழுத்தை சுற்றி கண்ட மாலை என்னும் நோய் தாக்கியது. இந்த நோயை தீர்க்க அந்த காலத்தில் மருந்தே கிடையாது. இதனால் சுவாமிகள் ரணம் அடைந்தார். பலரும் ‘நோய் தீர்க்க மருத்துவரிடம் செல்வோம்’ என்று ஆலோசனை கூறினர். ஆனால் சுவாமி கேட்கவில்லை.
    பச்சை குத்திக்கொண்ட பக்தர்

    மாறந்தையை சேர்ந்த சங்கரலிங்கம் என்பவர், தனது வீட்டின் வாசலில் சுவாமி பாடிக்கொண்டிருந்ததை கண்டு கோபமுற்றார். சுவாமியை நோக்கி சொல்ல கூசும் வார்த்தைகளால் ஏசினார். சுவாமி.. ‘கவலைப் படாதே.. நீயும் என்னைப் போலத்தான் ஆக போகிறாய்’ என கூறி சிரித்தார்.

    கோபமடைந்த சங்கரலிங்கம், சுவாமியை அடிக்க கம்பு எடுக்க வீட்டுக்குள் ஓடினார். வெளியே வந்து பார்த்த போது சுவாமியை காணவில்லை. பல இடத்தில் தேடியும் இவர் கண்ணில் படவில்லை. ஆனால் அவரை தேடிசென்ற இடத்தில் எல்லாம் ‘சுவாமியை இப்போதுதான் பார்த்தேன்’. ‘இங்குதானே அமர்ந்திருந்தார்’ என மற்றவர்கள் பேசினர்.

    அந்த சிறு கிராமத்தில் தனது கண்ணில் மட்டும் சுவாமி படவில்லை என்றால், அவர் சாதாரண மனிதரா? என யோசிக்க ஆரம்பித்து விட்டார் சங்கரலிங்கம். ஆகா.. இவர் மகான் அல்லவா.. என அறிந்து அதன் பின் அவரிடம் சீடராகி விட்டார். சாமி.. சமாதி அடைந்த பிறகு தன்னுடைய கையில் ‘செட்டி சுவாமியின் சீடர்’ என பச்சையே குத்திக்கொண்டார். 
    திருச்செந்தூர் முருகன் கோவில் சன்னிதிகள் மூடப்பட்ட பிறகு, ஆலயத்திற்குள் நுழைந்தார் அப்பரானந்த சித்தர். கதவுகள் தானாகத் திறந்து வழிவிட்டது.
    அப்பரானந்த சுவாமிகளுக்கு இறையருள் கிடைத்ததையும், சொக்கம்பட்டி ஜமீன் அவரின் பக்தராக மாறியதையும், அப்பரானந்த சித்தர் சொக்கம்பட்டி அரண்மனைக்கு வந்து அரியணையில் அமர்ந்தபோது, எட்டயபுரம் ஜமீனின் தலைமைப் புலவரான கடிகை முத்து புலவர் வந்து, ‘யார் இந்த பரதேசி?. இவனுக்கு ஏன் இந்த மரியாதை’ என்று கிண்டலாக கேட்டார்.

    கடிகை முத்து புலவரின் கடுமையான சொல், அப்பரானந்த சித்தர் மீது பாய்ந்தவுடன் நிலைகுலைந்து போனார் சொக்கம்பட்டி ஜமீன்தார்.

    ‘இவர் எனக்கு ஞானகுரு. என் பிறவித் துயர் தீர்க்கும் மெய்க்குரு' என பதறியபடி கூறினார்.

    அதற்கும் எகத்தாளமான சிரிப்பை உதிர்த்தார் கடிகை முத்து புலவர். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கடிகை முத்து புலவர் அங்கிருந்து சென்று விட்டார்.

    இதற்கிடையில் அப்பரானந்த சித்தர் எதுவும் பேசவில்லை. அவர்கள் இருவரின் வாதங்களையும் சிரித்தபடியே அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார்.

    நாட்கள் கடந்தன.

    எட்டயபுரம் வந்த கடிகை முத்து புலவருக்கு கன்னத்தில் புற்று நோய் உருவாகி விட்டது. இதனால் அன்னம், தண்ணீர் குடிக்க முடியாமல் தவித்தார். வலியால் துடித்தார். சங்கரன்கோவில், திருச்செந்தூர் என ஒவ்வொரு தலங்களாகச் சென்று, இறைவனைப் பாடி சுகம் அளிக்கும்படி வேண்டினார். ஆனால் எந்த பலனும் கிடைக்கவில்லை.

    ஒரு முறை திருச்செந்தூரில் வழிபட்ட கடிகை முத்து புலவர், இரவு நேரத்தில் ஆலயம் முன்பாக உள்ள கடற்கரையில் படுத்து கண் அயர்ந்தார். அப்போது அவர் கனவில் தோன்றிய முருகப் பெருமான், ‘என்னுடைய சீடனை நீ பழித்து விட்டாய். நெட்டூர் போ.. அவன் கையால் உணவு வாங்கி சாப்பிடு. எல்லாம் சரியாகிவிடும்’ என்றார்.

    அதிர்ந்து போன புலவர், விடிந்தும் விடியாததுமாக நெட்டூர் வந்து சேர்ந்தார். அங்கு தியானத்தில் இருந்த அப்பரானந்த சித்தரின் காலில் விழுந்து வணங்கினார்.

    இப்போதும் சிரித்தபடியே கடிகை முத்து புலவரைப் பார்த்தார் அப்பரானந்த சித்தர். பிறகு தான் தவப்பிச்சையாக பெற்று வைத்திருந்த அன்னத்தை புலவரின் கன்னத்தில் தேய்த்தார். தான் தவப் பிச்சை எடுத்து வரும் உணவை மூன்று நாட்கள் சாப்பிடும்படி கூறினார். புலவரும் அப்படியே செய்தார்.

    என்ன ஆச்சரியம்.. புலவரின் நோய் பூரணமாக தீர்ந்து போனது. ஆனந்தத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார், கடிகை முத்து புலவர்.

    அந்த மகிழ்ச்சியின் வெளிப்பாடாக ‘அப்பரானந்த ஆனந்த மாலை' என்ற பாடல் தொகுப்பைப் பாடி, நன்றியுடன் சித்தர் வசம் அதைச் சமர்ப்பித்தார். அதன்பிறகு எட்டயபுரம் புறப்பட்டுச் சென்றார்.

    ஒரு முறை சித்தரை தரிசிக்க வந்த சொக்கம்பட்டி ஜமீன்தார், ‘சுவாமி! நான் திருச்செந்தூர் செல்கிறேன். என்னுடன் பல்லக்கில் எழுந்தருள வேண்டும்' என்றார்.

    அதற்கு சித்தர், ‘எனக்கு சிவிகை வேண்டாம். உனக்கு முன் நான் திருச்செந்தூர் வந்து சேர்ந்து விடுவேன்' என்று கூறிவிட்டு, அங்கிருந்த மருதமரத்தின் அடியில் போய் அமர்ந்து கொண்டார்.

    இதையடுத்து ஜமீன்தார் திருசெந்தூர் புறப்பட்டார். வழியில் அவருக்கு கடுமையான நீர் தாகம் எடுத்தது. ஆனால் தண்ணீர் கிடைக்கவில்லை. அப்போது சேவகனின் முன்பு தோன்றிய அப்பரானந்த சித்தர், ‘தென் கீழ்த்திசையில் போய் பார் தண்ணீர் கிடைக்கும்' என்றார். அது போலவே தண்ணீர் இருந்தது.

    ஜமீன்தாருக்கு முன்பாகவே திருச்செந்தூர் ஆலயம் வந்த அப்பரானந்த சித்தர், சேவகன் வடிவில் ஆலய நிர்வாகத்தினரிடம் ‘சொக்கம்பட்டி ஜமீன்தார் நாளை வருவான்' எனக் கூறி மறைந்தார்.

    மறுநாள் ஜமீன்தாரை வரவேற்க ஆலய குருக்கள் காத்திருந்தனர். ஆச்சரியமுற்ற ஜமீன்தார், சுவாமி நேற்று இரவே இங்கு வந்து விட்டதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தார். முருகப்பெருமானைத் தரிசித்துவிட்டு, அங்கேயே தங்கினார் ஜமீன்தார்.

    இரவு திருச்செந்தூர் முருகன் கோவில் சன்னிதிகள் மூடப்பட்ட பிறகு, ஆலயத்திற்குள் நுழைந்தார் அப்பரானந்த சித்தர். கதவுகள் தானாகத் திறந்து வழிவிட்டது. நேராக முருகப்பெருமான் சன்னிதிக்குச் சென்ற சித்தர், ‘குருவே, நான் சித்தி அடைவது எப்போது?' எனக் கேட்டார்.

    அப்போது அங்கு ஒரு குரல் கேட்டது. பேசியது முருகப்பெருமான் தான். ‘அப்பரானந்தா! இன்னும் 24 மாத காலங்களுக்கு உனக்கு பணி உள்ளது. பெற்றோரின் கடன் முடித்த பிறகே உனக்கு சித்தி கிடைக்கும், நீ.. வணங்கும் வேல் அருகிலேயே உனக்கு சமாதி வைப்பார்கள். அதன் பின் கர்ப்பக்கிரகத்தில் தற்போது நீ வேல் வைத்து வணங்கிய இடத்தில், என்னை பிரதிஷ்டை செய்வார்கள். என்னை வணங்கும் பக்தர்கள் அனைவரும் உன்னையும் வணங்குவார்கள்' என கூறி அருளினார்.



    இறைவனை தரிசித்து விட்டு வெளியே வந்தார் சித்தர். அனைத்தையும் வெளியே இருந்து கவனித்துக் கொண்டிருந்த சொக்கம்பட்டி ஜமீன்தாரின் சேவகன், ஆச்சரியத்துடன் இதுபற்றி ஜமீன்தாரிடம் கூறினான். அவருக்கு, முருகப்பெருமானுடன் பேசும் ஆற்றல் பெற்றவர் சித்தர் என்பதில் எல்லையில்லாத மகிழ்ச்சி.

    உடனடியாக சித்தரைப் போய் சந்தித்த ஜமீன்தார், ‘சுவாமி! நான் குழந்தை பேறு இல்லாமல் தவிக்கிறேனே. இதற்கு அருள்புரியமாட்டீர்களா' என்று வேண்டினார்.

    ‘உனக்கு மகன் பிறப்பான். அதற்காக நீ.. செந்தூரில் உள்ள சரவணப் பொய்கையைச் சீர் செய்யவேண்டும்' என்றார் சித்தர். மறுநிமிடமே சரவணப்பொய்கையை சீர் செய்ய நடவடிக்கை எடுத்தார் ஜமீன்தார்.

    பின்னர் சொக்கம்பட்டி திரும்பும்போது, தனது தாகம் தீர்த்த சுனையைத் தேடினார். ஆனால் அந்த சுனை அங்கே இல்லை. எல்லாம் சித்தரின் செயல் என்று நினைத்தபடி அரண்மனை வந்து சேர்ந்தார். அப்பரானந்த சித்தர் கூறியபடியே ஜமீன்தாருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

    காலங்கள் கடந்தன. முருகப்பெருமான் சொன்னபடியே தனது தாய் தந்தைக்கு இறுதி மரியாதை செய்து விட்டு, நெட்டூரில் தவப்பிச்சை அன்னத்தை தொடர்ந்து கொண்டிருந்தார் அப்பரானந்த சித்தர். வேலுக்கும் தவறாமல் பூஜை செய்தார்.

    இந்த நிலையில் இருளகற்றி அம்மையின் இறுதி காலத்தை சித்தர் உணர்ந்தார். அவரை தவம் செய்யும்படி சித்தர் பணித்தார். இருளகற்றியம்மை தவம் இருந்தார். அவரது உயிர் ஒளியில் கலந்தது. அவரது ஒடுக்கத்தை தான் அடங்கப்போகிற இடத்திற்கு அருகில் தன் கையாலேயே அமைத்தார். சித்தரின் தமக்கை முத்தம்மையும் அந்த ஆலய வளாகத்திலேயே சமாதி வைக்கப்பட்டார்.

    அது ஒரு ஆனி மாதம் வியாக்கிழமை பூச நட்சத்திரம். அப்பரானந்த சித்தர், சொக்கம்பட்டி ஜமீன் மற்றும் பக்தர்களை அழைத் திருந்தார். பின் அவர்களை நோக்கி, ‘எனது இறுதி காலம் வந்து விட்டது. இருளகற்றிக்கு வடக்கில் என்னை அடக்கம் செய்யுங்கள். நான் ஒடுங்கியப் பின் இறைவனுக்கும் வேற்படைக்கும் உண்மையான அன்போடு பணி செய்யுங்கள். இந்த இடத்தில் நற்பணி செய்ேவாருக்கு எல்லா அறப் பயன்களும், பொருளும், இன்பமும் கிட்டும். அவர்கள் அனைவரும் முக்தியும் அடைவார்கள்’ என்று அருளினார்.

    மேலும் ‘இந்தச் சன்னிதியில் முருகப்பெருமானையும் பிரதிஷ்டை செய்யுங்கள். எல்லா தேவர்களும் துதி செய்ய அவர் இங்கு வந்து கோவில் கொள்வார்’ என்றார்.

    அனைவரும் சூழ்ந்து நிற்க, அப்பரானந்தர் சிற்றாற்றில் நீராடினார். புலித் தோலை ஆசனமாக விரித்து வடக்கு நோக்கி பத்மா சனத்தில் அமர்ந்தார். சின்முத்திரைக் காட்டி அருட் சமாதி நிலையில் ஒன்றினார். எல்லாரும் அதிசயிக்குமாறு மேலேழுந்த ஒரு சோதி வான் நோக்கிச் சென்றது.

    அதன்பின் அப்பரானந்த சித்தர் அருளியபடியே ஆலயம் அமைக்கப்பட்டது. கர்ப்பக்கிரகத்தில் வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமானை பிரதிஷ்டை செய்தார்கள். தற்போது இந்த ஆலயம் சுப்பிரமணிய சுவாமி, அப்பரானந்த சுவாமிகள் ஆலயம் என்றே போற்றப்படுகிறது.

    அப்பரானந்த சுவாமிகளின் குருபூஜை ஆனி மாத பவுர்ணமியில் நிகழ்த்தப்படுகிறது. இக்கோவிலில் திருச்செந்தூரில் நடைபெறும் அனைத்து திருவிழாக்களும் நடைபெறும்.

    ஆனி திருவிழா தான் இக்கோவிலில் மணிமகுட திரு விழாவாகும். இவ்விழாவில் அன்ன பிச்சை வழங்கப்படும். இதற்காக அன்னம் குவிக்கப்பட்டு, சுவாமி மற்றும் அவரின் குருநாதரின் பாதக்குறடுகள், கைத் தண்டுகள் படையலில் வைத்து பூஜை செய்யப்படும். இச்சமயம் அப்பரானந்த சுவாமி களும் இவரது குருநாதர் குழந்தை முத்தானந்தா சுவாமிகளும் இங்கே வந்து அருளி நிற்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள். அன்ன பிச்சையை சாதுக்கள் பக்தர்களுக்கு வழங் குவார்கள். அதை உண்ணும் மக்களுக்கு வேண்டும் வரம் கிடைக்கிறது. குறிப்பாக குழந்தை வரம். தடைபட்ட திருமணம் நடந்தேறுகிறது. கடன் தீர்ந்து தொழில் பெருகுகிறது. நாள் பட்ட நோய் தீருகிறது.

    தினமும் இக்கோவிலின் நடை காலை 6 மணியில் இருந்து 9 மணி வரையும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையும் திறந்திருக்கும்.

    சித்தர் அருளிய 11 கடமைகள்

    தன்னை வணங்க வரும் பக்தர்களிடம், அப்பரானந்த சித்தர் 11 கடமைகளை கடைப்பிடிக்கும்படி கூறிவந்தார். ஞானத்தின் தொடக்கமான அந்த கடமைகளில், ‘சிவனது மலரடிகளில் மலர் தூவி வழிபட்ட பின்பே உண்ணுதல். பசுந்தழைகளை பசு உண்ணக் கொடுத்தல், கதிரவனை வணங்குதல், உண்ணும் போது பிறருக்கு கொடுத்து உண்ணுதல், இனியச் சொற்களையே எல்லோரிடத்திலும் பேசுதல், நமசிவாய என்ற ஐந்தெழுத்தை இடைவிடாது ஓதுதல், நன்மை பெருகும் காலத்திலும் நிலைத்த வாய்மையைப் போற்றுதல், தொண்டு செய்வோர்களையும் இறைவனையும் வாழ்த்துதல், தாய் தந்தையர், குரு, தெய்வங்களைப் பேணும் அன்பு, எல்லா உயிரையும் தன்னுயிர் என எண்ணுதல், ஞான குரு உபதேசத்தினைக் கேட்பது’ போன்றவை அந்த கடமைகளாகும். இக்கடமையை நிறைவேற்றும் போது அறிவு நிறையும், வீட்டின் இன்பத்துக்கும் குறை ஏற்படாது என்பது சித்தரின் வாக்கு.

    அமைவிடம்

    திருநெல்வேலியில் இருந்து தென்காசி செல்லும் சாலையில் உள்ளது ஆலங்குளம். இங்கிருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும், திருநெல்வேலி- சங்கரன்கோவில் சாலையில் அழகிய பாண்டிய புரத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவிலும், சங்கரன்கோவிலில் இருந்து ஊத்துமலை, சோழச்சேரி வழியாக 10 கிலோமீட்டர் தொலைவிலும் நெட்டூர் அமைந்துள்ளது. இங்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன. 
    திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் - ரெட்டியார்பட்டி செல்லும் சாலையில் உள்ள அழகிய கிராமம் நெட்டூர். அப்பரானந்தா சித்தர் இவ்வூரில் சமாதி நிலை அடைந்த காரணத்தால், இவ்வூர் பெருமை பெற்றுள்ளது.
    திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் - ரெட்டியார்பட்டி செல்லும் சாலையில் உள்ள அழகிய கிராமம் நெட்டூர். அப்பரானந்தா சித்தர் இவ்வூரில் சமாதி நிலை அடைந்த காரணத்தால், இவ்வூர் பெருமை பெற்றுள்ளது. இவ்வூர் முற்காலத்தில் ‘ஸ்ரீரங்க பூபால சமுத்திரம்’ என அழைக்கப்பட்டது. இங்கு அப்பரானந்தா சுவாமிகள் வந்து தவம் புரிந்த பின் ‘நிஷ்டைபுரி’ என்று அழைக்கப்பட்டு, அதுவே மருவி நிட்டைபுரி என மாறி, இறுதியில் ‘நெட்டூர்’ என பெயர் பெற்றது.

    இவ்வூரில்தான் மிகப்பெரிய அதிசய அருள் சக்தி குடிகொண்டுள்ளது. ஆம்.. அகத்தியப் பெருமானுக்கே தமிழ் கற்றுக்கொடுத்த முருகப்பெருமான் சன்னிதிக்குள், அப்பரானந்தா சுவாமி சமாதி அமைந்திருக்கிறது. இது எங்குமே காணக்கிடைக்காத அற்புதத் தரிசனம். குருவின் மூலஸ்தானம் அருகே சமாதி நிலை யாருக்கு கிடைக்கும்?. அப்படி கிடைத்திருக்கிறது என்றால் இவர் எவ்வளவு பெரிய மகானாக திகழ்ந்திருக்கிறார் என்பது புலப்படும்.

    யார் இந்த அப்பரானந்தா சுவாமிகள்?. இவர் எங்கிருந்து இவ்வூருக்கு வந்தார்?

    தூத்துக்குடிக்கு அருகில் உள்ள பட்டினமருதூரில், சகல கலைகளிலும் வல்லவரான மகாராஜப் புலவர் வாழ்ந்து வந்தார். இவரது மனைவி மதுரவல்லி. ஆதிமூலப் புலவர், ஆறுமுகப் புலவர், அருணாசலப் புலவர், கந்தசாமிப் புலவர், நல்ல குமாருப் புலவர், சங்கிலி வீரப் புலவர், முத்தம்மாள், அய்யம்பெருமாள் புலவர் ஆகிய எட்டுபேர் இவர்களின் குலத்தோன்றல்கள். இவர்களில் அய்யம்பெருமாள் தான் பிற்காலத்தில் அப்பரானந்தா சுவாமிகளானார்.

    குழந்தைகளுக்கு பக்தி, உண்மை, ஒழுக்கம், கல்வி ஆகியவற்றை முறையாகக் கற்றுக் கொடுத்தனர் பெற்றோர். முதல் ஆறு பேருக்கும் முறைப்படி திருமணம் நடைபெற்றது. முத்தம்மையை ஸ்ரீரெங்க பூபாலசமுத்திரத்தைச் சேர்ந்த வேலுமயில் பண்டிதருக்கு மணமுடித்துக் கொடுத்தனர். தம்பி அய்யம்பெருமாள் மீது பாசம் கொண்ட முத்தம்மாள், அவரையும் தன்னுடன் அழைத்து வந்தார். இதனால் அக்காள் வீட்டில் பாதி நாளையும் தனது சொந்த ஊரில் மீதி நாளையும் கழித்து வந்தார் அய்யம்பெருமாள்.

    சுரண்டைப் பகுதியில் வாழ்ந்தவர், குழந்தை முக்தானந்த தேசிகர். அவர் திருக்குற்றாலம், கன்னியாகுமரி, திருச்செந்தூர் போன்ற ஸ்தலங்களுக்குச் சென்றுவிட்டுப் பட்டினமருதூர் வந்து சேர்ந்தார். அங்கு விளையாடுகின்ற சிறுவர் கூட்டத்தில் அய்யம்பெருமாளைக் கண்டார். தமக்குத் தொண்டு செய்வதற்கேற்றச் சீடன் என்று நினைத்தார். அய்யம்பெருமாளை அழைத்து, ‘உன்னை நீ அறிவாயாக' என்று கூறி திருநீறு வழங்கி உபதேசம் செய்தார். அன்று முதல் குழந்தை முக்தானந்த தேசிகரை குருவாக ஏற்று, அவர்வழி நடந்தார் அய்யம்பெருமாள். குருவுடன் பல சிவ தலங்களுக்குச் சென்றார். இறுதியில் இருவரும் மதுரையில் தங்கினர்.

    இந்த நிலையில் அய்யம்பெருமாளைக் காணாமல், அவரது பெற்றோர் தேடத் தொடங்கினர். குல தெய்வத்திடம் வந்து முறையிட்டனர். ‘உன் மகன், பரிசுத்தமான தேசிகனோடு மதுரையில் உள்ளான்' என வாக்கு கிடைத்தது.

    மறுநாளே மதுரைக்கு ஓடோடிச் சென்றார், மகாராஜப் புலவர். அங்கே குருவுக்கு பணியாற்றிக் கொண்டிருந்தார் அய்யம்பெருமாள்.

    மகாராஜப் புலவரைக் கண்ட குழந்தை முக்தானந்த தேசிகர், ‘இவன் உன்னுடைய மகனல்ல.. ஞானி' எனக் கூறி அய்யம்பெருமாளை, தந்தையோடு அனுப்பிவைத்தார்.

    தந்தையும், மகனும் பட்டின மருதூர் திரும்பினர். அது முதல் அய்யம்பெருமாள் திடீர் திடீரென்று மாயமாக மறைந்து விடுவார். அவருக்கு கால்கட்டு போட்டால் சரியாகி விடும் என பெற்றோர் நினைத்தனர். இதற்காக களக்காட்டில் மாதவப் பண்டிதரின் மகள் இருளகற்றி அம்மையைத் திருமணம் செய்ய பேசி முடித்தனர். மணவறையில் தாலிக் கட்டும் சமயம், அய்யம்பெருமாள் மாயமாய் மறைந்து விட்டார். அனைவரும் அதிர்ந்தனர்.

    பெண்ணின் பெற்றோர், ‘இவன் பேய் போல.. இவன் எப்படி நம் பெண்ணை வைத்து காப்பாற்றுவான்' என வருந்தினர்.

    அப்போது அய்யம்பெருமாளின் சகோதரி முத்தம்மை, ‘தம்பி! உன்னை நானும், உன் அன்பர்களும் அறிவோம். மற்றவர்கள் அறியமாட்டார்கள். தயவு செய்து மணவறையில் காட்சிக் கொடு' என வேண்டினார். அதன்பின் அவர் மணவறையில் தோன்றி இருளகற்றியை மணம் செய்து கொண்டார்.

    தம்பதியர் பட்டினமருதூருக்கு வந்து சேர்ந்தனர்.

    சில நாட்களிலேயே, தன்னுடைய தவத்திற்கு இல்லறம் தடையாக இருப்பதை அய்யம்பெருமாள் உணர்ந்தார். எனவே முத்தம்மையின் இல்லம் தேடி வந்தார். அங்கு சிற்றாற்றங்கரையில் தவமேற்றினார். இருளகற்றி அம்மையும் அங்கேயே வந்து விட்டார். சுவாமிகள் முச்சந்தியில் அமர்ந்து நிஷ்டையில் தவமேற்றினார்.


    சித்தரை தனது அரியணையில் அமரவைத்து ஜமீன்தார் வணங்கி நின்ற காட்சி

    நாட்கள் கடந்து பல மாதமாகியும் தவம் முடிந்தப்பாடில்லை. அவரைச் சுற்றிக் கரையான் புற்று உருவானது. மழை, வெயில் தாக்கி விடக்கூடாது என முத்தம்மாளும், இருளகற்றியும் தங்களது முந்தானைச் சேலையால் கரையான் புற்றை மூடி பாதுகாத்தனர். அய்யம்பெருமாளின் உடல் முழுவதும் கரையான் புற்றில் மறைந்து விட்டது. தமக்கையும், மனைவியும் உறக்கம் இல்லாமல், 20 நாட்கள் பக்தியோடு முப் புடாதி அம்மனை நோக்கி நோன்பிருந்தனர்.

    அய்யம்பெருமாளின் தவத்தை கலைக்கும் பொறுப்பை அன்னையானவள், விநாயகப்பெருமானிடம் ஒப்படைத்தார். விநாயகர் யானை உருவம் கொண்டு தன் துதிக்கையால் புற்றை பெயர்த்து எடுத்து, சித்ரா நதியில் தூக்கி வீசினார். நீரில் புற்று மண் முழுவதும் கரைந்தது. அய்யம்பெருமாளின் உடல் குளர்ச்சி உண்டாயிற்று. இதனால் அவர் தவம் நீங்கி கரையேறினார். அவருக்கு ஆடை கொடுத்த தமக்கைக்கும், மனைவிக்கும் திருநீறு பூசி ஆசி வழங்கினார்.

    அய்யம்பெருமாளிள் இந்த நீண்ட நிஷ்டையான தவத்தால்தான், இந்த ஊர் ‘நிஷ்டையூர்’ என்று வழங்கப்பட்டிருக்கிறது.

    இந்த சம்பவத்துக்கு பின் முப்புடாதி அம்மனை வழிபடுவதை வழக்கமாக்கினார் அய்யம்பெருமாள். ஒரு நாள் அன்னை, ‘நீ.. இல்லறத்தில் சிறப்புற வாழ வேண்டும்' என வாழ்த்தி, அழகிய வேல் ஒன்றைக் கொடுத்தார். அந்த வேலை, பக்தியுடன் நெட்டூரில் வைத்து வணங்கினார். அதன்பின் இல்லறத்தில் மனநிறைவுடன் ஈடுபட்டார். அதன் பயனாக அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. அவர்களுக்கு மணம் முடித்து வைத்தார்.

    பின்னர் அய்யம்பெருமாளின் மனைவியும் துறவறம் ஏற்றுக்கொண்டார். கணவன்-மனைவி இருவருமாக சேர்ந்து, இறை பணி செய்ய ஆரம்பித்தனர்.

    சாதுகளுக்கு தவமேற்ற நல்ல இடம் வேண்டுமே.. எனவே நெட்டூரில் பூந்தோட்டத்தில் தவமேற்றினார். இவரைப் பற்றி அறியாத மேல்தட்டு மக்கள் இவரை நோக்கி கல் எறிந்தனர். ஆனால் அவர்கள் எறிந்த கல் ஒன்றுகூட அப்பரானந்தர் மீது படவில்லை. இதனால் பயந்து போன அவர்கள், அங்கிருந்து ஓடினர். பலர் மனம் திருந்தி, அவருக்கு தேவையான வசதிகளைச் செய்து கொடுத்தனர். பலர் கொடுத்த பொன், பொருட்களை, சைவ சமய வளர்ச்சிக்கு சித்தர் பயன்படுத்தினார்.

    அப்பரானந்த சித்தர் ஓரிடத்தில் அமர்ந்திருப்பார். தவத்தில் இருக்கும் போது அகத்திக் கீரை, சோறு ஆகியவற்றைப் பிசைந்து மக்களுக்கு தருவார். இதனால் நோய் தீர்ந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இவ்வூரில் இருந்த வெற்றிலை கொடிகால் பயிரிடும் தொழிலாளிகள், சித்தரின் தவ உணவுக்கு பொருள் அளிப்பார்கள். இதனால் அவர்களின் கொடிகால் அமோக விளைச்சல் அடைந்தது.

    சித்தர் தவமிருக்க தனிமையை நாடிச் செல்லும் போதெல்லாம், இருளகற்றி அம்மை தினமும் முருகனின் வேலுக்கு பூஜை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

    ஒரு முறை ஆலங்குளம் அருகே உள்ள ஒக்க நின்றான் பொத்தையில், அப்பரானந்தா சித்தர் தவம் இயற்றிக்கொண்டிருந்தார். அவரது தவம் பல மாதங்களைக் கடந்தது. உயிர்க் காற்றையே உணவாக கொண்டு தவமியற்றிக்கொண்டிருந்தார்.

    அந்த நேரத்தில் சொக்கம்பட்டி ஜமீன்தார் வடகரைப்பாண்டியன், அந்தப் பகுதிக்கு வேட்டையாடச் சென்றார். அங்கு அவர் கண்ட காட்சி அவரை திகைக்கச் செய்தது. அப்பரானந்தா சித்தர் தவம் இயற்றிக்கொண்டிருக்க, அவர் முன்பாக இரண்டு நாகங்கள் படமெடுத்து காவல் காத்துக் கொண்டிருந்தன.

    ஜமீன்தார், சித்தரின் முன்பாக விழுந்து வணங்கினார். சுவாமிகள் தவம் கலைந்தது. ஆனால் கோபமடையவில்லை. தன்னோடு அரண்மனை வரவேண்டும் எனப் பணித்தார், ஜமீன்தார்.

    அதற்கு சித்தர், ‘நீ இப்போது இங்கிருந்து செல். நான் 7 நாளில் அங்கே வருகிறேன்' என்று அருளினார். அது போலவே அரண் மனைக்குச் சென்றார். இந்தக் கால கட்டத்தில் ஜமீனின் சில பகுதிகளை ஜமீன்தார் இழந்திருந்தார். அதுகுறித்து சித்தரிடம் ஜமீன்தார் கேட்க, மூன்று விரலைக் காட்டினார். முருகன் அருளால் மூன்று மாதத்தில் அவருக்கு இழந்தப் பகுதி கிடைத்தது.

    இதையடுத்து ஜமீன்தாருக்கு சித்தரின் மேல் அதீத பற்று ஏற்பட்டது. அவர் அடிக்கடி சித்தரை சந்திப்பதும், அவரை அரண் மனைக்கு அழைத்து உபசரிப்பதும் வாடிக்கையாகிப் போனது.

    ஒரு முறை சொக்கம்பட்டி அரண்மனைக்கு வந்திருந்தார் சித்தர்.

    அவரை தான் அமரும் அரியணையில் அமரச் செய்து அழகு பார்த்தார், ஜமீன்தார். அந்தச் சமயத்தில் எட்டையபுரம் ஜமீனின் தலைமை புலவர் கடிகை முத்து புலவர் அங்கு வந்தார்.

    அவர் ‘யார் இந்தப் பரதேசி.. இவனுக்கு ஏன் இந்த மதிப்பு மரியாதை' என கிண்டல் செய்தார்.

    அவரை மவுனமாக, புன்சிரிப்புடன் பார்த்தார் அப்பரானந்தா சித்தர்.

    அந்த மவுனச் சிரிப்பில் ஆயிரம் அர்த்தங்கள் புதைந்து கிடந்தன.

    குருவுக்கு மரியாதை

    தனது குருநாதரான குழந்தை முக்தானந்த சுவாமிகள் பரிபூரணம் அடையப் போவதாக அய்யம்பெருமாளின் மனதுக்கு பட்டது. இருளகற்றியிடம் முறைப்படி வேலுக்கு பூஜை செய்யும் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, தன் குரு அடங்கவுள்ள அம்பாசமுத்திரம் மன்னார் கோவிலுக்கு வந்து சேர்ந்தார். குருவின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார்.

    ‘அய்யம்பெருமாள்! நீ என்னைக் காட்டிலும் பெருமை அடைந்து விட்டாய். உன்னை உலகம் ‘அப்பரானந்தா’ எனப் போற்றும். நீ மிகுந்த சித்தி அடைந்திருக்கிறாய். நான் வீடு பேறு அடையும் சமயத்தில் அதை அறிந்து நீ வந்தமையால் மகிழ்கின்றேன்’ என்ற குழந்தை முக்தானந்த சுவாமிகள், சிறிது நேரத்தில் சமாதி நிலை அடைந்தார். குருவுக்கு வேண்டியக் காரியங்களை நிறைவேற்றினார் அப்பரானந்தர்.

    குருநாதரின் பாதக்குறடு, கைத்தண்டு முதலியவற்றை தன்னோடு எடுத்துக் கொண்டு, பாவநாசம், திருக்குற்றாலம் சென்று அவருக்காகச் சிறப்பு பூஜைகள் செய்தார். நெட்டூர் முருகன் கோவிலில் வைத்து பூஜை செய்தார். சித்திரை மாதம் விசாக நட்சத்திரத்தில் குருவின் நினைவாக, அவரது பொருட்களுக்கு பூஜை நடத்தினார். 
    திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே நெற்கட்டும் செவல் செல்லும் இடத்தில் பாறைப்பட்டி என்னும் கிராமத்தில் சிவனய்யா சித்தர் சமாதி உள்ளது.
    திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே நெற்கட்டும் செவல் செல்லும் இடத்தில் பாறைப்பட்டி என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தில் சிவனய்யா சித்தர் சமாதி அடைந்துள்ளார். அடக்கமாகி பல வருடங்கள் கழித்து பூமியில் அவரைத் தோண்டியப் போது, அவரது உடல் எந்த சேதமும் இன்றி அப்படியே இருந்தது அதிசயத்திலும் அதிசயம் என்கிறார்கள். அவரின் வரலாறு.. நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் அற்புத வரலாறு.

    சங்கரன்கோவில் அருகில் உள்ள அரியூரைச் சேர்ந்தவர் சிவனய்யா. இவர் மிகப்பெரிய அந்தஸ்து கொண்டவர். மாவீரன் பூலித்தேவனுக்கு ராஜகுருவாக இருந்தவர். பூலித்தேவனுக்கு பல நேரங்களில் நல்லத் திட்டங்கள் வகுத்து கொடுத்து, அவரைப் போரில் வெல்ல வைத்தவர் என்று சொல்லப்படுகிறது. இவரிடம் கேட்காமல் பூலித்தேவன் எங்கும் செல்லமாட்டார். இவர் சிவபெருமான் மீது பற்று கொண்டவர்.

    அரியூரே மிகப்பெரிய ஆன்மிக கிராமம்தான். அரியூர் மலை மிகவும் பிரசித்திப் பெற்றது. பாம்பாட்டி சித்தர் உள்பட பல சித்தர்கள் இங்கு அமர்ந்து தவம் இயற்றியுள்ளார்கள். சிவனய்யா சித்தரும் இங்கு அமர்ந்து தவமேற்றியுள்ளார். சிவனய்யா அனைத்து ஜீவ ராசிகளையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருப்பாராம். இவர் தனது பூஜை அறையில் அமர்ந்து பூஜை செய்து கொண்டிருக்கும்போது, கண்ணை மூடி தியானத்தில் ஈடுபடுவார். திடீரென்று ‘நல்லவனே வா' என்றால், எங்கிருந்தாலும் நாகப்பாம்பு அவர் முன் வந்து படமெடுத்து ஆடி நிற்குமாம். அவர் கண்ணைத் திறந்து நாகத்தினைப் பார்த்து ‘நல்லவனே போ' என்று கூறினால் பாம்பு அங்கிருந்து அகன்று விடும் அளவுக்கு தவவலிமை பெற்றவராம்.

    அரண்மனையிலும், மக்கள் மத்தியிலும் சிவனய்யா சித்தருக்கு நல்லபெயர். மக்களுக்கு எந்தத் தீங்கு என்றாலும் தனது தவவலிமையால் அதனைத் தீர்த்து வைப்பார்.

    இவர் பேரும் புகழுடன் வாழ்ந்து வருவதை சகிக்க முடியாத மோகினி பெண்ணொருத்தி, இவர் புகழை அழித்து விட திட்டமிட்டாள். அதனை செயல்படுத்தும் வாய்ப்புக்காகக் காத்திருந்தாள்.

    சிவனய்யா சித்தர் நெல்கட்டும் செவலில் இருந்து சங்கரன்கோவிலுக்கு தினமும் நடந்து சென்றே, சிவபெருமானை வணங்கி வருவார். அந்த இடைப்பட்ட நேரத்தில் சித்தரை பழிவாங்க பயன் படுத்த நினைத்தாள் மோகினி.

    ஒரு நாள், சித்தர் வரும் வழியில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தக் குழந்தையை கிடத்தினாள். குழந்தை மோகினியால் உருவாக்கப்பட்ட தீயச் சக்தி. அதற்கு உயிர் கொடுத்தால், அந்த சக்தி மூலம் இந்த உலகத்தினையே தீயச் செயலில் ஈடுபடுத்தி விடும். அதே நேரம் சித்தர்தான் அந்த சக்தி உருவாக காரணம் என்ற கெட்டப்பெயரையும் உருவாக்கி விடலாம் என்று கணக்கு போட்டாள் மோகினி.

    சித்தர் வந்த வழியில், சாதாரண பெண் போன்ற உருவம் கொண்டு, குழந்தையை காப்பாற்றித் தரும்படி வேண்டினாள் மோகினி. ஆனால் அனைத்தையும் தன் தவ வலிமையால் உணர்ந்து கொண்ட சித்தர், கையில் இருந்தக் கம்பை மோகினி மீது போட்டார். அந்தக் கம்பு ஒளிப்பிளம்பாக மாறி அவளை நோக்கிப் பாய்ந்தது. மோகினி தப்பித்தால் போதும் என அந்தக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஓட ஆரம்பித்தாள். இதனால் சித்தரின் புகழ் சுற்றுப்புற கிராமங்களிலும் பரவத் தொடங்கியது.

    பாறைப்பட்டி கிராமத்தில் இருந்து ஒத்தையடி பாதை வழியாக சென்று அரியூர் மலை அடிவாரத்தை அடையலாம். அங்கு தரையோடு தரையாக ஒரு பாறை இருக்கிறது. அந்தப் பாறையில் வட்ட எழுத்துகள் காணப்படுகின்றன. அந்த வட்ட எழுத்துக்கள் எல்லாம் சிவனய்யா தம் கைப்பட எழுதினது என அந்தப் பகுதி மக்கள் நம்புகிறார்கள். இந்தப் பகுதியில் நிறைய புதையல் இருப்பதாகவும், அதன் குறிப்பே, சிவனய்யா எழுதி வைத்த வட்ட எழுத்துகள் என்று சில கதைகளும் சொல்லப்படுகிறது.



    சிவனய்யா சித்தர் எப்போது, எப்படி, எந்த ஆண்டு சமாதி அடைந்தார் என்பது யாருக்கும் தெரியாமல் இருந்தது. அவரது சமாதி இடத்தை யாரும் அறியமுடியவில்லை. கடந்த 2015-ம் ஆண்டு ஒருவரது கனவில், சித்தர் சமாதி அடைந்த இடம் தென்பட்டதாக சொல்லப்படுகிறது. இதுபற்றி அறிந்த மக்கள் அனைவரும் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றனர். அங்கு இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை தோண்டினர். அவரது உடல் தென்பட்டது.

    அனைவருக்கும் ஆச்சரியம். சித்தரின் உடல் கெடாமல் அப் படியே இருந்தது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் அடங்கிய சித்தரின் உடல் கெடாமல் இருப்பதையும், அவரது தவ வலிமையையும் எண்ணி பக்தர்கள் மெய்சிலிர்த்தனர். மூன்று நாள் அப் படியே மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

    பின்னர் 4 அடியில் சுவர் எழுப்பி அதன் மீது தளம் போட்டு மூடினார்கள். சமாதி கோவிலை அமைத்து 44 நாள் பூஜை செய்யப்பட்டது. தற்போது ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் பூஜை நடைபெற்று வருகிறது. பவுர்ணமி அன்று மக்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள். தங்கள் பிரச்சினைக்கு தீர்வு காணவரும் பக்தர்கள், சிவனய்யா சித்தர் சமாதியை 21 தடவை சுற்றி வந்து நல்ல பலன்களைப் பெறுகிறார்கள்.

    சிவனய்யா சித்தர் புதையலைக் காப்பவர் என்பதால், இங்கு வந்து வணங்கினால் கடன் பிரச்சினை தீருகிறது. சித்தர் பீடத்தினை வலம் வருபவர்களுக்கு திருமணம் நடந்தேறுகிறது. பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கிறது.

    பசுவை மானாக மாற்றிய சித்தர் :

    ஒரு முறை அரியூர் மலையில், அரண்மனை பசுக்கள் மேய்ந்து கொண்டிருந்தன. வேடன் ஒருவன் மலையில் உள்ள காட்டுக்குள் வேட்டையாடச் சென்றிருந்தான். அங்கு நின்ற மானை வேட்டையாட அம்பை எய்தான். அம்போ தவறுதலாக அரண்மனை பசு மீது பாய்ந்து, அதன் உயிரைப் பறித்தது. அரண்மனை பசுவைக் கொன்றால், அவர்களுக்கு மிகப்பெரியத் தண்டனை உண்டு. எனவே பதறிப்போன வேடன், சிவனய்யா சித்தரிடம் ஓடி வந்தான்.

    ஆனால் அவரைக் காணவில்லை. அவர்தான் சித்தராயிற்றே. அரண்மனைப் பணியில் இருந்தாலும், அவரது போக்கில்தான் சென்று கொண்டிருப்பார். அப்படி எங்கோ சென்றிருந்த நேரத்தில்தான் வேடன் வந்து நின்றான். அங்கு.. இங்கு.. என்று அலைந்து திரிந்து, இறுதியாக குளத்து கரையில் சிவனுக்கு பூஜை செய்து கொண்டிருந்த சித்தரைக் கண்டான்.

    அவர் காலில் விழுந்து, ‘சுவாமி! நான் மானை வேட்டையாட அம்பு எய்தேன். அது தவறுதலாக அரண்மனை பசு மீது பாய்ந்துவிட்டது. அரண்மனை தண்டனையில் இருந்து என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று கதறினான்.

    ‘பயப்படாதே! நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று சொன்ன சித்தர், அங்கிருந்து அசையவில்லை.

    வேடனுக்கோ பயம் அதிகரித்தது. ‘காப்பாற்றுகிறேன் என்று வாக்குறுதி அளித்தவர், அரண்மனைக்கு வராமல், இப்படி அசையாமல் அமர்ந்திருக்கிறாரே’ என்று நினைத்தான்.

    ஆனால் அவர் தன் தவத்தின் மூலமாக வேடனுக்கு உதவிக்கொண்டிருந்தார் என்பது வேடனுக்கு புலப்படவில்லை. ஆம்.. அரண்மனை பசு அம்படிப்பட்டு இறந்து விட்ட செய்தி கேட்டு, அரண்மனை காவலர்கள் மலை பகுதிக்கு சென்று பார்த்தனர். ஆனால் அங்கு உண்மையிலேயே மான் தான் இறந்து கிடந்தது. தன் தவ வலிமையால், பசுவை மானாக மாற்றி வேடனைக் காப்பாற்றியிருந்தார் சிவனய்யா சித்தர். வேடன் சித்தரின் காலில் விழுந்து வணங்கி அங்கிருந்து புறப்பட்டான்.

    சிவனய்யா சித்தரை வணங்க வேண்டுமானால், திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் வர வேண்டும். சங்கரன்கோவிலில் இருந்து நெல்கட்டும் செவல் செல்லும் சாலையில் 11 கிலோமீட்டர் தூரத்தில் பாறைப்பட்டி இருக்கிறது. இங்கு செல்ல அடிக்கடி பஸ்வசதி கிடையாது என்பதால், ஆட்டோவில் வந்து செல்வதே வசதியாக இருக்கும்.
    தென் திருவண்ணாமலை ஆலயத்தை ஒட்டியே, பெரியசாமி சித்தரின் சமாதியும் இருக்கிறது. மிகுந்த அருளாட்சி நிறைந்த ஆலயமாக இது திகழ்கிறது.
    கடந்த வாரம் பெரியசாமி சித்தரைப் பற்றிப் பார்த்தோம். அதன் தொடர்ச்சியை இந்த வாரம் பார்க்கலாம். பெரியசாமி சித்தர் இரவு நேரத்தில் யாசகம் கேட்கச் சென்றபோது, சிலர் அவரை தீவெட்டி கொள்ளையர்கள் என்று நினைத்தனர். இதனால் அவரை ஓரிடத்தில் அசையவிடாமல் நிற்கவைத்து, அவரைச் சுற்றி காய்ந்த ஓலை கட்டுகளைப் போட்டு தீவைத்தனர்.

    தீ முற்றிலும் எரிந்து சாம்பலானது. ஆனால் தீக்குள் இருந்த பெரியசாமி சித்தருக்கு ஒன்றும் ஆகவில்லை. ஏற்றிய தீபம் அவரது தலையில் அப்படியே சுடர் விட்டு எரிந்துகொண்டு இருந்தது. தீக்குள் இருந்ததற்கான சுவடு கூட அவரது உடல் மேல் தென்படவில்லை. எப்படி ஆலயத்தை விட்டு புறப்பட்டாரோ அதேபோன்ற தூய்மையான உடலோடு இருந்தார். மக்கள் அனைவரும் திகைத்தனர்.

    இவர் கொள்ளையன் இல்லை. இவர் மிகப்பெரிய சித்தர் என்பதை உணர்ந்து அவரை வணங்கினர். பெரியசாமி சித்தரின் ஆலயம் எழுப்பும் பணிக்கு, பொன்னையும், பொருளையும் வழங்கினர்.

    சித்தர்கள் பலரும் இருக்கும் காலத்தில் செய்யும் நற்பலன்களை, பிற்காலத்திலும் செய்ய வேண்டும் என்பதற்காக, பூமிக்குள் சமாதி அடைவது வழக்கமான ஒன்று. அதே போல் பெரியசாமி சித்தரும் ஜீவ சமாதி அடையும் காலம் வந்தது. அதற்கான நாளும் குறிக்கப்பட்டது.

    பெரியசாமி சித்தர் ஊர் மக்களை அழைத்தார். ‘நான் சமாதி அடையப்போகிறேன். நான் அணிந்திருக்கும் தங்கப் பூணுலையும், தங்க அரைஞான்கொடியையும் கழற்றாமல் அப்படியே என்னைச் சமாதி வைத்து விடுங்கள்’ என்றார்.

    அனைவருக்கும் ஆச்சரியம். ‘எதனால் சுவாமிகள் இப்படி சொல்கிறார். சாமிக்கோ வாரிசு கிடையாது. தனக்கு காணிக்கையாக வந்த பணத்தை எல்லாம், கோவிலுக்கு நிலபுலன்களை வாங்கி வைத்து விட்டார். தனக்காக எதையும் சேர்த்து வைக்காதவர், புதைக்கும்போது மட்டும் எதற்காக தங்கப் பூணுலையும், அரை ஞான்கொடியையும் போட்டு புதைக்கச் சொல்கிறார்’ என்று நினைத்தனர்.

    ஆனால் அவர் சொன்னதற்கு பின்னால், பெரிய வரலாறே இருக்கிறது என்பதை அப்போது யாரும் அறியவில்லை.

    பெரியசாமி சித்தர் கூறியபடியே, அவரைச் சமாதி நிலையில் வைத்து அதன் மேலே கல் படுகை அமைத்து விட்டனர். இதை அந்த ஊரைச் சேர்ந்த நாலு பேர் கவனித்துக் கொண்டே இருந்தனர். அவர் உடலில் உள்ள தங்கத்தை எப்படியாவது களவாடி விட வேண்டும் என்று திட்டமிட்டனர். ஒரு நாள் இரவு சமாதிக்கு வந்தனர். கல் படுக்கையை அகற்றினர். பின் அவர் மீதிருந்த பூணுலை அகற்றி விட்டு, அருணாக் கொடியை இழுத்தனர்; வரமறுத்தது. தொடர்ந்து சுவாமி வயிற்றில் காலை வைத்து அழுத்தி மிதித்துக்கொண்டு கொடியை இழுத்தனர்.

    அப்போது ‘யா...வ்....யா..வ்..’ என ஏப்பமிட்டார் பெரியசாமி சித்தர். திருட வந்த நாலுபேரும் அப்படியே அமர்ந்து விட்டனர். அவர்களின் கண்கள் இருண்டது. எங்கும் புகை மூட்டம். சமாதியையேச் சுற்றிக்கொண்டு இருந்தனர். அங்கிருந்து தப்பிச் செல்ல வேண்டும் என்று அவர்கள் மனம் துடித்தாலும், அவர்களால் அந்த இடத்தை விட்டு ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை.

    இருள் விலகி, பொழுது புலர்ந்தது. பருத்தி காட்டுக்கு செல்ல மக்கள் அந்த வழியாக வந்தப் போது, சமாதியைச் சுற்றி 4 பேர் தடுமாறிக் கொண்டிருப்பதைப் பார்த்து அங்கு வந்தனர். அப்போதுதான் அவர்களுக்குப் புரிந்தது, அவர்கள் 4 பேரும் கண் பார்வையை இழந்திருந்தனர்.

    அப்போது சுவாமி சமாதியில் இருந்து எழுந்தார். ‘எனக்குப் பிறகு என்னைப் போலவே தலையில் தீபம் ஏற்றி வர, இவர்கள் சம்மதித்தால் அவர்களுக்கு கண் பார்வையைத் தருகிறேன்’ என்றார்.

    அதற்கு அந்த 4 பேரும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்களுக்கு கண் பார்வை வந்தது. இப்போதும் அவர்களது குடும்ப வாரிசுகளே தலையில் தீபத்தை ஏற்றி வருகிறார்கள்.

    அப்போது தான் மக்களுக்கு புரிந்தது. ஆகா.. சித்தர் தங்கப் பூணுலையும் தங்கக் கொடியையும் ஏன் போடச் சொன்னார். தன் கடமையை பிற்காலத்தில் செய்வதற்கு மக்கள் வேண்டும் என்று தான் இப்படிச் செய்தார் என்பதை அனைவரும் உணர்ந்து கொண்டனர். இதையடுத்து சித்தர் மீண்டும் சமாதி நிலையை அடைந்தார்.

    தென் திருவண்ணாமலை ஆலயத்தை ஒட்டியே, பெரியசாமி சித்தரின் சமாதியும் இருக்கிறது. மிகுந்த அருளாட்சி நிறைந்த ஆலயமாக இது திகழ்கிறது. 60 குடும்பங்கள் இருந்த இந்த ஊரில் தற்போது, 600 குடும்பங்கள் பெருகி வாழ்கிறார்கள். மேலும் இங்குள்ள அனைவரும் பல்வேறு துறைகளில் சிறப்புற்று விளங்குகிறார்கள். ஊர் மக்கள் ஒற்றுமையாகக் கார்த்திகை திருவிழாவை வெகு சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். திருக்கார்த்திகைக்கு திருவண்ணாமலையில் சிறப்பு தீபம் ஏற்றுவது போலவே, இங்கேயும் ஏற்றுகிறார்கள். கொடி நடுவது, திருவிழா நடைபெறுவது, மலை மீது தீபம் ஏற்றுவது எல்லாமே திருவண்ணாமலையை போலத்தான்.


    சித்தரின் நினைவாக தீபத்துடன் வலம் வரும் பக்தர், பெரியசாமி சித்தர்

    கார்த்திகை தீபம் தோறும் 2 கிலோமீட்டர் தொலைவில், 3000 அடி உயரத்தில் மிக கடினமானப் பாதையில் மக்கள் கூட்டமாக ஏறுவார்கள். சுமார் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூஜை செய்ய, பூஜை பொருட்கள், எண்ணெய் எடுத்துக்கொண்டு கிளம்புவார்கள். முள் என்றும் கல் என்றும் பாராமல் நடந்து செல்வார்கள். முதலில் சப்தக்கன்னிகளுக்கு பல வித அபிஷேகம், அலங்காரம் செய்து வழிபட்ட பின், 40 லிட்டர் கொள்ளளவு கொண்ட கொப்பரையில் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுவார்கள்.

    அந்த ஊரில் மலை மீது ஏற்றப்படும் தீபம் பல கிலோ மீட்டர் அப்பால் எங்கிருந்து பார்த்தாலும் சுடர் விட்டு பிரகாசிக்கும். பெரியசாமி சித்தர் காலத்தில் இருந்தே தீபம் ஏற்ற மலை ஏறி சென்றால், தன் வாழ்வில் கிடைக்காதப் பேரின்பம் கிடைத்து விடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அது தற்போதும் தொடர்கிறது.

    இந்த கார்த்திகை திருநாளின் போது, தலையில் தீபம் ஏற்றும் நிகழ்வும் நடைபெறுகிறது. தற்போது தலையில் தீபம் சுமப்பவரின் பெயரும் பெரியசாமியே. இவர் திருக்கார்த்திகை நாளில் தலையில் எரியும் தீபத்துடன் ஒவ்வொரு ெதருவாக வந்து அருளாசி வழங்குகிறார். விடிய விடியத் தீபத்துடனே அவர் ஊரைச் சுற்றி வருவார்.

    விளக்கில் ஊற்றப்பட்ட எண்ணெய் முகம், உடல் என எங்கும் வடிந்து நிற்க, தீயால் அவருக்கு தீங்கு நேராமல் இருப்பது இந்தக் கலியுகத்தில் பெரியசாமி சித்தர் அருளே என பக்தர்கள் நம்புகிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் அவர் கோவிலுக்குள் வரும் வேளையில், விபூதி வாங்கினால் மக்களுக்கு வேண்டிய வரம் கிடைக்கிறது.

    மதியம் 1 மணி வரை அருள்வாக்கு கூறியபடியே பெரியசாமி சித்தர் பீடத்துக்குள் செல்வார். பீடத்தினை சுற்றி வலம் வருவார். அதன் பின் சித்தரின் ஜீவசமாதி முன் மண்டியிட்டு தனது தலையில் உள்ள சுடரை எடுத்து வைப்பார். தொடர்ந்து பெரியசாமி சித்தர் பீடத்தில் அந்தத் தீபம் எரிய தொடங்கிவிடும்.

    கார்த்திகை மாதத் திருவிழாவிற்கு பெரியசாமி சித்தரைக் காண ஓடோடி வருகிறார்கள். அவர்களுக்கு வேண்டும் வரத்தினை அள்ளி அள்ளி தருகிறார் பெரியசாமி சித்தர்.

    மக்களுக்காக வாழ்ந்த சித்தர்

    பெரியசாமி சித்தர், தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் தெருவுக்கு சென்று நோய் தீர்க்கத் திருநீறு கொடுப்பார். அவர்களின் நோய் தீரும். இவரது செயல் சிலருக்கு பிடிக்கவில்லை. எனவே அவரை அங்கு செல்லவிடாமல் தடுக்க முடிவு செய்தனர்.

    பெரியசாமி சித்தர் சுடரை தலையில் ஏந்தி தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் இடத்துக்கு சென்ற போது, அங்கு வந்த பலர் இவரைக் கேலி செய்ததுடன், அந்தப் பகுதிக்குப் போகக்கூடாது என்றும் தடுத்துள்ளனர். இதனால் சினம் கொண்ட சித்தர் வழியும் எண்ணெயைக் கையால் வழித்து, அவர்கள் மீது வீசினார். மறுநிமிடம் அவர்கள் உடல் முழுக்க முழுக்கக் கொப்புளமாக மாறிவிட்டது. அலறியபடி சித்தரின் காலில் விழுந்து வணங்கினர்.

    ‘சாதி என்று எதுவும் கிடையாது. இனிமேல் இதுபோல் நினைக்காதீர்கள்’ என்று கூறிய பெரியசாமி சித்தர், மீண்டும் தன்மேல் வழிந்த எண்ணெயை எடுத்து அவர்கள் மீது தெளித்தார். முதலில் சுட்டெரித்து கொப்புளங்களை உண்டாக்கிய அதே எண்ணெய், இப்போது குளிர்ச்சியாக மாறி அந்த கொப்புளங்களுக்கு மருந்தானது.

    திருநெல்வேலியில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் வழியில் வன்னிக்கோனேந்தல் என்ற ஊர் உள்ளது. அங்கிருந்து 4 கி.மீ. தொலைவில் ‘மருக்காலங்குளம் விலக்கு’ என்ற இடத்தில் இருந்து பிரியும் சாலையில் 8 கி.மீ. மேற்கு நோக்கி பயணித்தால் அண்ணாமலைப்புதூர் என்னும் தென் திருவண்ணாமலையை அடையலாம்.
    திருவண்ணாமலையில் தான் பெரியசாமி சித்தராக உருமாறினார். பெரியசாமி சித்தரின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் தாலுகாவில் உள்ள குக்கிராமத்தில் தான் பெரியசாமி என்ற சிறுவன் வசித்து வந்தான். அப்போது நம் நாட்டில் வெள்ளையர்கள் ஆதிக்கம் நடந்து கொண்டிருந்தது. பெரியசாமியைத் தவிர அந்த கிராமத்தில் இருந்த அனைவரும் வேறு ஒரு மதத்திற்கு மாறியிருந்தனர். ஏன் பெரியசாமியின் குடும்பத்தினரும் கூட மதம் மாறியிருந்தனர். அவனுடைய வீட்டில் மொத்தம் 7 பிள்ளைகள். அதில் பெரியசாமியின் எண்ணத்தில் மட்டும் ஈசன் இருந்து ஆட்சி செய்து கொண்டிருந்தார்.

    அனுதினமும் சிவனையே பூஜித்து வந்தான். ஆனால் அவனது வழிபட்டிற்கு வீட்டில் உள்ளவர்களாலேயே இடையூறு ஏற்பட்டதால், அந்தச் சிறுவன் அங்கிருந்து புறப்பட்டு திருவண்ணாமலை சென்றான். அங்கு சிவனை வணங்கி அண்ணாமலையாரே கதி என்று கிடந்தான்.

    காலங்கள் பல கழிந்து விட்டன. அவனது வயதும் உயர்ந்து விட்டது. திருவண்ணாமலையில் தான் பெரியசாமி சித்தராக உருமாறினார். அதை அவரது கனவில் தோன்றி சிவபெருமான் உணர்த்தினார். ஒருநாள் இறைவழிபாட்டை முடித்து விட்டு, மடம் ஒன்றில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அவரது கனவில் தோன்றிய ஈசன், ‘என் புகழ் பரப்பி, எனக்கு உனது பிறப்பிடமான தென்தமிழகத்தில் கோவில் ஒன்றைத் எழுப்புவாயாக. அந்தக் கோவில் தென் திருவண்ணாமலை என திகழும்' என்றுரைத்தார்.

    விழித்தெழுந்தப் பெரியசாமி சித்தர் திகைத்தார். அவரது எண்ண ஓட்டம் பலவாறாக ஓடியது. ‘நமது ஊரோ வேறு ஒரு மதத்தை தழுவியிருக்கும் பகுதி. அங்கு எப்படி திருவண்ணாமலையை உருவாக்க முடியும்?’ என்று நினைத்தார்.

    ஆனால் இறைவனே சொல்லி விட்டார், இனி தடையில்லை என்று மனதை தைரியப்படுத்தினார். ஒரு கார்த்திகை திருநாள் அன்று, தீபம் ஏற்றும் வேளையில் திருவண்ணாமலையே களை கட்டியிருந்தது. அனைவரும் மலையை நோக்கி தீபம் ஏற்றக் கிளம்பினர். இவரும் மலை மீது ஏறி தீபமேற்றலாம் எனச் சென்றார். அப்போது ஒருவர் அவரை தடுத்தார்.

    கோபமடைந்த பெரியசாமி சித்தரோ.. ‘நீங்கள் அண்ணா மலையாரின் தீபத்தை மலையில் ஏற்றுகிறீர்கள். நான் தலையிலேயே ஏற்றுகிறேன்' என்று சபதமிட்டார்.

    அதன் பிறகு ஒரு நிமிடம் கூட அங்கே நிற்கவில்லை. சிவபெருமானை நோக்கி, ‘பெருமானே! நீ கனவில் கூறியபடி தென்திருவண்ணாமலை அமைக்க என்னோடு வா..' என கூறி, அங்கிருந்து பிடிமண்ணை எடுத்துக்கொண்டார். பின் கோபுரத்தை நோக்கி இரு கைகளையும் தூக்கி வணங்கினார். ‘இறைவா என்னோடு வா. தென்னாட்டு மக்களுக்கு உன் அருளாசியைத் தா' என்று வேண்டியபடி, ஊரை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

    பல இடங்களில் உள்ள சிவ தலங்களை வணங்கியபடியே சங்கரன்கோவில் வந்தடைந்தார். சங்கர நாரயணரை மனதுருக வேண்டிக்கொண்டு, தான் பிறந்த ஊருக்கு வந்து சேர்ந்தார். அங்கு, திருவண்ணாமலையில் இருந்து கொண்டு வந்த பிடி மண்ணை வைத்து சிவ பூஜை செய்யத் தொடங்கினார். அவரது வழிபாட்டிற்கு அவரது சகோதரர்கள் இடையூறு செய்தனர்.

    ‘இனி இங்கிருப்பது உகந்தது அல்ல’ என நினைத்து, அங்கிருந்து திருவண்ணாமலை பிடி மண்ணுடன் பனவடலி சத்திரம் என்ற ஊருக்கு வந்தார். அங்கேயும் அவரால் சிவ வழிபாட்டை சரியாகத் தொடர முடியவில்லை. அங்கிருந்து மேற்கே 6 கிலோமீட்டர் தொலைவில் அழகான மலையைக் கண்டார். ஆகா.. இது வல்லவோ.. தென் திருவண்ணாமலை என ஆனந்தக் கூத்தாடினார். அம் மலையின் அடிவாரம் அப்போது முத்து கிருஷ்ணாபுரம் என அழைக்கப்பட்டது. முத்துகிருஷ்ணாபுரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தைத் தேர்வு செய்தார். அவ்விடத்தில் பிடி மண்ணை வைத்து வணங்க ஆரம்பித்தார்.

    இறைவனிடம் தான் இசைந்தது போலவே இவ்வூரை திருவண்ணாமலையாக்க வேண்டுமே, தன்னை மலை மீது ஏறக் கூடாது என தடுத்தவரிடம், தலையில் தீபம் ஏற்றுவேன் என்று சபதமிட்டோமே.. அதை நிறைவேற்ற வேண்டுமே.. முதலில் இவ்விடம் இறைவனுக்கு முழுவதும் சொந்தமான இடமாகவேண்டும் என்று நினைத்தார்.


    பெரியசாமி சித்தர்

    அதற்காக அந்த இடத்துக்குச் சொந்தக்காரனமான ஊத்துமலை ஜமீன்தார் இருதாலய மருத்தப்ப தேவரிடம் சென்றார். ‘சிவபெருமானுக்கு கோவில் கட்ட இடம் தரவேண்டும்’ எனக் கேட்டார்.

    அவரும் அதற்கு இணங்கி தற்போது கோவில் உள்ள இடத்தைத் தானமாக கொடுத்து விட்டார். அதுவரை முத்துகிருஷ்ணாபுரம் என அழைக்கப்பட்ட அவ்வூர், அதன்பிறகு ‘அண்ணாமலை புதூர்’ என்று அழைக்கப்பட்டது.

    தீபத்தைத் தலையில் சுமக்க பெரியசாமி சித்தர், நாள் குறித்தார். திருக்கார்த்திகை தினத்தன்று, தனது தலையில் துளசி மாலையை, சும்மாடு போல் மடக்கிக் கட்டிக் கொண்டார். அதற்குள் மிகப்பெரிய திரியை தயார் செய்து, எண்ணெய் விட்டு தீபம் எரியச் செய்தார். இதை ஊரே அதிசயமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

    ‘வெறும் தலையில் சாமியார் தீபம் எரிய விடுகிறார். அத்தீபம் விடிய விடிய எரிகிறது’ என்ற செய்தி காட்டூத்தீ போல அக்கம் பக்கத்தில் உள்ள கிராமங்களுக்கு பரவியது. இதனால் மக்கள் பெரியசாமி சித்தரை அதிசயத்துடன் காண ஓடோடி வந்தனர். அவருக்கு வேண்டிய உதவிகளை காணிக்கையாகக் கொடுத்தனர். அந்த காணிக்கையை சிவ தொண்டுக்கு சித்தர் பயன்படுத்தினார்.

    அவ்வூரில் அண்ணாமலையாருக்கு சிறியக் கோவில் ஒன்றை கட்டினார். அங்கே இறைவனின் ஐம்பொன் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட ஆரம்பித்தார். அச்சிலை தற்போதும் கர்ப்பக்கிரகத்தில் மூலவர் சிலைக்கு வலப்புறத்தில் உள்ளது. மூலவராகக் கல்லால் ஆன சிவலிங்கமும் காணப்படுகிறது. திருவண்ணாமலையில் சிவனின் பின்புறத்தில் மேற்கு திசையில் மலை காணப்படும். தென் திருவண்ணாமலையான இங்கே சிவனின் முன் புறத்தில் கிழக்கு திசையில் மலை காணப்படுகிறது. இங்குள்ள மலைமீது சப்தக்கன்னிமார் கோவிலும் உள்ளது. தெப்பக்குளமும் இருக்கிறது.

    பெரியசாமி சித்தர், சுமார் 3 ஆயிரம் அடி உயரமுள்ள இந்த மலைக்கு தினமும் சென்று விடுவார். அங்குள்ள தெப்பக்குளத்தில் நீராடுவார். அதன் பின் அங்கிருந்து அபிஷேகம் செய்யக் குடத்தில் நீரை எடுத்துக்கொண்டு கீழே இறங்கி கோவிலுக்கு வருவார். தினந்தோறும் பெரியசாமி சித்தரின் வழிபாடு மலையில் உள்ள தெப்பக்குள நீரில் தான் நடந்துள்ளது.

    ஆரம்பக் காலக்கட்டத்தில் தனியொரு மனிதனாகவே மலைமீது ஏறி கார்த்திகை தீபம் ஏற்றியுள்ளார். மலை மீது தீபம் எரிவதைப் பார்த்த மக்களுக்கு பெரும் ஆச்சரியம். ‘திருவண்ணாமலையில் தீபம் எரிவதைப் போல, நம்மூர் பகுதியிலும் தீபம் எரிகின்றதே’ என்று சுற்றுவட்டார மக்கள் ஆச்சரியப்பட்டனர். மலை மீது தீபம் எரிவது வருடந்தோறும் திருக்கார்த்திகை நாளில் வழக்கமானது. ஒரு முறை மலை மீது எரியும் தீபத்தைப் பார்க்க மறுநாள் காலையில் பொதுமக்கள் சிலர் மலைக்குச் சென்றுள்ளனர். சென்றவர்களுக்கு பெருத்த ஆச்சரியம்.

    ஆம்.. தீபம் எரிந்தது மலை மீது அல்ல.. மலையில் அமர்ந்து தவம் இயற்றிக்கொண்டிருந்த பெரியசாமி சித்தரின் தலை மீது. இதைக் கண்டு மக்கள் அனைவரும் பெரியசாமி சித்தரை வணங்கத் தொடங்கினர். அதன்பிறகுதான் ஊரார் ஆதரவு கிடைத்தது.

    அடுத்து வந்த வருடங்களில் பெரியசாமி சித்தர், தலையில் ஏற்றிய தீபத்துடன் வீடு வீடாகச் சென்று அருளாசியும் வழங்கி உள்ளார். தீபம் அணைந்து விடாமல் இருக்க ஒவ்வொரு வீட்டிலும் எண்ணெய் ஊற்ற ஆரம்பித்தனர். அப்படி எண்ணெய் ஊற்றினால், அவர்களுக்கு வேண்டிய வரமெல்லாம் கிடைக்கிறது என நம்பிக்கை மக்களுக்கு பிறந்தது.


    தென் திருவண்ணாமலை

    கொதிக்கும் எண்ணெய் தலை வழியாக அவர் தேகமெல்லாம் வழிந்தோடினாலும், அதனால் அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டதில்லையாம். சித்தர் மீது மிகவும் பாசம் கொண்ட பலர் தங்களது தேவைகளைக் கேட்டறிந்து, அது நிறைவேறியவுடன் அவருக்கு காணிக்கையையும் வழங்கி வந்தனர்.

    ஒரு நாள் இப்பகுதியில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. இதனால் தண்ணீர் இன்றி மக்கள் தவித்தனர். பெரியசாமி சித்தரிடம் வந்து வாக்கு கோரினர். அவர், ‘4 கிலோ மிளகாய் வத்தல் கொண்டு வாருங்கள்' என்றார்.

    மக்களும் அதுபோலவே செய்தனர். அவர் அந்த வத்தலை சிவபெருமான் முன்பு பரப்பி வைத்தார். அதன் பின் விரதம் மேற்கொண்டு, வெறும் வயிற்றில் வத்தலை சாப்பிட ஆரம்பித்தார். அனைவரும் திகைத்தனர். வத்தலை வெறும் வயிற்றில் சாப்பிடுகிறாரே.? அய்யோ.. சுவாமிக்கு என்ன ஆச்சு என்று துடித்தனர்.

    பெரியசாமி சித்தர், அங்குள்ள ஓடக்கரையில், சூரியன் சுட்டெரிக்கும் மணலில் படுத்து உருண்டார். வத்தல் சாப்பிட்டதால் உடலுக்குள் எரிச்சல், சுட்டெரிக்கும் வெயிலால் உடலுக்கு வெளியிலும் எரிச்சல். சித்தரின் முரட்டுத் தனமான பக்தியின் தவத்தை மெச்சிய வருண பகவான், கண் திறந்தார்.

    சுள்ளென்று சுட்டெரித்துக் கொண்டிருந்த பகல் பொழுது வானம், மழையை பொழிந்தது. பெரியசாமி சித்தரின் தேகம் குளிர்ந்தது. ஓடக்கரையில் தண்ணீர் வழிந்தோடத் தொடங்கியது. அந்த பூமி மழையால் செழிக்க ஆரம்பித்தது. மக்கள் மகிழ்ச்சியின் உச்சியில் இருந்தனர். பெரியசாமி சித்தரின் அருளாசியை நினைத்து பக்திப் பரவசம் கொண்டனர்.

    பெரியசாமி சித்தர், ஊர் ஊராக சென்று மக்களிடம் காணிக்கை பிரித்து, சுமார் 75 ஏக்கர் நிலம் வாங்கிக் கோவிலுக்கு எழுதி வைத்தார். அதோடு மட்டுமல்லாமல் கோவிலுக்கு ஒரு கல் மண்டபமும் கட்டினார். தன்னுடைய சொந்த முயற்சியில் தெப்பக்குளம் வெட்டி, கோவிலுக்கு தெப்ப உற்சவமும் நடத்தினார்.

    கோவிலை மென்மேலும் உயர்த்த வேண்டும் என நினைத்த அவர், தீபத்தைத் தலையில் எரிய விட்டப் படியே இரவு நேரத்தில் பல ஊருக்கு சென்று காணிக்கை பிரிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

    பக்கத்து கிராமத்தில் திருடர்கள் தொந்தரவு இருந்தக் காலம் கட்டம் அது. பல இடங்களில் இரவு தீ வெட்டி திருடர்கள் கூட்டமாக வந்து ஊரைக் கொள்ளையடித்துச் சென்று விடுவார்கள்.

    ஒருநாள் பெரியசாமி சித்தர், தலையில் தீபம் ஏற்றியபடி ஒரு கிராமத்துக்கு காணிக்கை பிரிக்கச் சென்றார். அப்போது அவருடன் அவர் மீது அதிக பக்தி கொண்டவர்கள் சிலரும் சென்றனர். வருவது தீவெட்டி திருடர்கள் என நினைத்து ஊர்மக்கள் தீடீரென்று இவர்களை சுற்றி வளைத்தனர். தொடர்ந்து தாக்கவும் ஆரம்பித்து விட்டனர். உடன் வந்தவர்கள் எல்லாம் ஓடி விட்டனர். தலையில் சுடருடன் நின்ற பெரியசாமி சித்தரை, பொதுமக்கள் அனைவரும் திருடர்களின் தலைவன் என்று நினைத்தனர்.

    சித்தரை குறிப்பிட்ட ஓரிடத்தில் நிறுத்தினர். 10 கட்டு காய்ந்த ஓலையைக் கொண்டு வந்து, அவரைச் சுற்றிப் போட்டனர். பின்னர் தீயைக் கொளுத்தினர். சித்தர் தப்பித்து சென்று விடக்கூடாது என்று சுற்றி வளைத்து நின்று கொண்டனர். 10 கட்டு ஓலையும் எரிந்து சாம்பலானது.

    இப்போது சுற்றி நின்ற பொதுமக்கள் அனைவரும் திகைப்பில் மூழ்கியிருந்தனர். சித்தருக்கு என்ன ஆனது? 
    வடபகுதியில் இருந்து புண்ணிய யாத்திரையாக கீழப்பாவூர் வந்தவர் தான் சிவலோக பண்டாரம். இவரது வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் வட்டம், தென்காசி- திருநெல்வேலி சாலையில் அமைந்துள்ளது பாவூர்சத்திரம். இவ்வூரில் இருந்து சுரண்டை செல்லும் வழியில் தான் கீழப்பாவூர் காணப்படுகிறது. இந்த ஊர் முற்காலத்தில் ‘சத்திரிய சிகாமணி நல்லூர்’ என வழங்கப்பட்டு வந்ததாக கல்வெட்டுகள் பறைசாற்றுகிறது. நரசிம்ம அவதாரக் கோலத்தை இவ்வூரில்தான் பகவான் காட்டினார் என்றும், அதனால் இவ்வூர் ‘தென்னகத்து அகோபிலம்' என்றும் சொல்லப்படுகிறது.

    இங்கு தற்போதுள்ள நூலகத்தின் பின்புறம் வழியாக குருக்கள் மடம் பகுதிக்கு சென்றால், அங்கே சிவலோக பண்டாரம் ஜீவ சமாதி கோவில் உள்ளது.

    இந்த ஆலயத்தினைப் பற்றி ஆரம்ப காலத்தில் யாரும் அறியாமலேயே இருந்தனர். பிற்காலத்தில் இடிந்து கிடந்த கற்களால் கட்டப்பட்ட ஆலயத்தை அவரது வாரிசு தாரர்கள் சீரமைக்க முயற்சி செய்தனர். இதற்காக தேவ பிரசன்னம் பார்த்த போது, பல அற்புத தகவல்கள் கிடைத்தன. அவை அனைத்தும் சிவலோக பண்டாரத்தின் பெருமையைப் பறைசாற்றும் விதமாக அமைந்திருந்தது.

    சுமார் 240 முதல் 400 வருடங்களுக்கு முன்னதாக ஜீவ சமாதி கட்டப்பட்டிருக்கலாம் என தேவ பிரசன்னம் துலங்கியது. இனி இங்கு ஜீவ சமாதியான சிவலோக பண்டாரத்தின் வாழ்க்கை வரலாறு குறித்து காணலாம்.

    வடபகுதியில் இருந்து புண்ணிய யாத்திரையாக கீழப்பாவூர் வந்தவர் தான் சிவலோக பண்டாரம். இவர் சிற்றாறு செழிப்பாக்கும் கீழப்பாவூரைக் கண்டார். மனம் பூரித்தார். அருமையான மரம் செடிகளுக்கு இடையே நீர்வளமும், நிலவளமும், மக்கள் வளமும் கொண்ட அவ்வூர் அவருக்கு மன அமைதியைத் தந்தது. இனி இங்கேயே அமர்ந்திருப்பது என முடிவு செய்தார். அங்கு அவர் சிவனை பிரதிஷ்டை செய்து வணங்கி வந்தார்.

    தனியாக இருந்து இறைவனை வழிபட்டு வந்த அவரிடம், சில காலத்தில் பல சீடர்கள் சேர்ந்தனர். அவர்களுக்கும் உபதேசம் செய்து, அங்கு வரும் மக்களுக்கும் அருள்பாலித்து வந்தார். அங்கிருக்கும் போதே பல மூலிகைகளை அறிந்து அவற்றை கொண்டு மக்கள் நோயை தீர்த்து வந்தார். எனவே இவரை ஆன்மிகவாதியாக மட்டும் மக்கள் வணங்காமல், நல்லதொரு மருத்துவராகவும் எண்ணி வணங்கி வந்தனர். இவரின் அற்புத பிரசாதம் கஞ்சியாகும். இந்த கஞ்சியை காய்த்து ஏழைகளுக்கு வழங்கி வந்தார். அதையும் ஓலைப்பட்டையில் தான் வழங்குவார். இதைக் குடித்து தீராத நோய்கள் எல்லாம் நீங்கி சென்றவர்கள் பலர்.

    சிவலோக பண்டாரத்தின் அற்புத சக்தி பரவியதால், நாளுக்கு நாள் இவரை காண வரும் பக்தர்களும் அதிகரித்தனர். இவர் தன்னுடைய தவவலிமை பேணி பாதுகாத்து வந்தார். இதற்காக பல வேளைகளில் இவர், மேற்கு தொடர்ச்சி மலையிலும் யாத்திரை செய்வார். அதோடு மட்டுமல்லாமல் பல புண்ணிய சேத்திரங்களுக்கும் சென்று வந்தார். அவர் வெளியே செல்லும் நேரங்களில் சீடர்கள் அந்தப் பகுதி மக்களுக்கு அருள் வழங்கி வந்தனர். எனவே தான் சிவலோக பண்டாரம் அமர்ந்த இடம் ‘குருக்கள் மடம்’ என்று அழைக்கப்பட்டது.


    சிவலோக பண்டாரம்

    திருநெல்வேலி நகரில் உள்ள நெல்லையப்பர் ஆலயத்தில் ஆனித்தேரோட்ட நிகழ்ச்சி தான் மணி மகுடமான நிகழ்வு. இச்சமயத்தில் தேர் ஆடி அசைந்து வருவதை காண கண்கோடி வேண்டும். எனவே தான் இத்திருவிழாவில் சிவலோக பண்டாரம் கலந்து கொண்டார். சந்நியாசி கோலத்தில் இருந்த அவர், பொதுமக்களோடு மக்களாக கலந்து மிகுந்த ஆர்வம் கொண்டு தேரின் முன் சென்றார். தேரை இழுக்க முடிவு செய்து கயிறைப் பிடித்தார். அப்போது அங்கு வந்த சிலர், இவரைச் சாதாரணப் பண்டாரம் என நினைத்து, ‘வேறுபக்கம் போய் தேரை இழுங்கள்' என விரட்டி விட்டனர்.

    இதனால் கோபமடைந்த சிவலோக பண்டாரம் அங்கிருந்து அகன்று விட்டார். அவர் சென்ற பின் பலரும் தேரை இழுக்க, தேர் கொஞ்சம் கூட அசையாமல் நின்றது. தேரின் சக்கரத்தில் ஏதாவது சிக்கிக் கொண்டிருக்கிறதா? என்று பார்த்தால் அப்படி ஒன்றும் இல்லை. தேர் நகராமல் நிலைகொண்டு நின்றதற்கான காரணம் யாருக்கும் விளங்கவில்லை. பல மணிநேரம் தேர் அங்கேயே நின்று விட்டது. என்ன செய்வது ஏது செய்வது என அனைவரும் திக்குமுக்காடினர்.

    அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர், ‘தேர் இழுக்க வந்த சந்நியாசி ஒருவரை எல்லோரும் விரட்டி விட்டனர். அவரைக் கூட்டி வந்து தேரை இழுங்கள். அப்போது தான் தேர் நகரும்' என கூறினார்.

    உடனே அவரைத் தேடி கீழப்பாவூர் ஓடி வந்தனர். அவர் புன் முறுவலோடு நெல்லை சென்று தேரின் கயிறைப் பிடித்து கொடுக்கத் தேர் நகன்றது. தவ வலிமை மிகுந்த தன் பக்தனின் புகழைப் பரப்புவதற்காக, நெல்லையப்பரே அந்தத் தேரை நகர விடாமல் செய்துவிட்டதாக அந்தப் பகுதி மக்கள் பேசிக்கொண்டனர்.

    நெல்லையப்பர் தேர் சம்பவத்திற்குப் பிறகு, சிவலோக பண்டாரத்தின் புகழ் எட்டு திக்கும் பரவிற்று. நோய் கொண்டவர்கள் வந்து அவரைச் சந்தித்து நோய் நீங்கிச் சென்றனர். பேய் பிடித்தவர்கள் அவரை வணங்கி நற்கதி அடைந்தனர். இவர்களுக்கு எல்லாம் ஒரே மருந்து, பட்டை கஞ்சி தான். விழாக் காலங்களில் மிகப்பெரிய அளவில் கஞ்சியை அன்னதானமாக வழங்குவார். எவ்வளவு பேர் வந்தாலும், பனை ஓலைப் பட்டையில் தான் கஞ்சி வழங்கப்படுமாம்.

    குருக்கள் மடத்தில் இருக்கும் சமயம் தவிர, சிவலோக பண்டாரம் கீழப்பாவூர் நரசிம்மப்பெருமாள் கோவிலுக்குச் செல்வார். அங்குள்ளத் தெப்பக்குளத்தில் நீராடுவது, தண்ணீரிலேயே தனது ஆடையை படுக்கையாக விரித்து, அதில் படுத்திருப்பது போன்ற சித்து வேலைகளையும் செய்திருக்கிறார். காலங்கள் கடந்தது. ஒரு கால கட்டத்தில் சிவலோக பண்டாரம் சமாதி நிலை அடைந்தார். அவருக்கு குருக்கள் மடத்திலேயே சமாதி வைக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் மிகவும் பிரமாதமாக வழிபாடு நடந்த அந்த இடம் பிற்காலத்தில் அப்படியே மங்கி போய் விட்டது. எனவே குருக்கள் மடத்தில் பூஜை போன்ற காரியங்கள் எதுவும் நடைபெறவில்லை.

    இதற்கிடையில் கீழப்பாவூர் கிராமத்தில் அமைந்துள்ளப் பிற கோவில்களைப் புதுப்பிக்கும் சமயம், தேவப் பிரசன்னம் பார்த்தனர். அவ்வூருக்கு சந்நியாசி சாபம் உள்ளதாகக் கூறினர். யார் அந்த சந்நியாசி என ஆராய்ந்தப் போது சிவலோக பண்டாரமாக இருக்கலாமென்று அவ்வூரின் மூத்தக் குடிமக்கள் கூறினர். எனவே அவரது கோவிலைப் புதுப்பிக்கும் வேலையைத் தொடங்கினர்.

    கோவிலைப் புதுப்பிக்கும் சமயம், கல் மண்டபம் கட்டப்பட வேண்டியக் காரணத்தினால், ஆறு அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டு, அஸ்திவாரம் அமைக்கப்பட்டது. தோண்டும் சமயம், சிவலோக பண்டாரம் விக்கிரகம் அமைக்கப்பட்டிருந்ததற்கு நேர் கீழாக, அவரது அங்கங்கள் (எலும்புகள்) கிடைத்தது. அதை யெல்லாம் அப்படியே பாதுகாப்பாக எடுத்து வைத்தனர். அதன் பின் கட்டிடம் கட்டும் சமயம், அவை மீண்டும் அவ்விடத்திலேயே உரிய மரியாதையுடன் வைக்கப்பட்டுள்ளது.


    சிவலோக பண்டாரம் ஜீவசமாதி ஆலயம்

    இந்த ஆலயம் குழந்தைப் பேறுக்கு மிகவும் முக்கியத் தலமாகக் கருதப்படுகிறது. எனவே இங்கு வந்து இவரை வணங்கி குழந்தை வரம் பெற்று செல்கிறார்கள். இந்த ஆலயத்தின் தல விருட்சம் ஆல மரமாகும். இவ்விடத்தில் மாவிலங்கு மரம் என்னும் மகாலிங்க மரம் ஒரு காலத்தில் இருந்துள்ளது. இம்மரத்தின் பட்டைகளை அவித்து சாறு எடுத்து, கால் மூட்டினில் ஊற்றி வந்தால் மூட்டு வலி குணமடையுமாம். இம்மரம் வில்வத்திற்கு இணையானது. வில்வ இலையைப் போன்றே அர்ச்சனைக்கும் பயன்படக் கூடியது. இந்த மரம் தற்போது காணப்படவில்லை. எனவே புதிதாக ஒரு மரம் வைத்து வளர்த்து வருகின்றனர். இதுவும் நோய் தீர்க்கும் அரிய பொக்கிஷமே.

    இக்கோவில் மூலஸ்தானம் மற்றும் அர்த்த மண்டபம் ஆகிய இரு அறைகள் கொண்டதாகும். மூலஸ்தானத்தில் சிவலோக பண்டாரம் கற்சிலை வடிவாகக் காட்சித் தருகிறார். அவருடன் விநாயகர் அமர்ந்து அருள்பாலிக்கிறார். சிவலோக பண்டாரத்தின் கோபத்தைத் தணிக்கவே விநாயகர் இங்கு அருள்புரிகிறார்.

    பொதுவாகக் கோவில்களில் விசேஷங்கள் நடைபெறும் போது, அதில் கலந்து கொள்பவர்கள் யாரும் எந்தக் காரணத்திற்காகவும் கோபம் கொள்வது இல்லை. ஆனால் சித்ரா பவுர்ணமி அன்று இவருக்கு நடைபெறும் பூஜை சமயத்தில், அங்குள்ள யாராவது ஒருவர் மற்றவர் மீது சினம் கொள்வது வழக்கமாக உள்ளது. அதனைக் காணும் அக்கோவிலைச் சார்ந்தவர்கள் சினம் கொண்டவர் வடிவில் இன்றும் சிவலோக பண்டாரம் பிரசன்னமாகிறார் என்று கூறுவதுண்டு.

    இக்கோவிலின் அருகே இவர் வணங்கிய இரு சிவலிங்கங்கள், நந்திதேவர், ஆஞ்சநேயர், ஐந்து துவாரப் பாலகர்கள், ஏழு நாகர்கள் ஆகிய தெய்வங்களும் அருள்பாலிக்கின்றனர்.

    சித்திரை மாதத்தில் பவுர்ணமி தினத்தன்று, அவருக்கு சிறப்பு அபிஷேகங்களும், பெருமளவில் அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது.

    சாபம் பெற்ற ஊர்

    சிவலோக பண்டாரம் மடத்திற்கு வரும் பக்தர்களுக்கு பனை ஓலை பட்டையில் கஞ்சி வழங்கப்படும். அதனை வாங்கி உண்ணும் பக்தர்கள், ஓலை பட்டைகளை கீழே போட்டு விடுவார்கள். அது காற்றில் பறந்து சென்று, மடத்திற்கு கிழக்கு பகுதியில் அமைந்துள்ள மக்கள் வசிக்கும் தெருக்களில் வந்து விழுந்தது. இதனால் கோபமடைந்த அத்தெருவில் வாழ்ந்தவர்கள் சிவலோக பண்டாரத்திடம் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு கட்டத்தில் அந்தத் தெரு மக்களின் எதிர்ப்பு வலுத்தது. இதனால் அந்தத் தெருவில் வாழ்ந்தவர்கள் கூட்டமாகத் திரண்டனர். பண்டாரத்தின் ஓலைக் குடிசை மற்றும் மடத்தின் கூரைகளைப் பிரித்துப்போட்டனர். அதோடு அவற்றுக்கு தீயிட்டும் கொளுத்தினர். உடனே சிவலோக பண்டாரம் அவர்களை நோக்கிச் சாபமிட்டார் என்றும், அவ்வேளையில் அவர்களின் தெரு தீப்பற்றி எரிந்து அழிந்துவிட்டதாகவும் கூறுகிறார்கள். இன்று வரை அத்தெரு வளர்ச்சி அடையாது ‘வெட்டுப்பட்டான் முடுக்கு’ என்ற பெயரில் வெறும் மண் பாதையாகவே காணப்படுகிறது. தற்சமயம் வீடு கட்டுவதற்கு வாணம் தோண்டும்போது, அக்கால வீடுகளின் அடித் தளம் அங்கே காணப்படுவதும் உண்டு.

    இக்கோவிலின் திருப்பணி முடிந்து கும்பாபிஷேகம் நடந்துள்ளது. புதுபொலிவுடன் காணும் இக்கோவிலை வணங்க பல இடங்களில் இருந்து மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். 
    கொம்மடிக்கோட்டையில் அருள் செய்து வந்த வாலை குருசாமிக்கும், காசியானந்தருக்கும், அவர்களின் சக்தியைக் கண்டு அப்பகுதி மக்கள் ஆலயம் அமைத்தனர்.
    கொம்மடிக்கோட்டையில் அருள் செய்து வந்த வாலை குருசாமிக்கும், காசியானந்தருக்கும், அவர்களின் சக்தியைக் கண்டு அப்பகுதி மக்கள் ஆலயம் அமைத்தனர். இந்த ஆலயம் ஆரம்பத்தில் மண்சுவரால் சுற்றுச் சுவர் எழுப்பி, பனை ஓலையால் கூரை வேயப்பட்டதாக இருந்தது. சித்தர்கள் அருள் கடாட்சத்தால் பல நன்மைகளைப் பெற்ற பக்தர்களால், நாளடைவில் ஆலயம் வளர்ச்சியடைந்தது.

    இந்த ஆலயத்தில் தனியாக குறி சொல்பவர் என்று யாரும் கிடையாது. தனக்கு வேண்டியதைக் கேட்டு வரும் பக்தர்களுக்கு, அங்கு வரும் பக்தர்கள் வாயிலாகவே சில வார்த்தைகள் கேட்கும். அதனையே தெய்வ வாக்காக எடுத்துக் கொண்டு செயல்பட்டால், நன்மைகள் விளைவதாக கூறப்படுகிறது. அப்படித்தான் ஒரு முறை ஒருவர் மூலமாக வாலாம்பிகை அன்னை, ஆலயத்தின் வளர்ச்சியை உணர்த்தினார்.

    ‘இவ்விடம் வளரும் திருச்செந்தூராக விளங்கும். கருங்கல்லிலே கற்பக் கிரகம் கட்டப்படும். தொடர்ந்து பல மண்டபங்கள் எழுப்பப்படும். கொடிமரம் உருவாகும். வருடத்துக்கு இரண்டுமுறை கொடி ஏறும். கோபுர வாசல் முன்பே, தெப்பம் தோன்றும்’ என்றார். அந்த அருள் வாக்கு பலித்தது. தற்போது அன்னை கூறியபடியே இக்கோவில் வளர்ச்சி அடைந்து வருகிறது.

    ஞானியார்கள் விரும்புவது அன்பு, நீதி, தர்மம் நேர்மை மட்டுமே.. இது மகான்களின் தியான பூமி. உணர்வு பூர்வமாக வழிபட்டால், மகான் களின் ஆசி உண்டு. இங்கு வந்து வணங்கி நின்றால் அனைத்து செயலும் வடிவம் பெறும். குருவின் தரிசனமும், ஸ்ரீவாலாம்பிகையின் தரிசனமும் ஒரே இடத்தில் கிடைப்பது அற்புதத்திலும் அற் புதம்.

    அன்பர்களுக்கெல்லாம் இருபெரும் ஞானிகளை குருவாக தந்து, அவர்கள் அருகிலே தானும் அமர்ந்து அருள்பாலிப்பது ஸ்ரீ வாலையின் லீலா வினோதம். எனவேதான் இந்த ஆலயத்தில் பக்தியோடு பூஜிப்பவர்களுக்கு கேட்டவரமும், தியானம் செய்பவர்களுக்கு ஞானமும் கைகூடுகிறது. அமைதியாய் வந்து அன்னை சன்னிதானத்திலும், குரு சிஷ்யர்கள் பீடம் முன்பும் அமர்ந்து வணங்கி நின்றால் வேண்டும் வரம் கிடக்கிறது. சாதி மதம் கடந்து இவ்வாலயத்தில் வழிபடுபவர்களின் எண்ணிக்கை ஏராளம்.

    இந்த நவீன யுகத்தில் பல அற்புதங்கள் இந்த பீடத்தில் நடை பெறுகிறது என்பதற்கு பல சாட்சிகள் உள்ளன. அதில் ஒன்று பட்டமரம் தளிர்ந்த வரலாறு.

    கோவிலின் தல விருட்சம் மஞ்சணத்தி மரம். இந்த மஞ்சணத்தி மரத்தின் அடியில்தான் வாலை குருசாமியும், காசியானந்தரும் வாலையம்பிகைக்கு பூஜை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இம்மரத்தின் அடியில் உச்சிஷ்ட கணபதி காட்சி தரு கிறார். சுமார் 10 வருடங்களுக்கு முன்பு வரை கோவிலின் பழமையை பறைசாற்றும் விதமாக இந்த மரம் விளங்கியது. திடீரென ஒரு நாள் மஞ்சணத்தி மரம் பட்டுப்போனது.

    பக்தர்கள் அனைவரும் அதிர்ந்து போய் விட்டனர். என்ன செய்வது? எனத் தெரியாமல் தவித்தனர். ‘புதிய மஞ்சணத்தி மரக்கன்றை நட்டு வளர்க்கலாம்’ என்று ஊர் மக்கள் நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில்தான், ‘பட்டமரம் துளிர்க்கும்’ என்ற உத்தரவு கிடைத்தது. அதன்படியே பட்டுப்போன மஞ்சணத்தி மரத்தின் நடுவில் தளிர் விட்டது. அந்த புதிய தளிர் செடிதான் வளர்ந்து, தற்போது தல விருட்சமாக காணப்படுகிறது. பழைய மரம் கோவில் வளாகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. புதிய மரத்தடியில் உச்சிஷ்ட கணபதி அருளாசி தருகிறார்.

    பக்தர் ஒருவர் சுவாமிக்கு பொருள் கொடுப்பதாக நினைத்து, அதை தனது வீட்டின் பீரோவில் வைத்து விட்டார். சில நாட்களில் அதை முற்றிலுமாக மறந்து விட்டார். ஒரு நாள் அவர் கோவில் சன்னிதானத்தில் நின்று வணங்கிய போது ‘எனக்குரிய பொருள் உன் வீட்டு பீரோலில் உள்ளது' என சுவாமி உணர்த்தினார். அதன் பிறகே அவருக்கு நினைவு வந்தது. உடனே சென்று அந்த பொருளை எடுத்து வந்து கோவிலில் ஒப் படைத்தார். இதுபோலவே பல நிகழ்வுகள் பக்தர்கள் வாழ்வில் நடந்தேறி இருக்கிறது.

    சித்தர் பெருமக்களை நம்பி வருவோருக்கு வேண்டும் வரம் கிடைக்கிறது. ஆபத்துகளில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது. இன்றும் பலர் இந்த ஆலயத்திற்கு வந்து, தொழில் தொடங்குவது, அரசு வேலை தேடுவது போன்ற காரியங்களுக்கு குரு - சிஷ்யர்களின் உத்தரவை வேண்டி நிற் கிறார்கள்.

    இந்த ஆலயத்தில் எப்போது சென்றாலும் அன்னதானம் நடந்து கொண்டே இருக்கிறது. அன்னதானம் சாப்பிடும் போது பக்தர்கள் தங்களுக்கு என்ன பிரார்த்தனை உள்ளதோ அதை வேண்டி சாப்பிட அது உடனே கைகூடுகிறது.

    ஆலய அமைப்பு

    முதலில் கொம்மடிக்கோட்டை அரசு பள்ளியில் இருந்து நேர் எதிரே உள்ள சாலையில் செல்லும்போது அங்கே பாலா சேத்திரம் உள்ளது. நுழைவு வாசல் வழியாக உள்ளே நுழைந்தால், இடது புறம் அகத்திய பெருமான் அருளாசி தருகிறார். எதிரே ஆலய முகப்பு நம்மை வரவேற்கிறது.

    வலது புறம் திரும்பினால் கல் மண்டபம் பிரமாண்டமாக காட்சியளிக்க, உள்ளே குருவும் சிஷ்யரும் ஒரு கருவறையில் அமர்ந்து நமக்கு அருள்பாலிக்கிறார்கள். வாலை குருசாமிக்கு எதிரே கொடிமரத்தடியில் நந்திகேஸ்வரப் பெருமான் காட்சியளிக்கிறார்.


    பட்டுப்போன மஞ்சணத்தி மரம், தற்போதுள்ள தல விருட்சம்

    குரு - சீடர் சன்னிதிக்கு வலப்புறம் சந்திரசேகரர் சமேத மனோன்மணி அம்பாள் சன்னிதி உள்ளது. ‘மனோன்மணி’ என்பது அம்பிகையின் திருநாமங்களில் ஒன்று. ‘மன இருளை அழித்து ஞான நிலைக்கு அழைத்துச் செல்பவள்’ என்பது இதன் பொருள். பின்புறம், சுற்றுப் பிரகாரத்தில் கன்னி விநாயகரும், பாலமுருகனும், சண்டிகேஸ்வரரும், இடப்புறத்தில் தெற்குநோக்கி நடராஜர் - சிவகாமி அம்பாளும் அருள்பாலிக்கின்றனர்.

    தனிச்சன்னிதியில் தனி விமானத்துடன் பாலாம்பிகை வீற்றிருக்கிறார். அதற்கு வலப்புறம் வராகி அம்பாள் சன்னிதி அமைந்துள்ளது. வெளிப் பிரகாரத்தில் கொடி மரத்துக்கு அருகில் வட கிழக்கு மூலையில் சொர்ண ஆகர்ஷண பைரவர் அருள்கிறார். ஆலயத்தின் பின்புறம் திருமாத்திரை தயாரிக்கும் கூடம் உள்ளது. மூலிகையை அம்மியில் அரைத்து மாத்திரைகள் உருவாக்கப்படுகிறது. இந்த திருமாத்திரையை 41 நாள் சாப்பிட்டு வந்தால், தீராத வியாதிகள் கூட நீங்கும் என்பது நம்பிக்கை.

    வருடம்தோறும் சித்திரை, ஆவணி மாதங்களில் 11 நாள் திருவிழா கோலாகலமாக நடைபெறுகின்றது. ஐப்பசி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் சந்திரசேகரர் - மனோன்மணி அம்பாள் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. திருமணம் தடை ஏற்படு பவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தடை நீங்கி செல் கிறார்கள். இரவு சீர் கொண்டு செல்லுதல், அம்மி மிதித்தல், தேங்காய் உருட்டுதல், நலுங்கு வைத்தல் போன்ற சடங்குகள் நடைபெறும். தொடர்ந்து சுவாமியும் அம்பாளும் திருத்தேரில் எழுந்தருளி, பவனி வருகிறார்கள்.

    அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சிறப்பு பூஜையும், மதியம் அன்னதானமும் நடைபெறுகிறது. பவுர்ணமி அன்று மாலை வாலாம்பிகை அம்பாள் ஊஞ்சலில் எழுந்தருள்வார். அப்போது லலிதா சகஸ்ரநாம அர்ச்சனையும், தொடர்ந்து திருவிளக்கு பூஜையும் நடைபெறும். ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியில் சொர்ண ஆகர்ஷண பைரவருக்கும், ஒவ்வொரு வளர்பிறை பஞ்சமியில் வராகி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கின்றன. மாதம் இரு பிரதோஷமும், உச்சிஷ்ட கணபதிக்கு சங்கடஹர சதுர்த்தியும் சிறப்பாக நடைபெறுகிறது.

    வாலைகுருசாமிக்கும், காசியானந்தா சுவாமிக்கும் வெள்ளை நிற வஸ்திரம் சாத்தி, வில்வமாலை அணிவித்து வழிபட்டால், நினைத்த காரியங்கள் வெற்றிபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. வாலாம்பிகைக்குச் சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி, செவ்வரளி மாலை அணிவித்து, எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபட்டால் சகல தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம். நாகருக்கு மஞ்சள் பொடி சாத்தி வர கடன் தொல்லை விலகுகிறது.

    சித்தர்கள் அனைவரும் குரு முகமாக தீட்சை பெற்றே, வாலை அம்மனை அடைந்தனர். அதேபோல, வாலைகுருசாமி, அவரது சீடர் காசியானந்தர் இருவரையும் முழுமையாக வணங்கிய பின்னரே, வாலையம்மனை வழிபட வேண்டும். அப்போதுதான் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

    சிறுவர்கள் மீது விழுந்த பனைமரம்

    சுமார் 70 வருடங்களுக்கு முன்பு இங்கு நடைபெற்ற ஒரு சம்பவம் ஆலயத்திற்கு மேலும் புகழ் சேர்க்கிறது.

    வாலை குருசாமியின் வருஷாபிஷேக பூஜையின் இரண்டாவது நாள், அங்கிருந்த பனைமரத்தின் அடியில் ஆறு சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென வீசிய சூறைக் காற்றில், பனைமரத்தின் மட்டைக் கிளைகளுடன் கூடிய மேல்பகுதி ஒடிந்து விழுந்தது. மரத்தினடியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மீது அந்த மட்டை கிளை விழுந்து, அவர்களை மூடி விட்டது. அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். ‘என்ன ஆயிற்றோ’ என்ற அச்சத்துடன், அனைவரும் ஓடி வந்து மட்டைகளை அப்புறப் படுத்த, அதன் அடியில் விளையாடிக் கொண்டிருந்த ஆறு சிறுவர்களும் சிறு காயம் கூட இல்லாமல் சிரித்தபடியே வெளியே வந்தனர். இந்த சிறுவர்களின் ஒருவர் 84 வயது பெரியவராக, அந்த சம்பவத்திற்கு சாட்சியம் கூறியபடி இன்றும் அந்த ஊரில் வலம் வருகிறார்.

    அமைவிடம்

    திசையன்விளையில் இருந்து உடன்குடி செல்லும் சாலையில் இருந்தும், சாத்தான்குளம் மற்றும் உடன்குடியில் இருந்தும் 11 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, கொம்மடிக்கோட்டை. உடன்குடி, சாத்தான்குளத்தில் இருந்து பஸ்வசதிகள் உள்ளன. 
    தூத்துக்குடி கொம்மடிக்கோட்டை ஊரில் அன்னை பாலாவின் அருள்பெற்ற குருவும் சிஷ்யர்களுமான இரண்டு சித்தர்கள் ஜீவசமாதி அடைந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.
    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து உடன்குடி வழியாக திசையன்விளை செல்லும் சாலையில் அமைந்திருக்கும் அழகிய ஊர் கொம்மடிக்கோட்டை. இவ்வூரில் தான் அன்னை பாலாவின் அருள்பெற்ற குருவும் சிஷ்யர்களுமான இரண்டு சித்தர்கள் ஜீவசமாதி அடைந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். அத்துடன் தீராத நோயை தீர்த்து திரு அருள்புரிந்தும் வருகிறார்கள்.

    கொம்மடிராயன் என்ற குறுநில மன்னர், இங்கு கோட்டை அமைத்து வாழ்ந்த காரணத்தினால் இவ்வூர் ‘கொம்மடிக் கோட்டை’ என்ற பெயர் பெற்றுள்ளது. கொம்மடிராயன் கல்வெட்டு அருகில் உள்ள சிவாலயமான ஞானாதீஸ்வரர் கோவிலில் காணப்படுகிறது.

    பழங்காலம் தொட்டே இவ்விடம் பெரும் புண்ணிய பூமியாக திகழ்ந்துள்ளது. சுற்றிலும் தேரிக்காடாக காட்சியளிக்கும் இவ்விடத்தில் சுனையும், தோப்பும் துறவுமாக பசுமை நிறைந்த வனப்பாகவே கொம்மடிக்கோட்டை விளங்கியுள்ளது. இங்கு அகிலத்தினை காக்கும் பாலா தெய்வமாக அருள்பாலித்து வருகிறார். எனவே இவ்வூரை பாலாசேத்திரமென அழைக்கிறார்கள்.

    சித்தர்களின் வழிபடும் தெய்வமாகத் திகழ்பவள் பாலா என்கிற வாலை அம்மன். பாலா என்பது சமஸ்கிருத பெயர். வாலை என்பது தான் அதன் தமிழாக்கம். அன்னை பராசக்தியான ராஜராஜேஸ்வரி லலிதாம்பிகையின் பத்து வயது தோற்றமே பாலா.

    ‘சக்தி சடாதரி வாலைப் பெண்ணாம்; சித்தர்கள் போற்றிய வாலைப் பெண்ணாம்; எங்கும் நிறைந்தவள் வாலைப் பெண்ணாம்’ என்று கொங்கணச் சித்தரின் கும்மிப் பாடல், வாலை அம்மனின் பெருமைகளை விவரிக்கிறது. ‘வாலாம்பிகை வாலையடி சித்தருக்கு தெய்வம்' என்பது வழி வழியாய் வந்த மொழி.

    வாலை அம்மனை வழிபடும் தெய்வமாக கொண்டு ‘ஐம் க்லிம் ஸௌ' என்ற பாலா மந்திர மூன்றெழுத்தின் துணை கொண்டுதான், மூவுலகினையும் நினைத்த போதே சென்றடைந்தனர் சித்தர்கள். ஸ்ரீ வித்தையில் மிகவும் எளிதானது பாலா மந்திரம்.

    வாலை அம்மனின் பெருமையை பலரும் பலவிதமாக பாடுகிறார்கள். இவரின் புகழ் பாட, ‘பத்து வயதினை உடைய பாவையினன்றோ நீ சித்தர்க்கெல்லாம் தாயாய் செய்தாய் மனோன்மணியே...’ என்று பாடியவர் மஸ்தான் சாகிபு. வாலை, சித்தருக்கெல்லாம் தாயானதால் தான், ‘சித்தனோடு சேர்ந்தாளே சித்தத்தா...’ என்றும் பாடப்பட்டுள்ளாள். சித்தர்கள் வாலை அம்மனை உயர்த்திப் பேசுவதில் தவறில்லை என்கிறார்கள்.

    ‘உலகம் வாலையில் அடக்கம்’ என்பது உண்மை. வாலை அம்மனை பூஜித்து வர வேண்டுமானால், அதற்கு முற்பிறவியில் நற்பலன் இருந்தால் மட்டுமே முடியும் என்பது அனைவரும் அறிந்த உண்மை. வாலை அம்மன் பத்து வயது சிறு பெண் தோற்றம் கொண்டிருந்தாலும், அவளே நமது அன்னை. அவளை தியானித்து அனுபவிப்போருக்குத் தான் தெரியும், எத்தனை அற்புத காட்சி எல்லாம் அவள் காட்டுவிப்பாள் என்று. ‘வாலையை வழிபடுவோருக்கு சுகம், பரமசுகம் கிடைக்கும். அவள் நல்லவருக்கு நடுவே விளையாடுவாள். வல்லவர்களெல்லாம் வல்லவளாய் ஆட்சி செய்வாள். அவளை விட அரிதான சூட்சுமம் ஏது?’ என்கிறார் கருவூரார். அவள் உன்னதமான சூட்சுமக்காரி நாத தத்துவத்தையும் சுத்தமாயையும் ஓங்கார சொருபிணி என்று சித்தர் கூடம் அவளையே போற்றுகிறது.

    இவரின் அருள் சாதாரணவர்களுக்கு தெரியுமா என்ன? ஆனால் சித்த பெருமக்களுக்கு ஞானாம்பிகா அன்னை இருக்குமிடம் தெரிந்துள்ளது.

    சுமார் 800 வருடங்களுக்கு முன்பு...

    அன்னையை வணங்க பல பல யோகிகளும், ஞானிகளும் நிறைந்த புனித மலையாம் கயிலாயத்தில் இருந்து வந்தவர்தான் வாலை குருசாமி. இவர் வாலையை தனது தாயாக ஏற்று தனது பெயருக்கு முன்னாள் ‘வாலை’ என சேர்த்துக்கொண்டவர். இவர் பல புண்ணிய தலத்துக்கெல்லாம் சென்று விட்டு காசி வந்தார். அங்கே.. காசியானந்தா என்பவரைக் கண்டார். காசியானந்தா... வாலை குருசாமியின் சீடராகிவிட்டார். அவரோடு சேர்ந்து அன்னையை காண தென் திசை நோக்கி வந்தார்கள்.



    வரும்வழியில் பல மக்களுக்கு அருளாசி வழங்கினர். வேண்டும் வரம் கொடுத்தனர். பல புண்ணிய தலத்தில் தங்கி யாகங்கள் பல செய்தனர். இறுதியாக கொம்மடிக்கோட்டை வந்து சேர்ந்தனர். அங்கே அமைதியின் இருப்பிடமான பாலசேத்திரத்தைக் கண்டனர்.

    ‘ஆகா.. இதுவல்லவா.. புண்ணியசேத்திரம். இங்குதானே நாம் தேடி வந்த அன்னை அருள்பாலிக்கிறார்’ என வியந்து போற்றி... அங்கேயே அமர்ந்தனர்.

    ஆசிரமம் அமைத்தனர். ஸ்ரீவாலாம்பிகையைப் பூஜித்து, தவம் இயற்றி சித்திகள் பெற்றனர். தாங்கள் வழிபட்ட தெய்வத்தை அனைவரும் வணங்கி அருள் பெற வேண்டும் என்பதற்காக வாலாம்பிகைக்குத் சன்னிதி அமைத்தனர். இங்கு அவர்களுடன் பல பல சித்தர்கள் வந்து யாகம் பல நடைபெற உதவினர்.

    ஸ்ரீவித்யை (ஸ்ரீபாலா) மார்க்கத்தைக் குருமுகமாகவே அடையவேண்டும் எனச் சொல்கிறது சாஸ்திரம். ஸ்ரீவாலை வழிபாட்டை போகர் முனிவர் நந்தீசரிடம் இருந்து உபதேசம் பெற்றார் என்றும், தான் பெற்ற உபதேசத்தை போகர், கொங்கணருக்கு உபதேசித்ததாகவும் கொங்கணர் தன்னுடைய பல சீடர்களுக்கு உபதேசித்ததாகவும் கூறப்படுகிறது. அகத்தியர் உள்பட பல சித்தர்களும் அன்னையை புகழ்ந்து போற்றியுள்ளனர். எனவே இவ்விடம் அருள் ஆசியை அள்ளி தரும் அற்புத பூமியாக திகழ்ந்தது.

    பாலசேத்திரத்தில் உள்ள சித்தர்களின் ஆசிரமத்துக்கு பலரும் வந்து சென்றனர். நோய் பட்டவர்கள் வந்தனர். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் அருள் வேண்டி நின்றனர். அவர்களுக்கெல்லாம் வாலை குருசாமியும், காசியானந்தாரும் திருமாத்திரை வழங்கினர். அந்த திருமாத்திரையை பெற்றவர்கள் நற்பயன் பெற்றனர். அவர்களின் நோய் நீங்கியது. பல மூலிகைகளைக் கொண்டு, அந்த மாத்திரையை, அன்னையின் தலத்திலேயே சித்தர் பெருமக்கள் உருவாக்கினார்கள். தற்போதும் கூட இதே மாத்திரை இங்கு கிடைக்கிறது.

    மஞ்சணத்தி இலை, வேப்பிலை, வில்வ இலை, புளிய இலை ஆகியவை எடுத்து கோவிலில் உள்ள அம்மியில் இட்டு, அத்துடன் எலுமிச்சைச் சாறு, திருநீறு, சிறிது கோவில் திரு மண் சேர்த்து அரைத்துக் கோவிலில் வாலைகுருசாமி முன் பூஜையில் வைக்கின்றனர். பிறகு அதை 41 சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, வெயிலில் காய வைத்துத் தனியாக எடுத்து வைத்துக் கொள்கிறார்கள். இந்த திருமாத்திரையைத் தொடர்ந்து 41 நாட்கள் சாப்பிட்டு வர, தீராத பிணிகளும் நீங்குவதாக இங்கு வரும் பக்தர்கள் பலரும் சொல்கிறார்கள்.

    தற்போது வழங்கப்படும் இந்த மாத்திரையை, அந்த காலத்திலேயே சித்தர்கள் வழங்கியதால் பலரும் நோய் தீர்ந்து அருள் பெற்றனர். எனவே இவ்விடத்தினை ‘ஞானியர் மடம்' என்றே அழைக்க ஆரம்பித்து விட்டார்கள்.

    அன்னையை நாள்தோறும் வணங்கி அருள் பெற்று, பக்தர்களுக்கும் அருள் தந்துக்கொண்டிருந்த சித்தர்கள் இருவரும் யோக முதிர்ச்சி பெற்றனர். சித்துக்கள் பெற்றனர். அதன் பின் இங்கேயே ஜீவசமாதி அடைந்தனர். அன்னையின் அருளால் நம்பி வருகின்ற மக்களுக்கு வேண்டியவற்றை வேண்டியவாறு வழங்கி வந்தனர்.

    சித்தர் பெருமக்கள்அடங்கிய இடம் யாருக்கும் தெரியாமல் போய் விட்டது. ஆனால் அருள் ஆற்றல் மட்டும் வெளிப்பட்டுக்கொண்டு தான் இருந்தது. இவ்வூர் மக்கள் என்னவென்று தெரியாமலேயே இங்கு வந்து அந்த அருளை பெற்று சென்றனர். தேன் நிறைந்த வாசமுள்ள மலர்களை ஈக்கள் வண்டுகள் மொய்ப்பது போன்று ‘ஆகா.. இது புண்ணிய தலம். இங்கே ஏதோ இருக்கிறது. இங்கு வந்து சென்றால் ஏதோ.. நடக்கிறது. நல்லது தோன்றுகிறது. இது புண்ணிய பூமி..' என்று நினைத்து சென்றவர்களுக்கு நல்ல அருளும் வாழ்வும் கிடைத்தது.

    அப்போது இங்கு தொடர்ச்சியாக வழிபடும் பக்தர்களுக்கு இங்கு வாலை தெய்வமும், வாலைகுரு சித்தரும், அவர் சீடர் காசியானந்தாரும் அமர்ந்து அருள்பாலிக்கிறார்கள் என்ற உண்மை புரிந்தது. எனவே பக்தர்கள் அனைவரும் சேர்ந்து இங்கு ஆலயம் கட்ட முடிவு செய்தனர்.

    ஆனால் எப்படி ஆலயம் கட்டுவது?. எங்கு கட்டுவது..? யாரிடம் கேட்பது?. கேட்பவருக்கு கேட்டபடி வாக்கு கொடுக்கும் அற்புத இடமல்லவா..? அங்கே ஒருவர் சொன்னார்.

    ‘இவ்விடத்தில் விபூதியை பரத்தி வைப்போம். இரவுக்குள் சித்தர் பெருமக்கள் நமக்கு அவர்கள் அருள்பாலிக்கும் இடத்தினை கூறுவார்கள்’ என்றார்.

    அனைவரும் ஆமோதித்தனர். அதுபோலவே விபூதியை எடுத்து அந்த இடம் முழுவதும் பரப்பி வைத்தனர். மறு நாள் காலை விடிந்து வந்து பார்த்த போது, சித்தர்கள் அடங்கிய இரண்டு இடங்கள் மட்டும் கோடிட்டுக் காட்டப்பட்டிருந்தது. ஒரு சிறந்த வரைபடம் போல அவ்விடத்தினை கண்ட பக்தர்கள் உடனே ஆலயம் கட்ட ஆரம்பித்தனர். அங்கே ஒரே கருவறையில் வாலைகுரு சாமிக்கும், காசியானந்தாருக்கும் லிங்கம் அமைத்து வழிபட ஆரம்பித்தனர்.
    இறையருட் செல்வரான ஸ்ரீ வேலப்பதேசிகர் திருவாவடுதுறையின் 10-வது குருமகா சன்னிதானம். இவரது வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    ஆதித் திருமுறையை அடித்தளமாக வைத்து திருகயிலாய பரம்பரை என உருவாகியது தான் திருவாவடுதுறை. இறையருட் செல்வரான ஸ்ரீ வேலப்பதேசிகர் திருவாவடுதுறையின் 10-வது குருமகா சன்னிதானம். இவர் 18-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். நெல்லையில் உள்ள திருவாவடுதுறைக் கிளை மடத்தோடு, நெருங்கிய ஈடுபாடு கொண்டவர்.

    வேலப்ப தேசிகர் தமது அருளாட்சி காலத்தில் சங்கரன்கோவில் சங்கரலிங்க சுவாமி திருக் கோவிலுக்கு அடிக்கடிச் சென்று, அத்தல இறைவனை மனதார வணங்கி அங்கே முகாமிட்டு தங்குவார். அப்போது ஆலயத்திற்கு வருகைதரும் அனைத்து மக்களுக்கும் உடலில் ஏற்படும் நோய்களை தீர்த்ததுடன், மனதால் ஏற்படும் நோய்களையும் நீக்கிவைப்பார்.

    இந்தப் பகுதியை ஆண்டுக்கொண்டிருந்த பூலித்தேவன், வேலப்ப தேசிகரை குருவாக ஏற்றுக்கொண்டார். எப்போதுமே வேலப்ப தேசிகரை வணங்கிய பின்பே, தனது தினசரி காரியங்களை கவனிப்பார். அவரின் ஆலோசனைப்படி செயல்பட்டு வந்தார்.

    ஒருசமயம் பூலித்தேவருக்கு குன்ம வலி ஏற்பட்டது. இந்த வலியை சுவாமி தனது தவவலிமையால் போக்கினார். எனவே, சுவாமியின் ஆன்மிக பணிக்கு பூலித்தேவன் பல நிலங்களை வழங்கினார். அந்த நிலங்களில் மடம் அமைத்து, சுவாமி அருளாட்சி நடத்தினார்.

    காலங்கள் கடந்தது. சித்தர் பெருமக்களுக்கு தன் உடலை துறந்து மறு உடலுக்கு செல்வதில்தான் எத்தனை அலாதி பிரியம் உண்டு. இதுபோலவே வேலப்ப சுவாமி சமாதி கொள்ளத் தீர்மானித்தார். தனது சீடன் பூலித்தேவனிடம் கூறி ‘சங்கரன் கோவில் மேலவீதியில் எனக்கு பூமிக்குள் தவமிருக்க ஏற்பாடு செய்’ என்றார். அதன்படி ஏற்பாடு செய்யப்பட்டது.

    புரட்டாசி மாதம் மூலநட்சத்திரத்தில் அவர் மடத்தில், பூமிக்கு உள்ளே எழுப்பப்பட்ட குழிக்குள் உயிரோடு சென்று சமாதி நிலை அடைந்தார். அதன் மேலே சமாதி எழுப்பப்பட்டது.

    இதற்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இங்கு வசித்த செல்வந்தர்கள் சமாதியை எப்படியும் இங்கிருந்து அகற்றி விடவேண்டும் என்று துடியாய் துடித்தனர். ‘மக்கள் குடியிருக்கும் இடத்தில் சமாதியா? கட்ட விடமாட்டோம்' என்று திரண்டு நின்றனர்.

    பூலித்தேவன் விடவில்லை. தனது உறவினர்களையும், காவலர்களையும் கூட்டி வந்து சுவாமி சமாதியைக் காப்பாற்றினார். செல்வந்தர்களோ, எங்கள் உயிரே போனாலும் பின்வாங்க மாட்டோம் என்று எதிர்த்து நின்றனர். ஆகவே, கலகம் ஏற்படும் நிலை ஏற்பட்டது.

    இருபக்கமும் சரி சமமாக மோதும் நிலை. ஒரு பக்கம் பூலித்தேவன் பட்டாளம். மறுபக்கம் செல்வந்தர்கள் பட்டாளம். என்ன நடக்க போகிறது என்பது யாருக்கும் தெரியவில்லை. இவர்களை யார் சமாதானம் செய்வார்கள் என்பதும் புரியாத நிலை. அப்போது தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.

    அடக்க ஸ்தலத்தில் இருந்த சுவாமி ஸ்ரீ வேலப்ப தேசிகர், திடீரென்று பூமிக்கு மேலே வந்து நின்றார்.

    இருதரப்பினரும் அதிர்ந்தனர். ‘நான் எங்கே சமாதி ஆகி இருக்கிறேன்..? உயிரோடு தான் இருக்கிறேன். நான் சமாதி ஆனால் தானே பிரச்சினை’ என்று கூறினார்.

    இருதரப்பினரும் அதிர்ந்தனர். ஆகா.. இதுவரை சுவாமிகள் அடக்கம் ஆக வில்லை. ஐம்புலன்களையும் அடக்கி தவநிலையில்தான் இருந்துள்ளார் என ஆனந்தம் அடைந்தனர். அதன் பிறகு அனை வரும் சமாதானமாக அங்கிருந்து புறப்பட்டனர்.

    தற்போது கூட வேலப்ப தேசிகர் ஜீவசமாதியாக உள்ளார் என்று யாரும் நம்பவில்லை. சுவாமி உயிரோடு அமர்ந்து தியானத்தில் இருந்தப்படியே அருளாசி தருகிறார் என்றே நம்புகிறார்கள்.

    வேலப்ப தேசிக சுவாமிகள் சமாதி அடைந்தபிறகு, பூலித்தேவனுக்கு ஒரு சூழ்நிலையில் உதவினார். அது பூலித்தேவன் வரலாற்றில் நடந்த பிரமிப்பான ஒரு நிகழ்வு.

    1767-ல் பிரிட்டிஷ் தளபதி டொனர்டு பெரும்படை திரட்டி வந்து, நெற்கட்டான் செவல் கோட்டையை தகர்த்தான். மாவீரன் பூலித்தேவனைக் கைது செய்து பாளையங்கோட்டைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் சங்கரநயினார் திருக்கோவிலின் வாசலுக்கு வந்த பூலித்தேவன், ‘இறைவனை வழிபட வேண்டும். எனக்கு அனுமதி தாருங்கள்' எனக் கேட்டார்.



    அதன் படி இறைவனை வழிபட பூலித்தேவனுக்கு அனுமதி வழங்கப்பட்டது. கோவிலுக்குள் சென்ற பூலித்தேவன், திடீரென்று ஏற்பட்ட புகையால் காணாமல் போய் விட்டார். அதன்பின் ஆங்கிலேயரால் அவரை பிடிக்கவே முடியவில்லை. இந்த உலகுக்கும் அவர் தென்படாமல் மாயமாக மறைந்து விட்டார்.

    எப்படி இது நடந்தது?. இது நடக்க யார் காரணம்? என்பது போன்ற பல கேள்விகளுக்கு வேலப்ப தேசிகர் மூலமாகவே விடை கிடைத்தது.

    பூலித்தேவனை கைது செய்து, ஆங்கிலேயர்கள் இழுத்து வந்தபோது, ஸ்ரீ வேலப்பதேசிகர் கோவில் முன்பு கொண்டு வந்தனர். அங்கே ஒரு நிமிடம் பூலித்தேவன் நின்று, தனது குருவை நோக்கி மனதுருக வேண்டினார். ‘நான் மானத்தோடு வானம் செல்லுதற்கான வரத்தைத் தந்தருளுங்கள்’ என்றார்.

    உடனே சூட்சும உடலோடு வெளிவந்த வேலப்பதேசிகர், பூலித்தேவனுக்கு மட்டுமே தென்பட்டார்.

    ‘சீடனே வா என்னோடு’ என்று முன்னால் சென்றார். பின்னால் நடந்தான் மாவீரன். ஆலய வாசலில் நின்று சாமி கும்பிட அனுமதி பெற்றார். வெள்ளையரும் அனுமதி கொடுத்தார்கள். உள்ளே போன குருவின் பின்னே இவரும் சென்றார். குறிப்பிட்ட இடத்துக்குச் சென்றவுடன் தானே அவரது விலங்கு சுக்கு நூறாக உடைந்தது.

    சுவாமி சன்னிதி அருகே நாற்சதுர மந்திர வேலியிட்டு, அதனுள் அவரை நிறுத்தி வைத்தார் குரு. ‘பூலித்தேவா! இனி நீ யார் கண்ணிலேயும் படமாட்டாய்! உடலோடு சொர்க்கம் சேர்வாய்’ என்று தியானத்திலே மூழ்கினார் அருவ நிலையில் இருந்த வேலப்பர்.

    குரு மொழிக்கு ஏது மறு மொழி...?. அப்படியே நடந்தது. பூலித்தேவன் சொர்க்கத்துக்கே சென்று விட்டார்.

    வெள்ளையர் பட்டாளம் ஆலயம் முழுதும் சல்லடை போட்டு சலித்தது. பீரங்கியும், துப்பாக்கியும் பிரணவத்தை வெல்ல முடியுமா என்ன?. ஆங்கிலேயர்கள் தோற்றுப் போனார்கள்.

    ஆனாலும் மற்றவர்கள் பயப்படவேண்டும் என்று ஏதோ ஒரு பிணத்தை களத்து மேட்டில் வைத்து தீயிட்டு, இதுதான் பூலித்தேவன் என்று அவரது வழக்கை ஆங்கிலேய நிர்வாகம் முடித்து விட்டது என்பது இப்பகுதி மக்கள் தற்போதும் பேசும் ஒரு வரலாறு ஆகும்.

    பிரம்மரிஷி விசுவாமித்திரர் கூட, திரிசங்குக்கு நிரந்தர சொர்க்கத்தை தர முடியவில்லை. திருவாவடுதுறை ஆதீன குருமகா சன்னிதானமாக விளங்கிய வேலப்ப தேசிகர், பூலித்தேவனை சொர்க்கத்துக்கு அனுப்பி வைத்தார். இந்த கலியுகத்தில் இது எவ்வளவு பெரிய விந்தையான செயல்.

    சங்கரன்கோவிலில் தற்போதும் சங்கர நாராயணர் கோவில் உள்ளே பூலித்தேவன் அறை என்று ஒன்று உள்ளது. இதுதான் பூலித்தேவன் காணாமல் போன இடம். அதற்கான அறிவிப்பு பலகையுடன் அந்த அறை நமக்கு காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.

    இதுபோன்ற பல அற்புதங்களை பழங்காலத்தில் நிகழ்த்திய வேலப்பர் தேசிகர், தற்போதும் தன்னை தேடி வரும் பக்தர்களுக்கு அருளாசியை நிகழ்த்திக் கொண்டே இருக்கிறார். இங்கு விளக்கு போட்டு தேசிகரை வணங்கி வருகிறார்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், பெரும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், திருமணம் ஆகாத பெண்கள் என பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து விளக்கு ஏற்றி வணங்கினால் வேண்டிய வரம் கிடைக்கிறது.

    ஒருவர் தன் வாழ்வில் பிறவி எடுப்பதே தன்னுடைய கர்ம வினையை போக்கத்தான். வேலப்ப தேசிகரின் சமாதிக்கு வந்து வணங்கி நின்றால், அவர்களுடைய கர்ம வினை போக்கப்படுகிறது என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

    வேலப்ப தேசிக மூர்த்திகள் ஜீவ சமாதி நிலையிலிருந்து தம்மை வணங்க வரும் அனைவருக்கும் திருவருளும் குருவருளும் வழங்கி அருள்கிறார்கள். இவ்விடத்தில் நாள்தோறும் வழிபாடும், வியாழக்கிழமை தோறும் வார வழிபாடும் நடை பெறுகிறது. ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் மூலநட்சத்திரம் அன்று குருபூஜையும் நடைபெறும். குருபூஜையில் சாதுக்கள் உள்பட பக்தர்கள் பலரும் கலந்துகொள்வார்கள். அன்றைக்கு அன்னதானம் மிக பிரமாண்டமாக நடைபெறும்.

    நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் ரத வீதியில் சங்கரநாராயணர் கோவிலுக்கு பின்புறத்தில் வேலப்ப தேசிகர் சுவாமிகளின் சித்தர் பீடம் உள்ளது. திரு நெல்வேலியில் இருந்து சங்கரன்கோவிலுக்கு ஏராளமான பஸ்வசதிகள் உள்ளன. சென்னையில் இருந்து நேரடி ரெயில் வசதியும் உள்ளது.

    நோய் தீர்க்கும் ஸ்ரீசக்கரம்

    ஆதிசங்கரர் பல ஆலயங்களில் ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்தவர். அவரை பின்பற்றியே வேலப்ப தேசிகர், சங்கரன்கோவில் கோமதி அம்பாள் சன்னிதியில் ஸ்ரீசக்கரம் ஒன்றைப் பதித்து அருளினார். எனவே இவரை ஆதிசங்கரரின் மறு அவதாரம் என பக்தர்கள் போற்றுகிறார்கள். ஸ்ரீ சக்கரம் முன்பு அமர்ந்து வழிபடுவோர் பில்லி, சூனியம், சித்தப்பிரமை போன்றவை நீங்கப் பெறுகிறார்கள்.

    பொதுவாக ஸ்ரீ சக்கரம் கோவிலில் மூல ஸ்தானத்துக்கு அடுத்துள்ள அர்த்த மண்டபத்தின் மேல் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்படுவது தான் வழக்கம். ஆனால் சங்கரன்கோவிலில் மட்டும் மூலஸ்தானத்தில் வெளியே தரைப்பகுதியில் ஸ்ரீசக்கரத்தினை, வேலப்ப தேசிக சுவாமிகள் பிரதிஷ்டை செய்துள்ளார்.

    இந்த ஸ்ரீ சக்கரத்தில் அமர்ந்து தியானம் செய்தால், தன் உடலில் உள்ள எதிர்மறை சக்தி அனைத்தையும் நம்முடைய மூலாதர சக்கரம் வழியாக ஸ்ரீசக்கரம் பெற்றுக்கொள்ளும். சங்கரன்கோவிலில் உள்ள பல பெருமைகளில், வேலப்ப தேசிகர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீ சக்கரமும் ஒன்று. எனவே இந்த சக்கரத்தினை தரிசனம் செய்ய பக்தர்கள் வரிசையில் காத்துக்கிடக்கிறார்கள். 
    மனிதர்கள் யாவரும் ஏதாவது ஒரு திதியில் நட்சத்திரத்தில் பிறந்திருப்பார்கள். அவர்கள் தங்கள் திதியிலோ அல்லது நட்சத்திரத்திலோ பிறந்த சித்தர்களைக் கண்டு வணங்கினால் பிரச்சினை தீர வழிபிறக்கும்.
    மனிதர்கள் யாவரும் ஏதாவது ஒரு திதியில் நட்சத்திரத்தில் பிறந்திருப்பார்கள். இதை அவரவர் ஜாதகத்தில் அறியலாம். பலரும் தன் பாவ வினையால் எவ்வளவு முயற்சித்தும் தெய்வ அருளை பெறமுடியாமல் இருப்பார்கள். அவர்கள் தங்கள் திதியிலோ அல்லது நட்சத்திரத்திலோ பிறந்த சித்தர்களைக் கண்டு வணங்கினால் பிரச்சினை தீர வழிபிறக்கும்.

    ஒரு முறையாவது உங்களுக்குரிய சித்தர் ஜீவ சமாதிக்கு நேரில் சென்று, ஜென்ம நட்சத்திரத்திலோ, திதியிலோ சென்று தரிசித்துவிட்டு பின்பு வீட்டிலேயே மறுமுறையில் அந்த குறிப்பிட்ட நாளில் மாதந்தோறும் உபவாசம் இருந்து வணங்கி வந்தால் பல மாறுதலான பலன்களை காண முடியும்.

    சித்தர்கள் எந்த திதியில் பிறந்தார்கள் என்பதை வரலாறு சரியாக குறிப்பிடவில்லை. ஆனால் நட்சத்திரங்களையும், பிறந்த தமிழ் மாதங்களையும் குறிப்பிட்டுள்ளார்கள். அவற்றை இங்கே கொடுத்திருக்கிறோம். அதன்படி சென்று வழிபட்டு நலம் காணுங்கள். பெரும்பாலும் சித்தர்கள் ஜீவ சமாதி, சிவாலயமாகவே இருக்கும்.

    * அஸ்வினி நட்சத்திரத்திற்கு உரிய சித்தரின் பெயர் காளங்கிநாதர். இவரது சமாதி மற்றும் சக்தி அலைகள் கஞ்சமலை மற்றும் திருக்கடையூர் ஆகிய தலங்களில் உள்ளது. அவரவருக்கு பெயரே மந்திரம். எனவே சித்தர்களின் பெயரை மரியாதையாக உச்சரித்தலே போதும். ‘ஓம் குருவே சரணம்’ என மூன்றுமுறை கூறி, ‘ஓம் ஸ்ரீ காளங்கிநாதர் சித்த குருசுவாமியே சரணம்.. சரணம்..’ என முடிந்தளவு கூறலாம்.

    மற்ற நட்சத்திரக்காரர்களும் இதே முறையில் தான் மந்திரம் கூற வேண்டும். காளங்கிநாதர் என்ற பெயரை நீக்கி உங்கள் சித்தருக்கான பெயரை சேர்த்துக்கொள்ளவும்.

    * பரணி நட்சத்திரத்திற்கு உரிய சித்தர் போகர் ஆவார். இவருக்கு பழனி முருகன் சன்னிதியில் சமாதி உள்ளது.

    * கார்த்திகை நட்சத்திரம் ரோமரிஷி சித்தருக்கு உரியது. இவருக்கு சமாதியும் இல்லை. இவரது உடல் அழியவும் இல்லை. நேரடியாக கயிலாயத்திற்கு சென்றுவிட்டார் என வரலாறு கூறுகிறது. இவரை திங்கட்கிழமை வெள்ளை ஆடை அணிந்து, வடக்கு நோக்கி திருக்கயிலை இருப்பதாக பாவித்து வணங்கவும்.

    * ரோகிணி நட்சத்திரத்திற்கு உரியவர் சித்தர் மச்சமுனி ஆவார். இவர் ஜீவ சமாதி திருப்பரங்குன்றத்தில் உள்ளது.

    * மிருகசீரிஷம் நட்சத்திரத்திற்குரியவராக இரண்டு சித்தர்கள் இருக்கிறார்கள். ஒருவர் பாம்பாட்டி சித்தர். மற்றொருவர் சட்டமுனி சித்தர். இதில் பாம்பாட்டி சித்தரின் ஜீவ சமாதி சங்கரன்கோவிலில் உள்ளது. சட்டமுனி சித்தரின் சமாதி ஸ்ரீரங்கத்தில் இருக்கிறது.

    * திருவாதிரை நட்சத்திரம் சித்தர் இடைக்காடாருக்கு உரியது. இவரது ஜீவசமாதி, நெருப்பு பிழம்பாக ஈசன் நின்ற திருவண்ணாமலையில் அமைந்துள்ளது.



    * புனர்பூச நட்சத்திரத்திற்குரியவர் சித்தர் தன்வந்தரி ஆவார். இவர் வைத்தீஸ்வரன் கோவிலில் ஜீவ சமாதி ஆனவர்.

    * பூசம் நட்சத்திரம் கமல முனி சித்தருக்கு உரியது. இவர் திருவாரூரில் ஜீவ சமாதி அடைந்துள்ளார்.

    * ஆயில்யம் நட்சத்திரத்திற்கான சித்தர் அகத்தியர். இவரது ஒளிவட்டம் குற்றாலப் பொதிகை மலையில் உள்ளது. சமாதி கேரள தலைநகரம் திருவனந்தபுரத்தில் இருக்கிறது.

    * மகம் நட்சத்திரத்தில் அவதரித்தவர் சிவ வாக்கிய சித்தர் ஆவார். இவரது ஜீவ சமாதி கும்பகோணத்தில் உள்ளது.

    * பூரம் நட்சத்திரத்தில் தோன்றியவர் ராமதேவ சித்தர். இவரது ஜீவ சமாதி அரபு நாடான மெக்காவில் உள்ளது. இவர் ஒளிவந்து போகும் இடம் அழகர்மலை. நம் நாட்டினர் இவரை வழிபட அழகர் மலைக்குத் தான் செல்வார்கள். பூரம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண்டாளையும் வழிபடலாம். அவரை ஸ்ரீவில்லிபுத்தூரில் வழிபட வேண்டும்.

    * உத்திரம் நட்சத்திரம் சித்தர் காகபுஜண்டருக்கு உரியது. இவர் ஜீவசமாதி அடைந்த இடம் திருச்சி உறையூரில் உள்ளது.

    * ஹஸ்தம் நட்சத்திரம் சித்தர் கருவூராருக்கு உரியது. இவர் சமாதி கரூரில் உள்ளது. இவரது ஒளிவட்டம் வந்து செல்லும் இடம் தஞ்சாவூர் பெரிய கோவில் ஆகும்.

    * சித்திரை நட்சத்திரத்திற்கு உரியவர், சித்தர் புண்ணாக்கீசர் ஆவார். நண்ணா சேர் என்ற இடத்தில் இவரது ஜீவ சமாதி உள்ளது.

    * சுவாதி நட்சத்திரத்திற்கான சித்தர் புலிப்பாணி ஆவார். இவரது சமாதி பழனிக்கு அருகில் உள்ள வைகாவூர் என்ற இடத்தில் இருக்கிறது.

    * விசாகம் நட்சத்திரத்திற்கான சித்தர் நந்தீசர் மற்றும் குதம்பை சித்தர் ஆவர். நந்தீசர் காசி நகரத்திலும் (பனாரஸ்), குதம்பை சித்தர் மாயவரத்திலும் ஜீவசமாதி அடைந்துள்ளனர்.

    * அனுஷம் நட்சத்திரம் சித்தர் வால்மீகிக்கு உரியது. இவருக்கு எட்டுக்குடியில் ஜீவசமாதி உள்ளது.

    * கேட்டை நட்சத்திரம் பகவான் வியாசருக்கு உரியது. இவர் உடல் அழிவற்றது. எனவே காற்றோடு காற்றாக கலந்து இருப்பார். இவரை நினைத்தாலே போதும். அவ்விடம் வருவார்.



    * மூலம் நட்சத்திரத்திற்கான சித்தர் பதஞ்சலி ஆவார். இவர் சமாதி ராமேஸ்வரத்தில் உள்ளது.

    * பூராடம் நட்சத்திரத்திற்குரியவரும் ராமேதவர் சித்தரே. இவரது ஜீவ ஒளியை அழகர்மலையில் தரிசிக்கலாம்.

    * உத்திராடம் நட்சத்திரத்திற்கான சித்தபிரான் கொங்கணர். இவர் ஜீவசமாதி திருப்பதி ஆகும்.

    * திருவோணம் நட்சத்திரம் சித்தர் தட்சிணாமூர்த்திக்கு உரியது. இவர் சமாதி புதுச்சேரி அடுத்து உள்ள பள்ளித்தென்னல் என்ற இடத்தில் உள்ளது.

    * அவிட்டம் நட்சத்திரம் சித்தர் திருமூலருக்கு உரியது. இவர் சிதம்பரத்தில் ஜீவசமாதி அடைந்திருக்கிறார்.

    * சதயம் நட்சத்திரத்திற்கு உரியவர் கவுபாலர். இவரின் சமாதி எங்கிருக்கிறது என்பதற்கான தெளிவான குறிப்புகள் இல்லை. எனினும் மன ஒழுக்கத்தோடு இவரை நினைத்தாலே தேடிவந்து அருள்புரிவார்.

    * பூரட்டாதி நட்சத்திரத்திற்கான சித்தர் ஜோதிமுனி ஆவார். இவர் ஜோதி வடிவிலே ஜீவனாக உள்ளவர். அதனால் இவருக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் அங்கு அருள்பாலிப்பார்.

    * உத்திரட்டாதி இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் டமரகர் சித்தர் ஆவார். இவரும் நேரிடையாக காற்றில் ஐக்கியமாகி கலந்துவிட்டார் என்று வரலாறு கூறுகிறது. இவர் சிவாலயத்தில் ஒலிக்கும் இசை வாத்தியங்களில் ஏழாம் ஓசையின் ஒலியாக வந்து, இறைவனுக்கு இசை முழக்கத்தால் சேவை செய்வார் எனக் குறிப்பிடுகிறார்கள். இவரை வீட்டிலேயே சிறு மணி ஓசையில் வரவழைத்து வணங்கலாம்.

    * ரேவதி நட்சத்திரத்திற்கான சித்தர் சுந்தரானந்தர் ஆவார். இவர் ஜீவசமாதி கோவில் மதுரையில் உள்ளது.

    மனத்தூய்மையும், உடல் தூய்மையும், கர்ம தூய்மையும் (பாவமற்ற கர்மாவைத் தொடர்தல்) தனிஅறையும் கொண்டு, ஒற்றை தீபம் மட்டும் ஏற்றி மன ஒருநிலைப்பாட்டோடு உங்கள் சித்தரை வணங்கி வாருங்கள். நிச்சயம் அவர்கள் அருளை தர தவறமாட்டார்கள். 
    இடைக்காடர் எனும் மகாசித்தர் திருவண்ணாமலை தலத்தில் அடங்கி இருக்கிறார். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்துக்குள் அவரது ஜீவ சமாதி இருப்பதாக கூறப்படுகிறது.
    தமிழ்நாட்டில் எண்ண முடியாத அளவுக்கு எத்தனையோ சித்தர்கள் உள்ளனர். சென்னையில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட சித்தர்களின் ஜீவ சமாதி இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? இந்த சித்தர்கள் உறைந்து அருள்பாலிக்கும் இடங்கள்தான் நாளடைவில் மிகப்பெரும் புகழ்பெற்ற வழிபாட்டு தலங்களாக மாறி இருக்கின்றன.

    ஒவ்வொரு பழமையான ஆலயத்திலும் ஏதாவது ஒரு சித்தர் அடங்கி இருப்பார். அந்த வகையில் பதினெண் சித்தர்களாக கருதப்படும் 18 சித்தர்கள் உறைந்துள்ள 18 ஆலயங்கள் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. அதில் இடைக்காடர் எனும் மகாசித்தர் திருவண்ணாமலை தலத்தில் அடங்கி இருக்கிறார்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்துக்குள் அவரது ஜீவ சமாதி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் ஆலயத்துக்குள் எந்த பகுதியில் அவரது ஜீவ சமாதி அமைந்துள்ளது என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. சிலர் இடைக்காடர் சமாதி திருவண்ணாமலை மலை உச்சியில் இருப்பதாக சொல்கிறார்கள்.
    பொதுவாக சித்தர்கள் பல்வேறு வகையான சமாதி நிலைகளை எட்டுவது உண்டு.

    மறுபிறவியற்ற நிர்விகற்ப சமாதி, நன்மை, தீமை இரு நிலையுடன் கூடிய விகற்ப சமாதி, உடலுக்கும், மனதுக்கும் சஞ்சீவி தன்மை அளிக்கும் சஞ்சீவனி சமாதி, உடலை மட்டும் பாதுகாப்பாக வைத்துவிட்டு உயிரைப் பிரிக்கும் காயகல்ப சமாதி, நீண்ட யோகா பயிற்சி மூலம் உடலை ஒளி உடலாக மாற்றிக் கொள்ளும் ஒளி சமாதி மற்றும் மகா சமாதி, விசார சமாதி, விதர்க்க சமாதி, அசம்பிரக்ஞாத சமாதி, சபீஜ சமாதி என்று பலவகைகள் உண்டு.

    இதில் இடைக்காடர் ஒளி சமாதி ஆகி இருப்பது பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டு உள்ளது. அதன் தொடர்ச்சியாக அவரது ஒளி சமாதியாக கருதப்படும் இடமும் திருவண்ணாமலை ஆலயத்துக்குள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாகத் தான் மக்கள் அந்த ஒளி சமாதியை தெரிந்து கொண்டு வழிபட தொடங்கி உள்ளனர்.

    இதுபற்றி விரிவாக பார்ப்பதற்கு முன்பு, இடைக்காடர் சித்தர் யார்? அவர் எப்படி திருவண்ணாமலைக்கு வந்தார்? திருவண்ணாமலை தலத்தில் என்னென்ன அற்புதங்களை செய்தார் என்பதை பார்க்கலாம். சிவகங்கை மாவட்டத்தில் இடைக்காட்டூர் என்று ஒரு ஊர் உள்ளது. அந்த ஊரில்தான் இடைக்காடர் சித்தர் அவதரித்தார். கோனார் என்று அழைக்கப்படும் இடையர் சமுதாயத்தில் பிறந்ததால் அவருக்கு இந்த பெயர் ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.

    இடைக்காடர் எப்போதும் சிவசிந்தனையிலேயே ஆழ்ந்து இருப்பார். பிறந்தது முதல் அவருக்கு இந்த சித்தி வாய்த் திருந்தது. ஆடுகளை மேய்ச்சலில் விடுவதற்காக காட்டுக்குள் அழைத்து செல்லும்போது அவர் ஏதாவது மரத்தடியில் அமர்ந்து சிவசிந்தனையில் ஏகாந்த நிலைக்கு சென்று விடுவார்.

    ஆடு மேய்ப்பது, பால் கறப்பது, புல்லாங்குழல் ஊதுவது, சிவசிந்தனையில் ஆழ்ந்து விடுவது.... இதுதான் இடைக்காடரின் தினசரி வாழ்வியல் வழக்கமாகும். தினமும் அவர் ஆடுகளை காட்டுக்கு அழைத்து சென்று மேய வைத்துவிட்டு வருவார். ஒருநாள் அப்படி அவர் காட்டுக்குள் சென்றபோது ஒரு மரத்தடியில் சிவசிந்தனையில் ஆழ்ந்தார்.

    அப்போது வான்மார்க்கத்தில் போகர் சித்தர் சென்று கொண்டிருந்தார். அவர் சிவசிந்தனையில் ஆழ்ந்துள்ள இடைக்காடரை பார்த்ததும் வான் மண்டலத்தில் இருந்து இறங்கி வந்து பார்த்தார். அவர் தனக்கு தாகமாக இருப்பதால் பால் தருமாறு கூறினார். உடனே இடைக்காடர் ஆட்டு பால் கொடுத்து போகரை உபசரித்தார்.



    இதனால் மகிழ்ச்சி அடைந்த போகர் வைத்திய, வாத, யோக, ஞானங்களை இடைக்காடருக்கு கற்றுக் கொடுத்தார். அதுமட்டுமின்றி ஜோதிடத்தில் உள்ள அனைத்து கலைகளையும் கற்று கொடுத்தார். இதனால் இடைக்காடர் சாதாரண நிலையில் இருந்து சித்த புருஷராக மாறினார்.

    போகரை குருவாக ஏற்று அவர் செயல்பட்டார். கருவூராரும் அவருக்கு குருவாக இருந்ததாக சொல்வார்கள். இடைக்காடர் எந்த நூற்றாண்டில் வாழ்ந்தார் என்பது கணிக்க முடியாதபடி உள்ளது. சித்தர்களின் கால தொடக்கம் நான்காம் நூற்றாண்டு என்று கூறப்படுகிறது. எனவே அப்போது இடைக்காடர் வாழ்ந்து இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

    சித்தராக உயர்ந்த இடைக்காடர் நிறைய நூல்கள் எழுதினார். வைத்தியம் தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள குறிப்புகள் உயர்வானவை. அதுபோல முக்தி பெற அவர் பாடி உள்ள பாடல்கள் ஒவ்வொன்றும் நமது மனதை பண்படுத்தக்கூடியவை.

    ஜோதிடத்தில் அவர் எழுதிய கணிப்புகள் இன்று ஜோதிட உலகுக்கு வழிகாட்டும் வகையில் உள்ளன. பல நூற்றாண்டுகளுக்கு பிறகும் என்ன நடக்கும் என்பதை ஏற்கனவே இடைக்காடர் எழுதி வைத்துள்ளார். அந்த குறிப்புகளை வைத்துதான் இப்போது ஆண்டு தோறும் பஞ்சாங்கம் தயாரித்து வெளியிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இத்தகைய ஆற்றல் கொண்ட இடைக்காடர் திருவண்ணாமலை தலம் உருவாகவும், புகழ் பெறவும் அடித்தளம் அமைத்து கொடுத்தார். அதற்கான சான்றுகள் திருவண்ணாமலை தலம் முழுக்க உள்ளன. ஆனால் அண்ணாமலையாரை வழிபட செல்பவர்களுக்கு அந்த நுணுக்கங்கள் தெரியாமல் இருப்பது துரதிருஷ்டமே.
    இவர் திருமாலின் அவதாரமாக கருதப்படுகிறார். ஆனால் போகர்தான் இவரை திருவண்ணாமலை தலத்துக்கு அனுப்பியதாக வரலாறு உள்ளது.

    திருவண்ணாமலையில் வாழ்ந்த காலத்தில் அவருக்கு இந்த உலகில் விரைவில் மிகப்பெரிய பஞ்சம் வரப்போவதையும் பஞ்சம் சுமார் 12 ஆண்டுகள் நீடிக்கும் என்பதையும் தனது ஜோதிட திறமையால் உணர்ந்தார். தனது தெய்வத் தன்மையை பயன்படுத்தி அந்த பஞ்சத்தை எதிர்கொள்ள முடிவு செய்தார். அதன்படி தனது ஆடுகளுக்கு எருக்கம் இலையை உணவாக கொடுத்து பழக்கப்படுத்தினார். பொதுவாக எருக்கம் செடிகள் எந்த கொடிய வறட்சியிலும் தாக்குப்பிடித்து நிற்கும் தன்மை கொண்டது. எனவேதான் அவர் அதை தனது ஆடுகளுக்கு உணவாக கொடுத்து பழக்கப்படுத்தினார்.

    பிறகு 12 ஆண்டுகள் வரை கெடாமல் இருக்கும் வரகு எனும் தானியத்தை மண்ணோடு சேர்த்து சுவர்கள் எழுப்பி குடிசை கட்டினார். அவர் எதிர்ப்பார்த்தபடியே பஞ்சம் வந்தது. எல்லா உயிரினங்களும் பஞ்சத்தில் சிக்கி அழிந்தன. ஆனால் இடைக்காடருக்கும், அவர் வளர்த்த ஆடுகளுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அவரது ஆடுகள் எருக்கம் இலையை தின்று உயிர் வாழ்ந்தன. இடைக்காடர் குடிசை வீட்டு சுவரில் பதிய வைத்திருந்த வரகு தானியத்தை தட்டி எடுத்து ஆட்டு பாலில் காய்ச்சி குடித்து உயிர் வாழ்ந்தார்.

    இதைப் பார்த்த நவக்கிரகங்களுக்கு மிகவும் ஆச்சரியமாகி விட்டது. நாம் திட்டமிட்டு கிரக நிலைகள் மூலம் வறட்சியை ஏற்படுத்தினாலும் இடைக்காடர் மட்டும் எப்படி உயிர் தப்பினார் என்று யோசித்தனர். இதற்கு விடை காண்பதற்காக இடைக்காடர் வாழும் குடிசைக்கு நவக்கிரகங்கள் வந்தனர். நவக்கிரகங்களை வரவேற்ற இடைக்காடர் அவர்களுக்கு வரகு உணவு தானியத்தையும், ஆட்டு பாலையும் கொடுத்து உபசரித்தார். ஆட்டு பாலில் சமைத்த உணவை சாப்பிட்டதால் நவக்கிரகங்களுக்கு ஆழ்ந்த தூக்கம் வந்தது. அவர்கள் அப்படியே தூங்கிப் போனார்கள்.



    கிரகங்கள் மாற்றத்தால் தான் மழை பெய்யவில்லை என்பதை ஏற்கனவே அறிந்து இருந்த இடைக்காடர் மழை பெய்ய வைக்கும் வகையில் நவக்கிரகங்களின் நிலைகளை மாற்றிப் படுக்க வைத்தார். அடுத்த கணமே வானம் இருண்டது. நல்ல மழை பொழிந்தது. உலகம் முழுக்க உள்ள ஆறுகள், ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிந்தன. தொடர் மழை காரணமாக உலகமே குளிர்ந்தது.

    தங்களை சுற்றி திடீரென குளிர்ச்சி தன்மை உருவாகி இருப்பதை உணர்ந்த நவக்கிரகங்கள் விழித்து எழுந்தனர். உலகில் பஞ்சம் நீங்கி எங்கு பார்த்தாலும் தண்ணீர் வளம் அதிகமாகி குளிர்ச்சி பெற்று இருப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டனர். இடைக்காடர் மூலம்தான் இந்த மாற்றம் நிகழ்ந்து இருக்க வேண்டும் என்பதை அவர்கள் உறுதி செய்தனர்.

    இடைக்காடரை இதற்காக பாராட்டினார்கள். அவரை வாழ்த்தி ஆசீர்வதித்து விட்டு சென்றனர். திருவண்ணாமலை தலத்தில் நடந்த இந்த அதிசயம் உலகம் முழுக்க பரவியது. இதற்கு என்ன சான்று இருக்கிறது என்று பலரும் கேட்கலாம். திருவண்ணாமலை தலத்தில் ஒரு விஷயத்தை நீங்கள் உன்னிப்பாக கவனித்தால் இதற்கு விடை கிடைக்கும்.

    திருவண்ணாமலைக்குள் நுழைவதற்கு 9 வழிகள் உள்ளன. திருவண்ணாமலையில் சிவபெருமானே மலையாக வீற்று இருப்பதால் அவரை சுற்றி கிரிவலம் வருவது நடைமுறையில் உள்ளது. இந்த கிரிவல பாதை மொத்த தூரம் 9 மைல்கள் ஆகும். திருவண்ணாமலையில் ஈசனின் பாதம் 9 இடங்களில் உள்ளது. கிரிவல பாதையில் 9 லிங்கங்கள் உள்ளன. 9 நந்திகள் உள்ளன. திருவண்ணாமலை கோவிலுக்குள் 9 கோபுரங்கள் அமைந்துள்ளன. இப்படி நவக்கிரகங்களான 9 என்ற அமைப்புக்கும், திருவண்ணாமலையில் உள்ள முக்கிய விஷயங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

    திருவண்ணாமலையில் நவக்கிரகங்கள் மாற்றப்பட்டதற்கு இவைதான் உதாரணமாகும். திருவண்ணாமலைக்கு கிரிவலம் வருபவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களுக்கு நேரம் சரியில்லை. அதற்கு பரிகாரம் காண வேண்டும் என்ற எண்ணத்தில்தான் கிரிவலம் மேற்கொள்ள வருகிறார்கள். நவக்கிரகங்களை மாற்றி எப்படி இந்த உலகுக்கு இடைக்காடர் நன்மையை உருவாக்கினாரோ அதுபோல கிரிவலம் வரும் ஒவ்வொருவரின் கிரக தோஷங்களையும் இடைக்காடர் நீக்கி, நல்ல பலன்களை அருள்வதாக ஐதீகமாகும்.

    கிரிவலம் வந்தால் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து முக்தி பெற முடியும் என்பதற்கு அடித்தளம் அமைத்ததே இடைக்காடர்தான் என்று சொல்வார்கள். அப்படிப்பட்டவர் இன்னமும் திருவண்ணாமலை தலத்துக்கள் ஒளி சமாதியாக இருந்து அருள்பாலிக்கிறார் என்றால் அது சாதாரண விஷயமல்ல.
    இடைக்காடரின் அருளை யார் ஒருவர் பரிபூரணமாகப் பெறுகிறார்களோ அவர்களுக்கு திருவண்ணாமலை தலத்துக்கு சென்ற உண்மையான பலன்கள் கிடைக்கும். 
    ×