என் மலர்
நீங்கள் தேடியது "சிலுக்குவார்பட்டி சிங்கம் விமர்சனம்"
செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால் - ரெஜினா கசாண்ட்ரா - ஓவியா நடிப்பில் வெளியாகி இருக்கும் `சிலுக்குவார்பட்டி சிங்கம்' படத்தின் விமர்சனம். #SilukkuvarpattiSingam #SilukkuvarpattiSingamReview #VishnuVishal
தனது பாட்டியுடன் வாழ்ந்து வரும் விஷ்ணு விஷாலுக்கு சிபாரிசில் கான்ஸ்டபிள் வேலை கிடைக்கிறது. சிலுக்குவார்பட்டி காவல் நிலையத்தில் சேர்கிறார். எந்த பிரச்சனைக்கும் போகாமல், எந்த வழக்கையும் பார்க்காமல் பயம்கொள்ளியாக இருக்கும் விஷ்ணு விஷால், சின்ன எடுபிடி வேலைகளை மட்டுமே செய்துவிட்டு சந்தோஷமாக காலத்தை ஓட்ட எண்ணுகிறார்.
இதற்கிடையே விஷ்ணு விஷாலும், அவரது மாமா பெண்ணான ரெஜினாவும் காதலிக்கிறார்கள். ஆனால் மாமா மாரிமுத்து, விஷ்ணுவின் கோழைத்தனத்தை சுட்டிக்காட்டி பெண் தர மறுக்கிறார்.

மறுபக்கம் சென்னையையே கலக்கிக் கொண்டிருந்த தாதாவான சாய் ரவியை என்கவுண்டர் செய்ய திட்டமிட்டு போலீசார் அவரைத் தேடுகிறார்கள். தன்னை என்கவுண்டர் செய்ய வந்த போலீசை கொன்றுவிட்டு தலைமறைவாகும் சாய் ரவி, விஷ்ணு விஷாலிடம் சிக்கிக் கொள்கிறார்.
எந்த பிரச்சனைக்கும் போகாத விஷ்ணு, சாய் ரவி பெரிய ரவுடி என்பது தெரியாமல் ஓட்டலில் நடக்கும் ஒரு பிரச்சனையால், சாய் ரவியை அடித்து சிறையில் அடைத்துவிடுகிறார். இதையடுத்து சாய் ரவியின் ஆட்களான அவரை சிறையை உடைத்து வெளியே அழைத்துச் செல்கின்றனர். தன்னை கைது செய்து சிறையில் அடைத்த விஷ்ணுவை கொல்லாமல், இந்த ஊரை விட்டு போகமாட்டேன் என்று சாய் ரவி சபதமிடுகிறார். சாய்யிடம் இருந்து தப்பிக்க, வித்தியாசமான கெட்அப்புகளை போட்டுக் கொண்டு ஊரை சுற்றிவருகிறார் விஷ்ணு விஷால்.

கடைசியில், சாய் ரவியிடம் இருந்து விஷ்ணு எப்படி தப்பித்தார்? ரெஜினாவாவை கரம்பிடித்தாரா? எந்த பிரச்சனைக்கும் போகாத விஷ்ணு விஷால் சாய் ரவியை அடித்தது ஏன்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே நகைச்சுவையான மீதிக்கதை.
ராட்சசன் படத்தில் ஒருவித பயம், தயக்கம் என பரபரப்பாக இயங்கிய விஷ்ணு விஷால் இந்த படத்தில் முற்றிலுமாக மாறி காட்சிக்கு காட்சி சிரிக்க வைக்கிறார். சாய்ரவிக்கு பயந்து அவர் போடும் கெட்டப்கள் வயிற்றை பதம் பார்க்கின்றன. படத்தின் கலர்புல்லுக்கு ரெஜினா உத்தரவாதம் தருகிறார். காதலன் என்ன சொன்னாலும், அப்படியே நம்பிவிடும் ரெஜினா போன்ற பெண் கிடைத்தால் இந்த காலத்து இளைஞர்களுக்கு பிரச்சினையே இருக்காது. அழகாக வந்து ரசிக்க வைத்திருக்கிறார்.

சாய்ரவி வில்லனாக இருந்தாலும் தன்னை வைத்து சுற்றி இருப்பவர்கள் செய்யும் காமெடிகளை விட்டுக்கொடுத்து படத்துக்கு துணை நின்று இருக்கிறார். ஓவியா சில காட்சிகளே வந்தாலும் சிறப்பு. கருணாகரனுக்கு படம் முழுக்க வந்து சிரிக்க வைக்கும் வேடம். நேர்மையான போலீஸ் அதிகாரியாக வருகிறார்.
டோனியாக வரும் யோகி பாபுயும் நம்மை சிரிக்க வைக்கிறார். லொள்ளு சபா மனோகரின் ஐபோன் விளையாட்டு, ஆனந்த்ராஜின் ஷேர் ஆட்டோ காமெடி, மன்சூர் அலிகானின் மூட்டை, சினேகா பிரதர்சின் பாத்ரூம் காமெடி, சிங்கமுத்துவின் லாக்கெப் காமெடி என்று படம் முழுக்க சிரிக்கும்படியாக இருக்கிறது.
லிவிங்ஸ்டன், வடிவுக்கரசி வழக்கமான நடிப்பின் மூலம் கவர்கின்றனர். கிளைமாக்சுக்கு பின்னும் கூட ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகானின் பழைய படங்களை பயன்படுத்தியது சிறப்பு.

இயக்குனர் செல்லா அய்யாவுக்கு படத்தை சீரியசாக்க பல வாய்ப்புகள் இருந்தும் பாதை மாறாமல் சிரிக்க வைக்கும் வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். ஒரு சில இடங்களில் மட்டும் தேவையில்லாத காட்சிகள் இடம்பெறுகின்றன. அதுவும் அடுத்த காட்சிக்கான இடைவேளையாக இருப்பதால் ஏற்றுக் கொள்ளமுடிகிறது.
லியோன் ஜேம்சின் இசையில் டியோ ரியோ பாடல் சிறப்பாக உள்ளது. மற்ற பாடல்களும் கேட்கும் ரகம் தான். பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார். ஜே.லெக்ஷ்மணின் ஒளிப்பதிவு படத்தை கமர்ஷியலாக காட்டியிருக்கிறது.
மொத்தத்தில் `சிலுக்குவார்பட்டி சிங்கம்' சிரிப்புக்கு உத்தரவாதம். #SilukkuvarpattiSingam #SilukkuvarpattiSingamReview #VishnuVishal #ReginaCassandra