என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக ஆளுநர்"

    • தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் கேளிக்கை வரிச் சட்டத்தை திருத்தி புதியபிரிவை சேர்ப்பதற்காக இந்த சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
    • மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட நிலையில் ஆளுநர் ஆர்‌.என்.ரவி ஒப்புதல் வழங்கினார்.

    சென்னை:

    கட்டணத்துடன் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளுக்கு 10 சதவீதம் கேளிக்கை வரி விதிக்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா டிசம்பர் மாதம் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதை அமைச்சர் கே.என்.நேரு தாக்கல் செய்து இருந்தார்.

    தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் கேளிக்கை வரிச் சட்டத்தை திருத்தி புதியபிரிவை சேர்ப்பதற்காக இந்த சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, கல்வி நிறுவனம், சங்கம், குழு மம், யாருடைய பெயரிலாவது அமைக்கப்பட்டுள்ள கழகம் போன்ற நிறுவனங்களின் வளாகங்கள் மைதானங்கள் மற்றும் நுழைவுச் சீட்டு அல்லது சந்தா போன்ற கட்டணங்கள் செலுத்த வேண்டிய இடங்கள் ஆகியவற்றில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சி, நாடகம், காட்சி அல்லது பிற நிகழ்ச்சி எதற்கும் மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் 10 சதவீதம் (அனுமதி கட்டணத்தில்) கேளிக்கை வரி வசூலிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த மசோதா கடந்த டிசம்பர் மாதம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட நிலையில் இப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கினார்.

    • ஸ்டாலின் ஆட்சி சமூகநீதி ஆட்சியாக, சமத்துவ ஆட்சியாக இருக்கும் என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
    • சுயாட்சியை பொறுத்தவரை வாக்காளர்கள்தான் நாயகர்கள்.

    சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

    மாநில சுயாட்சி நாயகருக்கு மகத்தான பாராட்டு விழா என்ற தலைப்பில் துணை வேந்தர்கள், பேராசிரியர்கள், சுயநிதி பொறியியல் கல்லூரி கூட்டமைப்பு சார்பில் முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.

    இந்த பாராட்டு விழாவில் அரசு, அரசு உதவி பெறும் கல்லூரி பிரதிநிதிகள், தனியார் கலை கல்லூரி கூட்டமைப்பினர் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில் விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    பொதுவாக எனக்கு பாராட்டு விழா என்றால் நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்.

    விழாவுக்கு ஒப்புக் கொண்டதே தமிழகத்திற்கு உச்சநீதிமன்றம் அளித்த வரலாற்று தீர்ப்புதான்.

    ஸ்டாலினின் ஆட்சி சமூக நீதி ஆட்சியாக, சமத்துவ ஆட்சியாக இருக்கும். சுயாட்சியை பொறுத்தவரை வாக்காளர்கள்தான் நாயகர்கள்.

    மக்களின் அன்புக்கும், நம்பிக்கைக்கும் தகுதிப்படுத்திக் கொள்ள கடுமையக உழைப்பேன்.

    ஆளுநருக்கும், குடியரசுத் தலைவருக்கும் காலக் கெடு நிர்ணயித்தது முக்கியத்துவம் வாய்ந்தது. இனி மசோதாவை நிறுத்தி வைத்தால் மாநில அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என தீர்ப்பு அளித்தது.

    முதலமைச்சராகி மக்களுக்குத் தேவையான திட்டங்களை தீட்டினால், After all மத்திய அரசின் ஏஜெண்டாக நியமிக்கப்பட்ட, Temporary-அ தங்கி இருக்கிற ஒரு ஆளுநர் அவைகளை தடுத்து நிறுத்த முடியும் என்றால், மக்கள் போடுகிற ஓட்டுக்கு என்ன மரியாதை ?

    பிரதமரின் உரிமைகளை குடியரசுத் தலைவர் எடுத்துக் கொண்டால் சும்மா இருப்பார்களா ?

    ஆளுநர் தமிழ்நாட்டிலேயே தொடர வேண்டும் என்பதே எனது விருப்பம். ஆளுநர் பதவி என்பது ரப்பர் ஸ்டாம்ப் போஸ்ட்.

    திராவிட மாடல் அரசு இளைஞர்களுக்கான அரசு, இளைஞர்கள் சிறந்த வேலை வாய்ப்பை பெற உழைக்கிறோம்.

    அறிவியலை மட்டுமே பயிற்றுவிக்க வேண்டும், மூட நம்பிக்கைகளை கற்றுத் தரும் இடமாக கல்விக்கூடம் இருக்கக்கூடாது.

    இளைஞர்கள் தங்கள் ரோல் மாடலை சமூக வலைத்தளங்களில் தேட வேண்டாம்.

    படிக்காமலேயே பெரிய ஆளாகிவிடலாம், யூடியூப் உள்ளிட்டவற்றில் சம்பாதிக்கலாம் என சொல்வார்கள் அந்த வலையில் சிக்கிவிடாதீர்கள்.

    கல்விதான் யாராலும் பறிக்க முடியாத சொத்து. உலகம் மிகப்பெரியது. அதைப்பார்க்க கல்வி என்ற கண்ணாடி வேண்டும். சாதி, மதம் என்று சுருங்கி விடாதீர்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி விடுவிக்கப்பட்டார்.
    • வனத்துறை அமைச்சராக இருந்த பொன்முடியும், அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அமைச்சரவையில் 6வது முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தமிழக அமைச்சரவையில் இருந்து மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி விடுவிக்கப்பட்டார்.

    இதேபோல், வனத்துறை அமைச்சராக இருந்த பொன்முடியும், அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

    போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்களுக்கு, செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்சாரத்துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அமைச்சர் முத்துச்சாமிக்கு மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    பொன்முடி வகித்த வனத்துறை, அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக கைத்தறித்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    தமிழக அமைச்சரவையில் மனோ தங்கராஜ் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். மனோ தங்கராஜூக்கு ஒதுக்கப்பட்டுள்ள இலாகா குறித்து அறிவிக்கப்படவில்லை.

    இந்நிலையில், கிண்டி ராஜ்பவனில் நடைபெற்று வரும் பதவியேற்பு விழாவில் மனோ தங்கராஜ் அமைச்சராக பதவி ஏற்றார்.

    மனோ தங்கராஜூக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    அமைச்சர் மனோ தங்கராஜூக்கு பால்வளத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பால்வளத் துறையை கவனித்துக் கொண்ட நிலையில் மீண்டும் அதே இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.

    • ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து ஏப். 26-ந்தேதி ம.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
    • சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ம.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    சென்னையில் கடந்த 20-ந்தேதி நடைபெற்ற ம.தி.மு.க. நிர்வாகக்குழு கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ முன்னிலையில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து ஏப். 26-ந்தேதி ம.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ம.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் ஆளுநரை கண்டித்தும், ஆளுநரை பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    • மிரட்டல் அரசியல் பாஜகவின் டி.என்.ஏ.வில்தான் ஊறிக் கிடக்கிறது.
    • உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அறிந்து மாநாட்டைத் துணை வேந்தர்கள் புறக்கணித்திருக்கிறார்கள்.

    தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நீலகிரி மாவட்டம் ஊட்டி ராஜ்பவனில் 2 நாட்கள் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்துகிறார். இந்த மாாநாடு இன்று தொடங்கியது.

    இந்த மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடாது என பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மிரட்டப்பட்டதாக ஆளுநர் புகார் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் ஆளுநரின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில்,

    உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    துணை வேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்கக்கூடாது என அரசு பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள் மிரட்டப்பட்டுள்ளனர்'' எனச் சொல்லியிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள். இதற்கு முன்பு ஆளுநர் ரவி கூட்டிய துணை வேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்ற துணை வேந்தர்கள் இப்போது ஏன் பங்கேற்கவில்லை? இந்தக் கேள்விக்குப் பட்டம் படித்து மேதாவியாக இருக்க வேண்டியதில்லை.

    தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2-ஆவது முறையாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்காததால், அரசியல் சாசனத்தின் 142-ஆவது பிரிவைப் பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது.

    மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநருக்குக் காலக்கெடு நிர்ணயித்த நீதிபதிகள், ஆளுநரால் அனுப்பி வைக்கப்படும் மசோதாக்கள் மீது முடிவு எடுக்க குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு நிர்ணயித்தனர்.

    இந்தத் தீர்ப்புக்கு பிறகுதான் தமிழ்நாடு அரசோடு மல்லுக்கட்ட வேண்டும் என்ற ஆத்திரத்தில் ஆளுநர் ரவி துணை வேந்தர்கள் மாநாட்டைக் கூட்டியிருக்கிறார். உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அறிந்து மாநாட்டைத் துணை வேந்தர்கள் புறக்கணித்திருக்கிறார்கள். இதற்கு எப்படி மாநில அரசு பொறுப்பாகும்?

    உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பும் சட்டமும் துணை வேந்தர்களுக்குத் தெரிகிறது. ஆனால், எல்லாம் தெரிந்தும் ஆளுநர்தான் வீம்புக்கு அரசியல் செய்கிறார். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு சட்டத்துக்குப் புறம்பாகத் துணை வேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் ரவி கூட்டியிருக்கிறார்.

    அதில் பங்கேற்பது சட்டத்திற்கு எதிராக அமையும் எனக் கருதி, துணை வேந்தர்கள் புறக்கணித்திருக்கிறார்கள். ஆளுநர் ரவிதான் சட்டத்தை மதிக்காமல் மாநாட்டைக் கூட்டியிருக்கிறார்கள் என்றால், துணை வேந்தர்களும் அப்படியே நடக்க வேண்டுமா என்ன?

    அண்மையில் கூட தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் பதவிக்குப் புதிய தலைவர் நியமிக்கப்பட்டார். அரசியல் செய்ய ஆசைப்பட்டால், ஆளுநர் ரவி அந்தப் பதவியில் போய் அமர்ந்திருக்கலாமே! எதற்கு ஊட்டிக்குப் போனார்?

    அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமானவரித் துறை, என்.ஐ.ஏ. போன்ற அதிகார அமைப்புகளை வைத்துத்தான் ஒன்றிய அரசு எதிர்க்கட்சிகளை மிரட்டிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு அரசு எதையும் சட்ட ரீதியாகத்தான் எதிர்கொள்வோம். அப்படித்தான் மசோதாக்கள் விவகாரத்தில் வெற்றி பெற்றோம்.

    ஆளுநர்கள் அந்தந்த மாநிலப் பல்கலைக்கழகங்களில் வேந்தராகச் செயல்படுவதற்கு அரசமைப்புச் சட்டத்தில் எந்த ஏற்பாடும் செய்யவில்லை. பல்கலைக்கழக வேந்தராக ஆளுநர்கள் இருப்பதைப் பற்றி அரசமைப்புச் சட்டத்தில் எதுவும் சொல்லவில்லை.

    தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களை எல்லாம் பல மாதங்களாகக் கிடப்பில் போட்ட ஆளுநர் ரவிக்கு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு இந்தியா முழுவதும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

    இந்திய வரலாற்றிலேயே முதன் முறையாக மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்க குடியரசுத் தலைவருக்கும் 3 மாதம் காலக்கெடு நிர்ணயித்து உத்தரவிட்டிருப்பதைத் தாங்கிக் கொள்ள முடியாமல், குடியரசுத் துணை தலைவரைத் துணைக்கு அழைத்துக் கொண்டு ஊட்டிக்கு வந்திருக்கிறார் ஆளுநர் ரவி.

    "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு போட்ட வழக்கு ராஜ்பவனைத் தாண்டி ராஷ்டிரபதி பவன் வரை பதம் பார்த்துவிட்டதே! என அடிவயிறு எரிந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாடு ஆளுநர் ரவி கிடப்பில் போட்டு வைத்த மசோதாக்களால்தான் ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

    அந்தத் தீர்ப்பை விமர்சிக்கிறார் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர். இவர் மேற்கு வங்க ஆளுநராக இருந்த போது முதல்வர் மம்தா பானர்ஜி அரசுக்கு எதிராக நடத்திய அடாவடிகளை இந்த நாடு பார்த்தது. அவர் வழியொற்றி நடக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூட்டிய துணை வேந்தர்கள் மாநாட்டில் ஜெகதீப் தன்கர் கலந்து கொள்வதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

    "மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்துவது குறித்து ஆராய்வதற்கு அமைக்கப்பட்ட நீதிபதி மதன் மோகன் பூஞ்சி கமிஷன் அறிக்கையின் படி, அரசியல்வாதிகளை ஆளுநர்களாக நியமிக்கக் கூடாது.

    ஆனால், மன்மோகன் சிங் அரசோ குஜராத்தில் அரசியல்வாதிகளை மட்டுமல்ல; மாற்றுக் கருத்துகளைக் கொண்ட அரசியல்வாதிகளையும் ஆளுநராக நியமிக்கிறது" எனச் சொன்னவர் யார் தெரியுமா? குஜராத் முதல்வராக இருந்த மோடிதான்!

    மோடி பிரதமர் ஆன பிறகு பா.ஜ.க.வுக்குப் பிடிக்காத, அவர்களை எதிர்க்கும் மாநில அரசுகளை ஆளுநர்கள் மூலம்தான் குடைச்சலைக் கொடுத்து கொண்டிருக்கிறார். அரசியல்வாதிகளை ஆளுநர்களாக நியமிக்கக் கூடாது எனச் சொன்ன மோடியின் அரசுதான், ஆளுநர்களை வைத்து அரசியல் செய்கிறது.

    பா.ஜ.க-வைச் சேர்ந்த அரசியல்வாதிகளைத்தான் ஆளுநர்களாக மோடி நியமித்தார். மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக இருந்தபோதுதான் சசிகலாவை முதலமைச்சர் பதவி ஏற்கவிடாமல் எடப்பாடி பழனிசாமிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பன்னீர்செல்வத்தையும் பழனிசாமியையும் ஒன்றாகக் கைகோத்து இணைத்து வைத்தார்.

    பன்வாரிலால் புரோகித்தையும் ஆர்.என்.ரவியையும் ஆளுநர்களாக நியமித்து தமிழக அரசுக்குக் குடைச்சலைக் கொடுத்தார்கள்.

    மிரட்டல் அரசியல் எல்லாம் பா.ஜ.க.வின் டி.என்.ஏ-வில்தான் ஊறிக் கிடக்கிறது. மிரட்டுவது உங்கள் டி.என்.ஏவில் இருக்கலாம்; துணிந்து மாநில உரிமைகளுக்காக எதிர்த்து நிற்பதுதான் எங்கள் டி.என்.ஏவில் இருக்கிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மாநாட்டில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் பங்கேற்கவில்லை.
    • தமிழ்நாட்டில் விளையாட்டு பல்கலைக்கழக துணை வேந்தர் மங்கையர்கரசி (பொறுப்பு) மாநாட்டில் பங்கேற்கவில்லை.

    தமிழக அரசுக்கு போட்டியாக ஆளுநர் ஆர்.என்.ரவி, நீலகிரி மாவட்டம் ஊட்டி ராஜ்பவனில் இன்று, நாளை ஆகிய 2 நாட்கள் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளார்.

    இந்த மாநாட்டில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

    ஆளுநர் தலைமையில் நடைபெறும் மாநாட்டை பல்வேறு பல்கலைக்கழக துணை வேந்தர்கள் புறக்கணித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    * மாநாட்டில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் சந்திரசேகர் பங்கேற்கவில்லை.

    * கோவை வேளாண் பல்கலைக்கழக பொறுப்பு துணை வேந்தர் தமிழ்வேந்தன் பங்கேற்கவில்லை.

    * தமிழ்நாட்டில் விளையாட்டு பல்கலைக்கழக துணை வேந்தர் மங்கையர்கரசி (பொறுப்பு) மாநாட்டில் பங்கேற்கவில்லை.

    * மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்கள் இல்லாத நிலையில் அதிகாரிகளும் மாநாட்டை புறக்கணித்ததாக தெரிய வந்துள்ளது.

    இந்த நிலையில், ஆளுநர் மாநாட்டில் 52 பல்கலைக்கழகங்களில் 34 பல்கலைக்கழக துணை வேந்தர்கள் பங்கேற்கின்றனர்.

    ஒட்டுமொத்த துணை வேந்தர்களும் மாநாட்டை புறக்கணித்ததாக தகவல் வெளியான நிலையில் ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    • யு.பி.எஸ்.சி. தேர்வுக்கு தயாராவதும், வெற்றி பெறுவதும் எளிதானது அல்ல.
    • பொதுமக்களிடம் இருந்து நன்கொடைகளோ அல்லது லஞ்சம் போன்ற செயல்களிலோ ஈடுபடக்கூடாது.

    சென்னை:

    யு.பி.எஸ்.சி. குடிமைப் பணி தேர்வு முடிவுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இதில் தமிழகத்தை சேர்ந்த 57 பேர் தேர்ச்சி பெற்றனர்.

    இந்த நிலையில் குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்றவர்களை ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று ஆளுநர் மாளிகைக்கு அழைத்து பாராட்டு தெரிவித்தார். அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி. பேசியதாவது:-

    யு.பி.எஸ்.சி. தேர்வுக்கு தயாராவதும், வெற்றி பெறுவதும் எளிதானது அல்ல. உங்கள் பயணத்துக்கு வாழ்த்துகள்.

    நீங்கள் தொடர்ந்து புத்தகங்கள் வாசித்து கொண்டே இருங்கள். பொது அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். புத்தகங்களை தொடர்ந்து வாசித்து வந்தால் மற்றவர்களிடம் கலந்துரையாடும் போது பெரிய அளவில் உதவும்.

    உடல் நலனிலும் கவனம் செலுத்த வேண்டும். தினமும் ஒரு மணிநேரம் உடற்பயிற்சி செய்யுங்கள்.

    பொதுமக்களிடம் இருந்து நன்கொடைகளோ அல்லது லஞ்சம் போன்ற செயல்களிலோ ஈடுபடக்கூடாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஆளுநர் ஆர்.என்.ரவி மாலை 4.30 மணிக்கு விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றார்.
    • ஆளுநர் ஆர்.என்.ரவி சில மத்திய அமைச்சர்களை சந்திக்க திட்டம்.

    தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மூன்று நாட்கள் பயணமாக டெல்லி சென்றுள்ளார்.

    அதன்படி, இன்று மாலை 4.30 மணிக்கு விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்ற ஆளுநர், ஞாயிறு அன்று சென்னை திரும்புவார் எனவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில், டெல்லி சென்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி சில மத்திய அமைச்சர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • ஆளுநர் பொறுப்பிலிருந்து ஆர்.என்.ரவியை நீக்க வேண்டும் என்று சி.பி.ஐ.எம் வலியுறுத்தி உள்ளது.
    • ஆளுநர் என்ற மதச்சார்பற்ற அரசியல் சாசன உயர்பொறுப்பில் நீடிக்கும் தகுதி இவருக்கு சிறிதும் இல்லை.

    மதுரை தியாகராஜர் கல்லூரி விழாவில் மாணவர்களிடையே ஜெய்ஸ்ரீராம் என ஆளுநர். ஆர்.என்.ரவி கோஷம் எழுப்ப வைத்த நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கு கண்டனம் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின், அரசியல் சாசன மாண்புக்கு முரணான திட்டமிட்ட அத்துமீறல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

    மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி நிகழ்ச்சியில் பேசிய அவர், தனது உரையின் முடிவில் ஜெய் ஸ்ரீராம் என்று மூன்று முறை கூறியதோடு, மாணவர்களையும் கூறுமாறு நிர்ப்பந்திந்துள்ளார். உயர்கல்வி நிலையங்களை அவற்றின் மதச்சார்பற்ற தன்மைக்கு மாறாக, இந்துத்துவ கூடமாக மாற்ற முயலும் ஆர்.என்.ரவியின் போக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

    தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 சட்டமுன்வரைவுகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காதது சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் ஓங்கி கொட்டிய பின்பும், அரசியல் சாசனக் கடமைகளை மறுத்து ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர் போலவே தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

    வள்ளலார், ஸ்ரீவைகுண்ட சாமிகள் உள்ளிட்ட சமூக சீர்திருத்த செம்மல்கள் மற்றும் திருவள்ளுவரை மனுவாதக் குடுவைக்குள் அடைக்க முயலும் இவர், மதச்சார்பின்மை, அறிவியல், பகுத்தறிவின் வாசல்களாகத் திகழ வேண்டிய கல்விக்கூடங்களை காவி கூடாரமாக மாற்ற முயல்வதை சகித்துக் கொள்ள முடியாது.

    ஆளுநர் என்ற மதச்சார்பற்ற அரசியல் சாசன உயர்பொறுப்பில் நீடிக்கும் தகுதி இவருக்கு சிறிதும் இல்லை என்பது தொடர்ந்து நிரூபிக்கப்பட்டு வருகிறது.

    எனவே, ஆளுநர் பொறுப்பிலிருந்து இவரை நீக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • உலகெங்கிலும் உள்ள எனது தமிழ் சகோதர சகோதரிகளுக்கு அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
    • தமிழ்நாட்டை உருவாக்குவதற்கான நமது கூட்டுறுதியை இது மேலும் வலுப்படுத்தட்டும்.

    தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் ராஜ் பவன் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தமிழ் புத்தாண்டின் விசேஷமிக்க தருணத்தில் அனைவருக்கும், குறிப்பாக உலகெங்கிலும் உள்ள எனது தமிழ் சகோதர சகோதரிகளுக்கு அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த நாள் நமது பெருமைமிக்க பண்டைய மற்றும் வளமான தமிழ் கலாசாரம் மற்றும் பாரம்பரியம், துடிப்பான நிகழ்காலம் மற்றும் நம்பிக்கைக்குரிய எதிர்காலத்தின் கொண்டாட்டமாகும்.

    புத்தாண்டு அனைவருக்கும் வளம், நல்ல ஆரோக்கியம், புதுப்பிக்கப்பட்ட ஆற்றல் மற்றும் ஏராளமான வாய்ப்புகளைக் கொண்டுவரட்டும்.

    #அமிர்தகாலத்தில் #வளர்ச்சியடைந்தபாரதம்2047 -க்கான வளர்ந்த தமிழ்நாட்டை உருவாக்குவதற்கான நமது கூட்டுறுதியை இது மேலும் வலுப்படுத்தட்டும்".

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 10 மசோதாக்களையும் நிறைவேற்றுவது தொடர்பாக கடந்த சில தினங்களாக தமிழ்நாடு அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர்
    • இந்த தீர்ப்புகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் நிலுவையில் வைத்திருந்தார். அந்த வகையில் 10 மசோதாக்கள் கிடப்பில் போடப்பட்டன.

    இதற்கிடையே 2 மசோதாக்களை அவர் ஜனாதிபதி பார்வைக்கு அனுப்பி வைத்திருந்தார். இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

    சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் இந்த வழக்கை விசாரித்து சமீபத்தில் பரபரப்பு தீர்ப்பை வெளியிட்டனர். தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நீண்டகாலம் நிலுவையில் வைத்திருந்தது சட்ட விரோதம் என்று தீர்ப்பு அளித்தனர்.

    அதோடு ஆளுநர் வசம் உள்ள 10 மசோதாக்களையும் அரசிதழில் வெளியிட்டு நிறைவேற்றலாம் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு மூலம் ஆளுநருக்கு எதிரான நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. 415 பக்கங்கள் கொண்ட அந்த சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து 10 மசோதாக்களையும் நிறைவேற்றுவது தொடர்பாக கடந்த சில தினங்களாக தமிழ்நாடு அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர். தற்போது அந்த மசோதாக்களை தமிழ்நாடு அரசு சட்டமாக்கி அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    10 மசோதாக்களையும் ஆளுநர், ஜனாதிபதிக்கு அனுப்பியது சட்ட விரோதம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதுடன், அம்மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாக கருதவேண்டும் என தீர்ப்பு வழங்கியது

    இதனை அடுத்து, தமிழ்நாடு அரசு அம்மசோதாக்களை அனுப்பிய 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் 18-ந் தேதியில் ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளித்ததாக கருத வேண்டும் என அரசிதழில் தெரிவித்துள்ளது.

    இந்த தீர்ப்புகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இதன் மூலம் இந்த தீர்ப்பு உடனடியாக சட்டமானது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • எங்கப்பா குடிச்ச பீடியின் பெயர் ‘கவர்னர் பீடி’ என்று கலாய்த்தேன்
    • வாய்ப்பை ஒதுக்கி ‘சங்கீ’தம் பாடுவதை விட, கிடைத்த வாய்ப்பை செதுக்குவதே மேல்.

    சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் உலக காசநோய் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் கலந்துகொண்டார். விழாவில் காசநோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் தன்னார்வலர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

    விழாவில் பேசிய இயக்குனருர் பார்த்திபன், "இந்த நிகழ்ச்சிக்காக உள்ளே நுழைந்தது முதல் தமிழ் மணந்து கொண்டே இருக்கிறது. தமிழ் பாடல்கள் கேட்பது, கலாச்சாரமிக்க விளக்கு ஏற்றுவது என தமிழ் நாட்டில் தமிழ் பண்பாட்டை பாதுகாப்பதற்காக தமிழக ஆளுநருக்கு என் மரியாதையை தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

    நான் தமிழில் பேசுவது ஆளுநருக்கு புரியுமா என்று கேட்டேன். ஆளுநர் தமிழ் கற்றுக்கொண்டு இருக்கிறார். அவருக்கு புரியும். அதனால் தைரியமாக தமிழில் பேசலாம் என்று திருஞானசம்பந்தம் சார் சொன்னார். அதனால் அவருக்கு தமிழ் புத்தகங்கள் எல்லாம் கொடுத்து இருக்கிறேன்.

    ஆளுநரிடம் பேசிய வகையில் அவரை மீண்டும் சந்திக்க வேண்டும் என்கிற அளவுக்கு அவர் மீது காதல் வந்துவிட்டது" என்று தெரிவித்தார்.

    ஆளுநரை பார்த்திபன் புகழ்ந்து பேசியது இணையத்தில் விமர்சனத்துக்கு உள்ளானது. விசிக துணை பொது செயலாளர் வன்னி அரசு பார்த்திபனை விமர்சித்து பதிவிட்டிருந்தார்.

    இந்நிலையில், ஆளுநர் சந்திப்பு குறித்து விமர்சனங்களுக்கு நடிகர் பார்த்திபன் தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

    அவரது பதிவில், "நேற்றைய ஆளுனர் சந்திப்பை (நான் எதைச் சொல்ல விரும்பினேனோ அதற்கு) சரியாகப் பயன்படுத்திக் கொண்டேன். முதலில் தமிழில் சட்டை உடுத்திக் கொண்டேன்.

    உ வே சாமிநாதையரின் 'என் சரித்திரம்' புத்தகத்தை நீட்டினேன். பேச்சின் முதல் வரியாக "தமிழின் ஆளுமை சுப்ரமணிய பாரதிக்கு என் முதல் வணக்கம்" என்று துவங்கி "தமிழக ஆளுனருக்கு மரியாதை" எனத் தொடர்ந்தேன். தமிழின் பெருமையும் தமிழக பண்பாடும் காக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவே எல்லா சொற்களையும் பயன்படுத்தினேன். "பையன் ரொம்ப நல்லா படிக்கிறான் போல" என்று சொல்லும் போது ஒருவேளை அப்பையன் சரியாக படிக்காதவனாயிருந்தால் உள்ளுக்குள்ள உறுத்தும்!அப்படித்தான் தமிழ் பண்பாட்டை கவர்னர் நன்றாக பாதுகாக்கிறார் என்ற வாக்கியத்தில் உள்ள உள்குத்தையும் கவனிக்க வேண்டும்! இப்படிபட்ட தொனியில் நான் பேசுவதை கேட்ட நீதியரசர் சந்துரு ஒருமுறை "இது ஒரு வகையான positive politics " என்றார்.

    பேச்சின் இடையே எங்கப்பா குடிச்ச பீடியின் பெயர் 'கவர்னர் பீடி' என்று கலாய்த்தேன் , சபை சலசலப்பை உருவாக்கி குலுங்கியது. அவர் புரியாமல் பார்த்தார் sorry to say this எனக் கூறி அதையே ஆங்கிலத்தில் கூற அவருக்கு புரிந்திருக்கும், புகைந்திருக்கும்! தொடர்ந்து எங்ப்பாவை பீடி குடிக்கிறதை நிறுத்துங்கன்னு சொன்னா"கவர்னரே பீடி குடிக்கும் போது நான் குடிச்சா என்னன்னு" கேப்பாரு என்று கேட்பாரற்று பேச காட்டாறாக சிரிப்பொலி. பீடிக்கு கவர்னர் பீடி என பெயர் வைத்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றேன். காச நோயை கூட குணப்படுத்திவிடலாம் இந்த காசுநோய் உயிர் கொல்லி என்றேன். பணக்காரன் ஏழைக்கு உதவுவதை விட, ஏழைக்கு ஏழைதான் அதிகமாக உதவுகிறான். என்பதாக கூறி "கவர்னருக்கு கொஞ்சம் தமிழ் புரியும் மேலும் தமிழை அவர் கற்று வருகிறார் என்று அவர் P A கூறினார் எனவே அவர் தமிழன் பெருமை உணர தமிழின் செழுமையை வாசிக்க புத்தகம் வழங்கினேன். தமிழ்நாட்டில் தமிழ் பண்பாட்டை காப்பதற்கு நன்றி" எனக் கூறி விடை பெற்றேன். இந்(தி)த கோட்டைக்குள் சென்று ஆனந்தமாய்

    1-தமிழ்

    2-தமிழ்

    3-தமிழ்

    என செம்மொழியில் கர்ஜித்து விட்டே வந்தேன். வாய்ப்பை ஒதுக்கி 'சங்கீ'தம் பாடுவதை விட, கிடைத்த வாய்ப்பை செதுக்குவதே மேல். இதற்கு மேல் முறையீடு செய்ய வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

    பின்குறிப்பு:

    பத்ம விருதோ, கட்டு கட்டாக காந்திகளோ- ஏன் ? ஒரு கட்டு கவர்னர் பீடியோ கூட தட்சனையாகப் பெறவில்லை. மாறாக நான் என் பணத்தையும் நேரத்தையும் செலவிட்டு அம்மாளிகையில் தமிழ் கொடியேற்றி விட்டு வந்தேன்!

    ஒவ்வொருவருக்கும் சொல்லும் பாணியென்று ஒன்று உண்டு. அதனால் மட்டுமே அவரை வசைமொழியில் சங்கீ'தமாய் பாடக்கூடாது" என்று பதிவிட்டுள்ளார்.

    ×