என் மலர்
நீங்கள் தேடியது "டிகே சிவக்குமார்"
- கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக இருந்து வருபவர் டி.கே.சிவக்குமார்.
- சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா.
பெங்களூரு :
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக இருந்து வருபவர் டி.கே.சிவக்குமார். சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா. இருவரும் ஒரே கட்சியில் முக்கிய தலைவர்களாக இருந்தாலும், முதல்-மந்திரி பதவிக்காக 2 தலைவர்களும் மோதிக் கொள்வதாக கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ் கட்சியில் சித்தராமையா தலைமையில் ஒரு பிரிவினரும், டி.கே.சிவக்குமார் தலைமையில் மற்றொரு பிரிவினரும் இருப்பதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக காங்கிரஸ் கட்சி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால் யார் முதல்-மந்திரி ஆவார்கள்? என்பதில் தான் 2 தலைவர்களும் மோதிக் கொள்கிறார்கள். இதனால் காங்கிரஸ் தலைவர்கள் இடையே ஒற்றுமை இல்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது.
சமீபத்தில் கோலாரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கூட முதலில் காங்கிரஸ் கட்சி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற தலைவர்கள் ஒற்றுமையாக இருந்து பணியாற்ற வேண்டும், முதல்-மந்திரி யார்? என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், பெங்களூருவில் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற சித்தராமையாவும், டி.கே.சிவக்குமார் தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தினார்கள். டி.கே.சிவக்குமார் தோள் மீது சித்தராமையா கைபோட்டு நிற்பது, சித்தராமையாவின் சட்டையில் டி.கே.சிவக்குமார் காங்கிரஸ் சின்னம் இருந்த பேட்ஜை மாட்டியது போன்ற புகைப்படங்கள் வெளியானது. சட்டசபை தேர்தலையொட்டி தாங்கள் 2 பேரும் ஒற்றுமையாக இருப்பது போல் இந்த புகைப்படங்களை அவர்கள் வெளியிட்டு இருப்பதாக பா.ஜனதா குற்றம்சாட்டியுள்ளது.
- எலகங்கா தொகுதியில் இருந்து இன்று முதல் பிரசாரத்தை தொடங்க உள்ளேன்.
- நடிகர் சுதீப் பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வார்.
பெங்களூரு :
பெங்களூருவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
பா.ஜனதாவின் அணை உடைந்து, தண்ணீர் காலியாகி இருப்பதாக டி.கே.சிவக்குமார் கூறி இருக்கிறார். முதலில் காங்கிரஸ் குளத்தில் தண்ணீர் இல்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் தண்ணீர் எப்படி பாய்ந்து ஓடும். முதலில் காங்கிரசில் என்ன நடக்கிறது என்பதை டி.கே.சிவக்குமார் தெரிந்து கொள்ள வேண்டும். பா.ஜனதா கட்சி பற்றி அவர் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.
எங்கள் கட்சியின் மேலிடம் மிகவும் பலம் வாய்ந்ததாக உள்ளது. கட்சிக்குள் எந்த பிரச்சினை வந்தாலும், அதனை சரிசெய்யும் சாமர்த்தியம் இருக்கிறது. எடியூரப்பா மற்றும் மத்திய மந்திரி ஷோபாவை கட்சியில் இருந்து ஒழிக்க சதி நடப்பதாக டி.கே.சிவக்குமார் கூறி இருப்பது வேடிக்கையாக உள்ளது. சித்தராமையாவை காங்கிரஸ் கட்சியினர் எப்படி முடக்கினார்கள் என்பது தெரியவில்லையா?.
கடந்த சட்டசபை தேர்தலில் சாமுண்டீஸ்வரி தொகுதியில் சித்தராமையா தோல்வி அடைய காங்கிரஸ் கட்சியே காரணம். தற்போது கூட வருணா தொகுதியில் சித்தராமையாவை தோற்கடிக்க டி.கே.சிவக்குமார், அக்கட்சியின் தலைவர்கள் முயற்சிக்கிறார்கள். இது இந்த நாட்டுக்கே தெரிந்த விஷயம். கடந்த 2013-ம் ஆண்டு லிங்காயத் சமூகத்தை அழிப்பதற்காக, தனி மத அங்கீகாரம் கொடுப்பதாக கூறினார்கள். தேர்தல் முடிவுகள் என்ன ஆனது என்பது காங்கிரஸ் தலைவர்களுக்கு நன்கு தெரியும்.
டி.கே.சிவக்குமாரின் பேச்சு காரணமாக இந்த முறை லிங்காயத் சமூகத்தினர் விழிப்புணர்வுடன் இருக்கின்றனர். லிங்காயத் சமூகத்தை பலப்படுத்தும் வேலையை காங்கிரசாரே செய்கின்றனர். அதுபற்றி பா.ஜனதா கவலைப்படவில்லை.
சவதத்தி-எல்லம்மா தொகுதியில் பா.ஜனதா வேட்பாளரின் வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது. யாருடைய வேட்பு மனுவை ஏற்க வேண்டும், யாருடைய வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என்பது தேர்தல் ஆணையம், அதிகாரிகளின் பணியாகும். இந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகள் எதுவும் செய்ய சாத்தியமில்லை.
டி.கே.சிவக்குமார், தனது வேட்பு மனு விவகாரத்தை 2 நாட்கள் கையில் எடுத்து அரசியல் செய்தார். நாளை முதல் (அதாவது இன்று) எலகங்கா தொகுதியில் இருந்து பிரசாரத்தை தொடங்க உள்ளேன். நடிகர் சுதீப் பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வார். சுதீப் எங்கெல்லாம் பிரசாரம் செய்ய உள்ளார் என்ற தகவல்கள் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
- கட்சிக்கு துரோகம் செய்தவருக்கு தோல்வி கொடுக்க வேண்டும்.
- மே 13-ந்தேதியுடன் பா.ஜனதாவுக்கு இறுதிச்சடங்கு நடக்கும்.
மைசூரு :
கர்நாடக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல்கட்சி தலைவர்கள் சவால் விடுவதும், குற்றச்சாட்டுகளை கூறும் சம்பவங்களும் நாள்தோறும் அரங்கேறி வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் உப்பள்ளியில் நடந்த வீரசைவ-லிங்காயத் சமுதாய தலைவர்கள் கூட்டத்தில் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா பேசுகையில், சிலர் பா.ஜனதாவில் அனைத்து பதவிகளையும், அதிகாரத்தையும் பெற்றுக்கொண்டு வேறு கட்சிக்கு சென்றுள்ளனர். பா.ஜனதாவுக்கு துரோகம் செய்துவிட்டு சென்ற ஜெகதீஷ் ஷெட்டரை வெற்றி பெற விடக்கூடாது. அவருக்கு நாம் யார் என்று பாடம் புகட்ட வேண்டும். இனி அவரது பெயரை நான் குறிப்பிட மாட்டேன். துரோகி என கூறுவேன். கட்சிக்கு துரோகம் செய்தவருக்கு தோல்வி கொடுக்க வேண்டும். நான் எனது ரத்தத்தில் எழுதி தருகிறேன், கர்நாடகத்தில் இந்த முறை பா.ஜனதா தனி மெஜாரிட்டியுடன் ஆட்சிக்கு வரும் என்று பேசினார்.
இந்த நிலையில் நேற்று காலை மைசூருவில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் எடியூரப்பாவின் பேச்சுக்கு பதிலடி கொடுத்து கூறியதாவது:-
எடியூரப்பா இந்த முறை பா.ஜனதா ஆட்சியை பிடிக்கும் ரத்ததால் எழுதி தருவதாக கூறியுள்ளார். அந்த கட்சி 40 சதவீத கமிஷன் பெற்றுள்ளது. இதனால் 40 சதவீத கமிஷன் போல் 40 இடங்களில் பா.ஜனதா வெற்றி பெறும். கர்நாடகத்தில் இந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என நான் எனது ரத்தத்தில் எழுதி கொடுக்கிறேன்.
இரட்டை என்ஜின் அரசு இட ஒதுக்கீடு விவகாரத்தில் மோசடி நாடகத்தை அரங்கேற்றியுள்ளது. பா.ஜனதா ஒரு துரோக கட்சி என்பது சுப்ரீம் கோர்ட்டுக்கு தெரியும். தேர்தல் நேரத்தில் இடஒதுக்கீடு விவகாரத்தில் தேன் கூட்டில் கைவைத்து பா.ஜனதாவினர் ஏமாற்றியுள்ளனர்.
அமித்ஷாவும், நீங்களும் இடஒதுக்கீடு விவகாரத்தில் உறுதியாக இருக்கிறீர்களா? அல்லது பொய் சொல்லி ஏமாற்றுகிறீர்களா?. லிங்காயத்துகளும், ஒக்கலிகர்களும் பிச்சைக்காரர்களா?. அந்த சமுதாயத்தினருக்கு தலா 2 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதாக நீங்கள் நாடகமாடுகிறீர்கள்.
வருகிற மே 13-ந்தேதியுடன் பா.ஜனதாவுக்கு இறுதிச்சடங்கு நடக்கும். அனைவருக்கும் சம பங்கீடு கொடுப்போம். இதையே நாங்கள் செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நாங்கள் யாருக்கும் பணம் கொடுத்து கருத்து கணிப்பு நடத்தவில்லை.
- தேசிய கட்சிகளுக்கு பண பலம் உள்ளது.
பெங்களூரு :
பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குமாரசாமி முன்னிலையில் முன்னாள் மந்திரி ஆல்கோட் ஹனுமந்தப்பா ஜனதா தளம் (எஸ்) கட்சியில் சேர்ந்தார். அதன் பிறகு குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
முன்னாள் மந்திரி ஆல்கோட் ஹனுமந்தப்பா மீண்டும் தனது சொந்த வீட்டிற்கு வந்துள்ளார். காங்கிரசில் அவரது சக்தியை பயன்படுத்தி கொள்ளவில்லை. நேற்று வரை அவரது உடல் காங்கிரசிலும், மனது ஜனதா தளம் (எஸ்) கட்சியிலும் இருந்தது. அவர் என்னுடன் தொடர்பில் தான் இருந்தார். காங்கிரஸ் அவருக்கு உரிய மரியாதை வழங்காததால், அவர் மீண்டும் இங்கு வந்துள்ளார். அவருக்கு மாநில அளவில் கட்சியின் செயல் தலைவர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அவரை போல் இன்னும் ஏராளமான காங்கிரஸ் தலைவர்கள் எங்கள் கட்சிக்கு வரவுள்ளனர். துமகூருவில் 11 தொகுதிகளிலும் எங்கள் கட்சி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. 123 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
தேசிய கட்சிகளுக்கு பண பலம் உள்ளது. எங்களுக்கு பண பலம் இல்லை. எங்கள் கட்சியின் வேட்பாளரை இழுக்க மந்திரி சோமண்ணா முயற்சி செய்துள்ளார். இதை நான் கண்டிக்கிறேன். நாங்கள் யாருக்கும் பணம் கொடுத்து கருத்து கணிப்பு நடத்தவில்லை. 150 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று ரத்தத்தில் எழுதி கொடுப்பதாக டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். பாவம் அவர் ரத்தத்தில் எழுதி கொடுக்க வேண்டாம். அவ்வாறு செய்தால் அவரது உடலில் ரத்தம் குறைந்துவிடும்.
அதே போல் ஜெகதீஷ் ஷெட்டரை தோற்கடிப்பதாக ரத்தத்தில் எழுதி கொடுப்பதாக எடியூரப்பா சொல்கிறார். யாரும் ரத்தத்தில் எழுதி கொடுக்க வேண்டாம். 150 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகள் சொல்கின்றன. எந்த ஆதாரத்தின் அடிப்படையில் அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள் என்பதை கூற வேண்டும்.
நான் பஞ்சரத்னா யாத்திரை மூலம் தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்தேன். மக்கள் நல்ல வரவேற்பு அளித்தனர். அதனால் மக்களின் ஆதரவு எங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.
- பிரசாரத்திற்கு புறப்பட்டுச் சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது.
- கர்நாடகாவில் இன்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.
பெங்களூரு:
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் இன்று பிற்பகல் தேர்தல் பிரசாரத்திற்காக முலாபகிலு பகுதிக்கு ஹெலிகாப்டரில் சென்றார். அப்போது ஹெலிகாப்டர் மீது திடீரென கழுகு மோதியது. இதனால் ஹெலிகாப்டரின் கண்ணாடி உடைந்தது. இதையடுத்து ஹெலிகாப்டர் அவசரமாக பெங்களூரு எச்ஏஎல் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இதனால் விபத்து தவிர்க்கப்பட்டது.
ஹெலிகாப்டரில் டி.கே.சிவக்குமாருடன் பயணித்த கேமராமேன் காயமடைந்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது.
முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகியோருடன் டி.கே.சிவக்குமாரும் கலந்துகொண்டார். பின்னர் பிரசாரத்திற்கு புறப்பட்டுச் சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது.
- இது கர்நாடகத்தின் சுயமரியாதையை காக்க நடைபெறும் தேர்தல்.
- பா.ஜனதாவினர் மக்களை மிரட்டி ஓட்டு வாங்க முயற்சி செய்கிறார்கள்.
பெங்களூரு :
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பா.ஜனதாவினர் மக்களை மிரட்டி ஓட்டு வாங்க முயற்சி செய்கிறார்கள். பா.ஜனதாவுக்கு வாக்களிக்காவிட்டால், திட்டங்களை ஒதுக்க மாட்டோம் என்று சொல்கிறார்கள். இந்த நாடு கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ளது. மத்திய அரசுக்கு கிடைக்கும் வரி வருவாயில் 41 சதவீதம் கர்நாடகத்தில் இருந்து செல்கிறது. இதில் நமக்கு மீண்டும் கிடைப்பது சொற்ப அளவில் தான்.
பா.ஜனதாவினரின் மிரட்டலுக்கு கன்னடர்கள் பயப்பட மாட்டார்கள். இது கர்நாடகத்தின் சுயமரியாதையை காக்க நடைபெறும் தேர்தல். மேகதாது திட்டத்திற்கு இந்த பா.ஜனதா அரசு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கியது. இந்த திட்டத்திற்கு பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அனைத்து அனுமதிகளையும் பெற்று கொடுத்திருக்க வேண்டும். அந்த வேலையை அவர் செய்யவில்லை.
மகதாயி திட்ட பணிகளை இன்னும் தொடங்காமல் இருப்பது ஏன்?. மத்திய அரசுக்கு கர்நாடகம் தான் வருவாய் கொடுத்து உதவுகிறது. காங்கிரஸ் கட்சி 141 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பது எங்களின் இலக்கு. அந்த இலக்கை நாங்கள் உறுதியாக எட்டுவோம். வருகிற 13-ந் தேதி நீங்கள் தேர்தல் முடிவை பாருங்கள். வருகிற 15-ந் தேதி காங்கிரஸ் ஆட்சி அமைப்போம். பா.ஜனதா குறித்து அவதூறாக வெளியான விளம்பரத்திற்கு விளக்கம் அளிக்கும்படி தேர்தல் ஆணையம் நோட்டிசு அனுப்பியது.
அந்த நோட்டீசுக்கு பதில் அளித்துள்ளேன். இங்குள்ள பா.ஜனதாவினர் சரியான முறையில் ஆட்சி நடத்த முடியாமல், பாவம் பிரதமர் மோடியை வீதி வீதியாக அலைய விட்டனர்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
- நமது எதிர்காலத்தை நாமே எழுதும் நாள்.
- இளம் வாக்காளர்கள் அறிவாளிகள்.
பெங்களூரு :
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நேற்று ராம்நகர் மாவட்டம் கனகபுராவில் குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
எல்லா வாக்குச்சாவடிகள் அருகேயும் சமையல் கியாஸ் சிலிண்டரை வைத்து பூஜை செய்யுமாறு தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை காப்பாற்ற நாங்கள் 5 முக்கியமான வாக்குறுதிகளை அளித்துள்ளோம். காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் இந்த 5 முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற உள்ளோம்.
இன்று (நேற்று) கர்நாடகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் நாள். நமது எதிர்காலத்தை நாமே எழுதும் நாள். காங்கிரசின் வாக்குறுதிகளுக்கு ஒப்புதல் அளிக்கும் நாள். புதிய வாக்காளர்களுக்கு வாக்களிக்க ஆர்வம் இருக்கும். மாநிலத்தில் இளம் வாக்காளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். கர்நாடகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.
கர்நாடகத்தில் பா.ஜனதாவின் தவறான ஆட்சி நிர்வாகத்திற்கு மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள். இளம் வாக்காளர்கள் அறிவாளிகள். அவர்கள் இந்த பா.ஜனதா ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவார்கள். இளைஞர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை ராஜீவ்காந்தி தான் வழங்கினார். அதனால் இளம் வாக்காளர்கள் ஜனநாயகத்தை காக்க வேண்டும். கனகபுரா தொகுதியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது வருகிற 13-ந் தேதி தெரியவரும்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
- சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே முதல்-மந்திரி பதவிக்கு பனிப்போர் நீடித்து வருகிறது.
- முன்னாள் துணை முதல்-மந்திரி பரமேஸ்வருக்கு முதல்-மந்திரி பதவி வழங்க கோரிக்கை எழுந்துள்ளது
பெங்களூரு:
கர்நாடக சட்டசபை தேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றும் நிலை உள்ளது. இதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் முதல்-மந்திரி பதவிக்கு போட்டா போட்டி எழுந்துள்ளது. ஏற்கனவே தேர்தல் பிரசாரத்தின்போது எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான சித்தராமையா, தான் முதல்-மந்திரி ஆவேன் என கூறி வாக்கு சேகரித்தார்.
அதுபோல் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரான டி.கே.சிவக்குமாரும், மண்டியா, மைசூரு மாவட்டங்களில் நடந்த தேர்தல் பிரசார கூட்டங்களில், ஒக்கலிக சமுதாய மக்கள் தேவேகவுடாவை முதல்-மந்திரியாகவும், பிரதமராகவும் ஆக்கினீர்கள். அதுபோல் அவரது மகன் குமாரசாமியையும் முதல்-மந்திரி ஆக்கினீர்கள்.
எனவே இந்த முறை என்னை முதல்-மந்திரி ஆக்க வேண்டும் என்று பிரசாரம் செய்தார். இவ்வாறு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே முதல்-மந்திரி பதவிக்கு பனிப்போர் நீடித்து வருகிறது.
ஆனால் காங்கிரஸ் மேலிடம், எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருக்கும் நபரை முதல்-மந்திரி ஆக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே தலித் சமுதாயத்தை சேர்ந்தவரை காங்கிரஸ் கட்சி முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்ற கோஷமும் எழுந்துள்ளது.
அதன்படி முன்னாள் துணை முதல்-மந்திரி பரமேஸ்வருக்கு முதல்-மந்திரி பதவி வழங்க கோரிக்கை எழுந்துள்ளது. கலபுரகி மாவட்டம் சித்தாபுரா தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும், மல்லிகார்ஜுன கார்கேவின் மகனுமான பிரியங்க் கார்கேவுக்கு முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்றும், அடுத்த முதல்-மந்திரி அவர் தான் எனக் கூறி அவரது ஆதரவாளர்கள் சித்தாபுரா பகுதிகளில் விளம்பர பேனர்களை வைத்து, காங்கிரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதே வேளையில் ஏற்கனவே காங்கிரஸ் செயல் தலைவரும், லிங்காயத் சமுதாய தலைவருமான எம்.பி.பட்டீல் முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் தானும் இருப்பதாக கூறியுள்ளார்.
அதுபோல் 91 வயதான காங்கிரஸ் மூத்த தலைவருமான சாமனூர் சிவசங்கரப்பாவும் லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த ஒருவருக்கு முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில், ஆட்சி அதிகாரத்தில் யார் இருப்பது என்பது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் கடந்த 2 நாட்களாக ஆலோசனை நடத்தி இருந்தார்கள். பெங்களூருவில் உள்ள, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் வீட்டில் இந்த ஆலோசனை நடந்தது. அதைத்தொடர்ந்து, மல்லிகார்ஜுன கார்கே வீட்டுக்கு டி.கே.சிவக்குமார், டி.கே.சுரேஷ் எம்.பி. சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது தனிப்பெரும்பான்மை காங்கிரசுக்கு கிடைத்தால் யாருக்கு முதல்-மந்திரி பதவி கொடுப்பது என்பது குறித்து மல்லிகார்ஜுன கார்கேவுடன், டி.கே.சிவக்குமார் ஆலோசித்ததாக தெரிகிறது. காங்கிரஸ் கட்சியை வளர்ப்பதற்காக தான் அனுபவித்த சிரமங்கள் குறித்து மல்லிகார்ஜுன கார்கேவிடம் டி.கே.சிவக்குமார் கூறியதாகவும் தெரிகிறது. பின்பு சித்தராமையா வீட்டுக்கு, கர்நாடக மாநில மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா சென்று ஆலோசனை நடத்தினார்கள்.
- சில கருத்து கணிப்புகள் தொங்கு சட்டசபை அமையும் என்று கூறி இருந்தது.
- காங்கிரஸ் கட்சி 136 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறது.
பெங்களூரு :
கர்நாடக சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக காங்கிரஸ் கட்சி 136 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறது. தேர்தலுக்கு பின்பு வெளியான 11 கருத்து கணிப்புகளில் 9 கணிப்புகள் காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்றும், 120 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டு இருந்தது.
சில கருத்து கணிப்புகள் தொங்கு சட்டசபை அமையும் என்று கூறி இருந்தது. ஆனால் அனைத்து கருத்து கணிப்புகளையும் மீறி 136 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கூட 120-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று அறிவித்திருந்தார்.
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவரான டி.கே.சிவக்குமார் மட்டும் யார் என்ன சொன்னாலும், எந்த கருத்து கணிப்புகள் எப்படி கூறி இருந்தாலும், நாங்கள் 141 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று தேர்தல் முடிந்த பின்பும், நேற்று முன்தினம் வரையும், அதையே கூறி வந்திருந்தார்.
அவரது கருத்து கணிப்பே கடைசியில் இறுதியாகி உள்ளது. அவர் கூறியபடி 141 தொகுதிகளுக்கு பதில், 5 தொகுதிகள் மட்டும் குறைவாக 136 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கிறது. இதனால் தான் சொன்னபடி காங்கிரஸ் வெற்றி பெற்றிருப்பதாக டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
- ஆளும் கட்சியாக இருந்த பா.ஜனதாவுக்கு எதிரான மனநிலையும், காங்கிரசின் கவர்ச்சிகரமான அறிவிப்புகளும் காங்கிரசை கைதூக்கி விட்டுள்ளது.
- பா.ஜனதாவின் வாக்கு 36 சதவீதத்தில் இருந்து அதிகரிக்கவில்லை. ஆனால் காங்கிரசுக்கு 5 சதவீதம் அதிகரித்துள்ளது.
கர்நாடகத்தில் காங்கிரசின் வெற்றி பெரு விரலை உயர்த்தி கர்வப்பட வைத்துள்ளது. அதேநேரத்தில் பா.ஜனதாவுக்கு பாடத்தையும் கற்றுக்கொடுத்துள்ளது.
137 ஆண்டுகள் பழமையான பாரம்பரிய கட்சி என்று மார்தட்டினாலும் 2014 மற்றும் 2019 பாராளுமன்ற தேர்தல்களில் மிகப்பெரிய தோல்வியை காங்கிரஸ் கட்சி சந்தித்தது.
மோடி என்ற மிகப்பெரிய ஜாம்பவானின் முன்பு கையின் ஜம்பம் பலிக்காமல் போனது என்பதே உண்மை.
இனி காங்கிரஸ் கரை சேருமா? என்ற எண்ணம் சொந்த கட்சியினரிடமே ஏற்பட்டிருந்த நிலையில் 2018-ல் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் ஆட்சியை பிடித்தது.
இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 'கை' ஓங்கியிருக்கும் நிலையில் காங்கிரசுக்கு புது நம்பிக்கை கொடுத்துள்ளது. காங்கிரஸ், உள்ளூர் அரசியலை கையில் எடுத்து லாவகமாக அரசியல் செய்தது.
1980-ல் பா.ஜனதா தொடங்கப்பட்டதில் இருந்து இப்போதுதான் இவ்வளவு பெரிய ஊழல் புகாரில் சிக்கியது. காங்கிரஸ் அதை கையில் எடுத்தது. 40 சதவீத கமிஷன் அரசு என்ற கோஷம் சாதாரண மக்கள் வரை சென்றடைந்தது.
அதை உடைக்க மோடி என்ற பிம்பத்தை மட்டுமே பா.ஜனதா நம்பியது. ஆனால் சட்டமன்ற தேர்தலில் மக்கள் அதை நிராகரித்துவிட்டார்கள். பா.ஜனதாவில் உள்ளூர் தலைவர்கள் புறக்கணிக்கப்பட்டார்கள்.
ஆனால் காங்கிரஸ் உள்ளூர் தலைவர்களையே நம்பியது. முன்னாள் முதல்வர் சித்தராமையாவும், மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரும் தங்களுக்குள் இருக்கும் கவுரவ பிரச்சினைகளை ஒதுக்கி வைத்துவிட்டு தீவிரமாக பணியாற்றியதும் காங்கிரஸ் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
சமூக ரீதியான பிரச்சினைகள் காங்கிரசுக்கு கை கொடுத்திருக்கிறது. மாண்டியா, ஹசன் பகுதியில் உள்ள ஒக்கலிகர் சமூகம் காங்கிரசுக்கு பெருமளவில் ஆதரவு அளித்துள்ளது. லிங்காயத்து சமூக ஆதரவு எதிர்பார்த்த அளவு பா.ஜனதாவுக்கு கிடைக்காமல் போனது.
லிங்காயத்து சமூகத்தின் முகமாக பார்க்கப்படும் எடியூரப்பா தேர்தல் அரசியலில் இருந்து விலகிவிட்டார். அதேபோல் பா.ஜனதாவில் வாய்ப்பு மறுக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், சவடி ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்ததும் லிங்காயத்து சமூக வாக்குகள் காங்கிரசுக்கு கிடைக்க உதவி புரிந்தது.
வழக்கமாக மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு வாக்களிக்கும் இஸ்லாமியர்கள் இந்த முறை காங்கிரசுக்கு ஆதரவாக திரும்பி இருக்கிறார்கள்.
காங்கிரசின் கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகளான பஸ்களில் பெண்கள் இலவச பயணம், மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும், 200 யூனிட் இலவச மின்சாரம், 10 கிலோ இலவச அரிசி, வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1500 என்ற அறிவிப்புகள் மக்களை வெகுவாக கவர்ந்ததும் ஒரு காரணம்.
கர்நாடக தேர்தல் வெற்றி என்பது அந்த கட்சிக்கு சில மலரும் நினைவுகளையும் கண்முன் கொண்டு வந்துள்ளது. 1969-ல் பெங்களூருவில் நடந்த காங்கிரஸ் காரியகமிட்டி கூட்டத்தில் சிண்டிகேட் மூலம் இந்திரா காந்தி வெளியேற்றப்பட்டார்
அப்போது காங்கிரசின் சின்னம் பசுவும் கன்றும். கட்சி பிளவுபட்டதை அடுத்து இந்திரா கை சின்னத்தை சிக்மகளூருவில் அறிமுகப்படுத்தினார். அதாவது 1978-ல் அந்த தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் இந்திரா போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதன்பிறகு 1980 பாராளுமன்ற தேர்தலில் கை சின்னத்தில் நாடு முழுவதும் காங்கிரஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றது. மீண்டும் ஆட்சியை பிடித்தது. அதேபோல் 1999 பாராளுமன்ற தேர்தலில் பெல்லாரி தொகுதியில் சோனியா காந்தி போட்டியிட்டு தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா தலைவர் மறைந்த சுஷ்மா சுவராஜை தோற்கடித்தார்.
கடந்த கால இந்த வரலாற்று நிகழ்வுகளை சிக்மங்களூரில் நடந்த பிரசாரத்தின் போது பிரியங்கா காந்தி குறிப்பிட்டு பேசினார். பாட்டிக்கு மறுவாழ்வு கொடுத்த மாநிலம் கர்நாடகா.
அதே போல் மீண்டும் காங்கிரசுக்கு கை கொடுங்கள் என்று உருக்கமாக பேசினார். இதுவும் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்த தவறவில்லை. சிக்மங்களூரில் அனைத்து தொகுதிகளையும் காங்கிரஸ் கைப்பற்றி இருக்கிறது.
ஆளும் கட்சியாக இருந்த பா.ஜனதாவுக்கு எதிரான மனநிலையும், காங்கிரசின் கவர்ச்சிகரமான அறிவிப்புகளும் காங்கிரசை கைதூக்கி விட்டுள்ளது. அதேநேரம் பா.ஜனதாவின் வாக்கு 36 சதவீதத்தில் இருந்து அதிகரிக்கவில்லை. ஆனால் காங்கிரசுக்கு 5 சதவீதம் அதிகரித்துள்ளது.
1985 முதல் 38 ஆண்டுகளாக ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் மாறி மாறி ஆட்சிக்கு வருவதுதான் வரலாறு. கடைசியாக 1999 தேர்தலில் 132 தொகுதிகளை பெற்று காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. அப்போது எஸ்.எம்.கிருஷ்ணா முதல்வராக இருந்தார். அதன்பிறகு 24 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போதுதான் தனி மெஜாரிட்டியுடன் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
- கர்நாடக சட்டசபை தேர்தலில் 135 இடங்களை கைப்பற்றிய காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது.
- டி.கே.சிவக்குமார் தனது 61-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
பெங்களூரு :
கர்நாடக சட்டசபை தேர்தலில் 135 இடங்களை கைப்பற்றிய காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது. தற்போது முதல்-மந்திரி பதவி யாருக்கு என்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே.சிவக்குமார், மூத்த தலைவர் சித்தராமையா ஆகியோர் இடையே கடும் போட்டி எழுந்துள்ளது. இந்த நிலையில் நேற்று டி.கே.சிவக்குமார் தனது 61-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது வீட்டுக்கு பிரபல ஜோதிடரான விஜயராஜ் குருஜி அதிகாலை 4.15 மணிக்கு வந்தார். அவரிடம் டி.கே.சிவக்குமார் ஆசிபெற்றார்.
அப்போது எதிர்காலத்தை துல்லியமாக கணிப்பதில் நிபுணரான விஜயராஜ் குருஜி, புதன் மற்றும் ஆதித்ய பஞ்சமயோகம் உங்களுக்கு இருக்கிறது. உங்கள் ஜாதகத்தில் வியாழக்கிழமை நல்ல நாள். அன்றே நல்ல வேலையை தொடங்குங்கள். (அதாவது முதல்-மந்திரியாக பொறுப்பு ஏற்றுக்கொள்ளுங்கள்) என்று கூறியுள்ளார். பின்னர் அங்கிருந்து விஜயராஜ் குருஜி புறப்பட்டு சென்றார். டி.கே.சிவக்குமாருக்கு கட்சி மேலிடம் முதல்-மந்திரி பதவி வழங்கினால், அவர் வியாழக்கிழமை முதல்-மந்திரியாக பதவி ஏற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
- நல்ல நாளில் காங்கிரஸ் அரசு அமைக்கப்படும்.
- காங்கிரஸ் மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும்.
பெங்களூரு :
முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் உள்ள கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
எனக்கு முதல்-மந்திரி பதவி கிடைக்குமா? என்று எனக்கு தெரியாது. எனக்கு கொடுத்த பணியை நான் செய்து முடித்துள்ளேன். முதல்-மந்திரி யார் என்பதை முடிவு செய்யும் அதிகாரத்தை கட்சி மேலிடத்திற்கு வழங்கி ஒரு வரியில் தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பி வைத்துள்ளோம். நல்ல நாளில் காங்கிரஸ் அரசு அமைக்கப்படும். எனது தலைமையில் 135 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
முதல்-மந்திரி யார் என்பதை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முடிவு செய்வார். எனக்கு எத்தனை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது என்பது முக்கியம் அல்ல.
கர்நாடகத்தில் நடைபெற்ற இரட்டை என்ஜின் அரசு, ஊழல் அரசு, தவறான ஆட்சி நிர்வாகத்திற்கு எதிராக காங்கிரசுக்கு வெற்றி கிடைத்துள்ளது. தேர்தலில் காங்கிரஸ் மேற்கொண்ட பிரசாரம், ஒற்றுமையாக பணியாற்றியதை நாடு முழுவதும் உள்ள கட்சிகளின் தலைவர்கள் பாராட்டுகிறார்கள். ஆனால் நேரம் போதவில்லை. உள்ளூர் தலைவர்களின் ஒத்துழைப்பு இன்னும் அதிகமாக கிடைத்திருந்தால், இன்னும் அதிக தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்று இருக்கும்.
ஆனால் தற்போது காங்கிரசுக்கு கிடைத்துள்ள வெற்றி எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு இன்று (நேற்று) பிறந்த நாள் என்பதால் ஏராளமானோர் வாழ்த்து கூற வருகிறார்கள். தனிப்பட்ட முறையில் என்னிடம் எண்ணிக்கை (எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு) இல்லை. 135 எம்.எல்.ஏ.க்களும் ஒரே குரலில் முதல்-மந்திரி யார் என்பது குறித்து முடிவு எடுக்கும் அதிகாரத்தை கட்சி மேலிடத்திற்கு வழங்கியுள்ளனர். எனது எண்ணிக்கை என்பது 135 எம்.எல்.ஏ.க்களையும் உள்ளடக்கியது.
காங்கிரஸ் மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும். முதல்-மந்திரி, மந்திரிகள் யார் என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும். நான் தனி ஆள். இந்த தனி ஆள் தான் தைரியத்துடன் பெரும்பான்மையை உருவாக்குகிறார். அதை நான் நிரூபித்துள்ளேன். கடந்த 5 ஆண்டுகளில் என்ன நடந்தது என்பதை பகிரங்கப்படுத்த விரும்பவில்லை.
எதிர்காலத்தில் அதை பகிரங்கப்படுத்துவேன். தோற்கும்போது தைரியமான இதயத்துடன் இருக்க வேண்டும் என்றும், வெற்றி பரந்த இதயத்துடன் இருக்க வேண்டும் என்றும் மகாத்மா காந்தி கூறியுள்ளார். கூட்டணி ஆட்சியில் 15 எம்.எல்.ஏ.க்கள் கட்சியை விட்டு விலகி சென்றபோது, நான் தைரியத்தை இழக்கவில்லை. தைரியத்துடன் கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்றேன்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.