search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிகே சிவக்குமார்"

    • குடிநீருக்கு சேமித்து வைக்காமல் தண்ணீரை திறந்த விட முடியாது
    • தற்போது உள்ள தண்ணீர் குடிநீர் பயன்பாட்டிற்கே போதுமானதாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது

    காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதில் கர்நாடகா- தமிழ்நாடு அரசுகள் இடையில் பிரச்சனை இருந்து வருகிறது. காவிரி மேலாண்மை ஆணையம் இன்று வரை வினாடிக்கு ஐந்தாயிரம் கனஅடி நீர் திறந்துவிட உத்தரவிட்டது. அதையும் முழுமையாக கர்நாடகா செயல்படுத்தவில்லை. கடந்த சனிக்கிழமையில் இருந்து திறந்து விடும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

    இன்று காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழு டெல்லியில் கூடுகிறது. தமிழக அரசு இதில் கர்நாடகா மீது புகார் அளிக்க இருக்கிறது. இதற்கிடையே தண்ணீர் திறந்து விட முடியாது எனக் கூற கர்நாடகா முடிவு செய்துள்ளது.

    இந்த நிலையில் இனி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் டி.கே. சிவக்குமார் திட்டவட்டாக தெரிவித்துள்ளார். தற்போது உள்ள தண்ணீர் குடிநீர் பயன்பாட்டிற்கே போதுமானதாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. குடிநீருக்கு சேமித்து வைக்காமல் தண்ணீரை திறந்த விட முடியாது'' எனத் தெரிவித்துள்ளார்.

    • பிரதமர் மோடியை வரவேற்க முதல்-மந்திரி சித்தராமையாவோ அல்லது துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரோ வரவில்லை.
    • நெறிமுறைக்கு மாறாக விமான நிலையத்தில் அவரை வரவேற்பதற்கு தடுக்கிறார் என்று கூறப்படுகிறது.

    புதுடெல்லி:

    வெளிநாட்டில் இருந்து இன்று காலை நாடு திரும்பிய பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக பெங்களூர் சென்று சந்திரயான்-3 வெற்றிக்காக இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டினார். பெங்களூர் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்க முதல்-மந்திரி சித்தராமையாவோ அல்லது துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரோ வரவில்லை. பிரதமரை விமான நிலையத்தில் வரவேற்பதற்கு பிரதமர் மோடி தடை விதித்ததாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

    இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும, தகவல் தொடர்பு பொறுப்பாளருமான ஜெய்ராம் ரமேஷ் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    பிரதமருக்கு முன்பாக இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டியதற்காக காங்கிரஸ் முதல்-மந்திரி மற்றும் துணை முதல்-மந்திரி மீது அவர் மிகவும் எரிச்சல் அடைந்தார். இதனால் நெறிமுறைக்கு மாறாக விமான நிலையத்தில் அவரை வரவேற்பதற்கு தடுக்கிறார் என்று கூறப்படுகிறது. இது மலிவான அரசியல் அன்றி வேறு ஒன்றுமில்லை. மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில் சந்திரயான்-1 வெற்றிக்காக 22 அக்டோபர் 2008 அன்று அகமதாபாத்தில் உள்ள விண்வெளி பயன்பாடு மையத்துக்காக அப்போதைய முதல்-மந்திரி மோடி சென்றதை பிரதமர் மோடி மறந்துவிட்டாரா?

    இவ்வாறு அவர்கூறியுள்ளார்.

    • காவிரியில் தண்ணீர் திறக்க உத்தரவிடக் கோரி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளது.
    • தமிழகத்திற்கு 10 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட முடிவு செய்துள்ளதாக கர்நாடக துணை முதல்வர் தெரிவித்தார்.

    பெங்களூரு:

    டெல்லியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தார், 'சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும். தினமும் வினாடிக்கு 10,000 கன அடி நீர் திறந்துவிட வேண்டும்' என உத்தரவிட்டார்.

    இதற்கு கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்ததால் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் இருந்து தமிழ்நாடு அரசு வெளியேறியது.

    இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா கூறுகையில், 'தமிழகத்துக்கு நீர் திறப்பது தொடர்பாக காவிரி நீர்ப்பாசன கழக நிபுணர்கள், சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்த பிறகு முடிவெடுக்கப்படும்' என்று தெரிவித்தார்.

    இதையடுத்து காவிரியில் தண்ணீர் திறக்க உத்தரவிடக் கோரி தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், "காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு தினமும் தண்ணீர் திறந்துவிடும்படியும், வினாடிக்கு 24,000 கன அடி நீர் திறக்கவும், செப்டம்பர் மாதம் தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டிய 36.76 டிஎம்சி தண்ணீரையும் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கர்நாடக துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமார் இன்று காலை காங்கிரஸ் அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றினார். அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்திற்கு 10 டி.எம்.சி. தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டது. கடந்த ஆண்டு மழைப்பொழிவு அதிகமாக இருந்ததாகவும், சுமார் 400 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலந்தது. மேகதாது அணை இருந்திருந்தால் தமிழகம் எதிர்பார்க்கும் தண்ணீரை திறந்து விட்டிருக்க முடியும். எனவே மேகதாது அணை திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

    • அரிசி கொடுக்கும் வரை பணம் கொடுக்கப்படும்.
    • பேச்சு வார்த்தை மூலமாக 2 மாநிலங்களுக்கும் இருக்கும் பிரச்சினை தீர்க்கப்படும்.

    பெங்களூரு :

    கர்நாடகத்தில் பருவமழை சரியாக பெய்யாததாலும், கே.ஆர்.எஸ். அணையில் தண்ணீர் இருப்பு இல்லாததாலும் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை என்று நேற்று முன்தினம் டெல்லியில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்திருந்தார்.

    காவிரி நதிநீரை பங்கீட்டு கொள்ளும் விவகாரம் குறித்து பெங்களூருவில் நேற்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டுடன் சண்டை போட நமக்கு விருப்பம் இல்லை. காவிரி நதிநீர் பங்கீட்டு கொள்ளும் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது. ஆனால் கர்நாடகத்தின் நிலைமை என்ன என்பது தெரியவில்லை. இங்குள்ள அணைகளில் தண்ணீர் இல்லை. குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்காரர்கள் நமது சகோதரர்கள். அவர்களுடன் நாம் யுத்தம் (போர்) செய்ய முடியாது.

    ஓசூரில் இருந்து தினமும் லட்சக்கணக்கானோர் பெங்களூருவுக்கு வேலைக்காக வருகிறார்கள். கர்நாடகத்தை சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டுக்கு செல்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் காவிரி நதிநீர் பங்கீட்டு கொள்ளும் விவகாரம் குறித்து தமிழ்நாட்டுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும். பேச்சு வார்த்தை மூலமாக 2 மாநிலங்களுக்கும் இருக்கும் பிரச்சினை தீர்க்கப்படும்.

    சட்டசபை தேர்தலின் போது நாங்கள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியின்படி அன்னபாக்ய திட்டத்தை அமல்படுத்தி உள்ளோம். 5 கிலோ அரிசி கொடுப்பது தொடங்கப்பட்டுள்ளது. கூடுதலாக 5 கிலோ அரிசிக்கு பணம் வழங்குவதாக அறிவித்துள்ளோம். அதன்படி, பி.பி.எல். குடும்ப அட்டைதாரர்களின் வங்கி கணக்குக்கு பணத்தை டெபாசிட் செய்வோம். அரிசி கொடுக்கும் வரை பணம் கொடுக்கப்படும். ஏழைகளுக்கு இலவச அரிசி வழங்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்து அரசியல் செய்து வருகிறது. பா.ஜனதாவினர் தான்முதலில் அரிசி கொடுக்க முடியாவிட்டால், அதற்கு உரிய பணத்தை கொடுக்கும்படி கூறினார்கள். அதன்படி, அரிசிக்கு பதில் பணம் கொடுக்க அரசு முடிவு செய்திருக்கிறது. தற்போது 10 கிலோ அரிசி கொடுக்க வேண்டும் என்று பா.ஜனதாவினர் கூறுகின்றனர்.

    இதன்மூலம் பா.ஜனதாவினரின் இரட்டை வேடம் வெளியே வந்துள்ளது. சட்டசபை கூடுவதால் அரசுக்கு எதிராக சட்டசபைக்கு உள்ளேயும், வெளியேயும் போராட்டம் நடத்துவதாக பா.ஜனதாவினர் அறிவித்துள்ளனர்.பா.ஜனதாவினர் போராட்டம் நடத்தட்டும், சந்தோஷம். அவர்களை நாங்கள் தடுக்க மாட்டோம். அதே நேரத்தில் பா.ஜனதாவினர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பது பற்றியும் போராட்டம் நடத்தட்டும்.

    கர்நாடகத்திற்கு தேவையான அரிசியை பெற மற்ற மாநிலங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. நமக்கு தேவையான அரிசி நிரந்தரமாக கிடைக்க வேண்டும். ஒரு மாதம் மட்டும் கிடைக்கும் அரிசியை வைத்து, திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த முடியாது. இருப்பினும் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தென்மேற்கு பருவமழை கர்நாடகத்தில் இன்னும் பெய்யவில்லை.
    • மேகதாது திட்டத்தால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு இல்லை.

    பெங்களூரு :

    கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் மத்திய மந்திரிகளை நேரில் சந்திக்கும் நோக்கத்தில் டெல்லி சென்றுள்ளார். அங்கு ஜல்சக்தித்துறை மந்திரி கஜேந்திர ஷெகாவத்தை அவர் நேரில் சந்தித்து, நிலுவையில் உள்ள கர்நாடக நீர்ப்பாசன திட்டங்களுக்கு அனுமதி வழங்குமாறு கோரினார். மேகதாது திட்டத்திற்கும் ஒப்புதல் வழங்க கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே டி.கே.சிவக்குமார் டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தென்மேற்கு பருவமழை கர்நாடகத்தில் இன்னும் பெய்யவில்லை. அதனால் கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) உள்பட பெரும்பாலான அணைகளில் நீர் இருப்பு குறைவாக உள்ளன. பெங்களூரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. காவிரி நிர்வாக ஆணையம் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடும்படி உத்தரவிட்டுள்ளது. ஆனால் போதிய நீர் இருப்பு இல்லாததால் தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறக்க சாத்தியமில்லை. இந்த முறை தண்ணீர் வழங்க வாய்ப்பு இல்லை.

    அனைத்து மாநில நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் மாநாடு கர்நாடகத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாடு வருகிற 8 அல்லது 9-ந் தேதி நடைபெற வாய்ப்புள்ளது. மேகதாது திட்டம் குறித்து சட்டத்துறை நிபுணர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தி எனது கருத்தை தெரிவிக்கிறேன்.

    இந்த திட்டம் எந்த அளவுக்கு காலதாமதம் ஆகிறதோ அந்த அளவுக்கு திட்ட மதிப்பீடு அதிகரிக்கும். இதனால் மாநில அரசுக்கு நஷ்டம் ஏற்படும். ரூ.9 ஆயிரம் கோடியாக இருந்த இந்த திட்டத்தின் மதிப்பு தற்போது ரூ.13 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. இதற்கிடையே தமிழ்நாட்டினர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

    நன்றாக மழை பெய்யும்போது காவிரி ஆற்றில் 700 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) கடலுக்கு சென்று கலந்துள்ளது. அதில் நாம் பயன்படுத்த திட்டமிட்டு இருப்பது 40 டி.எம்.சி. மட்டுமே. மேகதாது திட்டத்தால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு இல்லை. இதுகுறித்து அந்த மாநிலத்திற்கு விவரிக்க முயற்சி செய்கிறோம். அரசியலை தாண்டி இந்த விஷயத்தில் முடிவு எடுக்க வேண்டியுள்ளது.

    இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

    • பெங்களூருவுக்கு குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.
    • பெங்களூருவில் துணை நகரங்கள் அமைக்கப்பட வேண்டும்.

    பெங்களூரு :

    கர்நாடக அரசின் கன்னட வளா்ச்சித்துறை சாா்பில் கெம்பேகவுடா ஜெயந்தி விழா பெங்களூரு விதான சவுதாவில் உள்ள விருந்தினர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கலந்து கொண்டு பேசியதாவது:-

    அனைத்து தரப்பு மக்களும் சமமாக வாழும் வகையில் ஆட்சி நிர்வாகத்தை நடத்தியவர் கெம்பேகவுடா. பெங்களூருவின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்து கொடுத்தார். கெம்பேகவுடா ஜெயந்தியை பெங்களூருவில் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் கொண்டாட வேண்டும். மாநில அளவிலான கெம்பேகவுடா ஜெயந்தி விழா ஹாசனில் நடத்தப்பட்டுள்ளது.

    நாளை (இன்று) முதல் வருகிற 5-ந் தேதி வரை பெங்களூருவில் அனைத்து வார்டுகளிலும் கெம்பேகவுடா ஜெயந்தி விழாவை நடத்தி சமூக சேவகர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவிக்க வேண்டும். கெம்பேகவுடா ஒக்கலிகர் சமூகத்திற்கு மட்டுமே சேர்ந்தவர் என்று சொல்வதை நான் ஏற்கவில்லை. அவர் ஒக்கலிகர் சமூகத்தில் பிறந்திருந்தாலும், அவர் கர்நாடகத்தின் சொத்து, நமது தேசத்தின் சொத்து. இதை நாம் மறக்கக்கூடாது.

    பெங்களூருவின் வளர்ச்சிக்கு நான் நேர்மையான முறையில் முயற்சி செய்து வருகிறேன். இதற்கு ஒவ்வொருவரின் ஒத்துழைப்பு, ஆலோசனை தேவை. எங்களுக்கு எதிராக எவ்வளவு விமா்சனங்களை கூறினாலும், நாங்கள் அதுபற்றி கவலைப்பட மாட்டோம். மக்களுக்கு சிறப்பான முறையில் பணியாற்ற வேண்டும் என்பது எங்களின் நோக்கம்.

    பெங்களூருவில் துணை நகரங்கள் அமைக்கப்பட வேண்டும். போக்குவரத்து நெரிசலுக்கு தனியாக ஒரு திட்டத்தை வகுக்க வேண்டும். மனிதர்களின் குணங்களில் நம்பிக்கை மிகவும் சிறந்த குணம். மக்கள் அந்த நம்பிக்கையை எங்கள் மீது வைத்துள்ளனர். பெங்களூருவுக்கு குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். இதற்காக மேகதாது திட்டத்தை அமல்படுத்த நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். அத்துடன் குப்பை கழிவுகள் பிரச்சினைக்கும் தீர்வு காண வேண்டும்.

    இவ்வாறு டி.கே.சிவக்குமார் பேசினார்.

    இதில் ஆதிசுஞ்சனகிரி மடாதிபதி நிர்மலானந்தநாத சுவாமி, முன்னாள் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • எடியூரப்பா தர்ணாவில் ஈடுபடுவதில் சிறந்தவர்.
    • லஞ்சம் இல்லாத கர்நாடகத்தை உருவாக்க காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    பெங்களூரு :

    பெங்களூருவில் நேற்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

    காங்கிரஸ் தொண்டர்களுடன் நான் ஆலோசிக்கும் போது கிரகஜோதி உள்ளிட்ட அரசின் இலவச திட்டத்திற்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் மக்களிடம் இருந்து ரூ.200 முதல் ரூ.1,000 வரை லஞ்சம் பெறப்படுவதாக குற்றச்சாட்டு கூறினார்கள். இலவச திட்டங்களுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு, அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க சம்பந்தப்பட்ட ஏஜென்சிகளுக்கு அரசு சார்பில் ரூ.22 கொடுக்கப்பட்டு வருகிறது. எனவே கிரகஜோதி உள்ளிட்ட பிற இலவச திட்டங்களுக்கு ஆன்லைன், அரசு மையங்களுக்கு சென்று விண்ணப்பிக்கும் போது ஒரு ரூபாய் கூட மக்கள் கொடுக்க வேண்டாம்.

    அதையும் மீறி லஞ்சம் கேட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது புகார் அளிக்கலாம். இதற்காக இலவச வாடிக்கையாளர் சேவை மைய எண் வழங்கப்படும். அதன்மூலமாக மக்கள் புகார் அளிக்கலாம். அப்படி யாரேனும் லஞ்சம் வாங்கினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி. மேலும் சம்பந்தப்பட்ட ஏஜென்சியின் உரிமமும் ரத்து செய்யப்படும்.

    லஞ்சம் இல்லாத கர்நாடகத்தை உருவாக்க காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அன்ன பாக்ய திட்டத்திற்கு கர்நாடகத்திற்கு அரிசி கொடுக்க மத்திய அரசு மறுத்துள்ளது. அந்த திட்டத்தை நிறைவேற்றாவிட்டால் தர்ணா நடத்துவேன் என்று எடியூரப்பா அறிவித்துள்ளார். எடியூரப்பா தர்ணாவில் ஈடுபடுவதில் சிறந்தவர். விதானசவுதாவில் தனியாக நின்று தர்ணாவில் ஈடுபட்டு இருக்கிறார்.

    அன்னபாக்ய திட்டத்தின்படி 5 கிலோ அரிசி பெறும் ஏழை மக்கள், விவசாயிகள் போராட்டம் நடத்த முன்வரவில்லை. அவர்களால் 5 கிலோ அரிசியால் தங்களது வாழ்க்கையை நடத்த முடியும். ஆனால் வயிறு நிரம்பியவர்கள் மட்டுமே போராட்டம் நடத்துவதாக கூறி வருகின்றனர். மின் கட்டண உயர்வுக்கு காரணம் யார்? என்று கூறினால், பலர் வீட்டுக்கு செல்ல நேரிடும். நான் மின்சாரத்துறை மந்திரியாக இருந்தவன். அதுபற்றி பேச விரும்பவில்லை. எங்களது ஆட்சியில் மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை.

    இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

    • குமாரசாமியை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
    • அரசியல் என்பது வேறு, தலைவர்களுடனான நட்பு வேறு.

    பெங்களூரு:

    துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமார் பதவி ஏற்ற பின்பு பல்வேறு கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார். பெங்களூரு ஆர்.டி.நகரில் உள்ள முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வீட்டுக்கு நேற்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசி இருந்தார். முன்னதாக இந்த விவகாரம் குறித்து டி.கே.சிவக்குமாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

    முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை சந்தித்து பேசுவதில் எந்த தவறும் இல்லை. அவர், 2 ஆண்டுகளாக முதல்-மந்திரியாக இருந்துள்ளார். இதற்கு முன்பு தேவேகவுடா, எஸ்.எம்.கிருஷ்ணா, எடியூரப்பா உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசி இருந்தேன். மூத்த தலைவர்களின் அனுபவத்தை பெறுவதில் தவறு எதுவும் இல்லை. அவர்களிடம் இருந்து கேட்டு தெரிந்து கொள்வதற்கு பல விஷயங்கள் இருக்கிறது. அவர்களது ஆட்சி காலத்தில் பல நல்ல திட்டங்களை செயல்படுத்த முடியாமல் இருந்திருக்கலாம்.

    அதனை கேட்டு தற்போது செயல்படுத்த முடியும். இதில் எந்த பிரச்சினையும் இல்லை. பசவராஜ் பொம்மை பெங்களூரு பொறுப்பையும் நிர்வகித்து இருந்தார். அரசியல் என்பது வேறு, தலைவர்களுடனான நட்பு வேறு. குமாரசாமியை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அவ்வாறு வாய்ப்பு கிடைத்தால் சந்தித்து பேசுவேன். எம்.எல்.ஏ.க்களுக்கான பயிற்சியில் தார்மீக குருக்கள் பேச இருப்பது சபாநாயகர் எடுத்திருக்கும் முடிவு. சபாநாயகர் எடுக்கும் முடிவில் அரசு தலையிட முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மத்திய அரசு, நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு கர்நாடகத்திற்கு எதிராக செயல்படுகிறது.
    • காங்கிரசில் குழப்பம் இருப்பதாக முன்னாள் மந்திரி ஆர்.அசோக் சொல்கிறார்.

    பெங்களூரு :

    துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    கர்நாடகத்திற்கு மத்திய அரசு அரிசி ஒதுக்க மறுப்பதன் பின்னணியில் பெரிய சதித்திட்டம் அடங்கியுள்ளது. இதுகுறித்து முதல்-மந்திரியுடன் ஆலோசித்து எல்லாவற்றையும் விரைவில் அம்பலப்படுத்துவோம். மத்திய அரசு, நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு கர்நாடகத்திற்கு எதிராக செயல்படுகிறது. இதுகுறித்து சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசனை நடத்துவேன்.

    கர்நாடக அரசுக்கு தொந்தரவு கொடுக்கும் எண்ணத்தில் ஏழைகளுக்கு அரிசி வழங்க மத்திய அரசு மறுக்கிறது. அரிசியை இலவசமாக வழங்குங்கள் என்று நாங்கள் கேட்கவில்லை. இந்திய உணவு ஆணையம் விவசாயிகளிடம் இருந்து அரிசி உள்ளிட்ட உணவு தானியங்களை கொள்முதல் செய்கிறது. தற்போது அந்த ஆணைய கிடங்குகளில் அரிசி இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    அரிசி வழங்குவதாக முதலில் கூறவிட்டு, பிறகு அரிசி வழங்க முடியாது என்று கூறினர். மத்திய அரசின் இந்த செயலை கண்டித்து கர்நாடக காங்கிரஸ் சார்பில் நாளை(இன்று) மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். பெங்களூருவில் நடைபெறும் போராட்டத்தில் நான் கலந்து கொள்கிறேன்.

    காங்கிரசில் குழப்பம் இருப்பதாக முன்னாள் மந்திரி ஆர்.அசோக் சொல்கிறார். முதலில் பா.ஜனதா எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுக்கட்டும். மக்கள் எங்களுக்கு 5 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தை வழங்கியுள்ளனர். மக்களின் இந்த நம்பிக்கையை காப்பாற்றி கொள்வோம். எனது சகோதரர் டி.கே.சுரேஷ் அறிவார்ந்த அரசியல்வாதி, அனுபவம் வாய்ந்த தலைவர். புதிய தலைவர்களை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கும் இருக்கிறது. அவருக்கு எந்த வைராக்கியமும் இல்லை.

    நாடாளுமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவது, கட்சியின் தேர்தல் அறிக்கையை அமல்படுத்துவது போன்ற விஷயங்களை மேற்கொள்ள மந்திரிகளுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதுகுறித்து கட்சி மேலிட தலைவர்களுடன் ஆலோசிக்க மந்திரிகள் அனைவரும் நாளை(இன்று) டெல்லி செல்கிறோம். இந்த சந்திப்பின்போது நல்லாட்சி நிர்வாகத்தை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்க உள்ளோம்.

    மேல்-சபை இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய நாளை(இன்று) கடைசி நாள் ஆகும். மனு தாக்கல் செய்யும்போது காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் என்பது உங்களுக்கு தெரியும்.

    இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

    • தமிழக மக்கள் மேகதாது அணை விவகாரத்தில் பெருந்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
    • மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு காட்ட வேண்டியது பெருந்தன்மை அல்ல.. கடுந்தன்மை.

    மேகதாதுவில் அணை கட்டும் பணிகளை தீவிரப்படுத்த இருப்பதாக அம்மாநில துணை முதல்வரும், நீர்பாசனத்துறை அமைச்சருமான டிகே சிவக்குமார் கூறிய கருத்துக்கு தமிழக அரசியலில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் தலைவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வரும் நிலையில், கர்நாடக மாநிலத்துக்கான நீர்பாசனத்துறை அமைச்சர் டிகே சிவக்குமார் விளக்கம் அளித்து இருந்துள்ளார். அதில், வீணாக கடலில் கலக்கும் காவிரி நீரை தடுக்க அணை கட்டும் விவகாரத்தில் தமிழ்நாடு, கர்நாடகா நீதிமன்றம் செல்வதை நிறுத்திவிட்டு, மேகதாது அணை கட்ட ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

    டிகே சிவக்குமாரின் இந்த கருத்துக்கு, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், பதில் அளித்துள்ளார். அதில், "மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு காட்ட வேண்டியது பெருந்தன்மை அல்ல... கடுந்தன்மை; டி.கே.சிவக்குமாரின் இனிப்பு கலந்த சொற்களை நம்பி ஏமாந்து விடக்கூடாது!" என்றார். இது குறித்து அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது..,

    "தமிழ்நாட்டின் மீது எங்களுக்கு எந்த வெறுப்பும் இல்லை. தமிழக மக்கள் எங்கள் சகோதர, சகோதரிகள். நாங்கள் அவர்களிடம் பெருந்தன்மையுடன் நடந்து கொள்கிறோம். அவர்களும் மேகதாது அணை விவகாரத்தில் பெருந்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். வீணாக கடலில் கலக்கும் காவிரி நீரைத் தடுக்க அணை கட்டும் விவகாரத்தில் தமிழ்நாடும், கர்நாடகமும் வீணாக அடித்துக் கொண்டு நீதிமன்றத்திற்கு செல்வதை நிறுத்த வேண்டும். மேகதாது அணை கட்ட ஒத்துழைக்க வேண்டும்" என்று கர்நாடக துணை முதலமைச்சரும், நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான டி.கே. சிவக்குமார் கூறியிருக்கிறார். கர்நாடக துணை முதலமைச்சரின் ஒவ்வொரு சொல்லிலும் பெரும் இனிப்பு கலந்திருக்கிறது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது இதற்கும் பொருந்தும்.

    "பகையாடி கெடுக்க முடியாவிட்டால், உறவாடிக் கெடு என்றொரு பழமொழி உண்டு. அதைத் தான் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கையில் எடுத்திருக்கிறார். தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதை நீதிமன்றமோ, மத்திய அரசோ அனுமதிக்காது. தமிழகத்தை பகைத்துக் கொண்டு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது எந்த காலத்திலும் நடக்காது. அதனால் தான் தமிழகத்தை புகழ்ந்து, ஏமாற்றி அனுமதி பெற்று அணை கட்டுவதற்கான முயற்சிகளில் கர்நாடகம் ஈடுபட்டிருக்கிறது. கர்நாடகத்தின் இந்த வஞ்சக வலையில் தமிழ்நாடு ஒருபோதும் விழுந்து விடக்க்கூடாது."

    "மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு பெருந்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று டி.கே.சிவக்குமார் கூறுகிறார். கடந்த காலங்களில் காவிரி விவகாரத்தில் கர்நாடகம் என்றாவது பெருந்தன்மையுடன் நடந்து கொண்டிருக்கிறதா? என்பதை அவர் நினைத்துப் பார்க்க வேண்டும். 1991-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிற்கு காவிரியில் ஆண்டுக்கு 205 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றம் இடைக்காலத் தீர்ப்பு வழங்கியது. அதை எதிர்த்து கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக மிகப்பெரிய கலவரம் வெடித்தது. தமிழர்களின் சொத்துகளும், வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டன. அவற்றின் மதிப்பு பலநூறு கோடி. பெங்களூருவில் மட்டும் 16 தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்தக் கலவரங்களை அப்போதிருந்த காங்கிரஸ் முதலமைச்சர் பங்காரப்பா ஊக்குவித்தார். இது தமிழர்கள் மீதான பெருந்தன்மையா?"

    "2016-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் வாடிய பயிர்களைக் காக்க வினாடிக்கு 15,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விட உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. அப்போதும் தமிழர்களின் சொத்துகள் சூறையாடப்பட்டன. தமிழ்நாட்டைச் சேர்ந்த நிறுவனத்திற்கு சொந்தமான 50 ஆம்னி பேருந்துகள் எரித்து தீக்கிரையாக்கப்பட்டன."

    "பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் உயிருக்கு அஞ்சி வெளியேறினார்கள். இப்போதைய உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா தான் அப்போதும் உள்துறை அமைச்சர். இப்போதைய துணை முதலமைச்சர் சிவக்குமார் தான் அப்போதும் செல்வாக்கு மிக்க அமைச்சர். ஆனால், அவர்கள் அப்போது தமிழர்கள் மீது பெருந்தன்மை காட்டவில்லை. ஆனால், இப்போது தமிழர்கள் பெருந்தன்மை காட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம்?"

    "மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழ்நாடு பாலைவனமாகி விடும். மேகதாது விவகாரத்தில் கர்நாடகத்திடம் தமிழ்நாடு காட்ட வேண்டியது பெருந்தன்மை அல்ல... கடுந்தன்மை. கர்நாடக துணை முதலமைச்சரின் நஞ்சு தடவிய இனிப்பு வார்த்தைகளில் மயங்கி, காவிரி ஆற்றில் தமிழ்நாட்டின் உரிமையை இழந்து விடக் கூடாது. மேகதாது அணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கை சட்ட வல்லுனர்களைக் கொண்டு நடத்தி, மேகதாது அணை கட்டும் கர்நாடகத்தின் சதியை முறியடிக்க வேண்டும். அதற்கு மாறாக, கர்நாடகத்துடன் எந்தவிதமான பேச்சுக்களிலும் ஈடுபடக்கூடாது என்று வலியுறுத்துகிறேன்," என்று தெரிவித்துள்ளார்.

    • கர்நாடக துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
    • மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு தமிழ்நாடு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

    பெங்களூரு:

    கர்நாடக நீர்ப்பாசனத் துறைக்கு பொறுப்பேற்றுள்ள கர்நாடக காங்கிரஸ் தலைவரான துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமார் கடந்த மே மாதம் 30-ம் தேதி, அத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, மேகதாது திட்டத்திற்கு அனுமதி பெற மத்திய மந்திரியை நேரில் சந்திப்பேன் என கூறினார்.

    இதற்கு தமிழ்நாடு அரசும், தமிழக அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேகதாது திட்டத்தைச் செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்தது.

    இந்நிலையில் பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் டி.கே.சிவக்குமார் நேற்று ஆலோசனை நடத்தினார். அதன்பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மேகதாது அணை திட்டத்தில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை. மேகதாது அணையால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

    எங்களுக்கு தமிழ்நாடு மீது விரோதம் இல்லை. போரிடும் நோக்கமும் இல்லை. அங்கு இருப்பவர்கள் நமது அண்ணன்-தம்பிகள். யார் மீதும் எங்களுக்கு எந்த வெறுப்பும் கிடையாது. மேகதாது எங்களுடைய திட்டம். இதனால் தமிழகத்திற்கு பயன் ஏற்படும்.

    கடலுக்குச் செல்லும் நீரை தடுத்து நிறுத்தி அதை காவிரி படுகையில் உள்ள மக்களின் பயன்பாட்டிற்கு வழங்குவோம். காவிரியில் உள்ள அணைகளின் சாவி மத்திய அரசின் கையில் உள்ளது. தமிழ்நாட்டிற்கு எப்போது எவ்வளவு நீர் வழங்க வேண்டும் என்பதை மத்திய அரசு தீர்மானிக்கும். சண்டை போட்டது போதும்.

    கர்நாடகத்தில் மின் உற்பத்தி திட்டத்தை தொடங்குவதால் தமிழக அரசுக்கு என்ன தொந்தரவு ஏற்படுகிறது? நீரை சேகரித்து குடிநீருக்கு பயன்படுத்தலாம் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அதனால் தமிழகத்தினர் ஆதங்கப்பட தேவை இல்லை. இந்த திட்டத்தால் தமிழகத்திற்கு எந்த தொந்தரவும் கிடையாது.

    நாம் சண்டை போட்டு கோர்ட்டுக்கு அலைந்து திரிந்தது போதும். நல்லிணக்கத்துடன் குடிநீர் மற்றும் தமிழக விவசாயிகளுக்கு பயன் ஏற்படும் இந்த மேகதாது திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒத்துழைக்க வேண்டும் என தெரிவித்தார்.

    • தமிழ்நாடு அமைச்சர்கள் கர்நாடகாவின் மேகதாது அணை கட்டும் முயற்சிக்கு கடும் கண்டனமும் தெரிவித்துள்ளனர்.
    • வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவே அணை கட்டப்படுகிறது என டிகே சிவக்குமார் பேச்சு

    கர்நாடக அரசு மேகதாது என்னுமிடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு நீண்டகாலமாக முயற்சி செய்து வருகிறது. இதற்கு தமிழகம் தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது ஆட்சிமாற்றம் ஏற்பட்டு காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றி உள்ள நிலையில், தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிப்படி மேகதாது அணை கட்டுவதற்கான முயற்சியை தொடங்கி உள்ளது.

    தற்போதைய துணை முதல்வரான டி.கே.சிவகுமார், நீர்வளத்துறை அமைச்சராகவும் இருக்கிறார். நீர்வளத்துறை அதிகாரிகளுடனான முதல் ஆலோசனைக் கூட்டத்திலேயே, மேகதாது அணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் அறிவித்தார். இதற்கு தமிழ்நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அமைச்சர்கள் கர்நாடகாவின் மேகதாது அணை கட்டும் முயற்சிக்கு கடும் கண்டனமும் தெரிவித்துள்ளனர்.

    தமிழ்நாட்டின் இந்த எதிர்ப்பு தொடர்பாக டி.கே.சிவக்குமார் கூறுகையில், மேகதாது அணை கட்டும் விஷயத்தில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்றார்.

    'தண்ணீருக்காக நாங்கள் பாதயாத்திரை மேற்கொண்டோம். வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவே அணை கட்டப்படுகிறது. தமிழ்நாடு இந்த விவகாரத்தை சகோதரத்துவத்துடன் அணுக வேண்டும். மேகதாதுவில் அணை கட்டுவதால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது. அணையால் தமிழகத்திற்கு அதிக பயன் உள்ளது. உரிய நேரத்தில் அவர்களுக்கு அளிக்கப்பட்ட பங்கீடு நீர் கிடைக்கும்' என்று டி.கே.சிவக்குமார் கூறியிருக்கிறார்.

    ஆனால் தமிழகம் தரப்பில் இந்த விளக்கத்தை ஏற்க தயாராக இல்லை. அணை கட்டும் முயற்சியை தடுப்பதில் அனைத்து கட்சிகளும் ஒருமித்த கருத்துடன் உள்ளன. இந்த விஷயத்தில் கர்நாடக அரசுடன் தமிழக அரசு மோதலுக்கு தயாராகிவிட்டது. இதன் காரணமாக மேகதாது அணை விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. 

    ×