என் மலர்
நீங்கள் தேடியது "ஆன்மீகம்"
- தீச்சட்டி ஏந்தி வழிபட்டு தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றுகிறவர்களும் உண்டு.
- அலகு குத்துதல் என்ற வேண்டுதலையும் பக்தர்கள் முத்தாரம்மனுக்கு செலுத்துகிறார்கள்.
குலசை தசரா-நேர்த்திக் கடன்
நேர்த்திக் கடனில், மாவிளக்கு பூஜை செய்வதும் ஒன்று. இது அனைத்து ஆலயங்களிலும் செய்வது போன்றே பக்தர்கள் அம்பாளுக்கு நேர்த்தி கடனாக மாவிளக்கு ஏற்றி வணங்கி வருகின்றனர்.
அங்கப்பிரதட்சனம் செய்வதாக வேண்டிக் கொள்ளும் பக்தர்கள் அதனை நிறைவேற்றுகிறார்கள்.
விசேஷ நாட்களில் ஊரின் மையத்தில் அமைந்திருக்கும் இக்கோவிலுக்கு வந்து பிரகாரத்தில் அங்கப் பிரதட்சணம் செய்து தங்கள் வேண்டுதலைப் பூர்த்தி செய்கின்றனர்.
தீச்சட்டி ஏந்தி வழிபட்டு தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றுகிறவர்களும் உண்டு.
இவர்கள் குளித்து முடித்து விட்டு, ஈரத் துணியுடன், சந்தனம் பூசிய உடம்போடு, தீச்சட்டியைக் கைகளில் ஏந்தி, ஓம் சக்தி தாயே என்று பக்திப்பரவசத்தோடு கோவிலை வலம் வருகிறார்கள்.
அலகு குத்துதல் என்ற வேண்டுதலையும் பக்தர்கள் முத்தாரம்மனுக்கு செலுத்துகிறார்கள். மேலும் சில பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்தி தங்கள் நேர்த்திக் கடனைப் பூர்த்தி செய்கின்றனர்.
இங்கு இன்னுமொரு வேண்டுதல், அன்னதானம் செய்வது மற்றவர்களின் வயிற்றுப் பசியைப் போக்குவது என்பது ஒரு மிகப் பெரிய சேவையாகும்.
பசியால் துடிக்கும் ஏழை, எளியவர்களுக்கு உணவு வழங்குவது போன்ற தொண்டு வேறு எதற்கும் ஈடாகாது என்பார்கள்.
குலசை ஆலயத்தில் அன்னதானம் சிறப்பாக நடைபெறுகிறது. ஏராளமான பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனாக ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குகின்றனர்.
இது போன்று அருள்மிகு முத்தாரம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தி, தங்கள் வாழ்க்கையில் அனைத்து விதமான சகல சவுபாக்கியங்களையும் பக்தர்கள் பெற்றுச் செல்கின்றனர்.
- கற்பூர ஆர்த்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் சனிக்கிரஹ தோஷம் நீங்கும்.
- சண்முக பிரியா ராகத்தில் கேது கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்தால் கேதுக்கிரகதோஷம் நீங்கும்.
நவக்கிரக தோஷ பரிகாரங்கள்
1. சூரிய பகவானுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் அபிஷேகம் செய்து சிவப்பு வஸ்த்திரம் சிவப்புமணி செந்தாமரையால் அலங்காரம் செய்து, சூரிய மந்திரங்களை ஓதி ,யாகத்தீயை எழுப்பி கோதுமை சர்க்கரைப் பொங்கல் படைத்து தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூப தீப நைவேத்தியம் கொடுத்து, சவுராட்டிர ராகத்தில் சூரிய கீர்த்தனைகளைப் பாடி பிராத்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் சூரியக் கிரகதோஷம் நீங்கும்.
2. சந்திர பகவானுக்குத் திங்கட்கிழமையில் அபிஷேகம் செய்வித்து வெள்ளை வஸ்த்திரம் முத்துமாலை வெள்ளலரி என்பவற்றால் அலங்காரம் செய்து சந்திர மந்திரங்களை ஓதி எருக்கஞ்சமித்தினால் யாகத் தீயை எழுப்பி பச்சரிசி, பாலண்மை, தயிரன்னம் என்பவற்றால் ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து, அர்ச்சனை செய்து, தூப தீய நைவேத்தியம் கொடுத்து, அசாவேரி ராகத்தில் சந்திர கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் சந்திரக் கிரக தோஷம் நீங்கும்.
3. அங்காரக பகவானுக்கு செவ்வாய்கிழமைகளில் அபிஷேகம் செய்துவித்து சிவப்பு வஸ்திரம் பவழம் சிவப்பு அலரி என்பவற்றால் அலங்காரம் செய்து அங்காரக மந்திரங்களை ஓதி கருங்காலி சமித்தினால் யாகத்தீயை எழுப்பித்த வரம் பருப்புப் பொடி அன்னத்தை ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூப தீப நைவேத்தியம் கொடுத்து, சுருட்டி ராகத்தில் அங்காரகக் கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் அங்காரக கிரக தோஷம் நீங்கும்.
4. புதபகவானுக்குப் புதன்கிழமையில் அபிஷேகம் செய்வித்துப் பச்சை வஸ்திரம் மரகமணி வெண்தாமரை என்பவற்றால் அலங்காரம் செய்து, புதன் மந்திரங்களை ஓதி நாயுருதி சமித்தால் யாகத் தீயை எழுப்பிப் பாசிப்பயத்தம் பருப்புப்பொடி அன்னத்தை ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூப தீய நைவேத்தியம் கொடுத்து, நாட்டக்குறிச்சி ராகத்தில் புதன் கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் புதக்கிரகதோஷம் நீங்கும்.
5. குருபகவானுக்கு வியாழக்கிழமையில் அபிஷேகம் செய்வித்து மஞ்சள் நிற வஸ்திரம் புஷ்பராகமணி, வெண்முல்லை என்பவற்றால் அலங்காரம் செய்து குரு மந்திரங்களை ஓதி அரசஞ்சமித்தினால் யாகத்தீயை எழுப்பி கொத்து கடலைப் பொடி அன்னம் எலுமிச்சை பழ அன்னம் என்பவற்றால் ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூப தீய நைவேத்தியம் கொடுத்து அடாணாராகத்தில் குரு கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் குருக்கிரக தோஷம் நீங்கும்.
6. சுக்கிர பகவானுக்கு வெள்ளிக்கிழமையில் அபிஷேகம் செய்வித்து, வெள்ளை வஸ்த்திரம் வைரக்கல் வெண்தாமரை மலர் என்பவற்றால் அலங்காரம் செய்து சுக்கிர மந்திரங்களை ஓதி அத்தி சமித்தினால் யாகத்தீயை எழுப்பி மொச்சைப் பொடியன்னம் தயிரன்னம் என்பவற்றால் ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூப தீப நைவேத்தியம் கொடுத்து, பரசுராகத்தில் சுக்ர கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் சுக்கிரக் கிரகதோஷம் நீங்கும்.
7. சனிபகவானுக்கு சனிக்கிழமையில் அபிஷேகம் செய்வித்து, கருப்பு வஸ்த்திரம், நீலக்கல் நீலோற்பலம் (கருங்குவளை) என்பவற்றால் அலங்காரம் செய்து, சனிபவகானின் மந்திரங்களை ஓதி வன்னி சமித்தினால் யாகத்தீயை எழுப்பி, எள்ளுத்தானியம், எள்ளுப்பொடி அன்னம் என்பனவற்றால் ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து நல்ல எண்ணைத் தீபம் ஏற்றி, அர்ச்சனை செய்து தூப தீப நைவேத்தியம் கொடுத்து, யதுகுல காம்போதி ராகத்தில் சனிபகவான் கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆர்த்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் சனிக்கிரஹ தோஷம் நீங்கும்.
8. ராகு பகவானுக்கு ஏதாவதொரு கிழமையில் அபிஷேகம் செய்வித்து, கருப்பு வஸ்திரம் கோமேதக மணி நீலமந்தாரை இலுப்பைப்பூ என்பவற்றால் அலங்காரம் செய்து ராகு மந்திரங்களை ஓதி அறுகம் புல்லால் யாகத்தீயை எழுப்பி உளுந்து தானியம் உளுத்தம் பருப்புப்பொடி அன்னம் என்பவற்றால் ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூபதீப நைவேத்தியம் கொடுத்து, ராகப்பிரியா ராகத்தில் கீர்த்தனைகளைப் பாடி பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் ராகுக் கிரகதோஷம் நீங்கும்.
9. கேது பகவானுக்கு ஏதாவதொரு கிழமையில் செய்வித்து, பலவர்ண ஆடை வைடூர்ய மணி செவ்வல்லிமலர் என்பவற்றால் அலங்காரம் செய்து கேது மந்திரங்களை ஓதித் தருப்பையினால் யாகத்தீயை எழுப்பிப் கொள்ளுதானியய் கொள்ளுப்பொடி அன்னம் என்பவற்றால் ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூப தீப நைவேத்தியம் கொடுத்துச் சண்முக பிரியா ராகத்தில் கேது கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் கேதுக்கிரகதோஷம் நீங்கும்.
- தரமற்ற, வாசனையற்ற மலர்களை கொண்டு கடவுளை பூஜித்தவர்களுக்கு,
- ஏழு ஜென்ம பாவம் விலக... ஒரு வில்வ இலை போதும்!
இறைவனை பூக்கள் கொண்டு பூஜை செய்தவற்கும் இந்த ஜென்மாவில் நாம் அனுபவிக்கும் சுக துக்கங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
வாசனையற்ற மலர்களை கொண்டு இறைவனை பூஜை செய்யவே கூடாது. (சில மலர்கள் விதிவிலக்கு). தரமற்ற, வாசனையற்ற மலர்களை கொண்டு கடவுளை பூஜித்தவர்களுக்கு புத்திரர்கள் இருந்தும் அவர்களால் எந்த வித சந்தோஷமும் இல்லாதவாறு அமைந்துவிடும்.
தொன்மையான ஆலயங்களில் நடைபெறும் பூஜைகள் மற்றும் அர்ச்சனைகளுக்கு பூஜைக்கு ஏற்ற வாசனைமிக்க மலர்களை உபயமாக தரவேண்டும். தொடர்ந்து இது போன்று செய்துவந்தால் புத்திரர்கள் நல்ல புத்தி பெறுவார்கள்.
சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, கந்த சஷ்டி, விநாயகர் சதுர்த்தி, ஹனுமத் ஜெயந்தி, பொங்கல் மற்றும் தீபாவளி திருநாள் ஆகிய விஷேட நாட்களில் திருக்கோவில்களுக்கு பூஜைக்கு மலர்கள் வாங்கித் தரும் கைங்கரியத்தை அனைவரும் இயன்றவரை செய்துவர வேண்டும்.
நாம் தனிப்பட்ட முறையிலும் நம் தளம் சார்பாகவும், சிவராத்திரி உள்ளிட்ட விஷேட நாட்களில் இந்த கைங்கரியத்தை செய்ய தவறுவதேயில்லை.
சென்ற நவராத்திரி சமயத்தின் போது கூட நம் தளம் சார்பாக குமணன்சாவடி அருகே உள்ள கண்ணபிரான் திருக்கோவிலுக்கு பூஜைக்கு மலர்கள் வாங்கித் தந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு மலருக்கும் ஒரு குணமும் சக்தியும் உண்டு.
உதாரணத்துக்கு ஒரு வில்வ தளம் லட்சம் பொன்மலர்களுக்கு சமம். ஒரு வில்வ தளத்தை பக்தியோடு சிவனுக்கு சமர்ப்பித்தால் எப்பேர்ப்பட்ட பாவங்களும் விலகும்.
ஏழு ஜென்ம பாவம் விலக... ஒரு வில்வ இலை போதும்! (மாதப்பிறப்பு, திங்கட்கிழமை, அமாவாசை, பெளர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி நாட்களில் வில்வம் பறிக்கக்கூடாது).
வில்வத்திற்கு நிர்மால்ய தோஷம் கிடையாது. அதாவது உபயோகப்படுத்தி விட்டு தண்ணீர் விட்டு அலம்பி மீண்டும் உபயோகப்படுத்தலாம். (இந்த சிறப்பு தங்கத்திற்கு மட்டுமே உண்டு).
ஆனால் ஒரு தெய்வத்திற்கு அர்ச்சித்த பூக்களையோ அல்லது இதர பொருட்களையோ மற்ற தெய்வத்திற்கு பயன்படுத்தக்கூடாது.
சீரும் சிறப்புமாக தற்போது வாழ்ந்து வருபவர்களை காண நேர்ந்தால் "சென்ற ஜென்மத்தில் இறைவனுக்கு நல்ல மலர்களை கொண்டு பூஜை செய்திருப்பார்கள்" என்று நினைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு 30 அல்லது 40 வருடங்களுக்கு முன்னர் வீடு கட்டுபவர்கள் பெரும்பாலும் வீட்டின் முன்பகுதியில் நிச்சயம் தோட்டம் அமைப்பர். அதில் பூஜைக்குரிய மலர்களின் செடிகள் வளர்க்கப்படும்.
அதில் பூக்கும் மலர்களை கொண்டு தான் இறைவனுக்கு பூஜை செய்வார்கள். மிகுதியாக உள்ளவற்றை அருகே உள்ள ஏதாவது ஆலயத்திற்கு தருவார்கள்.
ஆனால் இப்போது வீட்டின் முன்னே இடமிருந்தால் கடையை கட்டி வாடகைக்கு விட்டுவிடுகிறார்கள். இந்த ஜென்மாவில் கூட நாம் முழுமையாக அனுபவிக்க முடியாத செல்வத்தை சேர்ப்பதில் குறியாய் இருப்பவர்கள், பல ஜென்மங்களில் நமக்கு நற்பேறுகளை அளிக்கவல்ல இந்த மலர்க் கைங்கரியத்தை செய்ய தலைப்படுவது கிடையாது.
வசதியும் வாய்ப்பும் உள்ளவர்கள், வீட்டில் தோட்டம் நந்தவனம் அமைத்து, அதில் மலரும் பூக்களை பறித்து இறைவனுக்கு பூஜை செய்ய வேண்டும். சௌபாக்கியங்களில் இதுவும் ஒன்று. அத்தனை சுலபத்தில் எல்லோருக்கும் கிட்டாது.
- புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு, நீருண்டு என்பது திமுறை வாக்கு
- இத்தகைய வழிபாடு இரண்டு வகைப்படுகிறது. ஒன்று கோவில்களில் செய்யப்படுவது
புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு, நீருண்டு என்பது திமுறை வாக்கு
இந்த மண்ணில் மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவரும் இறைவனை நினைத்து தினமும் வழிபாடு செய்வது அவசியமானது.
இந்த உலகத்தில் நம்மை பிறக்க வைத்து, உண்பதற்கு உணவும், சுவாசிக்க காற்றும், குடிப்பதற்கு தண்ணீரும், குளிர்காய்வதற்கும், சமைப்பதற்கும் உதவும் நெருப்பையும் கொடுத்த வள்ளல், இறைவன்.
ஒவ்வொரு நொடியும் நாம் அவன் தந்த இயற்கை சக்திகளைப் பயன்படுத்தி வாழ்வாங்கு வாழ்கிறோம். அதற்கு கடனாக அவனிடம் அன்பு கொண்டு, வழிபாடு செய்வது நம் கடமை.
இத்தகைய வழிபாடு இரண்டு வகைப்படுகிறது. ஒன்று கோவில்களில் செய்யப்படுவது. அது பரார்த்த வழிபாடு எனப்படும். மற்றொன்று நாமே வீட்டில் இறைவனின் திருவுருவச் சிலைகளை வைத்து வழிபடுவது. இது ஆத்மார்த்த வழிபாடு எனப்படும்.
இந்த இரண்டு வகையான வழிபாட்டிலும் இறைவனின் திருமேனிகளுக்கு அபிஷேகம், அர்ச்சனை ஆகியவை உண்டு.
அபிஷேகத்திற்கு தூய்மையான கிணற்று நீர் ஆகியவை சிறந்தவை.
இறைவனுக்கு உகந்த மலர்களை வைத்து அவனை உள்ளன்போடு பூசிக்க வேண்டும். இறைவனின் திருமுடியில் மலர் இல்லாமல் ஒருபோதும் இருப்பது கூடாது.
நாம் அன்றாடம் வழிபடும் விநாயகப் பெருமான், சிவபெருமான், மகாவிஷ்ணு, முருகப்பெருமான், காமாட்சி அம்மன், மகாலட்சுமி போன்ற தெய்வங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள மலர்களை உபயோகிக்கலாம்.
இவை பொதுவானவை. காலை நேரத்தில் தாமரை, புரசம்பூ, துளசி, நவமல்லிகை, நந்தியாவட்டை, மந்தாரை, முல்லை, செண்பகம், புன்னாகம் ஆகிய பத்துவிதமான மலர்களைக் கொண்டு இறவனை வழிபட வேண்டும்.
தாழைமலரை மட்டும் சிவபெருமானுக்கு உபயோகிப்பது கூடாது. நடுப்பகலில் வெண்தாமரை, அரளி, புரசு, துளசி, நெய்தல், வில்வம், சங்கு புஷ்பம், மருதாணி, கோவிதாரம், ஓரிதழ் தாமரை ஆகியன கொண்டு பூஜை செய்தால் நன்மை அடையலாம்.
மாலையில் செந்தாமரை, அல்லி, மல்லிகை, ஜாதிமுல்லை, மருக்கொழுந்து, வெட்டிவேர், கஜகர்ணிகை, துளசி, வில்வம் ஆகியன உகந்தன. அறுகு, தும்பை, புன்னாகம், நந்தியாவட்டை, பாதிரி, பிருகதி, அரளி, செண்பகம் ஆகியவை அஷ்ட புஷ்பங்கள் எனப்படும்.
- வெண்மையான பூக்கள் சாத்வீக குணம் கொண்ட பூக்கள்.
- தாமரை மலரை பறித்த ஐந்து நாள்களுக்குள் உபயோகிக்கலாம்.
பூக்களுள் சிறந்த பூ
பூங்களுள் சிறந்தது தாமரைப்பூவே.
வேதங்களுக்கு எத்தனை பெருமை உண்டோ அத்தனை பெருமை தாமரை மலருக்கு உண்டு.
மகாலட்சுமி தாயாரை நினைக்கும் போது நமக்கு தாமரையின் தோற்றம் நினைவுக்கு வரும். ஏன் என்றால் மகாலட்சுமி மிக விரும்பித் தங்குவது தாமரை மலரில்தான்.
தெய்வமலர் என்றே தாமரை மலருக்கு ஒரு பெயர் உண்டு. இந்தப் பூக்கள் இறைவனை பூஜை செய்வதற்கு மட்டுமே பயன்படுகிறது. யாரும் தலையில் சூடிக்கொள்வதில்லை.
திருமாலுக்கு மிகவும் பிரியமான மலர் தாமரைப்பூ. இதைப்போலவே சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தமான பூ நாகலிங்கப்பூ.
பவுர்ணமி வழிபாட்டில் சிவனுக்கு அலரி, செவ்வந்தி, தாமரை மலர்களால் கட்டிய மாலைகளை அணிவித்து பூஜை செய்தால் பல பிறவிகளில் செய்த பாவங்கள் அகலும்.
முருகப்பெருமானுக்கு பிடித்தமான மலர் கடம்பமலர், காண்டள் பூக்கள், குறிஞ்சிப்பூ, செவ்வலரி ஆகிய பூக்கள் வேலனுக்கு மிகவும் விருப்பமானவை என்று சங்க இலக்கியங்கள் தெரிவிக்கின்றன.
பூக்களின் குணங்கள்
வெண்மையான பூக்கள் சாத்வீக குணம் கொண்ட பூக்கள். இவற்றை வைத்து இறைவனை பூஜை செய்தால் முக்தி கிடைக்கும்.
சிவப்பு வர்ணப்பூக்கள் இராஜச குணம் கொண்ட பூக்கள். இவற்றைக் கொண்டு அர்ச்சனை செய்தால் இகலோக இன்பங்களைத் தரும்.
பொன்மயமான மஞ்சள் வண்ணப் பூக்கள் கொண்டு பூஜை செய்து வந்தால் போகத்தையும் மோட்சத்தையும் தரும். மேலும் எல்லாக் காரியங்களிலும் சித்தி அடைய அவை உதவும். நம் பரம்பரை விருத்தி அடைய வைக்கும்.
கறுப்பு நிறம் கொண்ட பூக்கள் தாமச குணம் கொண்டவை. ஆகவே பொதுவாக இவற்றை உபயோகித்து பூஜை செய்வது கூடாது.
எத்தனை நாட்களுக்குள் பயன்படுத்தலாம்?
தற்போது எல்லார் வீட்டிலும் குளிர்சாதனப் பெட்டி இருக்கிறது. ஆகவே மலர்களை வாங்கி குளிர்ச்சியான சூழலில் வைத்திருந்து பயன்படுத்துவது தவிர்க்க முடியாததாகவிட்டது.
இருந்தாலும் அவ்வப்போது பறித்த மலர்களைக் கொண்டு இறைவனுக்கு பூஜை செய்வது சிறப்பானது. காலையில் பூத்த மலர்களை காலையிலேயே பூஜைக்கு பயன்படுத்துவதால் நறுமணம், இனிமை, புதுமை, இளமை ஆகியவை கூடுதலாக இருக்கும்.
தாமரை மலரை பறித்த ஐந்து நாள்களுக்குள் உபயோகிக்கலாம். அரளிப்பூக்களை மூன்று நாள்களுக்குள்ளும், வில்வ இலையை பறித்து ஆறுமாதங்கள் வரையிலும், உபயோகிக்கலாம்.
இவ்வாறே துளசி இலைகளை மூன்று மாதங்களுக்குள்ளும், சிவனைத் தவிர மற்ற தெய்வங்களுக்கு உபயோகப்படும் தாழம்பூக்களை ஐந்து நாள்களுக்குள்ளும், செண்பகம் ஒரே நாளுக்குள்ளும், விஷ்ணு கிரந்தியை மூன்று நாள்களுக்குள்ளும் பயன்படுத்தலாம்.
பூஜைக்கு ஆகாத பூக்கள்
அசுத்தமான கைகளினால் தொட்டு பறிக்கப்பட்டது. கொண்டுவரப்பட்டது. தானாக விழுந்தது, காய்ந்தது, மற்றவர்களினால் முகர்ந்து பார்க்கப்பட்டது. அசுத்தமான இடங்களில் மலர்ந்தது, அசுத்தமான கூடையில் வைத்து கொண்டுவரப்பட்டது போன்ற புஷ்பங்களை பகவானுக்கு அர்ப்பணிக்கக்கூடாது.
பறித்த பிறகு மலர்ந்து பூக்கள், வாடிப்போன பூக்கள் பழைய பூக்கள், ஆமணக்கு இலையில் கட்டி வைத்த பூக்கள், பூச்சிகள் கடித்த பூக்கள், சிலந்தி இழை சுற்றிய பூக்கள், பறவைகள் எச்சமிட்ட பூக்கள், முடிக்கற்றை பட்ட பூக்கள், இரவு நேரத்தில் பறித்த பூக்கள், தண்ணீரில் முழுகிய பூக்கள் ஆகியவை பூஜைக்கு ஆகாத பூக்கள்.
தற்போது பலர் கைகளில் மலர்களை எடுத்து அவற்றை துண்டு துண்டாக்கி கைகளினால் கிள்ளி பூஜை செய்கின்றனர். இது மிகவும் தவறானது.
பூக்களை முழுதாகப் பயன்படுத்த வேண்டுமே தவிர, கிள்ளி பொடிப்பொடியாக்கி வழிபாடு செய்தல் கூடாது. வில்வ இலை, துளசி இலை ஆகியவற்றை தளமாகச் சாத்த வேண்டும்.
தெய்வங்களுக்கு ஆகாத மலர்கள்
அட்சதை வெள்ளெருக்கு, ஊமத்தை ஆகியன விஷ்ணுவுக்கு ஆகாதவை, செம்பரத்தை, தாழம்பூ குந்தம், கேசர, குடஜமம், ஜபாபுஷ்பம் ஆகியவை சிவபெருமானுக்கு ஆகாதவை.
அறுகு வெள்ளெருக்கு மந்தாரம் இவை அம்மனுக்கு ஆகாதவை. வில்வம் சூரியனுக்கு ஆகாது. துளசி விநாயகருக்கு கூடாது. பவழமல்லியால் சரஸ்வதியை அர்ச்சனை செய்வது கூடாது.
விஷ்ணு சம்பந்தமான தெய்வங்களுக்கு மட்டுமே துளசி தளத்தினால் அர்ச்சனை செய்யலாம். அது போல சிவசம்பந்தமான தெய்வங்களுக்கு மட்டுமே வில்வ தளத்தினால் அர்ச்சனை செய்யலாம்.
துலுக்க சாமந்திப்பூவை கண்டிப்பாக பூஜைக்கு உபயோகிக்கக் கூடாது. அன்று மலர்ந்த மலர்களை அன்றைக்கே உபயோகப்படுத்துவது நல்லது. ஒருமுறை இறைவனின் திருவடிகளில் சமர்ப்பிக்கப்பட்ட மலர்களை மறுபடியும் எடுத்து மீண்டும் அர்ச்சனை செய்வது கூடாது.
வில்வம் துளசி ஆகியவற்றை மட்டுமே மறுபடியும் உபயோகிக்கலாம்.
சமபகமாட்டு தவிர வேறு மலர்களின் மொட்டுகள் பூஜைக்கு உகந்தவை அல்ல.
முல்லை, கிளுவை, நொச்சி, வில்வம், விளா இவை பஞ்ச வில்வம் எனப்படும். இவை சிவபூஜைக்கு மிகவும் உகந்தவை. துளசி, மகிழம், சண்பகம், தாமரை, வில்வம், செங்கழுநீர், மருக்கொழுந்து, மருதாணி, நாயுருவி, விஷ்ணுகிரந்தி, நெல்லி ஆகியவற்றின் இலைகள் பூஜைக்கு உகந்தவை.
கடம்பம், ஊமத்தை, ஜாதி ஆகிய பூக்களை இரவில் மட்டுமே உபயோகிக்க வேண்டும். இதுபோலவே தாழம்பூஜை அர்த்த ராத்திரி பூஜைகளில் மட்டுமே உபயோகிக்கலாம். பகல் காலங்களில் விலக்க வேண்டும்.
குருக்கத்தி, ஆனந்ததிதா, மதயந்திகை, வாகை, ஆச்சா, உச்சித்திலகம், ஆமல், மாதுளை, தென்னை, நீர்த்திப்பிலி, பருத்தி, குமிழம், இலவு, பூசனி, மலைஆல், பொன்னாங்கண்ணி, விளா புளி ஆகியவற்றின் பூக்கள் பூஜைக்கு ஆகாதவை.
விலக்கப்பட்ட பூக்களை அலங்காரம் செய்வதற்கு உபயோகித்துக் கொள்ளலாம்.
- வில்வ மரத்துக்கு ஸ்ரீவிருட்சம் என்றும், வில்வ பழத்துக்கு ஸ்ரீபழம் என்றும் பெயருண்டு.
- மூன்று இலைகள் கொண்ட வில்வதளம் சிவபெருமானின் மூன்று கண்களைக் குறிப்பதாக சொல்வார்கள்.
சிவ மூலிகைகளின் சிகரம்-வில்வம்
வில்வ மரத்துக்கு ஸ்ரீவிருட்சம் என்றும், வில்வ பழத்துக்கு ஸ்ரீபழம் என்றும் பெயருண்டு.
சிவ வழிபாட்டுக்கு எத்தனையோ மலர்கள் உகந்ததாக உள்ள போதிலும், வில்வ இலை தனித்துவம் கொண்டது.
வில்வ இலையால் சிவனை அர்ச்சனை செய்து வழிபடும் போது கிடைக்கும் பலன்கள் ஏராளம். யார் ஒருவர் தினமும் சிவாலயத்துக்கு சென்று வில்வத்தை வழங்கி ஈசனை வழிபடுகிறாரோ, அவரது சகல பாவங்களும் நீங்கி விடும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
வில்வமானது பாதிரி, வன்னி, மந்தாரை, மா ஆகிய மரங்களுடன் தேலோகத்தில் இருந்து வந்த 'பஞ்ச தருக்கள்' என்ற சிறப்பைப் பெற்றது.
பாற்கடலில் இருந்து லட்சுமிதேவி தோன்றிய போது அவளது கரங்களில் இருந்து வில்வ மரம் தோன்றியதாக வராக புராணத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே வில்வ மரத்தை மகாலட்சுமியின் வடிவமாக கருதுகிறார்கள்.
இதனால் வில்வ மரத்தை வழிபட்டால், ஈசனின் கருணை கிடைப்பதோடு, லட்சுமி தேவியின் பரிபூரணமான அருளையும் பெறலாம். வில்வ மரத்தில் மட்டுமின்றி வில்வ இலைகளிலும் மகாலட்சுமி வாசம் செய்வதால், வில்வ இலைகளுக்கு தனிச்சிறப்பு உண்டு.
வில்வங்களில் மகாவில்வம், கொடி வில்வம், சித்த வில்வம், கற்பூர வில்வம் உள்பட 21 முக்கிய வகைகள் உள்ளன. வில்வத்துக்கு கூவிளம், கூவிளை என்பவை உள்பட பல பெயர்களும் உண்டு.
வில்வ இலைகள் மூன்று தளம், ஐந்து தளம், ஏழு தளங்களாக இருப்பதை காணலாம். பெரும்பாலும் மூன்று இலைகளுடன் இருப்பதை வில்வ தளம் என்பார்கள். சிவனை மகிழ்ச்சிப்படுத்த ஒரே ஒரு வில்வதளம் போதும் என்பார்கள்.
மூன்று இலைகள் கொண்ட வில்வதளம் சிவபெருமானின் மூன்று கண்களைக் குறிப்பதாக சொல்வார்கள். மேலும் வில்வதளத்தில் இச்சா சக்தி, க்ரியாசக்தி, ஞான சக்தி ஆகிய மூன்று சக்திகளும் அதிதேவதைகளாக இருக்கிறார்கள்.
வில்வத்தில் ஐந்து தளம், ஏழு தளங்களுடன் இருப்பவை அரிதானதாக கருதப்படுகின்றன. இவற்றை மகா வில்வம், அகண்ட வில்வம் என்று உயர்வாக சொல்வார்கள்.
வில்வ மரங்கள் கிளை, கிளையாக இடையிடையே முட்களுடன் காணப்படும். இதில் வில்வ தளங்களை சிவன் என்றும், முட்களை சக்தி என்றும், கிளைகளை வேதங்கள் என்றும் வேரை முக்கோடி தேவர்கள் என்றும் நம் முன்னோர்கள் போற்றி வழிபட்டுள்ளனர். எனவேதான் சிவபூஜை சமயத்தில் வில்வத்தால் அர்ச்சனை செய்தால் தீய சக்திகள் விலகும். தோஷங்கள் ஓடோடி விடும் என்பார்கள்.
ஒரு வில்வ தளத்தை சிவனுக்கு அர்ப்பணம் செய்தால், மூன்று ஜென்ம பாவங்கள் விலகும் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனெனில் ஒரு வில்வ தளம் என்பது லட்சம் சொர்ண பூக்களுக்கு சமமானது.
சிவனுக்கு வில்வ இலைகள் மிகவும் பிடிக்கும் என்பதால் சிலர் வில்வ இலைகளைக் கொண்டு சிவனுக்கு லட்சார்ச்சனை, கோடி அர்ச்சனை செய்வார்கள். அத்தகையவர்களுக்கு சிவபெருமானின் அருள் மிக, மிக எளிதாக கிடைக்கும்.
அதாவது வில்வத்தின் துணை கொண்டு சிவபெருமானை எளிதாக நாம் அணுக முடியும். வில்வத்துக்கு மட்டும் எப்படி இந்த சிறப்பு கிடைத்தது என்று நீங்கள் யோசிக்கலாம். அதற்கு சில காரணங்கள் உதாரணமாக கூறப்படுகின்றன.
சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை. இது கடும் வெப்பத்தைக் கொடுக்கக் கூடியது. இதனால் ஈசனை சாந்தப்படுத்தவும், குளிர்ச்சிப்படுத்தவும் முனிவர்கள், ரிஷிகள் வில்வ தளத்தை பயன்படுத்தினார்கள். வில்வம் குளிர்ச்சியூட்டும் குணமுடையது.
வில்வ தளங்களால் ஈசன் குளிர்ச்சியை பெற்றார். எனவேதான் வில்வம், சிவபெருமானுக்கு பிடித்தமானதாக மாறியது.
வில்வ இலைகளுக்கு மற்றொரு சிறப்பும் உண்டு. இதை உண்டால் நமது உடலில் இருந்து அதிக சக்திகள் வெளியாகாது. ஜீரணம் செய்த சக்தி கூட சேமிப்பாகி விடும்.
இதன் மூலம் சிவத்துக்குள் அதிக சக்தியை சேமிக்க செய்யும் ஆற்றல் வில்வ தளங்களுக்கு இருப்பதை நம் முன்னோர்கள் கண்டு பிடித்தனர். எனவே சிவார்ச்சனைக்கு மற்ற மலர்கள், இலைகளை விட வில்வ தளங்களை பயன்படுத்தினார்கள்.
வில்வம் இத்தகைய முக்கியத்துவத்தை பெற்றதால் 'சிவமூலிகைகளின் சிகரம்' என்றழைக்கப்படுகிறது.
மூன்று இலைகளைக் கொண்ட வில்வ தளத்தை சிலர் தனி தனியாக கிள்ளி பிரித்து விடுவ துண்டு. அப்படி செய்யக்கூடாது. மூன்று இலை கொண்ட வில்வ தளத்தை அப்படியே அர்ச்சனை மற்றும் வழிபாட்டுக்கு பயன்படுத்த வேண்டும்.
அப்படி வில்வதளத்தை பயன்படுத்தினால்தான், அதில் சேமிக்கப்படும் அதிர்வலைகள் நமக்கு கிடைக்கும். இந்த அதிர்வலை இடமாற்றம் எப்படி நிகழ்கிறது தெரியுமா?
ஆயலங்களில் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்படும் மூல மூர்த்தியானது அஷ்ட பந்தனம், ராஜகோபுரம், கும்பாபிஷேகம் மூலம் எப்போதும் அதிர்வலைகளுடன் இருப்பதை நீங்கள் அறிந்து இருப்பீர்கள்.
பழமையான சிவாலயங்களில் ஈசனிடம் இருந்த வெளிப்படும் அதிர்வு அதிகம் இருப்பதை பலரும் அனுபவப்பூர்வமாக அறிவார்கள்.
அத்தகைய அதிர்வு கொண்ட ஆலயங்களில், லிங்கத்தின் மீது போடப்படும் வில்வ தளங்கள், அந்த அதிர்வுகளை தம்முள் கிரகித்து வைத்துக் கொள்ளும். பூஜை முடிந்து அர்ச்சகர் அந்த வில்வ தளத்தை நம்மிடம் தரும்போது பக்தியுடன் வாங்கி சட்டை பை அல்லது கைப்பைக்குள் வைத்துப் பாருங்கள்.
வில்வ இலைகளில் தேங்கியுள்ள ஈசனின் அதிர்வலைகள் நம் உடலுக்குள் ஊடுருவும். அந்த அதிர்வலைகள் அபார சக்தி கொண்டவை. அது நமது உடலிலும் உள்ளத்திலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி விடும். வில்வ தளங்களுக்கு மட்டுமே இப்படி மூலவர் சிலையில் இருந்து நம்மிடம் அதிர்வலைகளை கொண்டு வந்து சேர்க்கும் ஆற்றல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
வில்வத்தின் சிறப்பு பற்றி புராணங்களில் பல கதைகள் உள்ளன.
ஒரு தடவை காட்டுக்கு வேட்டையாட சென்ற வேடனை புலி துரத்தியது. வில்வ மரத்தின் மீது ஏறியவேடன் தூக்கம் வராமல் இருக்க, இலைகளை பறித்து போட்டுக் கொண்டே இருந்தான். அது மரத்தடியில் இருந்த லிங்கம் மீது விழுந்தது.
விடிந்த பிறகுதான் அவனுக்கு தான் ஏறியது வில்வ மரம் என்று தெரிந்தது. அன்றைய இரவு சிவராத்திரியாகவும் இருந்தது. வேடன் தன்னை அறியாமல் லிங்கம் மீது வில்வ தளங்களை போட்ட காரணத்தால் அவனுக்கு மோட்சம் கிடைத்தது.
மகா சிவராத்திரி நாளில் வில்வாஷ்டகம் பாராயணம் செய்து வில்வம் சார்த்தி, சிவபெருமானை வழிபட்டால், ஏழு ஜென்ம பாவம் விலகும் என்பது ஐதீகம்.
ஊழிக்காலத்தில் அனைத்தும் அழியும் என்று உணர்ந்த வேதங்கள் தாங்கள் அழியாதிருக்க என்ன வழி என்று ஈசனிடம் கேட்க, ஈசனும் திருவைகாவூர் தலத்தில் வில்வ மரத்தின் வடிவில் நின்று தவம் செய்யுமாறு அருளினார். அதன்படி வேதங்களும் வில்வமரங்களாக தவம் இயற்றியதால் திருவைகாவூர் என்ற தலம் வில்வராண்யம் என்று சிறப்புப் பெற்றது.
இத்தகைய சிறப்புடைய வில்வ மரம் திருவையாறு, திருவெறும்பூர், ராமேஸ்வரம் உள்பட 30 க்கும் மேற்பட்ட ஆலயங்களில் தல விருட்சமாக உள்ளது. வீடுகளிலும் வில்வ மரம் வளர்க்கலாம்.
வீட்டில் வில்வ மரம் வளர்த்தால் அஸ்வ மேத யாகம் செய்த பலன் கிடைக்கும். ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த புண்ணியம் உண்டாகும். 108 சிவாலயங்களை தரிசனம் செய்த பலனும், புண்ணிய நதிகளில் நீராடிய பலனும் கிடைக்கும்.
வில்வ மரம் வளர்ப்பவர்களை ஏழரை சனி நெருங்காது. வில்வ மரத்தை தினமும் பூஜித்தால் செல்வம் பெருகும். கடன் தொல்லைகள் மறையும். வெள்ளிக்கிழமைகளில் வில்வ மரத்தின் கீழ் அமர்ந்து லட்சுமி துதி சொல்லி நைவேத்தியம் படைத்து வழிபட்டால் அளவிட முடியாத அளவுக்கு அற்புதங்கள் நடக்கும்.
வில்வ மரத்துக்கு ஸ்ரீவிருட்சம் என்றும், வில்வ பழத்துக்கு ஸ்ரீபழம் என்றும் பெயருண்டு. எனவே வில்வ மரத்தை பார்த்தும் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டும்.
மருத்துவ ரீதியாகவும் நிறைய பலன்களை வில்வம் தருகிறது. தினமும் வில்வ மரத்தடியில் தியானம் செய்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஊளைச் சதை குறையும். வில்வ இலை பொடியை சாப்பிட்டால் கண் பார்வை தெளிவாகும். பல் வலி நீங்கும். சளி, இருமல், சைனசுக்கு வில்வ இலை பொடி சிறந்த மருந்தாகும்.
கொழுப்பு கட்டுப்படும். ரத்த அழுத்த பிரச்சினை தீரும். சர்க்கரை நோய் குணமாகும். அல்சர் பிரச்சினை வரவே வராது. ஜீரணக்கோளாறுகள் சரியாகும். உடல் குளிர்ச்சி பெறும். இதனால் தோல் சம்பந்தபட்ட எந்த வியாதியும் வராது.
இன்னும் ஏராளமான மருத்துவ பலன் தரும் வில்வ தளத்தை பறிக்கும் போது பயபக்தியுடன் பறிக்க வேண்டும். அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, திங்கட்கிழமை, அஷ்டமி, நவமி, சதுர்த்தி நாட்களில் வில்வம் இலைகளை பறிக்கக் கூடாது.
வில்வ இலைகளை சுத்தம் செய்து எத்தனை தடவை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். வில்வம் காய், பழத்தை யாகத்துக்கு பயன்படுத்தலாம்.
வில்வதளத்தை பறித்த பிறகு 6 மாதம் வரை வைத்து வீட்டில் பூஜை செய்யலாம். உலர்ந்த வில்வமும் புனிதமானது.
- அப்போது மண்வெட்டி பாறை ஒன்றில் மோத அந்தப்பாறையிலிருந்து ரத்தம் பீறிட்டது.
- நடந்த அதிசயங்களைக்கண்டு அவர்கள் பிரமித்து நின்றார்கள்.
காணிப்பாக்கம் விநாயகர் மகிமை
காணிப்பாக்கம் என்று இப்போது அழைக்கப்படும் ஸ்தலம். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் விஹாபுரி கிராமமாக இருந்தது.
அந்த கிராமத்தில் மூன்று நண்பர்கள் ஒற்றுமையாக விவசாயம் பார்த்துக்கொண்டிருந்தார்கள். மூவருமே உடல்குறை உள்ளவர்கள். ஒருவரால் பேச முடியாது, ஒருவர் பார்வையற்றவர், முன்றாமவரால் கேட்க இயலாது.
அவர்கள் கிணற்றிலிருந்து ஏற்றம் மூலம் நீர் முகந்து வயல்களில் பாய்ச்சிக் கொண்டிருந்தார்கள். செவியற்றவரும் பார்வையற்றவரும் ஏற்றக்காலில் ஏறி நின்று மிதிக்க, ஏற்றம் சுமந்துவரும் நீரை கீழே இருக்கும் பேச்சிழந்தவர் கையால் பற்றி கால்வாயில் ஊற்றுவார்.
வறட்சியால் கிணற்றில் நீர் வற்றிவிடவே பேச்சிழந்தவர் உள்ளே இறங்கி ஊற்று நீர் கிடைக்குமா என்று பார்க்க மண்வெட்டியால் தோண்டினார். அப்போது மண்வெட்டி பாறை ஒன்றில் மோத அந்தப்பாறையிலிருந்து ரத்தம் பீறிட்டது.
அதைப்பார்த்த அவர் பயந்து "ஐயோ" என்று அலறினார். கிணற்றுக்கு மேலே நின்றிருந்த பார்வையற்றவருக்கும் இவர் கத்தியது கேட்க இருவரும் உள்ளே எட்டிப்பார்த்தனர். செவியற்றவர் கேட்டார் பார்வையற்றவர் பார்த்தார்.
கிணற்றிலிருந்து நீருக்கு பதிலாக குருதி பெருகுவதைக்கண்டு இவர்கள் கூச்சலிட வயிலில் வேலை செய்துகொண்டிருந்தவர்கள் ஓடோடி வந்தார்கள். நடந்த அதிசயங்களைக்கண்டு அவர்கள் பிரமித்து நின்றார்கள். சில விநாடிகளுக்குப் பிறகு பிரமிப்பிலிருந்து விடுபட்டு கிணற்றுக்குள் இறக்கினர்.
உள்ளே ஒரு பாறை அமைப்பிலான விநாயகர் சிலையையும் அதன் தலையிலிருந்து ரத்தம் வருவதையும் பார்த்தனர். ஒரு துணி எடுத்து குருதி பெறுகிய இடத்தில் வைத்துக்கட்டினார்கள். பிறகு அந்த சிலையை வெளியே எடுத்து வந்தார்கள்.
மேலே வந்து விநாயகரை நிறுவி, தற்காலிகக்கோவில் ஒன்றை நிர்மானித்தார்கள். அதன் பிறகு கிராமமக்கள் ஒவ்வொருவரும் அவரை வேண்டிக்கொண்டு உடைத்த தேங்காய்களிலிருந்து, வெளிப்பட்ட நீர் ஒரு காணி பரப்பளவில் பரவிநின்றதாம்.
அதாவது சுமார் ஒன்றேகால் ஏக்கர்! காணி நிலத்தில் பாரகமானதால் (தெலுங்கில் பாரகம் என்றால் நீர் பாய்தல் என்று பொருள்) இந்ததலம் காணிப்பாரகமாகி பிறகு காணிப்பாக்கம் ஆனது.
"ஸ்ரீகாணிப்பாக்கம்" வரசித்த விநாயகர் சாட்சியாக, நான் சொல்வதெல்லாம் சத்தியம் என்று எவர் கூறுகிறாரோ, அவருடைய இந்த "சத்தியப்பிரமாணம்" இன்றளவும் ஆந்திர மாநிலம் கிராமப் பஞ்சாயத்துகளில் நூற்றுக்கு நூறு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. சத்தியத்துக்கு மாறாக எவரேனும் நடத்துகொண்டால், அவர் தொண்ணூறு நாட்களுக்குள்ளேயே விநாயகரால் தண்டிக்கப்படுவார்.
இதை அனுபவப்பூர்வமாக மக்கள் கண்டிருக்கிறார்கள். ஆந்திர மாநிலம் சித்தூர் பேருந்து நிலையத்திலிருந்து (12) கிலோ மீட்டர் பயணத்தில் காணிப்பாக்கத்தை அடையலாம்.
சுயம்புவான விநாயகர் கிணற்றின் மேல் அமைக்கப்பட்டுள்ளார். சுற்றி என்றும் வற்றாத கிணற்று நீரே பிரசாதமாக வழங்கப்படுகிறது. இவருக்கு அபிஷேகம், அர்ச்சனை, ஆராதனை அனைத்தும் உண்டு. ஆனால் விசேஷ அலங்காரம் எதுவும் செய்வதில்லை.
இவ்விநாயகர் ஆண்டுதோறும் அகலமாகப் பெருகி வருவது ஆன்மிக அதிசயமாக விளங்குகிறது. அன்று விநாயகருக்குச் செய்வித்த வெள்ளிக்கவசம் இன்று சிறியதாகவிட்டது. என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!
விநாயகர் வளர்வது போலவே அவரை தரிசிக்க வரும் பக்தர்களும் வளம் பெருக வாழ்கிறார்கள். சாதாரண நாளில் கூட நிரம்பிவழியும் பக்தர் கூட்டம் இதை உண்மை என்று நிரூபிக்கிறது.
நல்லொழுக்கம் கைவரப்பெறவும் இவர் வரம் அருள்கிறார். ஆமாம்.... இவர் முன் நின்று இனி குடிக்க மாட்டேன், புகைக்க மாட்டேன் சூதுவை நாடமாட்டேன் என்று மனமுருக வேண்டுவோர் அந்தத்தீயப்பழக்கங்களிலிருந்து விடுபடுகிறார்களாம்!
விநாயகரின் தந்தை சிவபெருமான் திருவானைக்கா என்னும் திருத்தலத்தில் லிங்க வடிவில் தண்ணீருக்குள் இருப்பது போல் ஆந்திர மாநிலம் சித்தூருக்கு 12 கி.மீ. தொலைவில் உள்ள காணிப்பாக்கத்தில் உள்ள (வரசித்தி) காணிப்பாக்கம் விநாயகர் கோவில் மூலவரான பிள்ளையார் முழங்கால் வரை உள்ள தண்ணீருக்குள் இருந்தபடி அருள் தருகிறார்.
- வீடுகளில் பிள்ளையார் அகவல், காப்பு, புராணம் போன்றவற்றைப்படித்து வரலாம்.
- அடுத்த நாளோ ஓரிருநாட்களிலோ ஆற்றிலோ கடலிலோ கரைத்தல் வேண்டும்.
விநாயகர் சதுர்த்தி சிறப்பு
ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தியில் வருவது விநாயகர் சதுர்த்தி விநாயகரின் அவதார தினம். சிவனார் அபிஷேகப்பிரியர், திருமால் அலங்காரபிரியர், பிள்ளையாரோ நைவேத்தியப்பிரியர்.
அவருக்கு பிடித்த அவல், பொரி, கடலை கொழுக்கட்டை, கரும்பு போன்ற நிவேதனப் பொருள்களை ஏழை எளியோருக்கு தானம் செய்தால் நல்லது.
விநாயகர் சதுர்த்தி அன்று அதிகாலையிலேயே எழுந்து, நற்சிந்தனையோடு நன்னீரில் குளித்துப் பூஜைக்கு வேண்டிய பொருள்களைச்சேகரிக்க வேண்டும்.
களிமண்ணில் செய்த பிள்ளையாரைப் பல்வேறு விதமான இலைகள், பூக்களில் (21 வகையான) அருகம் புல்லையும் இரண்டு இரண்டாக சேர்த்து பூஜிக்க எடுத்து வைத்து கொள்ளலாம்.
வீடுகளில் பிள்ளையார் அகவல், காப்பு, புராணம் போன்றவற்றைப்படித்து வரலாம். பிள்ளையார் வழிபாடு என்ற அத்தியாயத்தில் கூறியுள்ளபடி, அவருக்கு உபச்சரங்களான,
ஆவாகனம், ஆசனம், ஸ்தாபனம், பாதபூஜை, நீர் அளித்தல், பால், தயிர், மோர் அளித்தல், பஞ்சாமிருதம், துணிகள், சந்தனம், குங்குமம், ஆபரணங்கள், மலர், அட்சதை, தூபம், தீபம், குடை, தாம்பூலம், சுற்றி வணங்குதல், தரையில் வீழ்ந்து வணங்குதல், சாமரம் வீசுதல், போன்ற சேவைகளை செய்தல் வேண்டும்.
வீட்டில் இது போல் நம்மால் செய்ய முடியாதவர்கள் கோவில் சென்று சிறப்பாக சேவை செய்தல், பாடல் கேட்டல், காப்பு, அகவல், படிப்பதும் நல்ல பயன் தரும்.
பூஜையில் வைத்த பிள்ளையார் பிம்பத்தை அடுத்த நாளோ ஓரிருநாட்களிலோ ஆற்றிலோ கடலிலோ கரைத்தல் வேண்டும்.
ஒளவையார் விநாயகருக்கு பாலும், தேனும் பாகும், பருப்பும் கொடுத்தார்.
அருணகிரிநாதர் விநாயகப் பெருமானுக்கு உகந்ததாக கனியும், அப்பம், அவல், பொரி, அமுது, இளநீர், எள்ளுருண்டை, வெள்ளரி, விளாம்பழம், நாவற்பழம் போன்ற பலபொருள்களைத் திருப்புகழில் குறிப்பிடுகின்றார்.
- வாழைப் பழத்தில் பிள்ளையார் செய்து வழி பட்டால் வம்ச விருத்தி உண்டாகும்.
- விபூதியால் விநாயகர் பிடித்து வழிப்பட்டால் உஷ்ண நோய்கள் நீங்கும்.
பிள்ளையார் உருவ பலன்கள்
மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழிபட, சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.
மண்ணால் செய்த பிள்ளையாரை வழிபட, நல்ல பதவி, அரசு வேலை கிடைக்கும்.
குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்க செவ்வாய் தோஷம் அகலும்.குழந்தைகளைப் படிப்பில் வல்லவராக்குவார்.
புற்று மண்ணினால் பிள்ளையார் செய்து வணங்க நோய்கள் அகலும். விவசாயம் செழிக்கும்
வெல்லத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் உடலில் உள்ளேயும்,வெளியேயும் உள்ள கட்டிகள்(கொப்பளம்) கரையும்.வளம் தருவார்
உப்பினால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் எதிரிகளின்தொல்லை நீங்கும்.எதிரிகளை விரட்டுவார்.
வெள்ளெருக்கில் பிள்ளையார் செய்து வணங்கினால் பில்லி, சூனியம் விலகும். செல்வம் உயரச் செய்வார்.
விபூதியால் விநாயகர் பிடித்து வழிபட்டால் உஷ்ண நோய்கள் நீங்கும்.
சந்தனத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் புத்திர பேறு கிடைக்கும்.
சாணத்தால் பிள்ளையார் செய்துவழிபட்டால் சகல தோஷமும் விலகி, வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வழி வகுக்கும்.
வாழைப் பழத்தில் பிள்ளையார் செய்து வழிபட்டால் வம்ச விருத்தி உண்டாகும்.
வெண்ணெய்யில் பிள்ளையார் செய்து வழிபட்டால் கடன் தொல்லை நீங்கும்.
சர்க்கரையில் பிள்ளையார் செய்து வழிபட சர்க்கரை நோயின் வீரியம் குறையும்.
பசுஞ்சாண விநாயகர்- நோய்களை நீக்குவார்.
கல் விநாயகர்- வெற்றி தருவார்.
யானைத்தலை விளக்கம்
தலை என்பது உள் அவயங்களான மூளை, கண், காது, வாய், மூக்கு என முக்கியமான உறுப்புகளைத் தன்னுள் கொண்ட ஒரு கூட்டமைப்பு.
அறிவின் இருப்பிடத்தை விசாலமான நுண்ணறிவை, பேரறிவை, காக்க அமைந்ததே யானைத்தலை.
யானைத்தலையானின் தலையில் கிரீடம் சூடி அவரை வணங்கும் மக்களுக்கு ராஜபோக வாழ்வுகிட்டும்.
- கிருத யுகத்தில் சிம்ம வாகனத்தில்தான் பிள்ளையார் வந்ததாக புராணங்கள் கூறுகின்றன.
- பரப்பிரம்ம சொரூபமாக விளங்குபவர் கணபதி,
விநாயகரின் வாகனங்கள்
விநாயகர் மூஷிக வாகனர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். ஆனால் அவர் மூஞ்சுறுவைத் தவிர மயில், சிங்கம், ரிஷபம், யானை என்ற வாகனங்களிலும் பவனி வருவார் என்பது அனைவருக்கும் தெரியாத ஒன்றாகும்.
கிருத யுகத்தில் சிம்ம வாகனத்தில்தான் பிள்ளையார் வந்ததாக புராணங்கள் கூறுகின்றன. இன்றும் ஹேரம்ப கணபதி சிம்ம வாகனத்தில்தான் வீற்றிருப்பார்.
திரேதா யுகத்தில் முருகனுக்கு உதவுவதற்காக மயில் வாகனத்தில் வந்தார்.
ஆண் குழந்தை தரும் விநாயகர்
திண்டிவனம்-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் 12 கி.மீ மேற்கே அமைந்துள்ள கிராமம் தீவனூர்.
அந்த கிராமத்தில் உள்ள பொய்யாமொழிப் பிள்ளையார் கோவிலில் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு முதல் குழந்தை ஆண் குழந்தையாகப் பிறக்கும் என்பது அங்குள்ளவர்களின் நம்பிக்கை.
கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்ற சொல்லில் உள்ள "க" என்னும் எழுத்து ஞானத்தையும், "ண" என்னும் எழுத்து ஜீவன்களின் மோட்சத்தையும், "பதி" என்னும் சொல் தலைவன் என்பதையும் குறிக்கிறது.
பரப்பிரம்ம சொரூபமாக விளங்குபவர் கணபதி, ஞானத்திற்கும் மோட்சத்திற்கும் அவரே தலைவன் என்பதால்தான் அவர் கணபதி என்றழைக்கப்படுகிறார்.
மேலும் கணபதி என்னும் சொல் சிவபெருமானின் கணங்களுக்கு அதிபதி என்பதையும் குறிக்கும்.
விநாயகரின் அன்பு வேண்டுமா?
1. விநாயகர் அகவல்
2. விநாயகர் கவசம்
3. விநாயகர் சகஸ்ரநாமம்
4. காரிய சித்தி மாலை
5. விநாயகர் புராணம்
ஆகியவற்றை தினமும் படித்து அருகம்புல்லால் விநாயகனை வழிபட்டு வந்தால் விநாயகரின் அருள் நமக்குக் கிடைக்கும்.
- மாதுளை இலை - நல்ல புகழை அடையலாம்
- மாயையை அகற்றினால் நல்ல பண்புகள் வெளியில் வரும் என்பதை உணர்த்தவே கொழுக்கட்டை படைக்கப்படுகிறது.
கணபதி அர்ச்சனை
விநாயக புராணத்தில் கணபதிக்கு என்னென்ன இலைகளை கொண்டு அர்ச்சனை செய்தால் நமக்குக் கிடைக்கும் பலன்கள் என்னவென்பதை விரிவாகவே கூறியுள்ளார்கள்.
மருவு இலை- துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகும்
எருக்க இலை- குழந்தைப் பேறு
அரச இலை- எதிரிகள் அழிவார்கள்
அகத்தி இலை- துயரங்கள் நீங்கும்
அரளி இலை- அனைவரும் அன்போடு இருப்பார்கள்.
வில்வ இலை- இன்பங்கள் பெருகும்
வெள்ளெருக்கு- சகலமும் கிடைக்கும்
மாதுளை இலை- நல்ல புகழை அடையலாம்
கண்டங்கத்திரி இலை- லட்சுமி கடாட்சம்
கொழுக்கட்டை நைவேத்தியம்
தேங்காய் மற்றும் வெல்லம் சேர்த்து செய்யப்படும் மோதகம் என்றழைக்கப்படும் கொழுக்கட்டை கணபதிக்கு மிகவும் பிடித்தமான நைவேத்தியம் ஆகும்.
கொழுக்கட்டையின் தத்துவம் என்ன வென்று அறிவீர்களா?
மேலே இருக்கும் மாவுப் பொருள் அண்டம், உள்ளே இருக்கும் பூரணம் பிரம்மம், நமக்குள் இருக்கின்ற நல்ல பண்புகளான பூரணத்தை மாவான மாயை மறைத்துக் கொண்டுள்ளது.
மாயையை அகற்றினால் நல்ல பண்புகள் வெளியில் வரும் என்பதை உணர்த்தவே கொழுக்கட்டை படைக்கப்படுகிறது.
முதன் முதலாக விநாயகருக்கு கொழுக்கட்டையைப் படைத்து வழிபட்டவர் யார் என்று தெரியுமா?
வசிஷ்டரின் மனைவியான அருந்ததி.
பிள்ளையார் செய்வோம்
சாணம், புற்றுமண், மஞ்சள், வெல்லம், எருக்கம் வேர், சந்தனம் ஆகியவற்றில் பிள்ளையார் உருவம் செய்து வழிபட்டால் அனைத்துவிதமான நலன்களும் பெற்று மோட்சம் அடைவர் என்று விநாயக புராணம் கூறுகின்றது.
விநாயகருக்கு உகந்தவை
தும்மைப்பூ, செம்பருத்தி மலர், சங்கு புஷ்பம், எருக்கம்பூ, மாவிலை, அருகம்புல், வில்வ இலை ஆகியவை விநாயகரை அர்ச்சனை செய்யவும் மாலையாக அணிவிக்கவும் மிகவும் உகந்தவையாக கருதப்படுகிறது.
விநாயகரின் அஷ்ட அவதாரங்கள்
1.வக்ரதுண்டர்
2. மஹோத்ரதர்
3. கஜானனர்
4.லம்போதரர்
5. விகடர்
6. விக்னராஜர்
7. தூம்ரவர்ணர்
8. சூர்ப்பகர்ணர்
என்று எட்டு விதமான அவதாரங்களை விநாயகப் பெருமான் எடுத்ததாக விநாயக புராணம் கூறுகின்றது. அவர் எதற்காக எட்டுவிதமான அவதாரங்களை எடுத்தார் என்றால், மனிதர்களிடையே காணப்படும் தீய குணங்கள் எட்டு (காமம், குரோதம், லோபம், மதம், மாச்சர்யம், மமதை, மோகம், அகந்தை)
அந்த எட்டு குணங்களையும் நீக்கி நமக்கு ஞானமளிப்பதற்காகவே அவர் எட்டுவிதமான அவதாரங்களை எடுத்தார்.
அந்த எட்டுவிதமான அவதாரங்களையும் நினைவிற்குக் கொண்டு வந்து வணங்க விநாயக மந்திரம் துணைபுரிகிறது.
இந்த மந்திரத்தை தினசரி பாராயணம் செய்பவர்கள் அனைத்து விதமான சந்தோஷங்களையும் அடைவார்கள்.