என் மலர்
நீங்கள் தேடியது "கர்நாடக ஐகோர்ட்"
- போலீசாருக்கு முகநூல் நிறுவனம் சார்பில் எந்த பதிலும் அளிக்கவில்லை
- வழக்கு விசாரணையை வருகிற 22-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
பெங்களூரு :
கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்தவர் சைலேஷ் குமார். இவர் சவுதி அரேபியாவில் கடந்த 25 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். இவர் தனது முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு ஆதரவாக கருத்து பதிவிட்டிருந்தார். இதனால் அவருக்கு செல்போன் மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளது. இதனால் பயந்துபோன அவர் தனது முகநூல் கணக்கை நிரந்தரமாக நீக்கினார்.
இதற்கிடையே அவரது முகநூல் பக்கத்தில் இருந்து சவுதி அரேபியா மன்னருக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்து ஒன்று பதிவிடப்பட்டது. இதுதொடர்பாக சைலேஷ் குமாருக்கு சவுதி அரேபியாவில் 15 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டார். இதுகுறித்து அறிந்ததும், மங்களூருவில் உள்ள அவரது மனைவி கவிதா, மங்களூரு போலீசில் புகார் அளித்தார். அப்போது தனது கணவர், முகநூல் பக்கத்தை நிரந்தரமாக நீக்கி விட்டதாகவும், போலி வலைத்தள கணக்கில் இருந்து சவுதி மன்னர் குறித்து அவதூறு கருத்து பதிவிடப்பட்டுள்ளதாகவும் கூறி இருந்தார்.
இந்த நிலையில் விசாரணையை தொடங்கிய மங்களூரு போலீசார், போலி முகநூல் கணக்கு தொடங்கியது குறித்து முகநூல் நிறுவனத்திடம் கடிதம் வாயிலாக தகவல் கேட்டுள்ளனர். ஆனால், போலீசாருக்கு முகநூல் நிறுவனம் சார்பில் எந்த பதிலும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து கடந்த 2021-ம் ஆண்டில், விசாரணையில் தாமதம் ஏற்படுவதை குறிப்பிட்டு கவிதா, கர்நாடக ஐகோர்ட்டை நாடினார்.
இந்த வழக்கு கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி கிருஷ்ணா தீக்ஷித் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நேரில் ஆஜரான மங்களூரு போலீஸ் கமிஷனர் குல்தீப் குமார் ஜெயின் கூறுகையில், விசாரணைக்காக முகநூல் நிறுவனத்தை நாடியபோது அவர்கள் முறையாக ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று கூறினார்.
இதையடுத்து நீதிபதி பேசுகையில், போலி கணக்குகள் குறித்து விசாரணை நடத்தும் போலீசாருக்கு உரிய ஒத்துழைப்பு வழங்காமல் இருந்தால், இந்தியாவில் முகநூல் நிறுவனத்தின் செயல்பாடுகள் முழுமையாக முடக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார். மேலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு வெளிநாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய குடிமகன் சைலேஷ் குமார் குறித்த அனைத்து தகவல்களையும் விசாரித்து சீல் வைக்கப்பட்ட ஆவணமாக கோர்ட்டில் சமர்பிக்குமாறு உத்தரவிட்டார்.
மேலும் இந்த வழக்கு தொடர்பான முழுமையான தகவல்களை பெற்று சமர்ப்பிக்காமல் இருந்தால், சம்பந்தப்பட்ட வெளியுறவு துறை செயலாளருக்கு கோர்ட்டு சார்பில் தனிப்பட்ட சம்மன் அனுப்பப்படும் என மத்திய அரசை நீதிபதி எச்சரித்தார். இதையடுத்து அனைத்து ஆவணங்களையும் கோர்ட்டில் முகநூல் நிறுவனம் சமர்ப்பிக்க வேண்டும் என கூறி, வழக்கு விசாரணையை வருகிற 22-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
- தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் சுமார் 30 கிலோ தங்க, வைர நகைகளை பறிமுதல் செய்தனர்.
- கர்நாடக அரசு வசம் உள்ள தங்க நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.
பெங்களூரு:
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த பெங்களூரு தனிக்கோர்ட்டு ஜெயலலிதா உள்பட 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும், மற்ற மூவருக்கு தலா ரூ.10 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், தனிக்கோர்ட்டின் தீர்ப்பு ரத்து செய்யப்பட்டது. இதற்கு எதிராக கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. பெங்களூரு தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்து தீா்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு வருவதற்கு முன்பே ஜெயலலிதா மரணம் அடைந்ததை அடுத்து அவரது பெயர் தீர்ப்பில் இருந்து நீக்கப்பட்டது. மற்ற 3 பேரும் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் சிறை தண்டனையை அனுபவித்தனர்.
இந்த வழக்கில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் சுமார் 30 கிலோ தங்க, வைர நகைகளை பறிமுதல் செய்தனர். ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலத்தை கைப்பற்றினர். அந்த தங்க நகைகள் தற்போது கர்நாடக அரசின் கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி, ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விடக்கோரி பெங்களூரு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த மனு அந்த சிறப்பு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி மோகன், இந்த வழக்கின் செலவு தொகை ரூ.5 கோடியை கர்நாடக அரசுக்கு வழங்க வேண்டும் என்றும், அதை வங்கி வரைவோலையாக (டி.டி.) வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
மேலும் கர்நாடக அரசு வசம் உள்ள தங்க நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும். இவற்றை பெற தமிழக போலீஸ் துறை முதன்மை செயலாளர் கோர்ட்டில் நேரில் ஆஜராகி பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அவற்றை ஏலம் விட்டு அபராதத்தை செலுத்த வேண்டும், வழக்கில் தொடர்புடைய நிலத்தின் மதிப்பை விரைவாக தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கின் அடுத்த விசாரணை வருகிற பிப்ரவரி மாதம் 21-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி, "ஜெயலலிதாவின் நகை உள்ளிட்ட பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்கும்படி பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதில் எனக்கு உடன்பாடில்லை.
நான் கர்நாடக அரசின் சட்டத்துறையை அணுகி, இந்த உத்தரவுக்கு எதிராக மனு தாக்கல் செய்யுமாறு வற்புறுத்த முடிவு செய்துள்ளேன். வழக்கு விசாரணை இங்கு நடைபெற்று கொண்டிருக்கும்போது, இங்கு தான் அந்த பொருட்களை ஏலம் விட வேண்டும்" என்றார்.
- ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
- ஜெயலலிதாவின் பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற பெங்களூரு சிறப்பு கோர்ட்டின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார்.
பெங்களூரு:
சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஏலம் விடும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த பெங்களூரு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு, ஜெயலலிதாவின் பொருட்களை தமிழக அரசிடம் மார்ச் மாதம் 6, 7-ந் தேதிகளில் ஒப்படைக்குமாறு கடந்த மாதம் (பிப்ரவரி) 19-ந் தேதி உத்தரவிட்டது.
அதன்படி கர்நாடக அரசு ஜெயலலிதாவின் தங்க, வைர, வைடூரிய நகைகள், வெள்ளி பொருட்களை தமிழக அரசிடம் இன்று (புதன்கிழமை) ஒப்படைக்க ஏற்பாடுகளை செய்திருந்தது. முன்னதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ஜெயலலிதாவின் வாரிசான தன்னிடம், அவரது பொருட்களை ஒப்படைக்க வேண்டும் என்று கோரி உரிமை கொண்டாடினார். ஆனால் அவரது மனுவை சிறப்பு கோர்ட்டு தள்ளுபடி செய்துவிட்டது. இந்த நிலையில் கர்நாடக ஐகோர்ட்டில் ஜெ.தீபா மேல்முறையீடு செய்திருந்தார். அந்த மனு நேற்று நீதிபதி முகமது நவாஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், ஜெயலலிதாவின் வாரிசிடம் தான் அவரது பொருட்களை ஒப்படைக்க வேண்டும் என்றும், சொத்து குவிப்பு வழக்கின் இறுதி தீர்ப்பில் இருந்து ஜெயலலிதாவின் பெயர் நீக்கப்பட்டுள்ளதால், அவரை குற்றவாளியாக கருத முடியாது என்றும் வாதிட்டார்.
மேலும், ஜெயலலிதாவின் பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்கும்படி பெங்களூரு சிறப்பு கோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவுக்கு தடை விதிக்குமாறும் கோரினார். அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் கிரண் ஜவலி, இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய காலஅவகாசம் வழங்குமாறு கோரினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி முகமது நவாஸ், ஜெயலலிதாவின் பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற பெங்களூரு சிறப்பு கோர்ட்டின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார். மேலும் இதுதொடர்பான அடுத்த விசாரணையை வருகிற 26-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். ஐகோர்ட்டின் இந்த உத்தரவால், ஜெயலலிதாவின் பொருட்கள் திட்டமிட்டபடி இன்று தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட மாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.
- மனு மீதான விசாரணை நீதிபதி நாகபிரசன்னா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
- பெண் தரப்பில் ஆஜரான வக்கீல் கூறுகையில், முதல் கணவர் இறந்ததால் பெண் மறுமணம் செய்துள்ளார்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் விஜயநகர் மாவட்டம் ஒசப்பேட்டேயை சேர்ந்தவர் ராஜா உசேன். திருமணமான இவர் மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்தநிலையில் ராஜா உசேன் தன்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக ஒரு பெண் போலீசில் புகார் அளித்திருந்தார்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ராஜா உசேன், தன் மீது பதிவான வழக்கை ரத்து செய்ய கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் தனது மனைவிக்கு ஏற்கனவே 8 முறை திருமணமாகி உள்ளதாக கூறி அதிர்ச்சி தகவலை தெரிவித்து இருந்தார். மேலும் ஏற்கனவே 8 பேரை திருமணம் செய்து என்னை மோசடி செய்ததுடன், தன் மீது பொய்யான வரதட்சணை புகார் கொடுத்துள்ளதாகவும், அந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி நாகபிரசன்னா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பெண் தரப்பில் ஆஜரான வக்கீல் கூறுகையில், முதல் கணவர் இறந்ததால் பெண் மறுமணம் செய்துள்ளார். அவர் 8 திருமணங்கள் செய்யவில்லை. 4 பேரை மட்டுமே திருமணம் செய்துள்ளார். ஆனால் ராஜா உசேன், தனது மனைவி 8 பேரை திருமணம் செய்ததாக பொய்யான தகவலை பதிவு செய்துள்ளார். இதனால் பெண்ணுக்கும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. எனவே ராஜா உசேன் மீது மானநஷ்ட வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம் என்றார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த ராஜா உசேன் தரப்பு வக்கீல், அந்த பெண் 8 பேரை திருமணம் செய்ததற்கான சாட்சிகள் எங்களிடம் உள்ளது. இதுவரை 5 போ் கோர்ட்டில் ஆஜராகி உள்ளனர். இன்னும் 3 பேர் மட்டும் ஆஜராக வேண்டி உள்ளது. அவர்கள் சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் பெண் தரப்பில் வேண்டுமென்றே பொய்யான தகவல்களை முன் வைக்கப்படுகிறது.
இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று கூறினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நாகபிரசன்னா, ராஜா உசேன் தரப்பில் கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி கூறினார். மேலும் வழக்கு விசாரணையை வருகிற 27-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
- பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சந்திரா அடைக்கப்பட்டார்.
- 10 ஆண்டுகளாக அவர் ஆயுள் தண்டனை கைதியாக சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.
பொதுவாக குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு சிறை தண்டனை அனுபவிக்கும் கைதிகள் தங்களது குடும்பத்தினர் உயிரிழப்பு, மகன், மகளின் திருமணத்திற்காகவும், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டாலும் பரோல் கேட்பது வழக்கம். அதன்படி, கோர்ட்டுகளும் கைதிகளுக்கு பரோலில் சிறையில் இருந்து வெளியே வருவதற்கு அனுமதி வழங்கும்.
இந்த நிலையில், கர்நாடக ஐகோர்ட் விவசாயம் செய்வதற்காக ஆயுள் தண்டனை கைதிக்கு 3 மாதம் பரோல் வழங்கி உள்ளது. அதாவது ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா சித்ததேவனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரா (வயது 36). இவருக்கும், ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. அந்த கள்ளத்தொடர்புக்கு இடையூறாக பெண்ணின் கணவர் இருந்துள்ளார்.
இதையடுத்து, அந்த பெண்ணின் கணவரை சந்திரா கொலை செய்திருந்தார். இந்த கொலை வழக்கில் ராமநகர் மாவட்டம் கனகபுரா கூடுதல் செசன்சு கோர்ட்டு, கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 23-ந் தேதி சந்திராவுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறி இருந்தது. இதையடுத்து, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சந்திரா அடைக்கப்பட்டார். 10 ஆண்டுகளாக அவர் ஆயுள் தண்டனை கைதியாக சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.
இதற்கிடையில், கனகபுராவில் தனது தந்தை பெயரில் இருக்கும் நிலத்தில் விவசாயம் செய்யப் போவதாகவும், அதற்காக தனக்கு பரோல் வழங்க வேண்டும் என்று கோரி சந்திரா சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அவர் கடந்த 10 ஆண்டுகளாக சிறையில் இருந்து பரோலில் வெளியே வரவில்லை என்பதையும் மனுவில் சந்திரா குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட் நீதிபதி ஹேமந்த் சந்தனகவுடர் முன்னிலையில் நடைபெற்று வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, சந்திரா கடந்த 10 ஆண்டுகளாக பரோலில் வெளியே வராமல் இருப்பதை கருத்தில் கொண்டும், தந்தைக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்று நினைப்பதாலும், அவருக்கு 90 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த 90 நாட்களில் விவசாய பணிகளை மட்டுமே சந்திரா மேற்கொள்ள வேண்டும் என்றும், வேறு எந்த விதமான சட்டவிரோத செயல்களிலும், குற்றங்களிலும் ஈடுபடக்கூடாது என்றும் நீதிபதி ஹேமந்த் சந்தனகவுடர் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
- விலை உயர்ந்த பொருட்கள் பெங்களூரு விதான சவுதாவில் உள்ள கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
- ஜெயலலிதாவின் விலை உயர்ந்த பொருட்கள் விரைவில் ஏலம் விடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
பெங்களூரு:
சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு கடந்த 2014-ம் ஆண்டு பெங்களூரு தனிக்கோர்ட்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. அவர்கள் இதை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் அவர்கள் 4 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இதை எதிர்த்து கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. கடந்த 2017-ம் ஆண்டு கர்நாடக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து, தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது.
சுப்ரீம் கோர்ட்டில் இந்த தீர்ப்பு வந்தபோது, ஜெயலலிதா அதற்கு முன்பே மரணம் அடைந்துவிட்டதால், அவரது பெயர் தீர்ப்பில் இருந்து நீக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து சசிகலா உள்பட 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் 4 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்தனர். முன்னதாக சொத்து குவிப்பு புகாரை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் ஜெயலலிதா வீட்டில் சோதனையிட்டு, தங்க-வைர நகைகள், விலை உயர்ந்த பட்டு புடவைகள், செருப்புகள், கம்ப்யூட்டர்கள் உள்பட பல்வேறு பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இந்த விலை உயர்ந்த பொருட்கள் பெங்களூரு விதான சவுதாவில் உள்ள கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஜெயலலிதா உள்ளிட்டோரின் பொருட்களை ஏலம் விடுவதற்காக மாநில சிறப்பு வக்கீல் கிரண் ஜவலியை அரசு சிறப்பு வக்கீலாக நியமனம் செய்து உத்தரவிட்டார். இதன் மூலம், ஜெயலலிதாவின் விலை உயர்ந்த பொருட்கள் விரைவில் ஏலம் விடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், ஜெயலலிதா சொத்து வழக்கு தொடர்பாக கர்நாடகா சிறப்பு நீதிமன்றத்தில் ஜெ.தீபா மனு தாக்கல் செய்துள்ளார். தீபா தரப்பு வழக்கறிஞர் சத்யகுமார் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கர்நாடக கருவூலத்தில் உள்ள கோடிக்கணக்கு மதிப்பிலான ஜெயலலிதாவின் சொத்துகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், ஜெயலலிதாவின் வாரிசாக தன்னை ஏற்றுக் கொண்டு ஏற்கனவே பல்வேறு சொத்துக்களை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியிருப்பதாகவும், இந்த கருவூலத்தில் உள்ள கோடிக்கணக்கான சொத்துக்களையும் என்னிடம் தரவேண்டும் எனவும் வாரிசு என சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளின் நகலை மனுவோடு இணைத்து தீபா தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இன்று இறுதி தீர்ப்பு வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். அதில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தின் கருவூலத்தில் உள்ள ஜெயலலிதாவின் சொத்துக்களை தீபாவிடம் ஒப்படைக்க முடியாது என மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். ஏதேனும் மேல்முறையீடு செய்யவேண்டும் என விரும்பினால் உச்சநீதிமன்றத்தை நாடலாம் என தீபாவுக்கு நீதிபதி அறிவுறுத்தி உள்ளார்.