என் மலர்
நீங்கள் தேடியது "பித்ருக்கள்"
- குடும்பத்தில் சுபிட்சம் நிறைந்து காணப்படும் என்று ஞானநூல்கள் கூறுகின்றன.
- ஆடி அமாவாசையன்று முன்னோர்களுக்கு நீர்க்கடன் அளிப்பது மிகவும் அவசியம் என்று சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன.
பொதுவாக அமாவாசை நாட்களில் நம் முன்னோர்களுக்கு நீத்தார்கடன் செய்யும் வழக்கம் நம் நாட்டில் தொன்றுதொட்டு நிலவி வருகிறது. அவற்றில் உத்தராயன முதல் மாதத்தில் வரும் தை அமாவாசையும், தட்சிணாயன முதல் மாதத்தில் வரும் ஆடி அமாவாசையும் மிகவும் போற்றப்படுகின்றன. மகாளயபட்சம் என்ற புரட்டாசி அமாவாசையும் இந்த தட்சிணாயன காலத்தில் மிகவும் சிறப்பிக்கப்படுகிறது.
ஆடி அமாவாசை அன்று புனித நீர் நிலைகளான கடற்கரை, ஆற்றங்கரை, குளக்கரைகளில் அமைந்துள்ள கோவில்களில், நம்முடன் வாழ்ந்து முக்தியடைந்த நம் பெற்றோர்கள் மற்றும் முன்னோர்களுக்கு, வேதவிற்பன்னர் உதவியுடன் நீத்தார்களுக்கான பிதுர்பூஜை செய்தால், எடுத்த காரியம் தடையின்றி நடைபெறும்; குடும்பத்தில் சுபிட்சம் நிறைந்து காணப்படும் என்று ஞானநூல்கள் கூறுகின்றன.
அமாவாசையன்று முன்னோர்களுக்குரிய வழிபாட்டினைப் பற்றி முதன்முதலில் பராசர முனிவர், மைத்ரேய மகரிஷிக்கு விளக்கிச் சொன்னதாகப் புராணங்கள் கூறுகின்றன.
சந்திரனுடைய தேர் மூன்று சக்கரங்களைக் கொண்டு திகழ்கிறது. அந்தத் தேரில் தண்ணீரில் பிறந்த முல்லைப்பூ நிறத்திலான பத்துக் குதிரைகள் பூட்டப்பட்டிருக்கும். அந்தத் தேரினைச் செலுத்தும்போது சந்திரனிடமுள்ள அமுதத்தினை தினமும் தேவர்கள் அருந்துவதால், தேய்ந்து ஒரு கலையோடு காட்சி தரும் நிலையில் சந்திரன் இருப்பான். அந்தக் குறையை ஒரு நாளைக்கு ஒரு கலையாக சூரியன் நிறைவு செய்கிறான். இதுவே வளர்பிறைக் காலமாகும். பௌர்ணமிக்குப் பிறகு வரும் பதினைந்து நாட்களில், சந்திரனின் உடலிலிருந்து அமுதத்தை முப்பத்து முக்கோடி தேவர்களும் மறுபடியும் ஈர்த்துக் கொள்கிறார்கள். அதனால் தேய்ந்து ஒளி இழந்த சந்திரன் "அமை' என்ற ஒற்றைக் கிரணத்தில் வாசம் செய்வதால், அந்த நாள் "அமாவாசை' என வழங்கப்படுகிறது.
பித்ருக்களான முன்னோர்களில் சௌமியர், பர்ஹிஷதர், அக்னிஷ் வர்த்தர் என்று மூன்று பிரிவினர் இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. பித்ருக்கள் வானவிளிம்பில் ஒன்றுகூடி இருக்கும்போது, அவர்களுக்குரிய நீர்க்கடனை அவர்களது வம்சத்தினர் செலுத்துவதால் அவர்களது நல்வாழ்த்துகள் கிட்டும். அதனால் ஆடி அமாவாசையன்று முன்னோர்களுக்கு நீர்க்கடன் அளிப்பது மிகவும் அவசியம் என்று சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன.
ஒருசமயம் கௌசிக முனிவர் மற்ற ரிஷிகளுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது, "இப்பிறவியில் ஒரே நாளில் யாரும் பதின்மூன்று புனித கங்கைகளில் நீராட முடியாது. அது தேவர்களால் மட்டுமே முடியும்' என்று ரிஷிகள் கூறினார்கள்.
ஆனால் கௌசிக முனிவர், "என்னால் பதின்மூன்று கங்கைகளில் நீராட முடியும்' என்று கூறி, ரிஷிகளின் கூற்றினைப் பொய்யாக்கும் விதத்தில் பல திருத்தலங்களுக்குச் சென்று தவம் புரிந்தார்.
பல வருடங்கள் தவம்புரிந்தும் இறைவன் காட்சி தரவில்லை. இறுதியில் "திருப்பூந்துருத்தி' என்னும் புண்ணியத் திருத்தலம் வந்து பல வருடங்கள் தவம் மேற்கொண்டார்.
கௌசிக முனிவரின் உறுதியான தவத்தினைப் போற்றிய இறைவன், ஓர் ஆடி அமாவாசை நாளில் அன்னை விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதராகக் காட்சி தந்து அருளினார். முனிவரின் வேண்டுகோளின்படி காசி உட்பட பதின்மூன்று புனிதத்தலங்களில் பாயும் கங்கைகளும் அங்கு ஒரே சமயத்தில் பதின்மூன்று இடங்களில் பீறிட்டு வந்தன. உடனே கௌசிக முனிவர், பதின்மூன்று கங்கைகளின் தீர்த்தத்தையும் எடுத்து இறைவனுக்கும் இறைவிக்கும் அபிஷேகம் செய்து, தானும் நீராடி இறைவனுடன் கலந்தார்.
ஆடி அமாவாசையில் இறைவன் இத்தலத்தில் தோன்றியதால், அந்தப் புனித நாளில் திருப்பூந்துருத்தி தலத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. அன்று அங்குள்ள தீர்த்தங்களில் நீராடி இறைவனுக்கும் இறைவிக்கும் செய்யப்படும் அபிஷேக, ஆராதனைகளில் கலந்துகொண்டு, முன்னோர்களுக்கான பூஜையும் அன்னதானமும் செய்தால், நம் பக்தியை இறைவன் ஏற்றுக்கொண்டு அருள்புரிவதாக ஐதீகம். இத்தலம் தஞ்சையிலிருந்து திருக்காட்டுப் பள்ளிக்குச் செல்லும் வழியில்- திருக்கண்டியூரிலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
ஆடி அமாவாசையன்று நீர்க்கடனைச் செலுத்துவதற்கு சில புகழ்பெற்ற தலங்கள் உள்ளன. அதில் தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் கடற்கரை அக்னி தீர்த்தம் மிகவும் சிறப்பானதாகும். இங்கு சங்கல்பம் செய்துகொண்டு கடலில் நீராடி, அங்குள்ள வேதவிற்பன்னர் உதவியுடன் திலதர்ப்பணம் செய்தால் பெரும் புண்ணியம் கிட்டும் என்பர். மேலும் முக்கடல் கூடும் கன்னியாகுமரி, திருப்புல்லானி, வேதாரண்யம், கோடியக்கரை தனுஷ்கோடி, கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள கடற்கரையான சில்வர் பீச் போன்றவையும் புகழ்பெற்றுத் திகழ்கின்றன.
இதேபோல் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, திருவையாறு புஷ்ப மண்டபம் படித்துறை, விருத்தாசலத்தில் உள்ள மணிமுத்தாற்றங்கரை, நெல்லை மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி நதிக்கரை ஆகியவை புகழ்பெற்றவையாகும்.
குளக்கரையில் பிதுர் பூஜை செய்வதும் போற்றப்படுகிறது. கும்பகோணம் மகாமகத் தீர்த்தக் குளக்கரையில் பிதுர்பூஜை செய்வதைக் காணலாம். அதேபோல் கும்பகோணம் சக்கரப் படித்துறையும் சிறப்பானது. திருவெண்காடு சிவன் கோவிலில் சூரிய, சந்திர, அக்னி தீர்த்தங்களில் நீராடி அருகிலுள்ள அரசமரத்தடியில் அமைந்துள்ள ருத்ரபாதம் பகுதியில் திதி தர்ப்பணங்கள் செய்வது நல்ல பலன்களைத் தரும்.
மயிலாடுதுறை செல்லும் வழியில் பூந்தோட்டம் அருகேயுள்ள செதலபதி திருத்தலமும், திருக்கடையூர் திருத்தலமும், திருச்சி சமயபுரம் கோவிலும், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவிலும் பிதுர்பூஜைக்கு ஏற்ற தலங்களாகத் திகழ்கின்றன.
மேற்சொன்ன தலங்களுக்குச் செல்ல முடியாதவர்கள், தங்கள் ஊருக்கு அருகிலுள்ள திருத்தலத்திற்குச் சென்று பிதுர்பூஜையை முறைப்படி செய்து, ஏழை, எளியவர்களுக்கு முடிந்த அளவு அன்னதானம் செய்தால், முன்னோர்களின் ஆசியால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
- மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம்.
- ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ரு தோஷம்.
பித்ரு தோஷம் என்றால் என்ன?
நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ரு தோஷம் எனப்படும்.
பித்ரு தோஷத்தை ஜாதகத்தில் கண்டறிவது எப்படி?
ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் ராகுவுடனோ அல்லது கேதுவுடனோ எந்த இடத்தில் சேர்ந்திருந்தாலும் பித்ரு தோஷம் உண்டு.
பித்ரு தோஷத்துக்கு என்ன பரிகாரம் செய்யவேண்டும்?
ராமேஸ்வரம் சென்று தில ஹோமம் செய்வதும், கயா சிரார்த்தம் செய்வதும், காசி, அலகாபாத், பத்ரிநாத் சென்று திவசம் செய்வதும், திருவெண்காடு சென்று திதி கொடுப்பதும் இந்த தோஷத்துக்குப் பரிகாரம். குடும்பத்தில் யாரேனும் விபத்துக்களில் இறந்திருந்தாலோ, அல்லது தற்கொலை செய்துகொண்டிருந்தாலோ மட்டுமே தில ஹோமம் செய்யவேண்டும். அனைவரும் இயற்கை மரணம் அடைந்திருந்தால், தில ஹோமம் செய்யவேண்டியதில்லை.
பித்ரு தோஷத்தினால் ஏற்படும் தீய விளைவுகள் என்ன?
பித்ரு தோஷம் உள்ளவர்களுக்கு சீக்கிரம் திருமணம் நடக்காது. மிகவும் தாமதமாக நடக்கும். விவாகரத்து ஏற்படலாம். அல்லது தம்பதியரிடையே அன்னியோன்னியம் இருக்காது. அல்லது குழந்தைப் பாக்கியம் இருக்காது. ஒரு சிலருக்கு கடுமையான உடல் உபாதைகள், மனநோய் காரணமாக தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கும். சிலருக்கு பலமுறை திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு.
கலப்புத் திருமணம் நடக்கவும், பெற்றோருக்குத் தெரியாமல் ரகசியத் திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு .இந்த தோஷம் உள்ள சில தம்பதிகள் ஒருவருக்கொருவர் உண்மையானவர்களாக நடந்துகொள்வ தில்லை.
எத்தகைய பாவங்கள் செய்திருந்தால், இந்த தோஷம் வரும்?
கருச்சிதைவு செய்துகொண்டால், இந்த தோஷம் வரும். பெற்றோர்களின் இறுதி நாட்களில் அவர்களை சரிவர கவனிக்காமல் இருந்து அதனால் அவர்கள் மன வேதனை அடைந்தால், பித்ரு தோஷம் வரும். ஒருவரின் இளைய தாரத்துப் பிள்ளைகள் மூத்த அன்னைக்கு திதி கொடுக்காவிட்டாலும் வரும். தந்தைக்கு எத்தனை தாரங்கள் இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் தவறாமல், திவசம் செய்யவேண்டும்.
ஆண்வாரிசு இல்லாத சித்தப்பா, பெரியப்பா, அத்தை, சகோதரர் ஆகியோருக்கு திதி கொடுக்காவிட்டால் வரும். துர்மரணம் அடைந்தவர்களுக்கு திதி கொடுப்பதோடு மட்டுமின்றி கயா சென்று கூப சிரார்த்தம் செய்யாவிடில் பித்ரு தோஷம் வரும். ஒரே குடும்பத்தில் சிலருக்கு மட்டும்
பித்ரு தோஷம் வருவது ஏன்?
ஒரே குடும்பத்தில் சிலருக்கு மட்டும் இந்த தோஷம் வரலாம். திருமணம் ஆன பிறகும் பிறந்த வீட்டு வழியில் சில பெண்களுக்கு பித்ரு தோஷம் தொடரும். இந்த தோஷம் கடுமையாக உள்ள சில குடும்பங்களில் மூளை வளர்ச்சி இல்லாத மாற்றுத் திறனாளி குழந்தை பிறக்கலாம்.
- காலை 6.30 மணிக்குள் தர்ப்பணம் கொடுத்து விடுவது நல்லது.
- சூரியன் மறைந்த பிறகு தர்ப்பணம் செய்யக்கூடாது.
தர்ப்பணம் செய்ய வேண்டிய நாள் அன்று அதிகாலையில் எழுந்துவிட வேண்டும். குளித்து, சுத்தமான ஆடை அணிந்து மூதாதையர்களை நினைத்துக்கொண்டே தர்ப்பணம் செய்ய வேண்டும். காலை 6.30 மணிக்குள் தர்ப்பணம் கொடுத்து விடுவது நல்லது. முடியாதவர்கள் காலையில் சீக்கிரம் தர்ப்பணத்தை முடித்து விடவேண்டும். ஏனெனில் நாம் கொடுக்கும் எள் கலந்த நீரை பித்ருக்கள் ஏற்றுக்கொள்ளும் நேரம் என்பது மிக, மிக புனிதமானது. எனவே நாம் அதில் கவனமாக இருக்க வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் சூரியன் மறைந்த பிறகு தர்ப்பணம் செய்யக்கூடாது.
நாம் தர்ப்பணம் செய்ததும் அதை பெற்றுக் கொள்ளும் ஸ்வதா தேவி கண் இமைக்கும் நேரத்துக்குள் அதை நம் பித்ருக்களிடம் ஒப்படைத்து விடுவாள். எனவே தர்ப்பணம் செய்யும் போது`1ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி'' என்று சொல்ல மறந்து விடக்கூடாது.
பொதுவாக நம் வீட்டு பெரியவர்கள் இயற்கையாக மரணம் அடையும் போது, இறந்த நேரம், திதி ஆகியவற்றை ஒரு டைரியில் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் அந்த திதியில் தர்ப்பணம், சிதார்த்தம் உள்ளிட்டவைகளை செய்தல் வேண்டும்.
பெரும்பாலானவர்கள் இந்த திதி தினத்தை முறையாக செய்வதில்லை. கணிசமானவர்களுக்கு அந்த திதி என்றாலே என்ன என்ற விவரம் கூட தெரியாமல் உள்ளது. ஆதிகாலத்தில் தமிழர்கள் "நீத்தார் வழிபாடு'' நடத்தி பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய எல்லா கடமைகளையும் செய்தனர்.
அதை செஞ்சோற்று கடனாக நினைத்தனர். இப்போதும் பித்ருகாரியம் செய்கிறார்கள். ஆனால் அதை முறையாக, பித்ருக்கள் திருப்திபடும்படி செய்வதில்லை. அதனால்தான் குடும்பங்களில் மங்கள காரியங்கள் நடப்பது தடைபடுகிறது அல்லது தாமதமாகிறது.
புத்திர சுகம் கிடைக்காமல் போய் விடுகிறது. எனவே நம் வம்சம் விளங்க வேண்டுமானால் நம்மை வளர்த்து ஆளாக்கிய முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யப்பட வேண்டும். அமாவாசை, மாதப்பிறப்பு, கிரகண நாட்களில் அவசியம் தர்ப்பணம் செய்தல் வேண்டும்.
முடியாதவர்கள் மகாளயபட்சத்தின் 15 நாட்களும் தர்ப்பண பூஜைகளை கட்டாயமாக செய்ய வேண்டும். உங்கள் முன்னோர்கள் எல்லாருமே பித்ருலோகத்தில் நல்ல நிலையில் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. சிலருக்கு அவர்கள் செய்த கர்ம வினைகள் தொடரக்கூடும்.
அப்படிப்பட்டவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் தர்ப்பணம்தான் தாகம் தணிப்பதாக இருக்கும். தாத்தாவுக்கு அப்பா எல்லாம் மறுபிறவி எடுத்திருப்பார். எனவே அவருக்கு ஏன் தர்ப்பணம் செய்ய வேண்டும் என்று சிலர் நினைக்கலாம். உங்கள் முன்னோர்கள் மறுபிறவி எடுத்திருந்தாலும் கூட நீங்கள் கொடுக்கும் தர்ப்பணம் அவர்களுக்கு பெரும்பலனை கொடுக்கும் என்பதை மறந்து விடக்கூடாது.
எனவே நீங்கள் முன்னோர் வழிபாட்டை ஆழ்ந்த நம்பிக்கையுடன் செய்தல் வேண்டும். நீங்கள் வழிபாடு செய்வீர்கள் என்ற நம்பிக்கையில்தான் பித்ருலோகத்தில் இருந்து மகாளய பட்சத்தின் 15 நாட்களும் உங்களோடு இருக்க உங்கள் முன்னோர்கள், உங்கள் வீடு தேடி வருகிறார்கள் என்பதை மறந்து விடக்கூடாது.
- ஆத்மாக்கள் நற்கதியடைய நான் பிரார்த்திக்கிறேன்.
- அடுத்த பிறவியில் எல்லா நன்மைகளும் பெற நான் பிரார்த்திக்கிறேன்.
பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் போது வேத விற்பன்னர்கள் சொல்லும் ஸ்லோகங்கள், மந்திரங்கள் மற்றவர்களுக்கு புரியாமல் இருக்கலாம். எனவே தர்ப்பணம் கொடுக்கும் போது கீழ்கண்டவாறு மனதுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள் போதும்...
"என் தாயார், என் தந்தை, என் சகோதரர், என் உறவினர் என்ற எந்த வகையான உறவுக்கும் உட்படாத- என் கோத்திரப் பிரிவுக்குள்ளும் வராத- எனக்குத் தெரியாத எத்தனையோ ஆத்மாக்கள் இந்த பூவுலகத்தில் இருந்து போயிருக்கின்றன. எந்த விதிக்கணக்கிலோ, இயற்கையாகவோ, வியாதியாலோ, விபத்தினாலோ இந்த உலகைவிட்டு பிரிந்திருக்கக்கூடிய ஆத்மாக்கள் எல்லாம் நற்கதியடைய நான் பிரார்த்திக்கிறேன்.
மேலுலகில் எந்தவித துன்பங்களும் அனுபவிக்காமல், மீண்டும் புது உடலோடு எடுக்கும் அடுத்த பிறவியில் எல்லா நன்மைகளும் பெற நான் பிரார்த்தித்துக் கொள்கிறேன். எள்ளும் தண்ணீரும் கொண்டு நான் செய்யும் இந்த தர்ப்பணத்தால் அந்த எல்லா ஆத்மாக்களும் திருப்தி அடையட்டும். நம் முன்னோர்கள் மற்றும் நமக்குத் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், நண்பர்கள், நம்முடன் வாழ்ந்து அமரர் ஆனவர்கள் அனைவருக்கும் இம்மந்திர வழிபாட்டினால் நற்கதி கிட்டுமென்று சாஸ்திரம் கூறுகிறது.
- தர்ப்பை புல்லால் செய்யப்பட்ட பவித்திரத்தை அணிந்து கொள்ளுதல் அவசியம்.
- தெற்கு நோக்கி 12 முறை விழுந்து வணங்குதல் வேண்டும்.
1. சுத்தமான நீரில் தலை முழுவதாக நனையும்படி நீராடி உலர்ந்த ஆடையை அணிந்து நெற்றியில் அவரவர்களின் குலவழக்கத்திற்கு ஏற்றபடி விபூதியோ, திருமண்ணோ, கோபிச்சந்தனமோ, செந்தூரமோ அணிந்து கொண்டு கிழக்கு அல்லது வடக்கு நோக்கியபடி மனைப்பலகை அல்லது தர்ப்பைப்பாய் போட்டு அதன்மேல் பத்மாசனம் இட்டு அமர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
2. வலது கை மோதிர விரலில் தர்ப்பை புல்லால் செய்யப்பட்ட பவித்திரத்தை அணிந்து கொள்ளுதல் அவசியம்.
3. சுத்தமான பித்தளை தாம்பாளத்தில் கட்டை தர்ப்பையை 7 எண்ணிக்கை விரித்து அதன்மேல் கூர்ச்சம் கிழக்கு நுனியாக வைத்து நமது முன்னோர்களாகிய பித்ருக்களை அதில் ஆவாகனம் செய்தல் வேண்டும்.
4. முன்னோர் பெயரையும் வம்சாவளி கோத்திரம் தெரிந்தால் சொல்லிக் கொண்டு (தெரியாதவர்கள்) சிவ அல்லது விஷ்ணுகோத்திரம் என்று சொல்லிக் கொண்டு வலது உள்ளங்கையில் எள்ளை வைத்துக்கொண்டபடி வலது ஆள்காட்டி விரல் கட்டைவிரல் இடையில் நீரும் எள்ளும் கலந்தபடி தர்ப்பைமேல் விழுமாறு விடவேண்டும்.
5. தர்ப்பணம் முடிந்த பிறகு பித்ருக்கள் வசிக்கின்ற பித்ருலோகம் உள்ள திசை எனப்படும் தெற்கு நோக்கி 12 முறை விழுந்து வணங்குதல் வேண்டும்.
6. தர்ப்பணத்தை கிழக்கு நோக்கி செய்தல் மிகச் சிறப்பான பலன்களைத்தரும். ஒவ்வொரு திசைக்கும் வெவ்வேறு வகை பலன்கள் சிரார்த்தாங்க- தர்ப்பணம் விதியில் சொல்லப்பட்டுள்ளது.
7. தர்ப்பண நீரை சிறிதளவு குடும்பத்தார் தன் தலையில் தெளித்துக் கொண்டு பிறகு கால் படாத இடமான வில்வம், அரசு, மற்றும் பூச் செடிகளின் வே ரில் ஊற்றிவிட வேண்டும்.
8. தர்ப்பண தினத்தில் தன்னால் முடிந்த அளவு அன்னதானம் செய்தல் அவசியம். சன்னியாசி ஒருவருக்கு மட்டுமாவது அன்னதானம் செய்தல் வேண்டும்.
9. மந்திரங்கள் முறையாகத் தெரியவில்லையே என்று சிலர் இந்த தர்ப்பணத்தைச் செய்யாமல் விட்டு விடுகின்ற நிலை உள்ளது. அதைத்தவிர்க்க ஒரு எளிய தமிழ்க்கூறு உள்ளது. தர்ப்பைச் சட்டத்தை அமைத்து அதன்மேல் எள்ளும் நீரும் விட்டு, விண்ணில் இருக்கும் முன்னோரே....(பெயர்) மண்ணில் வந்து நிற்கும் நீவிர்.... (திதிநாளில்) என்னால் இடப்படும் எள்ளும் நீரும் சேர்ந்திட வேணும் நன்றாய் வாழ வாழ்த்து வீரே-நல்லருள் பெற வேண்டுகிறேன் என்று 16 முறை தர்ப்பணம் இடவேண்டும் உறுதியாக இப்படிச் செய்யப்படும் எளிய தர்ப்பணம் அவர்களைச் சென்றடைந்து அவர்கள் ஆசீர்வாதத்தைப் பெற்றுத்தந்து விடும்.
10. வடமொழியில் கூறப்படும் ஊர்ஜம் வகந்தீ என்ற மந்திரத்தின் பொருள் கடைசியில் திருப்யத...தருப்யத...த்ருப்யத என்று முடியும்.
- பித்ருக்களுக்குக் கிடைக்க வேண்டிய உணவு கிடைக்காமல் போகும்.
- நமது முன்னோர்களின் ஆத்மாக்கள், ஒன்று சேர்ந்து, நம்மை ஆசீர்வதிக்கும்
நமது முன்னோர்கள் யாராவது முக்தி அடைந்திருந்தால், நமது சிரார்த்தத்தின் பலனை அந்த இறைவனே ஏற்று அருள் புரிகிறார். பொதுவாக, நாம் செய்யும் தர்ப்பணம், சிரார்த்தம் முதலியவற்றின் புண்ணிய பலன், சேமித்து வைக்கப்பட்டு, தக்க நேரத்தில் நம்மை வந்தடையும்.
ஆனால், மகாளய பட்சத்தில், நமது முன்னோர்களின் ஆத்மாக்கள், ஒன்று சேர்ந்து, நம்மை ஆசீர்வதிக்க வருவதால், அந்த நேரத்தில் செய்யும் சிரார்த்த கர்மாக்களின் பலன்கள், உடனடியாக அவர்களிடம் சேர்ப்பிக்கப்பட்டு, பலனும் உடனடியாக நமக்குக் கிடைத்து, நம் தீராத, நாள்பட்ட பிரச்சினைகள் உடனடியாகத் தீர்வுக்கு வருவதை நம் கண்முன் காணலாம். இது மகாளய அமாவாசை வழிபாட்டின் தனிசிறப்பு.
இந்த மகாளய பட்சத்தில், ஒருவர், மறைந்த, தம் தாய் தந்தையர், தாத்தா, பாட்டி ஆகியோர்களுக்கு மட்டுமில்லாமல், குழந்தை இன்றி இறந்து போன தம் தாயாதிகளுக்கும் சேர்த்துத் தர்ப்பணம் செய்யலாம். அதன் பலனாக அவர்களின் ஆசிகளையும் பெறலாம்.
மிகுந்த தெய்வ பக்தி உடையவர்கள், வேதம், தமிழ் மறைகள் ஓதியவர்கள், நீதி நேர்மையுடன் வாழ்ந்தவர்கள், பித்ரு சரீரம் அடையும் போது, மிகுந்த நன்மை செய்பவர்களாகிறார்கள். அவர்களுடைய சரீரம் ஒளி பொருந்தியது. அவர்களுக்குச் செய்ய வேண்டிய சிரார்த்தம், தர்ப்பணம் முதலியவற்றைச் சரியாகச் செய்யும் போது, குடும்பத்தில் இருக்கும் தீராத நோய், கடன், பகை, எதிர்பாராத விபத்துக்கள், குழந்தையின்மை போன்ற பல பிரச்சினைகள் நீங்குகின்றன. மாறாக, இது தவிர்க்கப்பட்டால், தலைமுறைகள் தாண்டியும் பிரச்சினைகள் தொடரும்.
இறைவழிபாட்டின் மூலம் கிடைக்கும் வரங்களை, பித்ரு சாபம் தடுக்கும் வல்லமையுடையது. ஆனால் நமது முன்னோர்கள் ஒரு போதும் நம்மைச் சபிக்க மாட்டார்கள். இப்பூவுலகில், ஒருவர் செய்ய வேண்டிய சிரார்த்தம் தடைபட்டால், அதனால், பித்ருக்களுக்குக் கிடைக்க வேண்டிய உணவு கிடைக்காமல் போகும். அதனால் அவர்கள் அடையும் இன்னலே சாபமாக மாறி நம்மை அடைகிறது.
- வெங்காயம், பூண்டு, வாசனைத் திரவியங்களைத் தவிர்ப்பது நல்லது.
- பித்ரு மகிமை பற்றிய பல்வேறு தகவல் மகாபாரதத்தில் இடம் பெற்றுள்ளன.
1. உலக மக்கள் பித்ரு காரியங்கள் செய்வதற்காகவே கங்கை நதி பூமிக்கு வந்ததாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
2. பித்ரு மகிமை பற்றிய பல்வேறு தகவல் மகாபாரதத்தில் இடம் பெற்றுள்ளன.
3. கங்கை நதியில் முதன்முதலில் புனித நீராடி பித்ரு காரியங்கள் செய்தவர் பகீரதன். இவர் தான் பல ஆண்டுகள் சிவனை நோக்கி தவம் இருந்து கங்கையில் பித்ரு காரியம் செய்யும் சிறப்பைப் பெற்றார்.
4. உயிர் நீத்த நம் மூதாதையர்கள் ஆத்ம சாந்தி அடைய மகாளயபட்ச நாட்களில் சிரார்த்தம் செய்ய வேண்டியது அவசியமாகும்.
5. ஒரு வருடம் நாம் பித்ருபூஜை செய்யா விட்டாலும் மனவருத்தம் ஏற்படும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
6. மகாளய பட்ச 15 நாட்களில் நாம் தினமும் தர்ப்பணம், புனித நீராடல், படையல், அன்னதானம் போன்றவை செய்தால் பித்ருக்களின் ஆசியை பெற முடியும்.
7. மகாளயபட்ச நாட்களில் பித்ருக்கள் பூமியில் உள்ள திருத்தலங்களுக்கு வந்து நாம் அளிக்கும் எள் நீரை ஏற்றுச் செல்கிறார்கள்.
8. தர்ப்பணங்களை எப்போதும் காலை 7 மணிக்குள் கொடுத்து விடுவது நல்லது.
9. அதிகாலை பிரம்ம முகூர்த்தத்துக்கு முன்பே எழுந்து அதிகாலைக்குள் தர்ப்பணம் கொடுப்பது நல்லது.
10. தர்ப்பணங்கள் குறித்து கருட புராணத்தில் ஸ்ரீமகாவிஷ்ணு விரிவாக கூறியுள்ளார்.
11. எள்ளுடன் தண்ணீரும் கலந்து அளிக்கப்படும் தர்ப்பணம் பித்ருக்களுக்கு அமிர்தமாக கருதப்படுகிறது.
12. பித்ரு காரியத்துக்குள் தர்ப்பைப் புல் பயன்படுத்துவது நல்லது. தர்ப்பைப் புல்லில் சூரிய ஒளி ரூபத்தில் பித்ருக்கள் வந்து அமர்வதாக ஐதீகம்.
13. நாம் கொடுக்கும் தர்ப்பணங்களை சுவதாதேவி, தர்ப்பைப்புல் மூலம்தான் பித்ருலோகத்துக்கு எடுத்து செல்வதாக ஐதீகம்.
14. புண்ணிய நதிகளின் கரைகளில் செய்யப்படும் தர்ப்பணங்களுக்கு எப்போதுமே சக்தி அதிகமாகும்.
15. பித்ரு உலகம் தென் திசையில் உள்ளது. எனவே மறைந்த நம் முன்னோர்கள் "தென் புலத்தார்" என்றழைக்கப்படுகிறார்கள்.
16. பித்ருக்களுக்கு செய்யப்படும் தர்ப்பணம் தமிழில் நீத்தார் கடன் தீர்த்தல் என்று சொல்லப்படுகிறது.
17. நம் முன்னோர்கள் மரணம் அடைந்த நேரம், திதியை மறக்காமல் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் அந்த திதியில் பித்ரு தர்ப்பணம் செய்வது மிகுந்த பலன்களை தரும்.
18. தர்ப்பணம் செய்யும் போது தாய், தந்தை வழியில் 6 தலைமுறைக்கு முன்பு மறைந்த முன்னோர்களுக்கும் சேர்த்து செய்தால், அவர்களது ஆசிகளும் கிடைக்கும்.
19.அமாவாசை, சூரியன் மற்றும் சந்திர கிரகணங் களின் போது செய்யப்படும் தர்ப்பணத்துக்கு மிக அதிக சக்தி உண்டு.
20. மகாளய அமா வாசை தினத்தன்று பித்ருக்கள் அனை வரும் சூரிய சந்திர உலகில் கூடுவதாக ஐதீகம்.
21. பித்ரு தர்ப்பணம் செய்ய பூமிக்கு வந்த கர்ணன் மீண்டும் மேல் உலகம் செல்லும் போது 14 நாட்களுக்கான உணவு அபரிமிதமாக இருந்தது. அந்த 14 நாட்கள் தான் மகாளயபட்ச தினமாக கருதப்படுகிறது.
22. மகாளயபட்ச நாட்களில் அன்னதானம் செய்ய வேண்டியது மிக, மிக முக்கியமாகும்.
23. மறைந்த முன்னோர்கள் நல்லவர்களாக இருந்தாலும் சரி, கெட்டவர்களாக இருந்தாலும் சரி, மகாளயபட்ச நாட்களில் ஆசி வழங்க நம்மை நிச்சயம் தேடி வருகிறார்கள். இதை புரிந்து கொண்டு அவர்களது ஆசிகளைப்பெற வேண்டியது நமது பொறுப்பாகும்.
24. தர்ப்பணத்தை சரியான நேரத்தில் உரிய முறைப்படி செய்தால் நம் வாழ்வில் கஷ்டங்கள் என்பதே வராது.
25. மறைந்த முன்னோர்களின் தேதி, நேரம், திதி போன்றவை தெரியாவிட்டால், கவலைப்பட வேண்டாம். மகாளயபட்சத்தில் சிரார்த்தம், தர்ப்பணம் செய்தாலே போதும் பித்ருக்கள் திருப்தி பெறுவார்கள்.
26. பித்ரு தேவதைகள் வசு, ருத்ர, ஆதித்ய ரூபத்தில் நம்மை காக்கின்றனர்.
27. மகாளயபட்ச நாட்களில் மறைந்த நம் முன்னோர்கள் ஏதாவது ஒரு உருவத்தில் நம் அருகே வந்து செல்லலாம்.
28. பித்ருக்களுக்கு நாம் செய்யும் தர்ப்பணமானது பல யாகங்களுக்கு சமமானது.
29. கன்யா ராசியில் சூரியன் இருக்கும்போது செய்யப்படும் சிரார்த்தம் பித்ருக்களை ஓராண்டு காலத்துக்கு திருப்தி அடைய செய்யும்.
30. தர்ப்பணம் செய்யாதவன் சண்டாளனாக பிறப்பான் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
31. ஒரு ஆண்டில் ஒருவர் 96 தடவை தர்ப்பணங்கள் செய்ய வேண்டும்.
32. புண்ணிய ஆத்மாக்களுக்கு நாம் கொடுக்கும் தர்ப்பணம் அவர்கள் மேலும் இறையருள் பெற உதவும்.
33. தர்ப்பணம், சிரார்த்தம் செய்யாவிட்டாலும், நம் பித்ருக்கள், நமக்கு உதவுவார்கள். ஆனால் தர்ப்பணம் கொடுத்தால் பித்ருக்களின் முழுமையான ஆசி கிடைக்கும்.
34. பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நாட்களில் வெங்காயம், பூண்டு, வாசனைத் திரவியங்களைத் தவிர்ப்பது நல்லது.
35. பித்ரு தர்ப்பணங்களை சும்மா, பெருமைக்காக, மற்றவர்கள் புகழ வேண்டும் என்ற எண்ணத்தில் கொடுக்ககூடாது. முன்னோர்களை ஆத்மார்த்தமாக மனதில் நிறுத்தி தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
- மகாளய என்றால் `கூட்டாக வருதல்’ என்பது பொருள்.
- முன்னோர்கள் எல்லோரும் பூமிக்கு வந்து செல்வதாக ஐதீகம்.
மற்ற அமாவாசையைக் காட்டிலும் மகாளய அமாவாசை ஏன், அவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது என்பதை நாம் இந்த மகாளய அமாவாசை தினத்தில் அறிந்துகொள்வதும் ஒரு வகையில் சிறப்புதான். அமாவாசை முதலான முக்கிய நாட்களில் நமது முன்னோர்கள், பூமிக்கு வந்து தங்களின் சந்ததியினர் அளிக்கும் உபசாரங்களை ஏற்று, ஆசீர்வதிப்பார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த நாட்களில் சிரத்தையோடு அவர்களை வழிபட்டால், தீர்க்க ஆயுள், புகழ், செல்வம், உடல் ஆரோக்கியம், இன்பம் போன்ற அனைத்தும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
மகாளய என்றால் `கூட்டாக வருதல்' என்பது பொருள். மறைந்த நமது முன்னோர்கள் மொத்தமாக ஒருசேரக் கூடும் காலமே மகாளய பட்சம் என்று கருதப்படுகிறது. மற்ற அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு திதி கொடுக்க மறந்துவிட்டாலோ அல்லது அதற்கான வாய்ப்பு இல்லாமல் தவற விட்டவர்கள், இந்த மகாளய அமாவாசையன்று திதி கொடுத்தால், அது அதற்கான முழுப் பயனையும் அளிக்க வல்லதாகும். மகாளய அமாவாசை அன்று முன்னோர்கள் எல்லோரும் பூமிக்கு வந்து செல்வதாக ஐதீகம்.
நாம் அவர்களுக்கு அளிக்கும் திதி, அவர்கள் செய்த பாவங்களில் இருந்தெல்லாம் விடுவித்து அவர்களை சொர்க்க வாழ்விற்கு கொண்டு செல்லும் என்பது நம்பிக்கை. அன்றைய தினம் ஏதாவது ஒரு புனித நதியில் நீராடுவது, தான தர்மங்கள் செய்வது போன்றவற்றை செய்தால் நல்லது.
பல தெய்வீக நூல்களில் மகாளய பட்சத்தின் சிறப்புகள் கூறப்பட்டுள்ளன. இதற்கு முந்தைய யுகங்களில் மறைந்த முன்னோரைக் கண்ணால் காணும் பாக்கியம் மக்களுக்கு கிடைத்திருக்கிறது. நாம் கலியுகத்தில் வாழ்வதால், அது சாத்தியமில்லாமல் போய்விட்டது. மகாளய கால நாட்களில் நம் முன்னோர்கள் நமக்கு ஆசி வழங்குவதற்காகவே பிதுர் லோகத்தில் இருந்து, பிதுர்தேவதைகளிடம் அனுமதி பெற்று நம்மைப் பார்க்க பூலோகத்திற்கு வருகின்றனர்.
இந்நாட்களில் நம் வீடுகளை மிகத்தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். சைவம் மட்டுமே உண்ண வேண்டும். வீட்டில் ஒருவருக்கொருவர் சண்டையிடக்கூடாது. வீணான பொழுதுபோக்கு அம்சங்களை அறவே தவிர்த்து, உள்ளத்தையும், உடலையும் தூய்மையாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியம்.
இந்த பதினான்கு நாட்களும் முன்னோர் வழிபாட்டினைச் செய்வது சிறப்பு. புண்ணிய நதிக்கரைகள், தீர்த்தக்கரைகள், ராமேஸ்வரம் போன்ற கடற்கரைத்தலங்களுக்கு ஒருநாளாவது செல்ல வேண்டும். முடியாதவர்கள் காகத்திற்கு அன்னமிடலாம். பசுவுக்கு புல், பழம் கொடுக்கலாம்.
ஸ்ரீமந்நாராயணனே ராமாவதார, கிருஷ்ணாவதார காலங்களில் பிதுர்பூஜை செய்து முன்னோர்களை வழிபாடு செய்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. எதுவும் செய்ய இயலாதவர்கள் முன்னோரின் பெயர்களை உச்சரித்து, `காசி காசி' என்று சொன்னபடியே, வீட்டு வாசலிலேயே எள்ளும் தண்ணீரும் விட்டு கூட திதி பூஜையைச் செய்யலாம். பின்னர், பூஜையறையில் நம் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். இந்த எளிய பூஜை அளவற்ற நன்மைகளைத் தரக்கூடியது.
சாதாரண அமாவாசை தினங்களில் மூன்று தலைமுறை முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கப்படும். ஆனால், மகாளயபட்ச அமாவாசை தினத்தில், தாய்வழி மற்றும் தந்தைவழி முன்னோருக்கு மட்டுமின்றி, நம் ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், பங்காளிகள் மற்றும் ஏனைய அனைவருக்கும் இன்றைய தினத்தில் தர்ப்பணம் கொடுப்பதே மகாளய அமாவாசையின் தனி பெரும் சிறப்பாக திகழ்கிறது.
- கயா சென்று பிண்டம் போட்டு வந்தால்தான் ஆத்மா சொர்க்கம் செல்லும்.
- அவர்களுக்கு சொர்க்கத்தில் உணவு கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு.
சாதாரணமாக காசிக்குச் சென்று முன்னோர் களுக்கு சிரார்தம் செய்துவிட்டு வந்தாலும் பித்ருக்களுக்கு கயாவில் சென்று பிண்டம் போட்டுவிட்டு வந்தால்தான் அவர்கள் ஆத்மா சொர்க்கம் செல்லும். அங்கு அவர்களுக்கு உணவு கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு. ஏனெனில் அங்குதான் பிரம்மாவும் விஷ்ணுவும், பிற தேவர்களும் வந்து அசுரனின் உடல் மீது அமர்ந்து கொண்டு பித்ரு யாகம் ஒன்றை செய்ததாக ஒரு கதை கூறப்படுகின்றது .
அந்தக் கதை என்ன?
முன்னொரு காலத்தில் கயாவில் கயாசுரன் என்ற பெரிய அசுரன் இருந்தான். அவன் ஒருமுறை தனக்கு மேலும் அதிக சக்தி வேண்டும் என வேண்டிக்கொண்டு தவத்தில் அமர்ந்தான். அவன் செய்த கடுமையான தவத்தின் வலிமையினால் அவனுடைய சக்தியும் பெருகிக்கொண்டே போயிற்று. அவனை யாராலும் வெல்ல முடியவில்லை. அவனுடைய தொல்லையும் தாங்க முடியாமல் போயிற்று.
அவன் தேவர்களைவிட அதிக சக்தி வாய்ந்தவனாக ஆகிக்கொண்டே இருந்ததினால் தேவர்கள் கவலை அடைந்தனர். அவர்கள் விஷ்ணுவிடம் சென்று தமது அச்சத்தை தெரிவிக்க அவர் பிரம்மாவை அழைத்து அவரை கயாசுரனிடம் சென்று தேவலோகத்தின் கீழுள்ள பித்ருக்கள் மோட்ஷம் அடைய ஒரு யாகம் செய்ய உள்ளதாகவும் அதை ஆகாயத்தில் செய்யக்கூடாது, பூமியில்தான் செய்ய வேண்டும் என்பதினால் பூமியில் உள்ள கயாசுரன் உடல் மீது தம்மை யாகம் செய்துகொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும் வேண்டுமாறும் அதன் பின் மற்றதை தான் பார்த்துக் கொள்வதாகவும் கூறினார்.
அதன்படி பிரம்மாவும் கயாசுரனிடம் சென்று அப்படியே வேண்டிக்கொள்ள அவன் கயாவில் சென்று பூமியில் படுத்துக் கொண்டான். அவன் தலை மீது பிரம்மா பித்ரு யாகத்தை துவங்கினார். ஆனாலும் அவன் அடிக்கடி அசைந்து கொண்டே இருந்ததினால் மிரிச்சி என்ற முனிவரை அழைத்து அனைத்து தேவர்களையும் அழைத்துக் கொண்டு வந்து அந்த கயாசுரன் உடல் மீது ஒரு கல்லை வைத்துவிட்டு அமருமாறு விஷ்ணு கூறினார். அவர்களும் பித்ரு யாகத்தில் கலந்து கொள்வது போல வந்து அவன் மீது அமர்ந்தனர்.
பித்ரு யாகம் நடக்க நடக்க அவனுடைய சக்தி அதில் கரைந்து கொண்டே போயிற்று. முடிவில் விஷ்ணு அந்த கல்லின் மீது ஏறி அமர அனைவரது சக்திகளும் ஒன்று சேர்ந்தது. யாக சக்தியும் அவர்களது சக்தியுடன் ஒன்று சேர அந்த கயாசுரன் எழுந்திருக்க முடியாமல் அங்கேயே மடிந்தான்.
ஆனாலும் அவன் மீதே பித்ருக்களின் யாகம் நடந்ததினாலும், திருப்தியடைந்த ஆத்மாக்கள் அவனை ஆசிர்வதித்ததினாலும் அவனுக்கு நல்ல பலன் கிடைத்து பித்ருக்கள் வசிக்கும் மோட்ஷம் சென்றான். ஆகவே காயா பித்ரு லோகம் எனப் பெயர் பெற்றது. ஆகவேதான் விஷ்ணுவே மோட்ஷம் தந்த அந்த இடத்தில் சென்று பித்ருக்களுக்கு சிரார்தம் செய்தால் அவர்களுடைய ஆத்மாவுக்கு வைகுண்டம் செல்லும் பேறு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.
இதற்கு ஒரு முன் உதாரணமாக ஒரு கதை உண்டு. கர்ணன் மடிந்து மேலுலகம் சென்றதும் அவன் செய்து இருந்த தர்மத்தின் பலனாக அவனுக்கு தங்கத்தையே உணவாகக் கொடுத்தனராம். அவன் எப்படி தங்கத்தை சாப்பிடுவது? என்று இந்திரனிடம் கேட்டபோது அவன் அதுவரை தங்கத்தையே தானம் தந்துள்ளதாகவும். உணவை அவன் எவருக்குமே தானம் செய்யவில்லை.
அவனுடைய பித்ருக்களுக்குக்கூட கர்மா செய்து பிண்டமாக அவர்களுக்கும் உணவு தராததினால் தான் அந்த நிலை ஏற்பட்டு உள்ளது எனவும் ஆகவே அவனுக்கு பதினாறு நாள் பூமிக்குச் சென்று பித்ரு சிரார்தம் செய்து பிண்டம் போட்டு விட்டு வர அவகாசம் தருவதாகக் கூறி கர்ணனை பூமிக்கு அனுப்ப கர்ணனும் கயாவுக்குச் சென்று தம் பித்ருக்களுக்கு ஸ்ரார்தம் செய்துவிட்டுத் திரும்பினாராம். அதன் பின்னரே அவனுடைய ஆத்மாவுக்கு உணவு கிடைத்ததாம்.
- முன்னோர்கள் புண்ணியலோகத்தில் இருந்து பூமிக்கு வருகிறார்கள்.
- தங்களது தலைமுறைகளை சூட்சமமான முறையில் கண்காணிக்கிறார்கள்.
அமாவாசை தினத்தில் சூரியனும், சந்திரனும் நேர்கோட்டில் வருகிறது. அதாவது ஒன்றையொன்று சந்தித்துக்கொள்கிறது. அன்று முன்னோர்கள் புண்ணியலோகத்தில் இருந்து பூமிக்கு வருகிறார்கள். தங்களது தலைமுறைகளை சூட்சமமான முறையில் கண்காணிக்கிறார்கள். அவர்களது வாரிசுகளான நாம் தொடங்கும் காரியங்களை கரிசனத்தோடு பார்க்கிறார்கள், ஆசிர்வதிக்கவும் செய்கிறார்கள்.
இந்த நிகழ்வு இந்த ஆண்டு வருகிற 9-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நிகழ உள்ளது. அன்று நாம் என்ன செய்ய வேண்டும்? பித்ருக்கள் என்ற முன்னோர்களை வழிபட்டு அவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டும். அன்று அவர்களை வழிபட்டு அமாவாசை தினத்தில் புதிய காரியங்களை தொடங்கினால் நிச்சயம் நல்லதே நடக்கும். அன்று நற்காரியங்களை செய்வதனால் தீங்கு ஏற்படாது.
முன்னோர்கள் பூமிக்கு வரும் தினம் என்பதனால் அது நல்லநாளே. முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் சிறந்த நாள் அமாவாசை! இது அனைத்து மதத்திற்கும் பொருந்தும். அமாவாசையன்று உலகை இயக்கும் சூரியனும் சந்திரனும் ஒன்று சோ்வதால் ஒரு காந்த சக்தி ஏற்படுகிறது.
அமாவாசையன்று மாமிச ஆகாரம் தவிர்ப்பது பெரும் ஜீவகாருண்யமாகும். அமாவாசை அன்று பிறக்கும் குழந்தைகளின் மூளை பிற்காலத்தில் அதீதமாக வேலை செய்யும் என்று விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஜோதிட ரீதியாக அமாவாசை நிறைந்த நாள். அனேகமானவர்கள் அமாவாசையில் மோதிரம் செய்து போட்டுக்கொள்வார்கள். சூரிய கலையும், சந்திர கலையும் சேருவதால் சுழுமுனை என்னும் நெற்றிக்கண் பலப்படுகிறது. அதனால் அமாவாசையில் சாஸ்திரிகள் மந்திர ஜெபம் ஆரம்பிக்கின்றனா். கடலில் நீராடி தங்களுக்கு ஏற்பட்ட தோஷத்தைப் போக்குகின்றனா்.
அமாவாசையன்று ஜீவ சமாதிகள் புதிய உத்வேகத்தைப் பெறுகின்றன. அனேக குரு பூஜைகள் அதிஷ்டான பூஜைகள் அமாவாசையன்று நடத்துகின்றனா்.
சாதாரணமாக இறந்த ஆவிகள் சந்திரனின் ஒளிக்கற்றையில் உள்ள அமிர்தத்தைப் புசிக்கும். அதுதான் அதற்கு உணவு. அமாவாசையன்று சந்திரனின் ஒளிக்கற்றை ஆவிகளுக்குக் கிடைக்காது. அதனால் ஆவிகள் உணவுக்குத் திண்டாடும். பசி தாங்க முடியாமல் ரத்த சம்பந்தமுடைய வீடுகளுக்கு வரும். அப்போழுது நம்மை யாராவது எண்ணுகிறார்களா, நமக்குத் தா்ப்பணம், படையல் செய்கிறார்களா என்று பார்க்கும்.
வீடு வாசல் இல்லாத ஏழைகளுக்கு அமாவாசையன்று அன்னதானம் செய்ய வேண்டும். ஒவ்வொரு அமாவாசை அன்றும் தங்களால் இயன்ற அளவு உணவை அன்னதானம் செய்யலாம். பசு, காகம், நாய், பூனை மற்றும் இதர ஜீவராசிகளுக்கும் அன்று அன்னம் அளிக்கலாம்.
அமாவாசை பிதுா் தா்ப்பணம் மற்றும் அன்னதானம் ஆகியவற்றைக் குலதெய்வம் இருக்கும் இடத்தில் செய்வது நல்லது. முடியாதவா்கள் தங்கள் இஷ்ட தெய்வம் இருக்கும் இடத்தில் செய்யலாம். வீட்டிலும் செய்யலாம்.
அமாவாசை அன்று தலையில் எண்ணெய் தடவக் கூடாது. புண்ணிய தலங்களில் கடலில் நீராடலாம். அல்லது நதியில் நீராடலாம். அமாவாசை அன்று காலை சூரிய உதயத்தின் போது கடலில் எடுக்கப்பட்ட நீரை வீட்டுக்குக் கொண்டுவந்து தீா்த்தமாகத் தெளிக்கலாம். அதனால் வீட்டில் உள்ள தோஷங்கள் நீங்கும்.
உற்றார், உறவினா் தொடா்பு இல்லாத ஆவிகள் மரம், செடி கொடிகளில் அமாவாசை அன்று மட்டும் தங்கி, அவற்றின் சாரத்தைச்சாப்பிடும். அதனால் அமாவாசை அன்று மட்டும் மரம், செடி, கொடிகளையோ காய்கறிகளையோ புல் பூண்டுகளையோ தொடக்கூடாது. பறிக்கக் கூடாது.
ஒவ்வொரு மாதம் அமாவாசை அன்னதானம் செய்ய முடியாதவா்கள் தை, ஆடி, புரட்டாசி அமாவாசையில் அன்னதானம் செய்ய வேண்டும். புரட்டாசி அமாவாசையில் செய்தால் 12 ஆண்டுகளாக அன்னதானம் தா்ப்பணம் செய்யாத தோஷம் நீங்கும். நமக்கு அன்னம் இடுபவள் அன்னபூரணி. ஆவிகளுக்கு அன்னம் இடுபவள் ஸ்வதா தேவி. நாம் ஆவிகளை நினைத்துக் கொடுக்கும் அன்னத்தை மற்றும் யாகத்தில் போடும் ஆவுதிகளை ஸ்வதா தேவிதான் சம்பந்தப்பட்ட ஆவிகளிடம் சோ்ப்பிக்கிறாள்.
நகரங்களில் வசிப்பவா்கள் அமாவாசை அன்று ஏழைக் குழந்தைகளுக்கு அல்லது ஆதரவற்றவா்களுக்கு முன்னோர்களை நினைத்து அன்னதானம் செய்ய வேண்டும். இதர தானங்கள் தருவது அவரவா் வசதியைப் பொறுத்தது. அன்னதானம் கஞ்சியாகவோ, சாதமாகவோ, இட்லியாகவோ இருக்கலாம். ஆனால் எள்ளு சட்னி அல்லது எள் உருண்டை கண்டிப்பாக இருக்க வேண்டும்.
எதுவும் செய்ய முடியாமல் இருப்பவா்கள் ஒரு பசு மாட்டிற்கு ஒன்பது வாழைப்பழங்கள் அமாவாசை அன்று கொடுக்க வேண்டும். இதற்கு சாதி, மதம், இனம் என்ற வேறுபாடு இல்லை. முன்னோர்கள் ஆத்மா சாந்தியடைய ஒவ்வொருவரும் இதை செய்ய வேண்டும்.
- அமாவாசைக்கு முந்தைய தினமும் சிறப்பானது.
- அமாவாசை விரதம் இருக்கும் பெண்கள் சவுபாக்கியத்துடன் வாழ்வார்கள்.
அமாவாசை பித்ரு காரியங்கள் செய்வதற்கு உரிய தினம் என்பது பலருக்கும் தெரிந்திருந்தாலும், அதை ஐதீகப்படி எப்படி செய்வது என்பது சிலருக்கு மட்டுமே தெரிகிறது.
அமாவாசைக்கு முந்தைய தினமும் சிறப்பானது. அன்றைய தினம் ஒரு கதையை படித்த பிறகு மறுநாளான அமாவாசையன்று விரதம் இருக்கும் பெண்கள் சவுபாக்கியத்துடன் வாழ்வார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? அந்த கதை வருமாறு:-
அழகாபுரி நாட்டு அரசன் அழகேசன். பராக்கிரமம் மிக்க அவனுக்கு வாரிசு இல்லாத வருத்தம் இருந்தது. அதை தீர்த்துக்கொள்ள அவன் தன் மனைவியோடு தீர்த்த யாத்திரை மேற்கொண்டான். அதன் பலனாக அவனுக்கு ஒரு மகன் பிறந்தான்.
மன்னன் மகிழ்ச்சியோடு இருந்த போது ஓர் அசரீரி எழுந்தது. அவனது மகன் இளமைப்பருவத்தை எட்டும் போது இறந்து போவான் என்று அது சொல்லவே மன்னன் விரக்தியில் ஆழ்ந்தான். மன அமைதிவேண்டி அவன் பல கோவில்களுக்கும் சென்றான்.
ஒருநாள் காளி கோவில் ஒன்றில் அவன் வழிபட்ட போது உன் மகன் இறந்ததும் அவனுக்கு மணம் செய்துவை. அவனது மனைவியின் மாங்கல்ய பலத்தால் அவன் உயிர் பெறுவான் என்ற குரல் கேட்டது. இளமை பருவம் வந்ததும் இளவரசன் ஒருநாள் இறந்து போனான்.
மன்னன் அவனுக்கு திருமணம் செய்து வைக்க பெண் தேடிய போது, பெற்றோரை இழந்து உறவினர்களின் கொடுமைக்கு ஆளாகி வாழ்ந்த ஓர் இளம் பெண்ணை அவளது உறவினர்கள் ஏமாற்றி, இறந்துபோன இளவரசனுக்கு திருமணம் செய்து வைத்தனர்.
இருட்டிய பின்னர் இளவரசன் உடலோடு அவளை காட்டில் கொண்டு விட்டனர். அப்பாவியான அந்த பெண் கணவன் உறங்குவதாக நினைத்தாள். விடிந்தபின் உண்மை தெரிய வந்ததும் அழுதாள்... தவித்தாள்...
தனக்கு தெரிந்த தெய்வங்களின் பெயர்களையெல்லாம் சொல்லி வேண்டினாள். உலகத்தின் தாயான ஈஸ்வரி அவளது அழுகுரல் கேட்டு மனம் இரங்கினாள். இறந்து கிடந்த இளவரசனை ஈசனின் அனுமதியோடு உயிர் பெற்று எழச்செய்தாள்.
இந்த சம்பவம் நடந்த தினம் ஓர் அமாவாசை நாளாகும். தனக்கு அருளிய தேவியிடம் அந்த பெண் இருண்டு போன தன் வாழ்வை ஒளிபெற செய்தது போலவே அமாவாசை நாட்களில் அம்மனை வழிபடும் பெண்களுக்கும் அருள்புரிய வேண்டும் என்று வேண்டினாள்.
மகிழ்ந்த அம்பிகை, அமாவாசைக்கு முன்தினம் அவளது கதையை படித்துவிட்டு மறுநாள் விரதம் இருந்து மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கல பொருட்களை உரியவர்களுக்கு தந்து தன்னை வழிபடும் பெண்களுக்கு தாலி பாக்கியம் நிலைக்கும் என்றும், அவர்கள் இல்லத்தில் அஷ்ட லட்சுமி கடாட்சம் நிலவும் எனவும் சொல்லி மறைந்தாள்.
அமாவாசை அன்று காலையில், எழுந்து ஆறு, குளங்களில் நீராடி சூரிய உதயத்திற்கு முன்னதாகவே எள், தர்ப்பைப்புல் ஆகியவற்றை கொண்டு தர்ப்பணம் செய்து வருதல் நல்லது. அத்துடன் வீடுகளில் மறைந்த முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில், அவர்களுக்கு பிடித்தமான சைவ உணவு வகைகளையும் வைத்து வழிபட வேண்டும். அவர்கள் மனம் மகிழ்ந்தால் நம் வாழ்விலும் மகிழ்ச்சி பெருகும்.
- பித்ரு தேவதைகளை தரிசிக்க எண்ணி, கடுமையாக தவம் இருந்தாள்.
- பித்ருக்களை நினைத்து வழிபட பெரும்பேறு கிடைக்கும்.
அச்சோதை என்னும் தேவலோகப் பெண், நதிக்கரை ஓரத்தில் ஆயிரம் வருடம் தவம் செய்தாள். அவள் மரீசி மகரிஷியின் மகன்களான பித்ரு தேவதைகளை தரிசிக்க எண்ணி, கடுமையாக தவம் இருந்தாள். பித்ரு தேவதைகள் அவளுக்கு காட்சி கொடுத்து `உனக்கு என்ன வரம் வேண்டும்?' எனக் கேட்டனர்.
அப்பொழுது அந்த தேவ மங்கை, பித்ரு தேவதைகள் இடையே இருந்த மாவசு என்பவரைப் பார்த்து `இவர் என்ன கம்பீர வடிவம் கொண்டவராக இருக்கிறார். இதுபோன்று ஒரு கணவன் தனக்கு அமையக்கூடாதா?' என ஒரு கணம் சிந்தித்தாள். அவளது எண்ணத்தைத் தெரிந்து கொண்ட மாவசு, `நீ தேவலோக மங்கை. ஆனால் சாதாரணமான மனிதப் பிறவிபோல் நடந்து கொண்டாய். எனவே நீ பூலோகத்திற்குச் சென்று பெண்ணாய் பிறப்பாய்' என்று சாபம் கொடுத்தார்.
தன் தவறை எண்ணி வருந்திய அந்த தேவலோகப் பெண், `இந்த சாபத்தில் இருந்து எனக்கு விமோசனம் இல்லையா?' எனக் கேட்க, `நீ தொடர்ந்து தவம் செய். அந்தரிட்சத்தில் (ஆகாயமும் இல்லாமல் பூமியில் இல்லாமல் இடையில் அமைந்த பகுதி) நீ செய்யும் தவத்தால் உன்னுடைய சாபம் விலகும்' என்று கூறினார், மாவசு.

இதையடுத்து மீண்டும் சில வருடங்கள், அந்த தேவலோகப் பெண் தவம் செய்தார். அதன்பின்னர் அவளுக்கு மீண்டும் பித்ரு தேவர்கள் காட்சி கொடுத்தனர். பின்னர் அந்தப் பெண்ணைப் பார்த்து, `உன் பாவங்களும், சாபங்களும் விலகியது. இதன் பயனாக நீ துவாபர யுகத்தில் மச்சகந்தி என்னும் பெயரோடு, ஒரு மீனின் வயிற்றில் பிறப்பாய். பராசுரர் என்னும் மகா முனிவரால் நீ, வியாசர் என்ற சிறப்புமிக்க மகனை பெற்றெடுப்பாய்.
பின்னர் சந்தனு என்ற மகாராஜாவின் மகாராணியாக மாறி, இரண்டு பிள்ளைகளைப் பெற்றெடுப்பாய். உன் கடைசி காலத்தில் நீ புண்ணிய நதியாக உருவெடுப்பாய். அச்சோதை என்ற உன் பெயரிலேயே அந்த நதியை அனைவரும் அழைப்பார்கள். உனக்கு நாங்கள் காட்சி கொடுத்த இந்த அமாவாசை தினத்தில் பித்ரு தேவதைகளையும் (இறந்த முன்னோர்கள்), பித்ருக்களையும் நினைத்து வழிபட பெரும்பேறு கிடைக்கும்.
அமாவாசை திதியில் `நம் வம்சத்தில் பிறந்த யாராவது எள்ளும், தண்ணியும் கொடுப்பார்களா?' என்று பித்ருக்கள் காத்துக் கொண்டிருப்பார்கள். அந்த நாளில் யார் எள்ளும், தண்ணியும் கொடுக்கிறார்களோ, அவர்களது முன்னோர்களுக்கு மோட்சத்தை கொடுப்போம். அப்படி பித்ரு தர்ப்பணம் செய்பவர்களின் வம்சமும் தழைக்கும். அதோடு பித்ரு தோஷமும் விலகும்' என்று வரம் அளித்தனர்.