search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரகலாதன்"

    • ஒரு பக்தர் வழக்கமாக திருக்கோவிலுக்கு வந்து செல்வார்.
    • லட்சுமி நரசிம்மர் புன்னகையுடன் விளையாடினார்.

    சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு ஒரு பக்தர் வழக்கமாக திருக்கோவிலுக்கு வந்து செல்வார். எந்த காரியமாக இருந்தாலும் நரசிம்மரிடம் சம்மதம் (பூ போட்டு பார்த்தல்) கேட்டுவிட்டுத்தான் செய்வார். இவரிடம் லட்சுமி நரசிம்மர் கொஞ்சம் விளையாடி பார்த்தார்.

    அவரது பையனுக்கு கல்லூரி அட்மிஷனுக்கு அலைந்து கொண்டிருந்த நேரத்தில், இன்னொரு பக்தர் இவரிடம் அறிமுகம் ஆனார். அவர் கல்லூரி அட்மிஷன் விசயத்தில் விவரம் தெரிந்தவர். ஆனாலும் பணத்தாசை. எனவே இந்த அட்மிஷனில் முதலாம் வருடம் இருந்து பெரிய தொகை பெற்றுக்கொண்டு அட்மிஷன் வாங்கித் தருவதாக வாக்களித்தார்.

    வழக்கப்படி பையனின் தந்தை லட்சுமி நரசிம்மரிடம் பூப்போட்டு பார்த்தார். மல்லிகை பூ வந்தால் சரி, அரளிப்பூ வந்தால் வேண்டாம் என்ற நியதியில். லட்சுமி நரசிம்மர் இங்கு தான் புன்னகையுடன் விளையாடினார். சரி என்று மல்லிகை பூவே வந்தது.

    தொடர்ந்து மகிழ்ச்சியுடன் பணத்தை கொடுத்துவிட்டு அட்மிஷனுக்காக காத்துக்கொண்டு இருந்தார். காலம் கடந்து ஏமாந்தது தெரியவந்தது. பெருமாளே விளையாடி விட்டானே என்று நொந்து கொண்டார். இருப்பினும் கோவிலுக்கு வருவதை நிறுத்தவில்லை.

    சுமார் ஒரு வாரம் கழித்து பணம் வாங்கிய பெரிய மனிதர் அடித்து கட்டிக்கொண்டு பெருமாள் காலடியில் விழுந்தார். அவருக்கு ஒரு கனவு வந்ததாம். அதில் ஒரு சிம்மம் அவரை உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவிலை நோக்கி துரத்திக்கொண்டு வந்ததாம். மனிதர் அப்படியே அரண்டு போய் பணத்தை கொண்டுவந்து பணம் தந்தவரிடம் கொடுத்து சென்று விட்டார்.

    ஒரு கேள்வி அனைவரது மனதிலும் தோன்றும். பூ கட்டி பார்த்தபோது வேண்டாம் என்று பெருமாள் காண்பித்து இருக்கலாமே? ஆனால் அந்த பணம் பெற்று ஏமாற்ற நினைத்தவரை திருத்தி நல்வழிப்படுத்த முடியாதே? அதற்குதான் இந்த விளையாட்டு.

    • பூலோகத்தில் உடனடியாக எடுக்கப்பட்ட அவதாரம் நரசிம்ம அவதாரம்.
    • மகாவிஷ்ணுவின் நான்காவது அவதாரம் நரசிம்ம அவதாரம்.

    மகாவிஷ்ணுவின் நான்காவது அவதாரம் நரசிம்ம அவதாரம் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று.

    சிங்க தலையும், மனித உடலும் கொண்ட இந்த அவதாரம், எந்த முன்னேற்பாடும் இல்லாமல், தன் பக்தனை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே ஒரு நொடிப்பொழுதில் பூலோகத்தில் உடனடியாக எடுக்கப்பட்ட அவதாரம் நரசிம்ம அவதாரம்.

    நரசிம்ம ஜெயந்தி அன்று அதிகாலை பிரம்ம முகூர்த்த வேளையிலேயே எழுந்து, தீபம் ஏற்றி வைத்து, நரசிம்மரை மனதார வேண்டிக்கொண்டு, தூய்மையான பக்தியில் எவரொருவர் தனக்குள்ள கஷ்டங்களை எல்லாம் தீர்க்கவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறாரோ, அவருக்கு நிச்சயமாக நல்ல தீர்வு உடனடியாக கிடைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

    பக்த பிரகலாதனை மடியில் அமர வைத்திருக்கும் நரசிம்மர் படத்தையோ அல்லது லட்சுமி தேவியை மடியில் அமரவைத்திருக்கும் நரசிம்மர் படத்தையோ தாராளமாக வீட்டில் வைத்து பூஜை செய்யலாம்.

    நரசிம்மர், விஷ்ணுவின் அம்சம் என்பதால் இவருக்கு துளசி இலைகளால் அர்ச்சனை செய்யலாம். இது தவிர, செவ்வரளி சிகப்பு செம்பருத்தி போன்ற பூக்களையும் நரசிம் மருக்கு சமர்ப்பணம் செய்யலாம்.

    நரசிம்மர் ஜெயந்தி தினத்தன்று மாலை உங்களுடைய விரதத்தை நிறைவு செய்து கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களால் முடிந்த நைவேத்தியத்தை நரசிம்மருக்கு படைக்கலாம். அவரவர் உடல் சூழ்நிலைக்கு ஏற்ப விரதமிருந்து, நரசிம்ம ஜெயந்தி விரதத்தை சிறப்பாக நிறைவு செய்ய வேண்டும்.

    "யஸ்ப அபவத் பக் தஜன ஆர்த்திஹந்து

    பித்ருத்வம் அந்யேஷூ அவிசார்ய தூர்ணம்

    ஸ்தம்பே அவதார தம் அநந்ய லப்யம்

    லக்ஷ்மி ந்ருஸிம் ஹம் சரணம் பிரபத்யே"

    பொருள்: பக்தியற்றவர்களால் அடைய முடியாதவனே, தாயின் கர்ப்பத்தில் அவதரித்தால் தாமதமாகுமென்று தூணில் அவதரித்தவனே, நினைத்த மாத்திரத்தில் உங்களுடைய பக்தர்களின் துன்பத்தை போக்குபவனே, லட்சுமி நரசிம்மனே. இந்த மந்திரத்தை உச்சரித்து வழிபாடு செய்தால், முழுமையான ஆசீர்வாதத்தையும் பெற்றுவிடலாம். 

    • நரசிம்ம ஜெயந்தி விரதம் இருப்பவர்களுக்கு எதிரிகள் பயம் நீங்கும்.
    • இன்பங்களை நரசிம்மர் வாரி வழங்குவார்.

    பிரம்மா தன் படைப்புக்கு உதவிபுரிய, சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய நான்கு புத்திரர்களை படைத்தார். அவர்கள் பிறவியிலேயே பிரம்ம ஞானியாக இருந்ததால், இல்லறத்தில் ஈடுபடாமல் தவயோகியாக எல்லா உலகங்களும் சுற்றி வந்தனர்.

    அதன்படி வைகுண்டத்திற்கும் சென்றனர். அப்பொழுது மகாவிஷ்ணுவின் பாதுகாவலர்களாக இருக்கக்கூடிய ஜெய மற்றும் விஜய என்ற இரு துவார பாலகர்களும், பிரம்மஞானிகள் நால்வரையும் உள்ளே அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர். இதனால் வருத்தம் அடைந்த பிரம்ம குமாரர்கள், துவார பாலகர்கள் இருவரையும் சபித்தனர்.

    வைகுண்டத்தின் உள்ளே இருந்த மகாவிஷ்ணு நடந்ததை அறிந்து பிரம்ம குமாரர்களுக்கு காட்சி கொடுத்து அருள்புரிந்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த பிரம்ம குமாரர்கள், ஜெய, விஜயர்களின் சாபத்தை போக்க எண்ணினர். மகாவிஷ்ணுவும் அதையே நினைத்தார். அவர் ஜெய, விஜயர்களை நோக்கி, "நீங்கள் பிரம்ம குமாரர்கள் சாபத்தின்படி பூலோகத்தில் பிறந்துதான் ஆக வேண்டும்.

    அதே நேரத்தில் என்னிடம் பக்தி செய்து என்னை மறுபடியும் அடைய விரும்பினால், நீங்கள் ஏழு பிறவி எடுக்க வேண்டும். எனக்கு விரோதியாக பிறந்தால் மூன்று பிறவி எடுத்தால் போதும்" என்றார். ஜெய, விஜயர்கள் "நாங்கள் ஏழு பிறவி வரை காத்திருக்க விரும்பவில்லை. உங்களுக்கு விரோதியாகவே பிறந்து மூன்று பிறவிகளில் உங்களை அடைகிறோம்" என்றனர். (அவர்கள் முதலில் இரண்யாட்சன்- இரண்யகசிபு, பின்னர் ராவணன்- கும்பகர்ணன், இறுதியாக சிசுபாலன்- தந்துவர்த்தன் ஆகிய மூன்று பிறவிகளை எடுத்து இறைவனை அடைந்தனர்.)

    அதே நேரத்தில் காசியப முனிவரின் மனைவியரில் ஒருவரான திதி, 'தங்களுக்கு புத்திர பாக்கியம் இல்லையே' என்று வருந்தினாள். ஒரு முறை ஆசிரமத்தில் காசியப முனிவர் இருந்த தருணத்தில் தனது ஆசையை அவள் வெளிப்படுத்தினாள். அப்போது காசியபர், "பெண்ணே.. இது சந்தியா காலம். இந்த நேரத்தில் புத்திர உற்பத்தி நல்லது இல்லை. இரவும் பகலும் சேரக்கூடிய இந்த பிரதோஷ வேளை, பூதங்களும், பிசாசுகளும் விரும்புகின்ற நேரம். இவ்வேளையில் சிவதரிசனம் மட்டுமே சிறந்தது. வேறு சிந்தனை கூடாது. இன்னும் ஒரு முகூர்த்தம் பொறுத்துக்கொள்" என்றார்.

    ஆனால் திதி கேட்பதாக இல்லை. "இவ்வளவு காலம் பொறுத்தாகி விட்டது. புத்திர பாக்கியத்திற்காக இன்னும் தாமதிக்க எனக்கு விருப்பமில்லை" என்று கூறிவிட்டாள். 'இது விதியின் சதியே' என்ற முடிவுக்கு வந்தார், காசியப முனிவர்.

    திதியை நோக்கி, "உனக்கு இரண்டு புதல்வர்கள் பிறப்பார்கள். பிரதோஷ நேரத்தில் நாம் சேர்ந்ததால், அவர்கள் ராட்சச தன்மையுடன் இருப்பார்கள். அவர்கள் இருவரும் சக்கரத்தை கையில் ஏந்திய திருமாலால் அழிவார்கள்" என்றார்.

    உடனே திதி, "இத்தனை காலம் ஆன பிறகு பிறக்கும் பிள்ளைகள், அசுரர்களாகவா பிறக்க வேண்டும். நம் வம்சம் சிறக்க ஹரி பக்தியுடன் குழந்தைகள் இருக்க வேண்டாமா?" என்று கேட்டாள். அதற்கு காசியபர், "கவலைப்படாதே. உனக்கு பிறக்கும் இரு பிள்ளைகளில் ஒருவனுக்கு பிறக்கும் குழந்தை, விஷ்ணு பக்தியுடன் விளங்குவான். சிறந்த பக்தனாகவும், நாராயண மந்திரத்தை உலகத்துக்கு எடுத்துச் சொல்லக் கூடியவனாகவும் இருப்பான்" என்றார்.

    தொடர்ந்து காசியபர்- திதி தம்பதியருக்கு, இரண்யாட்சன், இரணியகசிபு ஆகிய இருவரும் பிறந்தனர். இரண்யாட்சனை மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து கொன்றார். இதை அறிந்த இரண்யகசிபு, மகாவிஷ்ணுவை வெற்றிகொள்ள கடும் தவம் செய்யத் தொடங்கினான்.

    இரண்யகசிபு மந்தார மலையில் தவம் செய்த நேரத்தில், அவன் அரண்மனையில் புகுந்த இந்திரன், இரண்யகசிபுவின் மனைவியை தூக்கிச் சென்றான். அப்போது நாரதர், "இந்திரா.. நீ இவ்வாறு செய்யக்கூடாது. இந்த பெண் கர்ப்பவதியாக இருக்கிறாள்" என்று கூறினார். அதற்கு இந்திரன், "நாரதரே.. இரணியன் எங்களுக்கு மிகுந்த தொல்லையை கொடுக்கிறான். இவனுக்கு குழந்தை பிறந்தால், இதைவிட எங்களுக்கு வேறு என்ன அபாயம் வேண்டும்" என்றான்.

    அதற்கு நாரதர் "இப்பொழுது பிறக்கப் போகும் குழந்தை, சிறந்த ஹரி பக்தன். நீ அவனை அழிக்க முடியாது" என்றார். அதைக் கேட்ட இந்திரன், இரண்யகசிபுவின் மனைவியை விட்டு விட்டுச் சென்று விட்டான். நாரதர், அந்த பெண்ணை தன் ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்று, அவளுக்கு வேண்டிய உதவிகளைச் செய்தார். அந்த பெண்ணுக்கு நாராயண மந்திரத்தை தொடர்ந்து கூறும்படி அறிவுறுத்தினார். அந்த பெண் சொல்வதை, கருவில் இருந்த குழந்தையும் மந்திர உபதேசமாக எடுத்துக் கொண்டது. அப்படி இறைவனின் நாமத்தைக் கேட்டு பிறந்தவர்தான், பிரகலாதன்.

    இந்த நிலையில் இரண்யகசிபு செய்த கடும் தவந்தால், மூன்று உலகங்களும் தகித்தன. பூகம்பம் ஏற்பட்டது. காடுகள் தீப்பற்றி எறிந்தன. இதனால் தேவர்கள் அனைவரும் பிரம்மனை சரணடைந்தனர்.

    பிரம்மதேவர் உடனடியாக இரண்யகசிபு முன்பாக தோன்றினார். "உன் தவத்தை இத்துடன் நிறுத்து. உனக்கு என்ன வரம் வேண்டும்" என்றார். அதற்கு இரண்யகசிபு, "எனக்கு மரணம் இல்லாத வரத்தை அருளுங்கள்" என்றான். "மரணமே இல்லாத வரத்தை யாருக்கும் அருள முடியாது. ஆனால் நீ வேறு விதமாக வரம் கேள், தருகிறோம்" என்றார், பிரம்மன்.

    உடனே இரண்யகசிபு, "ஆணாலோ, பெண்ணாலோ, தேவர்களாலோ, அசுரர்களாலோ, உங்களால் படைக்கப்பட்ட எந்த ஒரு ஜீவராசிகளாலும் என் உயிர் போகக்கூடாது. மேலும் பூமியிலும், ஆகாயத்திலும், வீட்டின் உட்புறத்திலும், வீட்டின் வெளிப்புறத்திலும் என் உயிர் பிரியக் கூடாது.

    ஆயுதங்களாலோ அல்லது விஷங்களாலோ என் உயிர் பிரியக்கூடாது" என்று பல விதமான வரங்களைக் கேட்டான். பிரம்மாவும் அவன் கேட்டபடி வரம் அருளினார். இதையடுத்து இரணியகசிபு மூன்று உலகத்தையும் வென்றான். மண்ணுலகும் விண்ணுலகும் அவன் வசமாகியது.

    இரண்யகசிபு தனது குருவான சுக்ராச்சாரியாரின் புதல்வர்களாகிய சண்டன் மற்றும் அமர்க்கன் ஆகியோரிடம், பிரகலாதனுக்கு கல்வி கற்றுக் கொடுக்க உத்தரவிட்டான். பிரகலாதனுக்கு பல வித்தைகளை அவர்கள் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தனர். பிரகலாதனுக்கு குருகுல வாசம் ஆரம்பமாகியது. சில காலம் சென்ற பிறகு இரண்ய கசிபு, குருகுலத்திற்கு வந்து பிரகலாதனிடம் "என்ன கற்றாய்?" என கேட்டான். தன் பிள்ளை 'தன்னைவிட மேலான சக்தி உலகத்தில் எதுவும் இல்லை. தானே மிகப் பெரிய சக்தி, பிரம்மம்' என்று கூறி புகழ்வான் என்று நினைத்தான்.

    ஆனால் பிரகலாதனோ "தந்தையே.. இந்த ஜென்மத்தில் மோட்சம் அடைய ஒரே வழி, ஹரி பக்தி மட்டுமே" எனக் கூறினான். இதைக்கேட்ட இரண்யகசிபு கடும் கோபம் கொண்டு ஆசிரியர்களை நோக்கி, "நீங்கள் என்ன சொல்லிக் கொடுத்தீர்கள். இவன் என்ன சொல்கிறான்" என்று கடுமையாக கேட்டான்.

    பின்னர் தன் மகனிடம் திரும்பி, 'என் விரோதியான விஷ்ணுவை புகழ்பவன், மகனாயினும் தண்டிக்கத்தக்கவன்' என கூறி, கடலில் தூக்கிப்போட்டான். ஆனால் அதில் இருந்து பிரகலாதன் மீண்டு வந்தான். பின்னர் ஆயுதங்களால் தாக்கச் சொன்னான். யானையை விட்டு மிதிக்கச் சொன்னான். விஷம் அருந்தக் கொடுத்தான். அனைத்திலும் இருந்து மீண்ட பிரகலாதன், 'எமன் அறியாமல் உயிர் போகாது. விஷ்ணுவே பரம்பொருள்' என்று நிரூபித்தான்.

    இனிமேலும் பிரகலாதனை தண்டிக்க முடியாது என்பதை புரிந்து கொண்ட இரண்யகசிபு, நேரடியாக விஷ்ணுவுடன் மோத முடிவு செய்தான். தேவர்களால் மரணம் நேராது என்ற வரத்தை நினைத்துக் கொண்டான். பின்னர் பிரகலாதனை நோக்கி, "உன் விஷ்ணுவை எனக்கு காட்டு. அவனிடம் நான் யுத்தம் செய்கிறேன்" என்றான்.

    "மரியாதைக்குரிய எனது தெய்வமான விஷ்ணு பகவான், நீங்கள் நினைப்பது போல் ஓரிடத்தில் மட்டுமே இருப்பவர் அல்ல.. அவர் எங்கும் நிறைந்திருப்பவர்" என்றான், பிரகலாதன். அப்போது இரண்யகசிபு அங்கிருந்த ஒரு தூணைக் காட்டி "இந்த தூணில் உன் ஹரி இருக்கிறானா?" என்றான். அதற்கு பிரகலாதன் "நிச்சயம் இருப்பார்" என்று பதிலளித்தான். உடனே இரண்யகசிபு, தன் வலிமையான கதாயுதத்தைக் கொண்டு அந்தத் தூணை பிளந்தான். அப்போது அதன் உள்ளே இருந்து, சிங்க முகமும், மனித உடலும் கொண்ட நரசிம்மர் தோன்றினார்.

    நரசிம்மர் இரண்யகசிபுவுடன் கடுமையான யுத்தம் செய்தார். பின்னர் அவர் பெற்ற வரத்தின்படியே, இரவும் இல்லாமல், பகலும் இல்லாத பிரதோஷ வேளையில், வீட்டில் உள்ளேயும், வெளியேயும் இல்லாமல் வாசல் படியின் மேல், ஆகாயத்திலும் இல்லாமல், பூமியிலும் இல்லாமல் தன் மடியின் மேல் வைத்து, ஆயுதங்கள் இல்லாமல் தன் கை நகங்களால் அவனை வதம் செய்தார்.

    இரண்யகசிபு வதம் முடிந்த பிறகு லட்சுமி நரசிம்மராக காட்சி கொடுத்து, பிரகலாதனிடம் "உனக்கு என்ன வரம் வேண்டும்" என்று கேட்டார் நரசிம்மர். அதற்கு பிரகலாதன், "என் தந்தை தவம் செய்து பெற்ற வரத்தை தவறாக பயன்படுத்தி, தங்களால் வதம் செய்யப்பட்டார். இருப்பினும் அவருக்கு மோட்சம் வழங்க வேண்டும்" என்றான்.

    அதற்கு நரசிம்மர், "நீ என் மீது பக்தி கொண்டு பிறந்த காரணத்தினால், உன் தந்தைக்கு மட்டுமல்ல.. உனக்குப் பின் வரக்கூடிய 21 தலைமுறையினர் உன்னால் மோட்சம் அடையப் போகிறார்கள்" என்றார்.

    நரசிம்ம ஜெயந்தி அன்று விரதம் இருந்து பூஜிப்பவர்களுக்கு எதிரிகள் பயம் நீங்கும். செய்வினை, ஏவல் போன்ற பிரச்சினை அகலும். இன்பங்களை நரசிம்மர் வாரி வழங்குவார்.

    • தை மாதம் மாட்டுப் பொங்கல், ஸ்ரீ தாயார் தீர்த்தவாரி நடைபெறும்.
    • சுவாதி நட்சத்திரம் மற்றும் பிரதோஷங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    1. எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனின் தச அவதாரங்களில் மிக முக்கியமானது, தீமைகளை அழித்து நன்மையை வாழவைத்த ஸ்ரீ நரசிம்ம அவதாரமாகும்.

    இந்த நரசிம்ம அவதாரமே, இத்திருக் கோயிலின் மூல மூர்த்தியாக அமையப்பெற்றுள்ளது.

    2. பதினாறு திருக்கரங்களுடன் அமையப்பெற்ற ஸ்ரீ நரசிம்மர் தமிழ்நாட்டில் இத்தலம் தவிர வேறெங்கும் இல்லை என்பது மிகசிறப்பான ஒன்றாகும்.

    3. இரணியனின் மகன் பிரகலாதனுக்காக இரணியனின் கொடுமைகளை அழிக்க தூணிலிருந்து தோன்றிய அவதாரம் நரசிம்ம அவதாரமாகும்.

    இது சிங்கிரிகுடி நரசிம்மர் வரலாறு குறித்து மார்கண்டேய புராணத்துள் நரசிம்ம வன மாயுத்மியம் என்ற பகுதியில் விரிவாக கூறப்பட்டுள்ளது.

    4. இத்திருக்கோயிலில் அமையப்பெற்ற அனைத்து கல்வெட்டுகளுமே முற்றுபெறாத நிலையில் காணப்படுகிறது.

    இராஜ கோபுரவாயிலில் 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த எழுத்தமைதியுடைய ஒரு கல்வெட்டு செய்யுள் வடிவில் அமைந்துள்ளது.

    மகா மண்டபத்தின் தெற்கு சுவரில் கி.பி. 12 ம் நூற்றாண்டின் எழுத்தமைதியுடைய கல்வெட்டு ஒன்று உள்ளது.

    5. நீண்ட சதுரமான மாடவீதிகளை கொண்ட சிங்கிரிகுடி எனும் ஊரில் நடுநாயகமாக அமையப் பெற்றுள்ளது இத்திருக்கோயில்.

    6. இத்திருக்கோயில் மேற்குதிசை நோக்கி அமையப்பெற்ற சிறப்பு வாய்ந்த திருக்கோயிலாகும்.

    7. ஐந்து நிலைகளை கொண்ட கம்பீரமான இராஜ கோபுரமும் வைணவ சிந்தாத்தப்படியான 24 தூண்களை கொண்ட வசந்த மண்டபமும் அமைந்துள்ளது.

    8. வைணவத் திருக்கோயிலான இத்திருக்கோயில் இராஜ கோபுரத்தை அடுத்து பிள்ளையார் திருகோயிலும் அமையப்பெற்றது. வேறெங்கும் காண இயலாத தனிச்சிறப்பாகும்.

    9. இத்திருக்கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீ நரசிம்மர், திருவகீந்திரபுரத்து தேவ நாதனே என திருமங்கை ஆழ்வாரது பாசுரத்தில் கூறப்பட்டுள்ளது.

    10. இத்தலத்தில் 1. ஸ்ரீ நரசிம்மர் சன்னதி, 2. ஸ்ரீ கனகவல்லி தாயார் சன்னதி, 3. ஸ்ரீ ஆண்டாள் சன்னதி, 4. ஸ்ரீ ராமர் சன்னதி, 5. ஆழ்வார்கள் சன்னதி, 6. ஸ்ரீ விநாயகர், 7. ஸ்ரீ துர்க்கா சன்னதி ஆகியவை முக்கிய சன்னதிகளாகும்.

    11, சன்னதி திறந்திருக்கும் நேரங்கள்:

    காலை 7.30 மணி முதல் 12.00 மணி வரை

    மாலை 4.30 மணி முதல் 9.00 மணி வரை

    12. பூஜை காலங்கள்:

    காலை 9.00 மணி காலைசந்தி

    பகல் 12.00 மணி உச்சிக்காலம்

    மாலை 6.00 மணி நித்தியாணு

    மாலை 6.30 மணி சாயரட்சை

    இரவு 8.30 மணி அர்த்தசாமம்

    13. இத்தலத்து தாயார் பெயர் ஸ்ரீ கனகவல்லித் தாயார்

    14. விமானத்தின் பெயர் ஸ்ரீ பாவன விமானம்

    15. ஜமத்க்கனி தீர்த்தம், இந்திர தீர்த்தம், ப்ருகு தீர்த்தம், வாமன தீர்த்தம், கருட தீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள் சிங்கிரிகுடியில் உள்ளன.

    16. இங்கு புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு ஆராதனை நடைபெறும்.

    17. தை மாதம் மாட்டுப் பொங்கல், ஸ்ரீ தாயார் தீர்த்தவாரி நடைபெறும்.

    18. சுவாதி நட்சத்திரம் மற்றும் பிரதோஷங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    19. புதுச்சேரி ரயில் நிலையத்திலிருந்தும் திருப்பாதிரிப்புலியுர் ரயில் நிலையத்திலிருந்து சமதொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.

    20. இத்தலம் கடலூர், புதுச்சேரியில் இருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ளது.

    • அப்போது லட்சுமி முனிவர்களை பார்க்காமல் நரசிம்மரையே பார்த்தார்.
    • இந்த திருக்கோவிலில் பஞ்சராதிர ஆகமப்படி இரண்டு காலபூஜைகள் நடக்கின்றன.

    முனிவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நரசிம்மர் பூவரசன்குப்பம் தலத்தில் மகாலட்சுமியை தன் இடது மடியில் அமர்த்தி காட்சி அளித்தார்.

    அப்போது லட்சுமி முனிவர்களை பார்க்காமல் நரசிம்மரையே பார்த்தார்.

    உடனே நரசிம்மர், "நீ முனிவர்களை பார்த்து அருள்பாலிக்காமல் என்னை மட்டும் ஏன் பார்த்து கொண்டிருக்கிறாய்" என்றார்.

    அதற்கு லட்சுமி, "கோபமாக உள்ள நீங்கள் உங்களது வெப்பத்தை, தரிசிக்க வரும் பக்தர்களிடம் காட்டக்கூடாது. எனவேதான் நான் உங்களையே பார்த்து கொண்டிருக்கிறேன்" என்றார்.

    அதன் பின் நரசிம்மரின் கட்டளைக்கிணங்க லட்சுமி ஒரு கண்ணால் நரசிம்மரையும், மற்றொரு கண்ணால் பக்தர்களையும் பார்த்து அருள்பாலித்து வருகிறாள்.

    பிரகாரத்தினுள் இராமானுஜர், நாகசன்னதியும் இருக்கிறது.

    இந்த லட்சுமி நரசிம்மபெருமாளை 48 நாட்கள் விரதமிருந்து உள்ளன்போடு வழிபட்டால் கடன்தொல்லைகள் தீரும்.

    பதவி உயர்வு வந்து சேரும் மற்றும் எதிரிகள் எல்லாம் இல்லாமல் நண்பர்களாகி விடுகிறார்கள் என்பது ஐதீகம்.

    இந்த திருக்கோவிலில் பஞ்சராதிர ஆகமப்படி இரண்டு காலபூஜைகள் நடக்கின்றன.

    இதில் மற்றுமொரு சிறப்பு சித்திரை மாதம் நடக்கும் நரசிம்ம ஜெயந்தியன்று சகஸ்ரகலச திருமஞ்சனம் எனும் இந்த விழா இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    ஸ்ரீலட்சுமி நரசிம்மபெருமாளை வேண்டினால் கடன் தொல்லை தீரும், பொருள்கள் குவியும், இங்கே உற்சவர் வரதராஜ பெருமாள் இவர் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் காட்சி தருகிறார்.

    தினமும் இங்கே அன்னதானம் நடைபெறுகிறது.

    சுவாதி நட்சத்திரத்தன்று விசேஷ வழிபாடுகள் மற்றும் பூஜைகள் உண்டு.

    • ஓம் நமோ நாராயணா என்னும் நாமத்தை நிலை நிறுத்திய அவதாரம்தான் நரசிம்ம அவதாரம்.
    • வேண்டுதல் நிறைவேற நெய்விளக்கு ஏற்றி, துளசி அர்ச்சனை செய்கிறார்கள்.

    கடலூர் மாவட்டம் சிங்கிரி குடியில், 16 திருக்கரங்களுடன் இரணியனை சம்ஹாரம் செய்த நிலையில் நரசிம்மர் உக்கிரமாக அருள் பாலிக்கிறார்.

    ஓம் நமோ நாராயணா என்னும் நாமத்தை நிலை நிறுத்திய அவதாரம்தான் நரசிம்ம அவதாரம்.

    "நாளை என்பது நரசிம்மனிடத்தில் இல்லை' என்னும் வாக்கிற்கு ஏற்ப, சரணடைந்த உடனேயே அருள்பாலிப்பவர் நரசிம்மர்.

    ஐந்து நிலை, ஏழு கலசங்களுடன் மேற்கு பார்த்த ராஜகோபுரமும், மிகப்பெரிய கொடி மரமும் உள்ளது.

    வைகானஸ ஆகமப்படி இத்தலத்தில் பூஜை நடக்கிறது.

    மன நிலை பாதிப்பு, கடன் தொல்லை, திருமணத்தடை, குழந்தை பாக்கியம், எதிரிகளால் தொந்தரவு, கிரக தோஷம் உள்ளவர்கள் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

    வேண்டுதல் நிறைவேற செவ்வாய்க் கிழமைகளில் நெய்விளக்கு ஏற்றி, துளசி அர்ச்சனை செய்கிறார்கள்.

    பிரகலாதனின் விருப்பப்படி நரசிம்மர், மூலஸ்தானத்தில் 16 திருக்கரங்களுடன், இரணியனை வதம் செய்த கோலத்தில் மிகப்பிரமாண்டமாக அருள் பாலிக்கிறார்.

    இரணியனை மேற்கு பார்த்து நின்று நரசிம்மர் வதம் செய்ததைக் குறிக்கும் வகையில், மேற்கு பார்த்த நிலையில் உள்ளார்.

    ஒரே மூலஸ்தானத்தில் மூன்று நரசிம்மர் அருள்பாலிப்பதை காண்பது அரிது.

    இவ்வகை அபூர்வ நரசிம்மர் தலங்கள் ராஜஸ்தானிலும், தமிழகத்தில் இங்கு மட்டுமே உள்ளதாகக் கூறுகிறார்கள்.

    மற்ற நரசிம்மர் தலங்களை விட சிறப்பு வாய்ந்ததாக கருதப்படும் தலம் இது.

    உற்சவர் பிரகலாத வரதன், ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் பாவன விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்.

    • அவர் 16 கைகளுடன் சிங்கிரிகுடி தலத்தில் எழுந்தருளியுள்ளார்.
    • இவ்வாறு ஒரே கருவறையில் மூன்று நரசிம்மர் அருள்பாலிப்பது சிறப்பாகும்.

    தன் பக்தன் பிரகலாதன், அவனது தந்தை இரணியனால் கொடுமைப்படுத்த படுவதை அறிந்த திருமால், நரசிம்ம அவதாரம் எடுத்து அவனைக் கொன்றார்.

    அவர் 16 கைகளுடன் சிங்கிரிகுடி தலத்தில் எழுந்தருளியுள்ளார்.

    அவரது கோபத்தை தணிக்கும் வகையில் நரசிம்மரின் இடப்புறம் இரணியனின் மனைவி நீலாவதி, வலதுபுறம் மூன்று அசுரர்கள், பிரகலாதன், சுக்கிரன், வசிஷ்டர் ஆகியோர் உள்ளனர்.

    வடக்கு நோக்கியபடி யோக நரசிம்மர், பாலநரசிம்மர் உள்ளனர்.

    இவ்வாறு ஒரே கருவறையில் மூன்று நரசிம்மர் அருள்பாலிப்பது சிறப்பாகும்.

    உற்சவர் பிரகலாத வரதன், ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.

    நரசிம்மர் கைகளில் பிரயோக சக்கரம், குத்து கத்தி, பாணம், சங்கு, வில், கதை, கேடயம், வெட்டப்பட்ட தலை ஆகியவற்றை ஏந்தியுள்ளார்.

    மற்ற கைகள் இரணியனை வதம் செய்த நிலையில் உள்ளது.

    • உலகிலேயே இரட்டைஆஞ்சநேயர் உள்ள ஒரே சன்னதி இந்த ஆலயத்தில் உள்ளது.
    • நடு நாட்டு வைணவத் தலங்களில் பரிக்கல் தலம் தனித்துவம் கொண்டது.

    1. நடு நாட்டு வைணவத் தலங்களில் பரிக்கல் தலம் தனித்துவம் கொண்டது.

    2. பரிக்கல் ஆலய கருவறைக்குள் ஸ்ரீவியாசாரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீஆஞ்சநேயர் உள்ளார்.

    3. உலகிலேயே இரட்டைஆஞ்சநேயர் உள்ள ஒரே சன்னதி இந்த ஆலயத்தில் உள்ளது.

    4. இத்தலத்து லட்சுமி நரசிம்மர் அனைத்து பிரிவு மக்களாலும் குல தெய்வமாக கொண்டாடப்படுகிறார்.

    5. பரிக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் அரை மைல் தொலைவில் இந்த ஆலயம் உள்ளது.

    6. சென்னை&திருச்சி நெடுஞ்சாலையில் கெடிலம் கூட்ரோட்டில் இருந்து இந்த ஆலயத்துக்கு செல்ல பஸ் வசதி உள்ளது.

    7. விழுப்புரத்தில் இருந்து திருச்சி நோக்கி செல்லும் வழித்தடத்தில் சுமார் 21 கி.மீ. தொலைவுக்கு இத்தலம் உள்ளது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

    8. விழுப்புரத்தில் இருந்து இந்த ஆலயத்துக்கு வர காலை 2 தடவை, மதியம் 1 தடவை, மாலை 1 தடவை ஆகிய 4 தடவை மட்டுமே பஸ் வசதி உள்ளது.

    9. கெடிலம் பகுதியில் இருந்து இத்தலத்துக்கு வர மினி பஸ், ஆட்டோ வசதி இருக்கிறது.

    10. 1800 ஆண்டுகள் பழமையான இத்தலம் மிகச் சிறந்த பிரார்த்தனை தலமாகும்.

    11. பரிக்கல் தலத்தில் இருந்து பூவரசன் குப்பம் தலம் சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது.

    12. இத்தலம் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரைக்கும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரைக்கும் திறந்து இருக்கும்.

    13. காலை 8 மணி முதல் 9 மணி வரை காலசாந்தி பூஜை, 11 மணி முதல் 12 மணி வரை உச்சிகால பூஜை, இரவு 7.30 மணி முதல் 8 மணி வரை ராக்கால பூஜை நடைபெறும்.

    14. இத்தலத்தில் ரூ.10 கட்டணம் செலுத்தி சகஸ்ரநாமம் அர்ச்சனை செய்யலாம்.

    15. இத்தலத்தில் வருடத்தில் 12 மாதங்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. சித்திரையில் பிரம்மோற்சவம், வைகாசியில் நரசிம்ம ஜெயந்தி நடத்தப்படுகிறது.

    16. ஆந்திராவைச் சேர்ந்த பலர் இத்தல நரசிம்மரை குல தெய்வமாகக் கொண்டாடுகிறார்கள்.

    எனவே தெலுங்கு வருடப் பிறப்பு இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

    17. முதல் அமைச்சரின் அன்னதானத்திட்டம் இத்தலத்தில் செயல்படுத்தப்படுகிறது.

    தினமும் 50 பேருக்கு மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது.

    18. இந்தியாவிலேயே இத்தலத்தில் மட்டுமே நரசிம்மரும் லட்சுமி தாயாரும் ஆலிங்கனம் செய்தபடி உள்ளனர்.

    19. திருமண தடை இருப்பவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆலயத்தில் வழிபட உடனடி பலன் கிடைக்கிறது.

    20. நரசிம்மரிடம் வேண்டிக் கொண்டவர்கள் இத்தலத்தில் எண்ணை, பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, மஞ்சள், சந்தனம் ஆகியவை மூலம் அபிஷேகம் செய்யலாம்.

    21. இத்தலத்தில் செய்யப்படும் வழிபாடுகளால் நவக்கிரக தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம்.

    22. முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களும் இத்தலத்துக்கு வந்து வழிபாடுகள் செய்வது குறிப்பிடத்தக்கது.

    23. வரதராஜபெருமாள் தெற்கு நோக்கி உள்ளார். ஸ்ரீரங்கத்திலும் வரதராஜ பெருமாள் இதே அமைப்புடன்தான் உள்ளார்.

    24. இத்தலத்தின் புராண கால பெயர் ''பரகலா'' என்பதாகும்.

    25. ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திர தினத்தன்று மாலையில் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்படுகிறது.

    • அந்த ஆலயத்தில் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை விதம், விதமான வழிபாடுகள் நடத்தப்பட்டன.
    • சுவாதி உள்பட நரசிம்மருக்கு உகந்த நாட்களில் இந்த வழிபாட்டை செய்வது மிகவும் நல்லது.

    பரிக்கல் லட்சுமி நரசிம்மர் ஆலயம் எத்தனையோ பழமை சிறப்புகள் கொண்டது.

    அந்த ஆலயத்தில் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை விதம், விதமான வழிபாடுகள் நடத்தப்பட்டன.

    அவற்றில் பல வழிபாடுகள் கால ஓட்டத்தில் மறைந்து விட்டன.

    அந்த வழிபாடுகளில் சில தற்போது மீண்டும் நடைமுறைக்கு வரத் தொடங்கியுள்ளன.

    அதில் ஈரத்துணியுடன் 48 தடவை பரிக்கல் ஆலய முதல் பிரகாரத்தை சுற்றி பிரதட்சணம் செய்யும் வழிபாடு புத்துயிர் பெற்றுள்ளது.

    யார் ஒருவர் "ஓம் நமோ நாராயணா" என்று உச்சரித்தப்படி பரிக்கல் லட்சுமி நரசிம்மரை நினைத்து மனம் உருகி ஈர உடையுடன் 48 தடவை பிரதட்சணம் செய்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாக பலன் கிடைக்கும்.

    அவர்கள் என்ன வேண்டுதல் வைக்கிறார்களோ அதை லட்சுமி நரசிம்மர் நிறைவேற்றி வைப்பார்.

    இந்த வழிபாட்டுக்கு உதவும் வகையில் பரிக்கல் ஆலயம் அருகில் இரவில் பக்தர்கள் தங்குவதற்கான வசதிகள் உள்ளன.

    இரவில் அங்கு தங்கி விட்டு அதிகாலை எழுந்து குளித்து விட்டு ஈரத்துணியுடன் 48 தடவை ஆலய பிரதட்சணம் செய்யலாம்.

    சுவாதி உள்பட நரசிம்மருக்கு உகந்த நாட்களில் இந்த வழிபாட்டை செய்வது மிகவும் நல்லது.

    பரிக்கல் லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஆண்டுதோறும் பல திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

    பரிக்கல் லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஆண்டு தோறும் பல திருவிழாக்கள், பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன.

    தைத்திங்கள் 5ம் நாள் பரிக்கல் நரசிம்மர் புறப்பாட்டில் ஊர்வலமாக பெண்ணையாறு சென்று அங்கு ஒரு நாள் இரவு தங்குவார்.

    இது ஒரு பிரார்த்தனை திருத்தலம்.

    இங்கு பக்தர்களுடைய விருப்பம் நிறைவேற வேண்டுமென்றால், அதற்கு இங்கு பொதுமக்களால் அர்ச்சகரை கொண்டு ஆகம விதிப்படி பூஜைகள் நடத்தப்படுகின்றன.

    பொதுவாக மனிதர்களுக்கு மூன்று விதமான துன்பங்கள் நேரிடும்.

    1. கடன் தொல்லை.

    2. பக்கத்திலுள்ளவர்களாலோ அல்லது உறவினர்களால் ஏற்படும் பகை.

    3. வியாதியினால், மருந்துகளாலோ குணப்படுத்த முடியாத படி மிகப் பெரிய தொல்லை.

    இப்படிப்பட்ட தொல்லைகளிலிருந்து விடுபட ஒரு சிறப்பு பூஜை இக்கோவிலில் நடத்தப்படுகிறது.

    • சரித்திர புகழ் பெற்ற கல்வெட்டுக்கள் பரிக்கல் கோவிலின் வெளிச்சுவர்களில் உள்ளன.
    • மீன் வடிவக் குறியீடுகள் உள்ள கல்வெட்டுக்கள் இங்கே காணப்படுகின்றன.

    சரித்திர புகழ் பெற்ற கல்வெட்டுக்கள் பரிக்கல் கோவிலின் வெளிச்சுவர்களில் உள்ளன.

    பல்லாயிரக்கணக்கான புகழ் பெற்ற மீன் வடிவக் குறியீடுகள் உள்ள கல்வெட்டுக்கள், (பாண்டிய அரசர்களின் சின்னம் மீன் சின்னம்) இங்கே காணப்படுகின்றன.

    13ம் நூற்றாண்டில் வாழ்ந்த கோப்பெருஞ்சிங்கம் என்ற பாண்டிய அரசனுடைய பெரும் பங்களிப்பை இது குறிக்கிறது.

    14ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருபுவனம் சக்கரவர்த்தி கோனிர்மாய் கொண்டானுடைய பங்களிப்பைப் பற்றியும் நாம் அறிகிறோம்.

    மற்றொரு கல்வெட்டின் மூலம் அருகிலுள்ள கிராமங்களான திருவெண்ணை நல்லூர், அனத்தூர், சித்தனூர் முதலிய கிராம மக்களுக்கு வரி தள்ளுபடியை வழங்கியதாகவும், அக்கிராம மக்கள் அந்த தொகையை இத்திருக்கோவிலைப் பராமரிக்கவும், விளக்கு ஏற்றவும் மற்றும் கோவில் திருப்பணிக்காகவும் பயன்படுத்தியதாகச் சாசனம் இங்கே உள்ளது.

    முதலாம் ராஜராஜ சோழன் பரிக்கல் கோவிலின் திருக்குளத்தை வெட்டி இத்தலத்தில் திருப்பணி செய்துள்ளான்.

    இத்திருக்கோவிலின் குடமுழுக்கை பல்லவ அரசர்கள் நாயக்க மன்னர்கள் நிறைவேற்றியதாகவும் கல்வெட்டில் குறிப்புகள் உள்ளன.

    • விஷ்ணுவின் அவதாரங்களில் 4வது அவதாரம் நரசிம்ம அவதாரமாகும்.
    • அது தன் பக்தனை காக்க ஒரே நொடியில் தோன்றிய அவதாரமாகும்.

    விஷ்ணுவின் அவதாரங்களில் 4வது அவதாரம் நரசிம்ம அவதாரமாகும்.

    இந்த அவதாரத்தின்போது சிங்கத்தின் தலையுடனும், மனித உடலுடனும் விஷ்ணு பகவான் அவதாரம் எடுத்தார்.

    மற்ற அவதாரங்கள் அனைத்தும் திட்டமிட்டு நடந்தவை. ஆனால் நரசிம்ம அவதாரம் அப்படி அல்ல.

    அது தன் பக்தனை காக்க ஒரே நொடியில் தோன்றிய அவதாரமாகும்.

    இதன் காரணமாக மற்ற அவதாரங்களுக்கும், நரசிம்ம அவதாரத்துக்கும் மிகுந்த வித்தியாசம் உண்டு.

    நரசிம்மரிடம் சரண் அடைந்தால் பக்தர்கள் வைக்கும் வேண்டுதல்கள் அனைத்தும் உடனே நிறைவேறும் என்பது ஐதீகமாகும்.

    எனவேதான் "நாளை என்பது நரசிம்மனிடம் இல்லை" என்பார்கள்.

    எத்தனையோ தெய்வங்களிடம் வேண்டுதல் வைத்து முறையிட்டு, எதுவும் நடக்காமல் சலிப்படைந்தவர்கள், நரசிம்மரிடம் சரண் அடைந்து நினைத்தது நிறைவேற காண்பார்கள்.

    எனவே நரசிம்மர் தனது பக்தர்களைத் தக்க சமயத்தில் காத்து அருளும் கடவுளாக கருதப்படுகிறார்.

    ×