என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லட்ச தீபம்"

    • அமாவாசை அன்று மூதாதையர்களுக்கு படையல் செய்து சிறப்பு பூஜை செய்வர்.
    • மூதாதையருக்கு தர்ப்பணம் செய்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

    அமாவாசை மிகவும் புனிதமான தினமாகும். தை மாதத்தில் வருகின்ற அமாவாசை தை அமாவாசை விரதம் எனச் சிறப்புப் பெறுகின்றது. தமிழ் மாதங்களில் எல்லா மாத அமாவாசை நாட்களுமே சிறப்பானவை என்பதால் தாய், தந்தையரை இழந்தோர் தங்களின் பெற்றோர் மற்றும் மூதாதையரை கருத்தில் நினைத்து அமாவாசை நாட்களில் விரதம் கடைப்பிடிப்பர்.

    ஆனால் குறிப்பிட்ட சில மாதங்களில் வரும் அமாவாசை நாட்கள் சிறப்பு வாய்ந்தன. அவற்றில் முக்கிய இடம் வகிப்பது ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை ஆகும். தை அமாவாசை அன்று ஆறு கடல் போன்ற புனித நீர் நிலையங்களில் குளித்து மூதாதையர்களுக்கு படையல் செய்து சிறப்பு பூஜை செய்வர்.

    கடல் கூடும் கன்னியாகுமரி ராமேஸ்வரம் மற்றும் காவிரியின் முக்கூடல் தலமான பவானி இங்கெல்லாம் மக்கள் கூட்டம் கூடுதலாக இருக்கும். ராமேஸ்வரத்தில் புகழ் பெற்ற ராமநாத சுவாமி, அம்பாளுடன் தை அமாவாசை தினத்தன்று அங்குள்ள அக்னி தீர்த்தத்திற்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு புனித நீராடல் நடைபெறும்.

    கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுகின்றன. தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடுவர். இராமேஸ்வரம் கடற்கரையில் தங்களின் மூதாதையருக்கு தர்ப்பணம் செய்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

    திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு தோறும் தை அமாவாசை தினத்தன்று லட்சம் தீபம் ஏற்றப்படும். அன்றைய தினம் ஸ்ரீ நெல்லையப்பா காந்திமதியம்மன் கோவிலில் காணும் இடமெல்லாம் தீபங்களாக பிரகாச ஜோதியாகவே காணப்படும்.

    பல்லாயிரக்கணக்கானோர் சுற்று வட்டாரங்களில் இருந்து வந்து மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கோவிலின் பிரகாரங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தீபங்களை ஏற்றி வைத்து வழிபடுவார்கள் .

    திருமண தடை நீங்கும்

    பிதுர்களுக்கு திதி கொடுப்பதை ஏதோ செய்யக் கூடாத செயலாகப் பலரும் கருதுகிறார்கள். திதியன்றும் அமாவாசை நாளிலும் வாசலில் கோலமிடுவது கூடாது என்பதால் அசுபமான நாளாக சிலர் எண்ணுகின்றனர். முன்னோர் வழிபாட்டில் முழுமையாக ஈடுபட வேண்டும் என்ற நோக்கத்திலேயே பிதுர்க்கடன் நாளன்று கோலமிடுவது போன்ற செயல்களைத் தவிர்க்க சொல்லியுள்ளனர்.

    முன்னோரது ஆசி பெற அமாவாசை, வருஷதிதி, மகாளயபட்ச நாட்கள் உகந்தவை. இவை புண்ணிய நாட்களாகும். கேளிக்கை, சுப நிகழ்ச்சிகளை இந்நாட்களில் தவிர்க்க வேண்டும் என்பது விதி. இதன் காரணமாக இந்த நாளை ஆகாத நாளாக எடுத்துக்கொள்ளக்கூடாது. தை அமாவாசை நாளில் நம் முன்னோருக்கு உணவு புத்தாடை படைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

    அந்த ஆடை, உணவை ஏழைகளுக்கு தானமாக கொடுப்பதன் மூலம் அளவற்ற நன்மைகள் நம் வாழ்வில் உண்டாவதை நாம் உணர முடியும். தடைபட்ட திருமணம், நீண்ட நாள்பட்ட நோய் நொடிகள், மன வருத்தம் ஆகியவை விலகி சந்தோஷமும் மனநிறைவும் நம் இல்லத்திலும், உள்ளத்திலும் ஊற்றெடுக்கும்.

    காகத்திற்கு உணவிடுங்கள்

    காகம் சனீஸ்வரருக்குரிய வாகனம் என்று தெரியும். ஆனால் பிதுர் எனப்படும் முன்னோர் வழிபாட்டிலும் காகத்திற்கு முக்கியத்துவம் உண்டு. காகம் எமலோகத்தின் வாசலில் இருக்கும் என்றும், எமனின் தூதுவன் என்றும் சொல்வதுண்டு.

    காகத்திற்கு சாதம் வைத்தால் எமலோகத்தில் வாழும் நம் முன்னோர் அமைதி பெற்று நமக்கு ஆசியளிப்பார் என்பது நம்பிக்கை. காகம் நாம் வைத்த உணவைத் தீண்டாவிட்டால் இறந்து போன நம் முன்னோருக்கு ஏதோ குறை இருப்பதாக கருதுவதும் மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

    பிதுர் தர்ப்பணத்திற்குரிய கயாவில் உள்ள பாறைக்கு காக சிலை என்று பெயர். அந்த பாறையில்தான் பிண்டம் வைத்து வணங்குவர். தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று பிற காக்கைகளையும் கரைந்து அழைத்த பின்னரே. காகம் உணவு உண்ணும். அப்படிப்பட்ட உயர்ந்த ஜீவனான காகத்திற்கு உணவிடுவதன் மூலம் பிதுர்களின் ஆசியைப் பெற முடியும்.

    • நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு தோறும் பத்ரதீபமும் நடைபெறுகிறது.
    • லட்ச தீபத்தால் ஆலயம் முழுவதும் ஒளிவெள்ளத்தால் ஜொலிக்கும்.

    அமாவாசை அன்று தாமிரபரணி பாயும் பாபநாசம் முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் கடலில் கலக்கும் புன்னக்காயல் பகுதி வரை பல்வேறு இடங்களில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் குடும்பத்தில் உயிர் நீத்த முன்னோர்களை நினைத்து நீர் நிலைகளில் நீராடி, தண்ணீர் இறைத்து, வேத மந்திரங்கள் முழங்க வழிபாடு நடத்துவார்கள்.


    குறிப்பாக பாபநாசம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி, நெல்லை மாநகரின் பகுதிகளான குறுக்குத்துறை, வண்ணார்பேட்டை, சீவலப்பேரி, தூத்துக்குடி மாவட்டத்தின் ஏரல், முறப்பநாடு, திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிகாலையிலேயே பொதுமக்கள் திரண்டு தங்கள் முன்னோர்களை நினைத்து வழிபாடு நடத்துவார்கள்.

    தாமிபரணி, காசி நதிக்கு ஒப்பாக கருதப்படுவதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் வந்திருந்து தாமிரபரணியில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வர்.

    இதேபோல் தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் புனித நீராடி அருவிக்கரை பகுதியில் வரிசையாக அமர்ந்திருந்து அர்ச்சகர்கள் முன்னிலையில் எள்ளையும், தண்ணீரையும் ஆற்றில் விட்டு தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள்.

    சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோவிலின் நாகசுனை தெப்பக்குளத்தில் தர்ப்பணம் செய்வார்கள். தை அமாசாசையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், ஏரல் சோ்மன் அருணாச்சல சுவாமி கோவிலில் தை அமாவாசை திருவிழா 12 நாள்கள் நடைபெறும்.


    நிறைவு நாளான 12-ம் திருநாள் அன்று தீா்த்தவாரி, பொருநை நதியில் திருத்துறையில் நீராடல் செய்தால் சகல நோய் தீரும் என்பது ஐதீகம். அதனைத் தொடர்ந்து அன்னதானமும், ஆலிலை சயன அலங்காரமும், அதன் பின்னா் ஊஞ்சல் சேவையும் நடைபெறும்.

    தை அமாவாசை தினத்தன்று நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு தோறும் பத்ரதீபமும் நடைபெறுகிறது. இதில் பத்தாயிரம் விளக்குகள் ஏற்றப்படும். 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை தை அமாவாசையன்று, லட்சதீபமும் ஏற்றப்படுகிறது.


    பத்ரதீபம் மற்றும் லட்சதீப திருவிழாக்களின்போது மணி மண்டபத்தில் தங்கவிளக்கு, 2 வெள்ளி விளக்குகள் மற்றும் அவற்றைச் சுற்றி 8 தீபங்களை வைத்து பூஜை நடைபெறுகிறது.

    நெல்லையப்பர் கோவிலில் தை அமாவாசை அன்று மாலை 6 மணி முதல் 9 வரை பக்தர்களால் ஏற்றப்படும் இந்த லட்ச தீபத்தால் ஆலயம் முழுவதும் ஒளிவெள்ளத்தால் ஜொலிக்கும்.


    பித்ருகர்மா என்னும் நீத்தார் கடன்களை சரிவர நிறைவேற்றாதவர்கள் நெல்லையப்பர் கோவிலில் தை அமாவாசை தினத்தன்று நடைபெறும் பத்ரதீபம் அல்லது லட்சதீப விழாவின்போது தீபமேற்றினால் குடும்ப சாபங்கள் விலகும் என்பது ஐதீகம்.

    ×