என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேங்கடாஜலபதி"

    • பெருமாளின் கையிலுள்ள சக்கரம் சுகபோகங்கள் சுழலும் தத்துவத்தை குறிக்கிறது.
    • திருமலை திருப்பதியில் உள்ள ஏழுமலையானின் சிலை பிரமாண்டமான அமைப்பு கொண்டதாகும்.

    திருமலை திருப்பதியில் உள்ள ஏழுமலையானின் சிலை பிரமாண்டமான அமைப்பு கொண்டதாகும்.

    9 அடி உயரத்துடன் அழகாக காட்சி அளிக்கும் ஏழுமலையானை எத்தனை தடவை பார்த்தாலும் சலிப்பே வராது.

    அதிலும் அவருக்கு அனைத்து நகைகளையும் அணிவித்து அலங்காரம் செய்த பிறகு பார்த்தால் பரவசமாக இருக்கும்.

    திருமலை தெய்வம் வேங்கடாஜலபதிக்கு, உச்சி முதல் பாதம் வரை அங்கம் முழுக்க ஆபரணங்கள், தண்டை,

    பாடகம், சூரிய கடாரி, நாகாபரணம், கர்ணபத்திரம், திருநெற்றிப் பட்டம், காசுமாலை என

    அங்கமெல்லாம் தங்கம் அணிந்து அழகே உருவாகக் காட்சி அளிக்கிறார்.

    கமல பீடத்தின் மீது பாதம் ஊன்றி, நவரத்னங்களாலான அணிகள் பூண்டு, சுவர்ண மகுடம் தரித்து

    மகர குண்டலங்கள் செவி அணி ஆக, மகர கண்டி, நாகாபரணம் 108 லட்சுமிகள் பொறித்த மாலை,

    தங்கப்பூணூல் தரித்து ஏழுமலையான் நமக்கு அருள்பாலிக்கிறார்.

    பத்து ஆழ்வார்களின் மங்களாசாசனம் ஏற்று ஷேத்ரய்யா, தியாகய்யா, புரந்தர தாசர், அன்னமாச்சார்யா சாகித்ய

    கர்த்தாக்களின் சங்கீதம் கேட்டு மலையே குனிய நின்று கொண்டு இருக்கிறார் வேங்கடவன்.

    கண்களையே மறைத்துவிடும் திருமண் என்ற நாமம் அணிவிக்கப்படுகிறது.

    இதில் முழுப்பங்கு பச்சைக் கற்பூரம்.

    இதைச் சாத்துவது வெள்ளிக்கிழமை, வேங்கடமுடையானுக்கு அபிஷேகமும், வெள்ளிக்கிழமையில்தான் நடத்தப்படுகிறது.

    இதிலும் ஒரு வினோதம் உள்ளது.

    அபிஷேகப் பொருட்களில் மஞ்சளும் இடம் பெறும்.

    இத்தகைய சிறப்புகள் கொண்ட ஏழுமலையான் சிலை முதலில் இரண்டு கரத்துடன்தான் இருந்தது என்றும்,

    பின்னர் உடையவர் ராமானுஜர் வேண்டுதல் செய்தபடி பெருமாள் சங்கு சக்கரங்களை ஏந்திய இரண்டு கரங்களுடன்

    நான்கு கரத்தவராக சேவை சாதித்ததாகவும் சொல்கிறார்கள்.

    பெருமாளின் கையிலுள்ள சக்கரம் சுகபோகங்கள் சுழலும் தத்துவத்தை குறிக்கிறது.

    இந்த சக்கரம் அவரது வலது கையில் இருக்கிறது.

    இடது கையில் உள்ளது சங்கு.

    அதர்மத்தை அழித்து எழும் சங்கின் ஒலி இதன் தத்துவமாகும்.

    • வேங்கடவன் எப்போதுமே தங்க, வைர நகைகள் ஜொலிக்க அற்புதமாகக் காட்சியளிக்கிறார்.
    • குமரிமுனையில் உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி 7அடி உயரத்தில் உருவாக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    ஏழுமலையானின் வலது மார்பில் பெரிய பிராட்டியான திருமகள் அமர்ந்த கோலமும், இடது மார்பில் பத்மாவதித்தாயார் அமர்ந்துள்ள கோலமும் இடம் பெற்றுள்ளன.

    இவ்விரண்டு தாய்மார்களும் தாமரை மலரின் மீது அமர்ந்த கோலத்தில் நான்கு கரங்களுடன் காட்சியளிக்கின்றனர்.

    இவர்கள் தங்களது இரண்டு கரங்களில் தாமரை மொட்டுகளை கையில் ஏந்திய கோலத்துடனும்,

    கீழே நீட்டிய ஒரு கரத்திலிருந்து பொன்னை வாரி வழங்கியபடியும், இன்னொரு கரத்தில் அமுதகலசமும்

    கொண்டவர்களாகக் காட்சியளிக்கின்றனர்.

    வேங்கடவன் எப்போதுமே தங்க, வைர நகைகள் ஜொலிக்க அற்புதமாகக் காட்சியளிக்கிறார்.

    அழகிய கிரீடம், உடல் முழுக்கத் தங்க நகைகளின் அணிவகுப்பு! உலகிலேயே அதிக அளவு தங்க அணிகலன்களுடன் அபாரமாகக் காட்சியளிக்கும் கடவுள் வேங்கடவன் மாத்திரமே.

    மேரு பச்சை என்னும் மூன்று அங்குல விட்டம் கொண்ட பச்சைக்கல் பதிக்கப்பெற்ற கிரீடம் முதல், வைரமுடி,

    முதலை வடிவத்தில் காதணிகள், தோளில், வைர தங்க அணிகள், வைரம் பதித்த மகரகண்டி தங்க துளசிமாலை,

    நூற்று எட்டு லக்குமி உருவம் பதிக்கப்பெற்ற தங்கக்காசு, வேங்கடேஸ்வர சகஸ்ரநாமம் வரையப் பெற்ற

    தங்கக் கவசம் பூணப்பெற்ற சாளக்கிராம மாலை தங்கத்தால் ஆன பாதகவசம், தசாவதாரம் பதிக்கப்பட்ட

    இடுப்புப்பட்டை, இடுப்பில் தொங்கும் தங்கத்தால் ஆன ஆயுதம், வங்கியைப் போன்ற காலணித் தண்டை

    இப்படி பல்வேறு வகையான அணிகலன்கள் இவருக்கு மாத்திரமே உலகில் உள்ளது.

    இத்தகைய கோலத்தில் தினந்தினம் பக்தர்களுக்கு அருட்கடாட்சம் வழங்குகிறார் திருவேங்கடவன்.

    அக்காலத்திய மன்னர்கள் ஏராளமான பொன் நகைகளை வேங்கடவனுக்கு அள்ளித் தந்துள்ளனர்.

    அதையடுத்து பத்மாவதி தாயாரின் திரவுருவம் பதித்த தங்கப் பதக்கத்தை ராமானுஜர் செய்து,

    ஏழுமலையானின் கழுத்தில் அணிவித்ததாக வேங்கடேச இதிகாச மாலை கூறுகிறது.

    இதே அமைப்பில் இன்னொரு ஏழுமலையான் சிலையை உருவாக்குவது என்பது இயலாத காரியம்.

    திருமலை தேவஸ்தானம் சார்பில் உருவாகும் கிளை ஆலயங்களில் இத்தகைய சிலையை நிறுவது இயலாது.

    திருப்பதியில் உள்ள வெங்கடாஜலபதி சிலைபோல் உருவாக்கப்பட்டாலும் அளவு குறைவாகவே சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

    குமரிமுனையில் உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி 7அடி உயரத்தில் உருவாக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • திருப்பதி கோவிலில் ஒவ்வொரு நாளும் சுப்ரபாதத்துடன் தான் பொழுது தொடங்குகிறது.
    • இந்தக் கணக்கைப் பார்த்த பின்னர் பெருமாள் கருவறைக்குச் சென்று விடுகிறார்.

    திருப்பதி கோவிலில் ஒவ்வொரு நாளும் சுப்ரபாதத்துடன் தான் பொழுது தொடங்குகிறது.

    அரிதுயில் கொண்டிருக்கும் போக ஸ்ரீநிவாசரை பள்ளியறையில் அர்ச்சகர்கள் தீப ஒளியேற்றி தங்கக் கதவுகளை மூடிக் கொண்டு சுப்ரபாதம் பாடித் துயில் எழுப்புகிறார்கள்.

    அவருக்கு ஆரத்தி எடுத்து, பாலும் வெண்ணையும் நிவேதனம் செய்கிறார்கள்.

    சமஸ்கிருதத்தில் உள்ள சுலோகங்களைப் பாடிய பிறகு கதவுகள் திறக்கப் பெறுகின்றன.

    இந்த சுப்ரபாதம் அதிகாலை 3.15 மணிக்கு முடிவடைகிறது.

    அதன் பின்னர், வெங்கடேச பெருமான் பக்ததர்களுக்கு விஸ்வரூப சேவை சாதிக்கிறார்.

    விஸ்வரூப சேவைக்குப் பிறகு பெருமாளின் கர்ப்ப கிருகத்திலிருந்து முந்தைய தினத்தில் அணிவிக்கப்பட்ட மலர்மாலைகள் அகற்றப்படுகின்றன. இதையே தோமல சேவை என்கிறார்கள்.

    தோமல சேவையின்போது போக ஸ்ரீநிவாசருக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.

    பின்பு ஆகாய கங்கையிலிருந்து கொண்டு வரப்படும் தீர்த்தத்திலிருந்து பெருமாளுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.

    இந்தத் தீர்த்தம் கி.பி. 10-ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமலை நம்பியின் வழித் தோன்றல்களால் கொண்டு வரப்படுகிறது.

    மூலவருக்கு பாதுகாபிஷேகம் மட்டுமே செய்து, பின்னர் மணம் நிறைந்த மலர்களாலும், பூமாலைகளாலும் அலங்காரம் செய்கின்றனர்.

    தோமல சேவைக்குப் பின்னர் 'கொலுவூ' என்ற தர்பார் நடைபெறுகிறது.

    இதன் போது தங்கக் கதவுகளைத் திறந்து, அந்த அறையிலிருந்து ஸ்ரீநிவாசமூர்த்தியை வெளியே அழைத்துக் கொண்டு வருகிறார்கள்.

    வெள்ளிக்குடை பிடித்து, வெள்ளிச் சிம்மாசனத்தில் அமர்த்தி, ஸ்ரீநிவாசனை திருமாமணி மண்டபத்தில் கொலு வீற்றிருக்கச் செய்கின்றனர்.

    பெருமாளின் முன்னிலையிலே சேவார்ததிகளால் அன்றைய திதி, வார, நட்சத்திர, யோக, கரணம் பற்றிய

    விவரங்களும், முந்தைய நாள் வரவு செலவுக் கணக்குகளும் அவரது திருமுன் படிக்கப்படுகின்றன.

    பின்பு வரவு வந்த பண நோட்டுகளும், நகைகளும், நாணயங்களும் அவர் முன்பு பிரித்து வைக்கப்படுகின்றன.

    இந்தக் கணக்கைப் பார்த்த பின்னர் பெருமாள் கருவறைக்குச் சென்று விடுகிறார்.

    • தர்பார் சேவைக்குப் பின்னர் பெருமாளுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெறுகிறது.
    • அஷ்டோத்திர அர்ச்சனை நிறைவானதும் பெருமாளுக்கு நைவேத்தியம் படைக்கப் பெறுகிறது.

    தர்பார் சேவைக்குப் பின்னர் பெருமாளுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெறுகிறது.

    உலகம் செழிப்பாகவும், நிம்மதியாகவும் இருக்க அவருக்கு 1008 நாமாக்களைக் கூறி அர்ச்சனை நடைபெறுகிறது.

    இந்த சேவையின்போது அர்ச்சனை செய்ய விரும்பும் பக்தர்களும் கலந்து கொள்ளலாம்.

    பின்னர் சுத்தி என்று அழைக்கப்பெறும் நைவேத்தியம் சுவாமிக்கு படைக்கப்படுகிறது.

    அரிசியினால் பக்குவமான உணவு வகைகளை நைவேத்தியம் செய்கின்றார்கள்.

    இந்த சுத்தி சேவைக்காலத்தில் பிரதான நைவேத்தியம் படையல் செய்யப்படும்போது, மண்டபத்தில் உள்ள இரண்டு திருமாமணிகளை அடித்து ஓசை எழுப்புகிறார்கள்.

    அது ஏழு மலைகளிலும் எதிரொலித்து, கேட்பவர்களின் நெஞ்சில் பக்தி உணர்வையும், பகவானின் மீது பிரேமையையும் கிளர்ந்தெழச் செய்கிறது.

    இதுவே கோவிலில் ஒலிக்கும் முதலாவது மணியாகும்.

    சாத்துமறை சேவையின்போது வைஷ்ணவர்கள் திவ்யப் பிரபந்தத்திலிருந்து ஒரு பகுதியை வாசிக்கிறார்கள்.

    பின்னர் சம்பூரண அலங்கார ரூபிதராய், பெருமாள் பொதுமக்களின் பார்வைக்குக் காட்சியளிக்கத் தொடங்குகிறார்.

    பெருமாள் இவ்விதம் பக்தர்களுக்கு தரிசனம் தந்த பின்னர் பூஜைகள் நடைபெறுகின்றன.

    108 அர்ச்சனை நடைபெறுகிறது.

    அந்த அஷ்டோத்திர அர்ச்சனை நிறைவானதும் பெருமாளுக்கு நைவேத்தியம் படைக்கப் பெறுகிறது.

    இந்த சேவையின்போது சேவார்த்திகள் தவிர வேறு யாரையும் உள்ளே அனுமதிப்பதில்லை.

    • ஒவ்வொரு நாளும் இரவில் ஏகாந்தசேவை நடைபெறுகிறது.
    • பழங்கள், பாதாம் நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது.

    ஒவ்வொரு நாளும் இரவில் ஏகாந்தசேவை நடைபெறுகிறது.

    இந்த ஏகாந்த சேவைக்காக போக ஸ்ரீநிவாசனை வெல்வெட் விரித்த மெத்தையில் வைத்து, வெள்ளிச் சங்கிலிகள் இணைத்த ஊஞ்சல் கட்டிலில் சயனிக்கச் செய்கின்றனர்.

    சயன மண்டபத்திலேநடைபெறும் இச்சேவையின்போது முக்கியஸ்தர்கள் மாத்திரமே உடனிருக்கிறார்கள்.

    பெருமாளுக்கு வழக்கமான நைவேத்தியங்களைச் செய்யும்போது அவற்றை வகுளாதேவி பார்வையிடுகிறார்.

    அவருக்கும் அம்மவாரி பாயசம் படைக்கப்பெறுகிறது.

    பழங்கள், பாதாம் நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது.

    கி.பி. 1513-ம் ஆண்டில் விஜயநகரப் பேரரசை ஆண்ட கிருஷ்ண தேவராயர் இத்திருக்கோவிலுக்கு ஏராளமான

    தங்க, வைர நகை களைக் காணிக்கையாக வழங்கி உள்ளார்.

    மீண்டும் கி.பி. 1517ம் ஆண்டில் ஏராளமான தங்க அணிகலன்களை வழங்கினார்.

    அச்சமயம் இவரது இரண்டு தேவியர்கள் இரண்டு தங்கக் கிண்ணங்களை பெருமாள் கோவிலுக்கு காணிக்கையாக அளித்திருக்கிறார்கள்.

    அந்த பொற்கிண்ணங்களில்தான் ஏகாந்த சேவையின்போது வெங்கடேசப் பெருமாளுக்கு பால் வழங்கப் பெறுகின்றது.

    மேலே கண்ட நித்திய சேவைகள் ஒவ்வொரு நாளும் நடை பெறும் சேவைகள் ஆகும்.

    • திருப்பதி ஆலயத்துக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று வந்த வண்ணம் உள்ளனர்.
    • விடுமுறை நாட்களில் குடும்பம் குடும்பமாக குவிந்து விடுகிறார்கள்.

    திருப்பதி ஆலயத்துக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று வந்த வண்ணம் உள்ளனர்.

    நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தப்படி உள்ளது.

    பக்தர்கள் வருகையை கட்டுப்படுத்த திருப்பதி-திருப்பதி தேவஸ்தானம் எத்தனையோ நடவடிக்கைகளை மேற்கொண்டது.

    ஆனால் அந்த கட்டுப்பாடுகளையும் மீறி திருப்பதி-திருமலை ஆலயத்துக்கு பக்தர்களின் வருகை அதிகரித்தப்படிதான் உள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் நிறுவப்பட்டுள்ள சக்கரம் தான் பக்தர்கள் அலை அலையாக செல்வதற்கு காரணம் என்று சொல்கிறார்கள்.

    வரும் நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் திருமலையில் கிடைக்கும் உண்டியல் வசூலும் பல மடங்கு உயர்ந்துள்ளது.

    தினமும் சராசரியாக ரூ. 2 கோடிக்கு மேல் உண்டியல் வசூல் கிடைக்கிறது. இந்த எண்ணிக்கையும் உயர்ந்தப்படி இருக்கிறது.

    முன்பெல்லாம் திருப்பதி ஆலயத்துக்கு ஆந்திராவில் இருந்தும் தமிழகத்தில் மட்டுமே சென்றனர்.

    அதிலும் தமிழகத்தில் சென்னை நகர மக்கள் தான் அதிக அளவில் செல்வதுண்டு.

    ஆனால் சமீப காலமாக நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் திருப்பதிக்கு வருகிறார்கள்.

    வடமாநில இந்தி பேசும் மக்கள் அதிகளவில் திருப்பதி ஆலயத்துக்கு வர தொடங்கி உள்ளனர்.

    மும்பை, பெங்களூர், ஐதராபாத் நகரங்களில் இருந்து பக்தர்கள் கார்களில் வரும் வழக்கமும் தொடங்கி உள்ளது.

    இந்த எண்ணிக்கையை கட்டுப்படுத்த ஒவ்வொரு ரூ.300 சிறப்பு கட்டண தரிசனம் வசதியை கொண்டு வந்தனர்.

    இந்த சிறப்பு கட்டணத்திற்கான ஆன்லைனிலும் முன்பதிவு செய்யும் திட்டமும் கொண்டு வரப்பட்டது.

    என்றாலும் பக்தர்களின் வருகையை கட்டுப்படுத்த இயலவில்லை.

    விடுமுறை நாட்களில் குடும்பம் குடும்பமாக குவிந்து விடுகிறார்கள்.

    மொட்டை போடுவது, உண்டியலில் பணம் போடுவது ஆகியவற்றை பெரும்பாலான பக்தர்கள் தவறாமல் செய்கிறார்கள்.


    • அங்கிருந்து நாற்பது அடி நடந்தவுடன் ஒரு ராஜகோபுரம் தெரியும்.
    • வெங்கடாசலபதி நின்று தரிசனம் தந்த இடத்தில் கல்லில் இரு பாதங்கள் காட்சியளித்தன.

    ராமானுஜர், திருப்பதியில் இருந்தபோது அலிபிரி என்றழைக்கப்படும் திருமலை அடிவாரத்தில் அமர்ந்து ராமாயண விரிவுரையை நடத்துவது வழக்கம்.

    அவரது மாமனான திருமலை நம்பி, ராமானுஜருக்கு எதிரில் அமர்ந்து ராமாயண கதையைக் கேட்கத் தொடங்குவார்.

    ராமானுஜர் கதையை நிறுத்தும் போது பார்த்தால் நாள் கடந்திருக்கும்.

    வெங்கடாசலபதிக்கு செய்ய வேண்டிய உச்சிகால பூஜை நேரம் தவறி இருக்கும்.

    பெருமாளே, அபச்சாரம் செய்த அடியவனை மன்னித்துவிடு என்று அனுதினமும் அரற்றுவார்.

    திருமலை நம்பி இப்படி உருகுவதைக் காணப்பொறுக்காமல், வெங்கடாசலபதியே அடிவாரத்தில் அவர் முன்பு வந்து நின்று காட்சியளித்தார்.

    இனி, உச்சிகால பூஜையை அடிவாரத்திலேயே செய்யுமாறு திருமலை நம்பியிடம் அருளிவிட்டு மறைந்தார்.

    வெங்கடாசலபதி நின்று தரிசனம் தந்த இடத்தில் கல்லில் இரு பாதங்கள் காட்சியளித்தன.

    திருமலை வெங்கடாசலபதியை தரிசிக்க செல்பவர்கள் ஆழ்வார் தீர்த்தத்தில் நீராடிவிட்டு, அடுத்து வந்தடைவது அலிபிரி என்றழைக்கப்படும் மலையடிவாரம்.

    அங்கிருந்து நாற்பது அடி நடந்தவுடன் ஒரு ராஜகோபுரம் தெரியும்.

    அதைக் கடந்து சென்றால், வெங்கடாசலபதி திருமலை நம்பிக்குக் காட்சியளித்த இடம் உள்ளது.

    அங்கு ஸ்ரீபாத மண்டபம் என்று அழைக்கப்படும் கோவிலில் வெங்கடாசலபதியின் கற்பாதங்கள் கவசங்களுடன் மின்னுகின்றன.

    வெங்கடாசலபதி வெற்றுக் கால்களுடன் இங்கு வந்து நின்றுவிட்டதைக் கண்டு பதறி பக்தர்கள் சிலர் அந்த பாதங்களுக்கேற்ற பாதுகைகளை உலோகங்களில் வடித்துச் சமர்ப்பித்திருக்கிறார்கள்.

    அதை தவறாமல் தரிசிக்க வேண்டும்.

    • புரட்டாசித் திருவோணம் திருப்பதி வெங்கடாசலபதியின் பிறந்த தினம்.
    • கொடியேற்றம் துவஜாரோகணம் என்றும், கொடி இறக்கம் துவஜாவரோகணம் என்றும் அழைக்கப்படுகின்றன.

    புரட்டாசித் திருவோணம் திருப்பதி வெங்கடாசலபதியின் பிறந்த தினம்.

    இந்த நன்னாளுக்கு முன்பாக ஒன்பது தினங்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்ற மிகப்பெரிய திருவிழா பிரம்மோற்சவம்.

    வெங்கடாசலபதிக்கு முதன்முதலில் பிரம்மாதான் உற்சவம் கொண்டாடினார் என்பதால் திருமலையின் பிரம்மோற்சவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

    பிரம்மோற்சவத்தின் தொடக்க நாளன்று துவஜஸ்தம்பம் என்னும் கொடி மரத்தில் கருட பகவானின் திருவுருவத்துடன் கூடிய கொடி ஏற்றப்படும்.

    ஒன்பதாம் நாளன்று உற்சவம் முடிந்தது என்பதை உலத்திற்கு அறிவிக்கும் விதமாகக் கொடி இறக்கப்படும்.

    கொடியேற்றம் துவஜாரோகணம் என்றும், கொடி இறக்கம் துவஜாவரோகணம் என்றும் அழைக்கப்படுகின்றன.

    ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் இந்த பிரம்மோற்சவத்தில் ஒவ்வொரு நாளும் உற்சவமூர்த்தியான மலையப்பர் காலையும், மாலையும் வெவ்வேறு வாகனங்களில் மாட வீதியில் உலாவருவார்.

    பிரம்மாவே முன்நின்று நடத்தும் உற்சவம் என்பதால் மலையப்பர் வாகனத்திற்கு முன்னால் ஒரு சிறு தேர் வலம் வரும்.

    அதில் பிரம்மதேவன் அமர்ந்து அருள்புரிவதாக ஐதீகம்.

    மலையப்பரின் திருவீதிவலம், குடை, சாமரம், மங்களவாத்தியம், மேளதாளம் முழங்க, தீப்பந்தங்கள் ஆகியவை புடை சூழ வருவதே ஒரு தனி அழகு.

    வேத விற்பன்னர்கள் வேதம் ஓதியபடி செல்வார்கள்.

    இன்னொரு குழுவினர் தமிழப் பாசுரங்களை ஓதியபடி சுவாமியுடன் ஊர்வலம் போவார்கள்.

    இவ்வளவு கோலாகலங்களுடன் நடக்கும் திருவீதி வலத்தையும், மலையப்பரையும் தரிசிக்க லட்சக்கணக்கில் பக்தர்கள் திருமலையில் கூடுவார்கள்.

    இந்த ஒன்பது நாட்களும் கோவிலில் ஹோமத்தீ வளர்த்து யாகம் நடைபெறும்.

    மாலை வேளைகளில் மலையப்பருக்கு மிகச்சிறப்பாக ஊஞ்சல் உற்சவம் கொண்டாடப்படும்.

    • அன்னமானது நல்லதை ஏற்று அல்லதை விலக்கும் குணமுடையது.
    • முழுவதும் முத்துக்களால் தயாரிக்கப்பட முத்துப்பல்லக்கின் அழகினை காணக் கண்கோடி வேண்டும்.

    பெரிய சேஷ வாகனம்:

    துவஜாரோகணத்தன்று இரவு மலையப்பர் ஸ்ரீதேவி, பூதேவி சகிதம் பெரிய சேஷ வாகனத்தில், திருவீதி உலா வருவார்.

    சின்ன சேஷ வாகனம்:

    இரண்டாம் நாளன்று காலை மலையப்பர் மட்டும் தனியாக சின்ன சேஷ வாகனத்தில் திருவீதி உலா வருவார்.

    ஆதிசேஷனே திருமலையாகச் சுருண்டு இருப்பதாக ஐதீகம் இருப்பதால், ஆதிசேஷனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக மலையப்பர் இரு சேஷ வாகனங்களில் உலா வருகிறார்.

    ஹம்ஸ் வாகனம்:

    இரண்டாம் நாள் இரவு ஹம்ஸ் வாகனத்தில் (அன்னம்) மலையப்பர் உலா வருவார்.

    ஹம்ஸ் வாகனத்தானை வழிபட துன்பங்கள் அனைத்தும் அகலும் என்பது வழி வழியாய் உள்ள நம்பிக்கை.

    அன்னமானது நல்லதை ஏற்று அல்லதை விலக்கும் குணமுடையது.

    அதுபோல மனிதரும் நல்லதை ஏற்று அல்லதை விலக்க வேண்டும் என்று அறிவுறுத்துவதற்காகவே மலையப்பர் அன்ன வாகனத்தில் பவனி வருகிறார் என்றும் கூறுவர்.

    சிம்ம வாகனம்:

    மூன்றாம் நாள் காலையில் வைரமூடி தரித்து மிகக் கம்பீரமாக சிம்ம வாகனத்தில் மலையப்பர் பவனி வருவார்.

    சிம்மமானது வலிமையின் குறியீடு.

    இதன்மேல் அமரும் மலையப்பர் உலகத்து உயிரினங்களுக் கெல்லாம் போதிய வலிமையை வழங்குவதாக ஐதீகம்.

    முத்துப்பல்லக்கு:

    மூன்றாம் நாள் இரவு மலையப்பர் முத்துப்பல்லக்கில் ஏறி திருவீதி உலா வருவார்.

    ஸ்ரீதேவியும், பூதேவியும் மலையப்பருடன் ஊர்வலத்தில் இணைந்து கொள்வார்கள்.

    முழுவதும் முத்துக்களால் தயாரிக்கப்பட முத்துப்பல்லக்கின் அழகினை காணக் கண்கோடி வேண்டும்.

    தூய்மையின் குறியீடாக முத்து உணரப்படுகிறது.

    கற்பக விருட்சம்:

    நான்காம் நாள் மாலை சுவாமி கற்பக விருட்ச வாகனத்தில் வலம் வருகிறார்.

    கற்பக விருட்சமானது வேண்டியதை வேண்டியபடி வழங்கும் வல்லமை பெற்றது.

    கற்பக விருட்சத்துக்கு அந்த வல்லமையை அளித்தவர் மலையப்பர்.

    அதன்மேல் அவர் தயாரிக்கப்பட்ட போது பக்தர்களுக்குக் கேட்ட வரங்களை வழங்குவேன் என்று உணர்த்துகிறார்.

    சர்வபூபால வாகனம்:

    நான்காம் நாள் இரவு சர்வபூபால வாகனத்தில் மலையப்பர் பவனி வருகிறார்.

    உலகிலுள்ள அரசர்கள் அனைவரும் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஸ்ரீவேங்கடாசலபதி கலியுகக் கடவுளாக அவதரித்தார் என்பதால் அவருக்கு தங்களது நன்றியை காட்ட அனைத்து அரசர்களும் ஒன்று கூடி சர்வபூபால வாகனமாக மாறி மலையப்பரை சுமந்து திருவீதி உலா வருகிறார்கள் என்பது ஐதீகம்.

    மோகினி அவதாரம்:

    ஐந்தாம் நாள் காலை தந்தப்பல்லக்கில் மலையப்பர் மோகினியாகக் காட்சி அளித்து திருவீதி வலம் வருகிறார்.

    பாற்கடல் கடைந்து அமுதம் வந்தபொழுது அதைத் தேவர்களுக்கு வழங்குவதற்காக திருமால் மோகினி அவதாரம் எடுத்ததால் அவருக்கு நன்றி கூறும் வகையில் தேவர்கள் எடுக்கும் விழாவாக இந்த பவனி கருதப்படுகிறது.

    மலையப்பர் நவரத்தின ஹாரம் அணிந்து வலது கையில் தங்கக்கிளி ஏந்தி தரிசனம் தருவார்.

    நவரத்தின ஹாரமும், தங்கக்கிளியும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளிடமிருந்து பெற்று வரப்பட்டதாக நம்பப்படுகிறது.

    கருட வாகனம்:

    ஐந்தாம் நாள் இரவு மலையப்பர் கருட வாகனத்தில் பவனி வருகிறார்.

    பிரம்மோற்சவத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது கருட வாகனம்.

    கருட வாகனத்தில் மலையப்பரை தரிசிக்க லட்சக்கணக்கானோர் கூடுவது வழக்கம்.

    மூலவர் அணிந்திருக்கும் லட்சுமி ஹாரத்தையும் மகர கண்டியையும் இந்த நாளில் மட்டும் மலையப் பருக்கு அணிவிப்பார்கள்.

    மற்றெந்த நாட்களிலும் மூலவருக்கு மட்டுமே உரித்தான இவ்வாபரணங்களை மலையப்பருக்கு அணிவிப்பதில்லை.

    அனுமந்த வாகனம்:

    ஆறாம் நாள் காலை அனுமந்த வாகனத்தில் சுவாமி புறப்படுவார்.

    இறைசேவையின் மேன்மையை உலகுக்கு உணர்த்திய ஆஞ்சநேயருக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த வாகன உலா அமைந்திருக்கிறது.

    கஜவாகனம்:

    ஆறாம் நாள் இரவு கஜ வாகனம். தன்னைக் காப்பாற்றிய திருமாலுக்கு கஜேந்திரன் தன் நன்றியை செலுத்துகிறான்.

    சூரிய பிரபை:

    ஏழாம் நாள் காலை சூரிய பிரபை. வஜ்ர கவசம் அணிந்து உலா வரும் மலையப்பர்.

    ஆதவனுக்கு ஒளி வழங்கி அருள் புரிந்த அருளாளன் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் இந்த வாகனத்தில் ஆரோகணிக்கிறார்.

    மேலும் காயத்ரி மந்திரத்தின் மகிமையை மக்களுக்கு உணர்த்தவும் சுவாமி சூரிய பிரபை ஏறுகிறார் என்பது ஐதீகம்.

    சந்திரபிரபை:

    ஏழாம் நாள் இரவு சந்திரபிரபை குளுமை, ஆனந்தம் ஆகியவற்றை அகில மக்களுக்கு அளிக்க சந்திர பிரபை மேல் சுவாமி பவானி வருவார்.

    அப்போது மலையப்பர் உடல் முழுக்க முத்துக்களால் அலங்கரிக்கப்பட்டிருப்பார்.

    பவனியின்போது இவரைத் தரிசித்தால் அளவில்லாத ஆனந்தம் அடையலாம்.

    தேர்:

    எட்டாம் நாள் காலை மலையப்பர் ஸ்ரீதேவி, பூதேவி சகிதம் தேரில் திருவீதி உலா வருகிறார்.

    பக்தர்கள் தேர் வடத்தைப் பிடித்து இழுத்து செல்வார்கள்.

    தேரில் இருக்கும் மலையப்பரைத் தரிசித்தால் இன்னொரு முறை பிறவாத வரமான முக்தி வரம் தந்து அருளுவார் என்பது ஐதீகம்.

    குதிரை வாகனம்:

    எட்டாம் நாள் இரவு மலையப்பர் குதிரை வாகனத்தில் பவனி வருவார்.

    குதிரை சக்தியின் குறியீடு.

    உலக மக்களுக்கு அனைத்து சக்திகளையும் அருளவே மலையப்பர் இந்த வாகனத்தில் உலா வருவதாக ஐதீகம்.

    ஒன்பதாம் நாள் காலையில் புஷ்கரணியில் சக்கரத்தாழ்வாருக்கு அபிஷேகம்.

    மலையப்பர் ஸ்ரீதேவி, பூதேவி சகிதம் இந்த உற்சவத்தில் கலந்து கொண்டு நீராடுவார்.

    அந்த சமயத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் புஷ்கரணியில் நீராடுவார். நீராடும் மக்களின் பாவங்கள் அனைத்தையும் போக்கி அவர்களுக்கு மோட்சம் அளிப்பார் மலையப்பர் என்பது ஐதீகம்.

    சுவாமி தீர்த்தவாரி காணும் இந்த நாளே அவரது பிறந்தநாள்!

    அன்று இரவு கோவிலில் ஏற்றப்பட்ட கருடக்கொடி இறக்கப்பட்டு பக்தர்களுக்கு அட்சதை பிரசாதம் வழங்கப்படும்.

    அத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறும்.

    • திருப்பதி சென்று வந்தால் திருப்பம் வரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
    • இப்படி திருப்பதி ஏழுமலையானுக்கு பல தரப்பட்ட மக்கள் இருக்கிறார்கள்.

    திருப்பதி சென்று வந்தால் திருப்பம் வரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    இதனால்தான் திருப்பதி வெங்கடாஜலபதியைத் தரிசனம் செய்ய தினம், தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் படையெடுத்தப்படி உள்ளனர்.

    திருப்பதி ஏழுமலையானை நினைத்தவுடன் சென்று, பார்த்து தரிசனம் செய்து விட இயலாது.

    ஏழுலையான் எப்போது நம்மை அழைக்கிறாரோ, அப்போதுதான் திருப்பதிக்கு சென்று அவரை தரிசனம் செய்ய முடியும் என்று சொல்வார்கள்.

    ஒரு தடவை திருப்பதிக்கு சென்றாலே போதும், மனம் இனம் புரியாத வகையில் ஆனந்தமும், அமைதியும் அடையும்.

    நீண்ட வரிசையில், மணிக்கணக்கில் கால் கடுக்க நின்று கடும் நெரிசல்களுக்கு மத்தியில் "கோவிந்தா.... கோவிந்தா..." என்று உள்ளம் உருக முன் மண்டபத்துக்குள் நுழைந்த அடுத்த ஓரிரு நிமிடங்களில் நம்மை வெளியில் கொண்டு வந்து விடுவார்கள்.

    அழகாக, ஆஜானுபாகுவாக நின்று அருள்பாலிக்கும் ஏழுமலை சில வினாடிகளே கண்குளிர பார்த்து தரிசிக்க முடியும்.

    சில சமயம் ஓரிரு நிமிடங்கள் ஏழுமலையானை நிதானமாக பார்த்து நம் கோரிக்கைகளை முன் வைத்து விட முடியும்.

    அந்த நேரத்தில் நமக்கு கிடைக்கும் ஆனந்தத்துக்கு அளவே இருக்காது.

    இந்த ஆனந்தத்தை அனுபவிக்கவும், இந்த பிறவியில் எல்லா செல்வங்கள் பெற்று வாழவும், மறுபிறவி வேண்டாம் என்ற முக்திக்காகவும்தான் தினந்தோறும் ஏழுமலையானிடம் சரண் அடைய லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதி நோக்கி அலை, அலையாக வந்த வண்ணம் உள்ளனர்.

    சில பக்தர்கள் வாரம் தோறும் ஏழுமலையானை பார்த்து ஆனந்தம் கொள்வார்கள்.

    சில பக்தர்கள் மாதம் தோறும் ஒரு தடவை சென்று ஏழுமலையானை பார்த்து வருவார்கள்.

    சிலர் ஆண்டுக்கு ஒரு தடவை புரட்டாசி மாதம் மட்டும் திருப்பதிக்கு செல்வதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

    ஏழுமலையானை குல தெய்வமாக ஏற்றுக் கொண்டுள்ள வியாபாரிகள், தங்களது கடை வருமானத்தில் குறிப்பிட்ட ஒரு தொகையை ஏழுமலையானுக்கு கொடுத்து விடுவதுண்டு.

    ஏழுமலையானை அவர்கள் தங்கள் கடையின் ஒரு பங்குதாரர் போல கருதி இந்த கைங்கர்யத்தை செய்து வருகிறார்கள்.

    இப்படி திருப்பதி ஏழுமலையானுக்கு பல தரப்பட்ட மக்கள் இருக்கிறார்கள்.

    திருப்பதி ஏழுமலையானை அடிக்கடி தரிசனம் செய்பவர்களில் பெரும்பாலானவர்கள் ஆந்திராவின் தென் பகுதியையும் தமிழ் நாட்டின் வட மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள் தான்.

    மற்ற பகுதிகளில் உள்ளவர்களுக்கு திருப்பதி ஏழுமலையானை அடிக்கடி பார்த்து தரிசிக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை.

    அத்தகைய பக்தர்கள் "எப்போது திருப்பதிக்கு போவோம்?" என்ற ஏக்கத்துடன் இருப்பார்கள்.

    சில பகுதி மக்களுக்கு திருப்பதி ஏழுமலையானை ஆண்டுக்கு ஒரு தடவை தரிசிப்பது கூட இயலாத காரியமாக இருக்கும்.

    அப்படிப்பட்ட மக்களை திருப்பதி ஏழுமலையானே தேடி வந்து, ஓரிடத்தில் நிலை கொண்டு அருள்பாலித்தால் எப்படி இருக்கும்?

    "ஏழுமலையானே... வந்து விட்டாரா.... இதை விட வாழ்வில் வேறு என்ன பாக்கியம் வேண்டும்" என்று மனம் குதூகலம் கொள்ள, கண்ணீர் மல்க சொல்வார்கள்.

    அப்படி ஒரு ஆன்மிக குதூகலத்தை தமிழ்நாட்டின் தென் மாவட்ட மக்கள் அனுபவிக்க வாய்ப்பு உருவாகி உள்ளது.

    ஆம் திருப்பதி ஏழுமலையான் தென் தமிழ்நாட்டுக்கு வந்து விட்டார். முக்கடல் சங்கமிக்கும் புண்ணிய பூமியான கன்னியாகுமரியில் விவேகானந்த கேந்திரம் அமைந்துள்ள வளாகத்தில் திருப்பதி ஏழுமலையானுக்காக தனி ஆலயம் கட்டப்பட்டுள்ளது.

    திருப்பதியில் உள்ள வெங்கடாஜலபதி ஆலயத்தில் எத்தகைய ஆகம விதிகள் கடைபிடிக்கப்படுகிறதோ,

    அவை அனைத்தும் கன்னியாகுமரியில் கட்டப்பட்டுள்ள திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின்

    ஸ்ரீவெங்கடேஸ்வர சுவாமி, ஸ்ரீதேவி-பூதேவி ஆலயத்திலும் கடை பிடிக்கப்பட உள்ளது.

    • அங்கு ஒரே நேரத்தில் 1,200 பேர் அமர்ந்து சாப்பிடலாம். மற்றொரு பகுதியில் தியான கூடம் உள்ளது.
    • கீழ் தளத்தில் கல்யாண உற்சவம் நடத்த தனி அரங்கு உள்ளது.

    திருமலையில் அருள்பாலிக்கும் ஏழுமலையான் ஆலயத்துக்கும், குமரிமுனை திருப்பதி ஆலயத்துக்கு மிகுந்த வேற்றுமை உள்ளது.

    திருமலையில் உள்ள ஆலயம் பல நூறு ஆண்டுகளாக பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டு இன்று பிரமாண்டமான வளர்ச்சியை எட்டி உள்ளது.

    அதன் உட்பிரகாரங்கள் அனைத்தும் கருங்கற்களால் கட்டப்பட்டவை ஆகும்.

    பல்வேறு மன்னர்கள் அந்த ஆலயத்தை கட்டி சிறப்பித்துள்ளனர்.

    மலை மீது உள்ளதால் அதற்கேற்ப ஆலயத்தின் மற்ற பகுதிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    ஆனால் குமரிமுனை திருப்பதி ஆலயம் விவேகானந்தா கேந்திரம் உள்ளே சிறிய இடத்தில் உருவாகி உள்ளது.

    விவேகானந்தா கேந்திரம் சார்பில் வழங்கப்பட்டுள்ள 5 ஏக்கர் நிலத்தில்தான் இந்த ஆலயம் எழுந்துள்ளது.

    தானமாக பெற்ற அந்த 5 ஏக்கரில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் ஆலயம் உருவாகி உள்ளது.

    மீதமுள்ள 1 ஏக்கர் இடம் கோவில், தீர்த்தம் மற்றும் வசதிகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது.

    இந்த ஆலயத்தின் கட்டிட அமைப்பும் வித்தியாசமானது ஆகும்.

    இந்த ஆலயம் கீழ்தளம்-மேல் தளம் என அடுக்குடன் கூடிய அமைப்பில் உருவாக்கப்பட்டு உள்ளது.

    கீழ்தளத்தை அலிபிரி என்று பெயர் சூட்டி உள்ளனர்.

    மேல் தளத்தை ஏழுமலையான் ஆலயம் என்று அழைக்கின்றனர்.

    திருமலை-திருப்பதியில் நடைபாதை தொடங்கும் அலிபிரி கீழே அமைந்துள்ளது.

    ஏழுமலையான் மேலே மலையில் அருள்பாலித்து வருகிறார்.

    இந்த மலை அமைப்பை பிரதிபலிக்கும் வகையில் குமரிமுனை ஆலயம் 2 அடுக்குடன் திகழ்கிறது.

    கீழ் தளத்தில் கல்யாண உற்சவம் நடத்த தனி அரங்கு உள்ளது.

    அங்குள்ள சுமார் ஆயிரம் பேர் அமர்ந்து கல்யாண உற்சவத்தில் பங்கேற்கலாம்.

    கீழ் தளத்தின் மற்றொரு பகுதியில் அன்னதான கூடம் அமைந்துள்ளது.

    அங்கு ஒரே நேரத்தில் 1,200 பேர் அமர்ந்து சாப்பிடலாம். மற்றொரு பகுதியில் தியான கூடம் உள்ளது.

    பக்தர்கள் தியானம் செய்வதற்கு ஏற்ப அமைதியான சூழ்நிலையை உருவாக்க அங்கு வசதி செய்துள்ளனர்.

    மேல் தளத்தில் ஏழுமலையான் கருவறை நடுநாயகமாக உள்ளது.

    ஒருபுறம் பத்மாவதி தாயாருக்கும், மற்றொருபுறம் ஆண்டாளுக்கும் தனித்தனி சன்னதி அமைத்துள்ளனர்.

    திருப்பதியில் உள்ளது போலவே ஏழுமலையானுக்கு நேர் எதிரில் கருடவாழ்வார் உள்ளார்.

    அவருக்கு அங்கு தனி சன்னதி கட்டப்பட்டுள்ளது. அவருக்கு பின்புறம் பலிபீடமும், கொடி மரமும் அமைக்கப்பட்டுள்ளது.

    மேல் தலத்தில் ஆலயத்தை சுற்றி வசதி செய்துள்ளனர்.

    கடற்கரை காற்றை அனுபவித்துக் கொண்டே ஆலயத்தை வலம் வருவது வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.

    மேல் தலத்துக்கு செல்ல 45 படிகளுடன் நுழைவு வாயில் மேடை கட்டப்பட்டுள்ளது.

    திருப்பதி திருமலையில் ஏழுமலையான் ஆலயம் மலை மீது அமைந்துள்ளது.

    ஏழுமலைகள் மீது இருப்பதால்தான் அவருக்கு ஏழுமலையான் என்ற பெயர் உருவானது.

    ஆனால் குமரிமுனையில் ஏழுமலையான் கடலோரத்தில் கடல் அலைகள் தாலாட்டும் இடத்துக்கு மிக அருகில் எழுதருளி உள்ளார்.

    திருப்பதி ஆலயத்துக்குட்பட்ட கிளை ஆலயங்களில் கடலோரத்தில் அமைந்துள்ள ஒரே ஆலயம் என்ற சிறப்பை இந்த ஆலயம் பெற்று உள்ளது.

    குமரிமுனையில் ஏழுமலையானுக்கு ஒரு கிளை ஆலயம் உருவாக்கலாம் என்ற எண்ணம் தோன்றியபோது ஏழுமலையான் ஆலயத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    விவேகானந்தா கேந்திரத்தின் செயலாளராக இருக்கும் அனுமந்தராவ் தேவையான உதவிகளை செய்து கொடுத்தார்.

    இதனால் இன்று குமரிமுனை திருப்பதி ஆலயம் திட்டமிட்டப்படி கட்டப்பட்டு பக்தர்களின் வழிபாட்டுக்கு வந்துள்ளது.

    • திருப்பதியில் நடக்கும் உற்சவங்களில் சீனிவாச கல்யாணம் உற்சவம் மிகவும் தனித்துவம் கொண்டது.
    • இந்த உற்சவம் பக்தர்களுக்கு பலன்களை வாரி வழங்கும் முக்கியத்துவம் கொண்டது.

    திருப்பதியில் நடக்கும் உற்சவங்களில் சீனிவாச கல்யாணம் உற்சவம் மிகவும் தனித்துவம் கொண்டது.

    இந்த உற்சவம் பக்தர்களுக்கு பலன்களை வாரி வழங்கும் முக்கியத்துவம் கொண்டது.

    இதனால்தான் சீனிவாச கல்யாண உற்சவத்தில் பங்கேற்க ஒவ்வொரு பக்தரும் ஆசைப்படுவார்கள்.

    ஆனால் அந்த ஆசை அவ்வளவு எளிதில் நிறைவேறுவதில்லை.

    பக்தர்களின் பொருளாதார வசதி, பயண தூரம் மற்றும் பல காரணங்களால் பல லட்சம் பக்தர்கள் சீனிவாச கல்யாணத்தை நேரில் பார்க்க முடியாத நிலையில் உள்ளனர்.

    அத்தகைய பக்தர்களின் மனக்குறையை தீர்க்கும் வகையில் திருப்பதி-திருமலை தேவஸ்தானம் அடிக்கடி வெளியூர்களில் சீனிவாசன் கல்யாணத்தை சிறப்பாக நடத்தி வருகிறது.

    அந்த வகையில் கன்னியாகுமரியில் கடந்த 2010-ம் ஆண்டு சீனிவாச திருக்கல்யாணம் நடந்தது.

    இந்த நிகழ்ச்சிதான் கன்னியாகுமரியில் திருப்பதி வெங்கடாஜலபதி ஆலயம் உருவாவதற்கு அடித்தளம் அமைத்து கொடுத்தது.

    ×