search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிவிகே"

    • தனி செயலி மூலம் உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது.
    • விஜய் கட்சிக்கு பெருகி வரும் ஆதரவுதான் பாரம்பரிய கட்சிகளை மிரள வைத்துள்ளது.

    சென்னை:

    நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் அரசியல் களத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கிய நடிகர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலே தனது இலக்கு என்றும் அறிவித்தார்.

    அதன் பிறகு படிப்படியாக ஒவ்வொரு நிகழ்ச்சியின் மூலம் தனது அரசியல் நகர்வுகளை வெளிப்படுத்தி வந்தார்.

    கட்சி கட்டமைப்பை வலுப்படுத்த கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கையையும் தொடங்கி வைத்தார். தனி செயலி மூலம் உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. இதுவரை சுமார் ஒரு கோடி பேர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் தமிழக வெற்றிக் கழகம் கொடியை அறிமுகப்படுத்திய விஜய் அடுத்த மாதம் கட்சியின் மாநாடு நடைபெறும் என்றும் அந்த மாநாட்டில் கட்சியின் கொள்கைகள் மற்றும் செயல் திட்டங்கள் அறிவிக்கப்படும் என்றும் கூறினார். எனவே தொண்டர்களிடம் மாநாட்டை பற்றிய எதிர் பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    எனவே மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாநாட்டு அமைப்பு குழுவினர் தொடங்கினார்கள். இதற்காக நெல்லை, மதுரை, கோவை ஆகிய இடங்களை பார்த்தார்கள். ஆனால் தொண்டர்கள் எளிதில் வருவதற்கு ஏற்ற இடமாக இருக்க வேண்டும் என்று மாவட்ட தலைவர்கள் பலர் வற்புறுத்தினார்கள். இதனால் திருச்சி பொன்மலை கார்னரில் உள்ள ரெயில்வே மைதானத்தை தேர்வு செய்தார்கள்.

    அதற்காக அனுமதி கோரி ரெயில்வே நிர்வாகத்துக்கு மனுவும் கொடுத்தார்கள். ஆனால் அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் மாற்று இடமாக அங்கேயே சிறுகனூர் என்ற இடத்தை தேர்வு செய்தார்கள். அதுவும் சரிபட்டு வர வில்லை. இதனால் விழுப்புரம் அருகே உள்ள விக்கிரவாண்டியை தேர்வு செய்தார்கள்.

    இதற்காக சாலை என்ற இடத்தில் தனியாருக்கு சொந்தமான இடங்களை தேர்வு செய்தார்கள். அந்த இடத்தில் மாநாடு நடத்திக் கொள்ள அவர்களும் ஆரம்பத்தில் சம்மதித்தனர். இதனால் மாநாட்டுக்கான ஏற்பாடுகளை தொடங்கினார்கள்.

    இந்த நிலையில் இடத்தின் உரிமையாளர்கள் இடத்தை வழங்க தயங்குகிறார்கள். அவர்களுக்கு நெருக்கடி கொடுத்து மிரட்டுவதாக தமிழக வெற்றிக் கழகத்தினர் குற்றம்சாட்டுகிறார்கள்.

    விஜய் கட்சிக்கு பெருகி வரும் ஆதரவுதான் பாரம்பரிய கட்சிகளை மிரள வைத்துள்ளது. எனவே மாநாட்டை நடத்த தொடர்ந்து இடையூறு செய்து வருவதாக மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

    விக்கிரவாண்டியில் மாநாடு நடத்த முடியாத நிலை ஏற்பட்டால் உடனே மாற்று இடம் தேவை என்பதால் தஞ்சை, சேலம், திருச்சி பகுதியிலும் வேறு இடங்களை பார்த்து வருவதாக நிர்வாகிகள் கூறினார்கள்.

    இடம் உறுதியான பிறகு தான் மாநாடு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

    இதுபற்றி விஜய் கட்சியின் பெயர் வெளியிட விரும்பாத நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    இந்த மாதிரி நெருக்கடிகள் வர தொடங்கியதும் நாங்களும் உஷார் ஆகிவிட்டோம். விக்கிரவாண்டியில் நடத்த முடியாத சூழ்நிலை வந்தால் மாற்று இடத்தையும் தயார் செய்து ரகசியமாக வைத்துள்ளோம். இன்னும் இரண்டு நாட்களில் மாநாடு நடைபெறும் தேதி, இடம் பற்றிய அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளி வரும் என்றார்.

    • அடுத்த கட்டமாக தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை பிரமாண்டமாக நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார்.
    • அரசியல் கட்சிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    சென்னை:

    வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு தமிழக வெற்றிக்கழகத்தின் அரசியல் பணிகளில் விஜய் தீவிரமாக ஈடுபட தொடங்கி உள்ளார்.

    புதிய உறுப்பினர் சேர்க்கை, உள்கட்டமைப்பு கட்சி வளர்ச்சி திட்டங்கள் என ஒவ்வொன்றையும் கட்சி மாநில பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து வருகிறார்.

    தமிழக வெற்றிக் கழகத்தில் இதுவரை புதிதாக சேர்ந்துள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 1 கோடியை நெருங்கியுள்ளது. அடுத்த கட்டமாக தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை பிரமாண்டமாக நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார்.

    இதைத்தொடர்ந்து மாநாடு நடத்துவற்கு இடம் தேர்வு செய்யும் பணியில் விஜய் ஆலோசனையின் பேரில் புஸ்ஸி ஆனந்த் மதுரை, திருச்சி, சேலம், கோயம்புத்தூர், நாமக்கல், புதுக்கோட்டை போன்ற இடங்களுக்கு சென்று பார்வையிட்டார்.

    முதல் மாநாடு என்பதால் வரலாற்று சிறப்பு மிக்க மாநாடாக நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார்.

    இதற்காக நிர்வாகிகளுடன் அடிக்கடி ஆலோசனை செய்து வருகிறார்.


    வருகிற 22-ந் தேதி விஜய் பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார். இதையொட்டி தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் ஏழை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நலத்திட்டங்கள் வழங்கப்பட இருக்கிறது.

    இதற்காக பயனாளிகளின் பெயர் விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது.

    இதைத்தொடர்ந்து 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கப்பரிசு வழங்கும் நிகழ்ச்சி வருகிற 28-ந் தேதி மற்றும் ஜூலை 3 ஆகிய தேதிகளில் சென்னையில் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது.

    மாநாடு, பிறந்தநாள் மற்றும் கட்சி வளர்ச்சி பணிகளுக்கான ஆலோசனை கூட்டம் தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    விஜய் உத்தரவின் பேரில் கட்சி பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் கடந்த சில தினங்களாக பல்வேறு ஊர்களுக்கு சென்று நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    கூட்டத்தில் பூத் கமிட்டி அமைப்பது, மாநாடு, விஜய் பிறந்தநாள் விழா பற்றி ஆலோசனை செய்யப்பட்டது.

    ஆலோசனை கூட்டத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    நாமக்கல் மேற்கு மாவட்டம் சார்பில் குமார பாளையம் தொகுதி நிர்வாகிகள் ஏற்பாட்டில் ரூ.8 லட்சம் செலவில் கல்வி உதவித்தொகை தலா ரூ.3000 வீதம் 9 பேர்களுக்கும், ரூ.2000 வீதம் 6 நபர்களுக்கும் சில்வர்குடம் 70 நபர்களுக்கும், ஆட்டோ ஓட்டுநர்கள் 80 பேருக்கு சீருடை, 300 பேருக்கு அரிசி, 350 பெண்களுக்கு புடவை மற்றும் முதியோர் உதவித் தொகை, தையல் எந்திரம், குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம், மருத்துவ உதவித்தொகை உள்பட பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டது.

    இன்று காலை ஈரோட்டில் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாலை கரூரிலும், தொடர்ந்து சேலத்திலும், நாளை கோயம்புத்தூரிலும் ஆலோசனை கூட்டங்கள் நடைபெறுகிறது.

    நாமக்கல்லில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர். இதுவரை 5 நாட்களில் 27 இடங்களில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று முடி வடைந்து

    உள்ளது. அனைத்து ஊர்களிலும் நடந்த கூட்டத்தில் ஏராளமான தொண்டர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

    அடுத்தடுத்து அதிரடியாக விஜய் எடுத்து வரும் பணிகள் அரசியல் கட்சிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு நடைபெறும் தேதி, இடம் விரைவில் விஜய் வெளியிட இருக்கிறார்.

    பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் 2026-ம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பயணம் புயல் வேகத்தில் நகர்ந்து வருகிறது.

    • தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் சமபந்தி நடைபெற உள்ளது.
    • தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிவுறுத்தலின்படி பட்டினி இல்லா உலகத்தை ஏற்படுத்த வேண்டும்.

    சென்னை:

    தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் இயக்கத்தை நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார்.

    இதைத் தொடர்ந்து கட்சி வளர்ச்சி மற்றும் கொள்கைகளை அறிக்கை வாயிலாக வெளியிட்ட விஜய் கட்சி பணிகளோடு மக்கள் நலப்பணிகளிலும் தொண்டர்கள் தொடர்ந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

    இதையொட்டி தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அன்னதானம், மாணவ-மாணவிகளுக்கு நோட்டு, பென்சில் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கி வருகின்றனர்.

    ஏழை மாணவ-மாணவிகளின் கல்வியை மேம்படுத்த தமிழகம் முழுவதும் தளபதி பயிலகம் என்ற பெயரில் மாலை நேர பயிற்சி வகுப்பும் கட்சி சார்பில் நடந்து வருகிறது.

    பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பணி மேலும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

    கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் விஜய் அடிக்கடி ஆலோசனை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் வருகிற 28-ந்தேதி உலக பட்டினி தினம் கடைபிடிக்கப்படுகிறது.

    இதையொட்டி ஏழை பொதுமக்களின் பசியை போக்குவதற்காக தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் மாபெரும் சமபந்தி விருந்து விஜய் உத்தரவுக்கு இணங்க பிரமாண்ட முறையில் நடைபெற இருக்கிறது.

    தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் சமபந்தி நடைபெற உள்ளது.

    சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட இருக்கிறது.

    இதுபற்றி பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிவுறுத்தலின்படி பட்டினி இல்லா உலகத்தை ஏற்படுத்த வேண்டும். அனைவருக்கும் உணவு கிடைத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி உலக பட்டினி தினமான வருகிற 28-ந்தேதி அன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். மாவட்ட அணி, நகரம், ஒன்றியம், கிளை மற்றும் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் உரிய தேர்தல் வழி காட்டும் விதி முறைகளை பின்பற்றி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி மக்கள் நலப் பணிகளில் ஈடுபடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    இதைத் தொடர்ந்து சமபந்திக்கான ஏற்பாடுகளை தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தீவிரமாக செய்து வருகின்றனர். உலக பட்டினி தினத்தையொட்டி கடந்த ஆண்டும் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இது மட்டுமின்றி தஞ்சை, சேலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தினமும் பொதுமக்களுக்கு கட்சி சார்பில் அன்னதானம் நடந்து வருகிறது.

    சமபந்தியில் உணவுடன் வடை, பாயாசம், மைசூர் பாக்கு, சாம்பார், வத்தக் குழம்பு, ரசம், மோர், அப்பளம், ஊறுகாய் ஆகியவை வழங்கப்பட உள்ளன.

    திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் குளம் அருகே நடைபெறும் சமபந்தி விருந்தை பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் தொடங்கி வைக்கிறார்.

    • நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் ஈடுபடவுள்ளதாக அறிவிப்பு.
    • முழுமையாக மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன்.

    நடிகர் விஜய் 'தமிழக வெற்றி கழகம்' என்ற கட்சியை தொடங்கியுள்ளார். இதனால் அவர் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக வெளியான அறிக்கையில், " நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன்" என்று குறிப்பிட்டிருந்தார். 

    நடிகர் விஜய்யின் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மற்றும் திரைத்துரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், இதுகுறித்து இயக்குனர் பேரரசு கூறியதாவது:-

    சினிமாவில் இருந்து விஜய் விலக வேண்டாம். எம்ஜிஆர் முதலமைச்சராக பதவி ஏற்கும் முதல் நாள் இரவு வரை திரைப்படத் துறையில் இருந்தார். எனவே நீங்களும் சினிமாவில் தொடர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேர்தலை சந்திக்க எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்று கூறினார்.
    • தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

    தமிழ் சினிமாவில் மிகவும் பிரபல நடிகராக இருப்பவர் விஜய். இவர் தனது ரசிகர் மன்றத்தை 2009 ஜூலை மாதம் மக்கள் இயக்கமாக மாற்றினார். அதன் மூலம், பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    படப்பிடிப்பில் பிஸியாக இருந்த போதும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை அடிக்கடி சந்தித்து மக்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கி வந்தார். இதனால் நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வர உள்ளதாக தகவல் கசிந்தது. 

    'லியோ' பட நிகழ்ச்சி மேடையில் நடிகர் விஜய் பேசியபோது தளபதி என்றால் என்ன அர்த்தம். நீங்கள் (ரசிகர்கள்) மன்னர்கள். நான் உங்கள் தளபதி. நீங்கள் ஆணையிடுங்கள் நான் செய்து முடிக்கிறேன் என அரசியல் பயணம் குறித்து சூசகமாக தெரிவித்தார்.

    விஜய் அரசியலுக்கு வருவார் என்று பேசப்பட்ட நிலையில் 'விஜய் மக்கள் இயக்கம்' சார்பாக கடந்த சில மாதங்களாக ஆலோசனை கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட அனைத்து மாவட்டத்தில் இருந்தும் ஏராளமான விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பங்கேற்ற நடிகர் விஜய் நிர்வாகிகள் மத்தியில் பேசினார். அப்போது பூத் கமிட்டிகளை வலுப்படுத்த மக்கள் இயக்கத்தினருக்கு அறிவுறுத்தினார்.

    இயக்கத்தின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். தேர்தலை சந்திக்க எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்பது குறித்தும் பேசினார். 

    2026-ல் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை சந்திக்க முன்னோட்டமாக வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் இருந்தே இயக்கத்தை வலுப்படுத்தும் பணிகளை தொடங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

    விஜய் மக்கள் இயக்கத்தை ஒரு அரசியல் கட்சியாக விரைவில் மாற்றம் செய்ய நடிகர் விஜய் அப்போது மனதில் முடிவு செய்திருந்தார். அதைதொடர்ந்து விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்ய நிர்வாகிகள் டெல்லி செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியானது.

    இந்தநிலையில் விஜய் மக்கள் இயக்கத்துக்கு ' தமிழக வெற்றி கழகம்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை நடிகர் விஜய் இன்று வெளியிட்டார். அதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

    ×