search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விக்கிரவாண்டி தொகுதி"

    • விக்கிரவாண்டி தொகுதியில் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். நேற்று மாலை 6 மணிக்கு பிரசாரம் முடிவடைந்தது.
    • துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ந் தேதி உடல்நலக் குறைவால் காலமானார்.

    இதையடுத்து, இந்த தொகுதிக்கு நாளை (ஜூலை 10-ந் தேதி) இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை. தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா உள்பட 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    விக்கிரவாண்டி தொகுதியில் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். நேற்று மாலை 6 மணிக்கு பிரசாரம் முடிவடைந்தது. நாளை விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது.

    விக்கிரவாண்டி தொகுதியில் 1,16,962 ஆண் வாக்காளர்களும், 1,20,010 பெண் வாக்காளர்களும், 29 இதர பாலினத்தவர் என மொத்தம் 2,37,011 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். வாக்கு எண்ணிக்கை 13-ந் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலுக்காக 138 மையங்களில், 276 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பனையபுரம், குண்டலபுலியூர், ராதாபுரம் கிராமங்களில் உள்ள வாக்குச்சாவடி மையங்கள் மிக பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. மேலும் பதற்றமானதாக 42 வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. இங்கு கூடுதல் பாதுகாப்புக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கு துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    வடக்கு மண்டல ஐ.ஜி.நரேந்திர நாயர் மேற்பார்வையில் டி.ஐ.ஜி. திஷா மிட்டல் தலைமையில் 3 எஸ்.பி.க்களின் கண்காணிப்பில் 700 சிறப்பு போலீஸ் படையினர், 220 துணை ராணுவத்தினர் உள்பட 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இன்று காலை முதல், விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து, அந்தந்த வாக்குப்பதிவு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவுக்கான அடையாள மை உள்ளிட்ட பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

    நேற்று முதல் நாளை வரை 3 நாட்களுக்கும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தினமான 13-ந் தேதியும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் மற்றும் விக்கிரவாண்டி தொகுதியையொட்டி உள்ள புதுவை மதுக்கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும் விக்கிரவாண்டி தொகுதியில் வாக்குரிமை உள்ள வாக்காளர்கள் தமிழ் நாட்டில் எந்த பகுதியில் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றினாலும் அவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் விக்கிரவாண்டி தொகுதிக்கு நாளை பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • நான் முதல்வன் திட்டத்தில் 39,186 இளைஞர்கள் பயனடைந்துள்ளனர்.
    • வன்னிய மாணவர்களின் எண்ணிக்கை 74-ஆக ஏறத்தாழ மூன்று மடங்கு உயர்ந்தது.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் "எல்லோருக்கும் எல்லாம்" என்ற தத்துவத்துடன் திராவிட மாடல் ஆட்சியை இந்தியாவிற்கே வழிகாட்டும்வண்ணம் சிறப்பாக நடத்தி வருகிறார்.

    எல்லா மாவட்டங்களிலும் அரசின் திட்டங்கள் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் காலை உணவுத் திட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் 63 ஆயிரத்து 168 மாணவர்களும், விக்கிரவாண்டியில் 10,651 மாணவர்களும் சூடான, சுவையான சிற்றுண்டி உட்கொண்டு கல்வியைத் தொடர்கின்றனர்.

    நான் முதல்வன் திட்டத்தில் 39,186 இளைஞர்கள் பயனடைந்துள்ளனர்.

    1 லட்சத்து 43 ஆயிரத்து 33 முதியோருக்கு மாத ஓய்வூதியம் ரூ.314.67 கோடி, முதல்வரின் முகவரி திட்டத்தில் 1,24,356 மனுக்களுக்குத் தீர்வு , சுயதொழில் தொடங்கிட கடன் ரூ.1,388.67 கோடி, 16ஆயிரத்து 128 மகளிர்க்கு சுயஉதவிக்குழு கடன் ரத்து ரூ.24.43 கோடி, 20 ஆயிரத்து 799 குடும்பங்களுக்கு நகைக் கடன் தள்ளுபடி ரூ.90.13 கோடி , 30ஆயிரத்து 798 பேருக்கு உழவர் பாது காப்புத் திட்ட ஓய்வூதியம் ரூ.67.75 கோடி, 3 ஆயிரத்து 781 ஏழைப் பெண்களுக்கு 14.66 கோடி திருமண நிதியுடன், ரூ.16.52 கோடி மதிப்பில் 30.248 கிலோ தங்க நாணயங்கள், புதுமைப் பெண் திட்டத்தில் 9 ஆயிரத்து 488 மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, 3 லட்சத்து 49 ஆயிரத்து 257 குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000, என வழங்கி மக்களைக் காக்கும் மகத்தான அரசாக திகழ்கிறது.

    தமிழ்நாட்டில் உள்ள வன்னியர் உட்பட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பின ருக்கும், சீர்மரபினருக்கும் 1989-ல் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது தி.மு.க. இதனால் 1988-1989-ம் ஆண்டில் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 68 என்பது இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டபின் 1989-1990-ல் 187 ஆக உயர்ந்தது.

    இவர்களில் வன்னிய மாணவர்களின் எண்ணிக்கை 74-ஆக ஏறத்தாழ மூன்று மடங்கு உயர்ந்தது.

    இதேபோல், பொறியியல் கல்லூரியில் 1988-1989இல் 354 ஆக இருந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் சேர்க்கை 1989-1990-ல் 685-ஆக உயர்ந்தது. இவர்களில் வன்னிய மாணவர்களின் எண்ணிக்கை 109 என்பது 292 ஆக ஏறத்தாழ 3 மடங்கு உயர்ந்தது.

    இட ஒதுக்கீடு கோரி, வன்னியர் சங்கத்தினர் நடத்திய போராட்டத்தில் உயிர்நீத்த 27 பேரின் குடும்பங்களுக்கு 1998-ல் தலா 3 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கியது தி.மு.க. அத்துடன், இந்த 27 சமூக நீதிப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு குடும்ப ஓய்வூதியமாக மாதம் 1500 ரூபாய் அனுமதித்ததும் தி.மு.க.தான்.

    அந்தக் குடும்ப ஓய்வூதியத்தை நவம்பர் 2006 முதல் மாதம் 1,500 ரூபாயில் இருந்து 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கியதும் தி.மு.க.தான்.

    ராமசாமி படையாச்சியார் திருவுருவச்சிலை 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்ச் செலவில் சென்னை கிண்டியில் அமைத்து திறந்து வைக்கப்பட்டதும் தி.மு.க. ஆட்சியில் தான்.

    காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான 21 சமூகநீதிப் போராளிகளுக்கு ரூ.5 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில், விழுப்புரம் மாவட்டத்தில் மணிமண்டபம் அமைத்திட ஆணையிட்டு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    விழுப்புரம் மாவட்டத்திலும் சிறப்பான பல திட்டங்கள் செயல்படுத்தப்படுவதால், இம்மாவட்டம் முன்னேற்றத் திசையில் நடைபோடுகிறது. விக்கிரவாண்டி சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • எந்த நேரத்திலும் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
    • பஞ்சாப், உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட 8 மாநிலங்களில் உள்ள 54 தொகுதிகளுக்கு ஜூன் 1-ந்தேதி 7-ம் கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

    சென்னை:

    விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி (தி.மு.க.) மரணம் அடைந்ததை தொடர்ந்து இந்த தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையத்தில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதனால் 7-வது கட்டமாக ஜூன் 1-ந்தேதி நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலுடன் விக்கிரவாண்டி தொகுதிக்கும் தேர்தல் நடத்தினால் அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்திருப்பதாக மாவட்ட நிர்வாகம் தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளது.

    அதன் அடிப்படையில் எந்த நேரத்திலும் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலுடன் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவில்லை என்பது உறுதியாகி உள்ளது.

    பஞ்சாப், உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட 8 மாநிலங்களில் உள்ள 54 தொகுதிகளுக்கு ஜூன் 1-ந்தேதி 7-ம் கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. 7ம் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் இன்று தொடங்குவது தொடர்பாக தேர்தல் அறிவிப்பாணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான எந்த அறிவிப்பும் இல்லை.

    • பாராளுமன்ற தோ்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவை எதிா்கொண்ட தமிழ்நாட்டில் தோ்தலுக்கான ஆயத்தப்பணிகள் மற்றும் நடத்தை விதிகள் தற்போதும் அமலில் உள்ளது.
    • இடைத்தோ்தல் நடத்த தங்களுடைய நிா்வாகம் தயார் நிலையில் இருப்பதாக தோ்தல் ஆணையத்திடம் ஏற்கனவே தெரிவித்துள்ளனா்.

    புதுடெல்லி:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ. புகழேந்தி, உடல் நலக்குறைவால் கடந்த 6-ந்தேதி காலமானாா். இதையடுத்து அத்தொகுதி காலியானதாக ஏப்ரல் 8-ந்தேதி அறிவிக்கப்பட்டது.

    தோ்தல் விதிகளின்படி, ஒரு சட்டப்பேரவை அல்லது பாராளுமன்ற தொகுதி அதன் உறுப்பினரின் உயிரிழப்பாலோ, ராஜினாமா அல்லது வேறு காரணங்களுக்காகவோ காலியானதாக அறிவிக்கப்பட்டால், அத்தொகுதிக்கு 6 மாதங்களுக்குள் இடைத்தோ்தல் நடத்தப்படவேண்டும்.

    இந்த நிலையில் தற்போது பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடத்தப்படும் தோ்தலில் 6 கட்டங்களுக்கான தோ்தல் அறிவிக்கை ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுவரை 6 கட்ட ஓட்டுப்பதிவுக்கான தேர்தல் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் 2 கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு முடிந்து விட்டது.

    அடுத்து 7-ம் கட்ட தேர்தலுக்கான அறிவிக்கையை தோ்தல் ஆணையம் வரும் மே 7-ந்தேதி வெளியிட உள்ளது. அப்போது விக்கிரவாண்டி தொகுதிக்கும் சேர்த்து 7-ம் கட்ட தோ்தல் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.

    7-ம் கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு ஜூன் 1-ந்தேதி நடைபெற உள்ளது. அன்று விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தோ்தல் நடத்தப்படுவதாக இருந்தால் அதற்கான அறிவிக்கையை வருகிற 7-ந்தேதியன்று தோ்தல் ஆணையம் வெளியிட வேண்டும்.

    பாராளுமன்ற தோ்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவை எதிா்கொண்ட தமிழ்நாட்டில் தோ்தலுக்கான ஆயத்தப்பணிகள் மற்றும் நடத்தை விதிகள் தற்போதும் அமலில் உள்ளது.

    இந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதிக்கும் சோ்த்து இடைத்தோ்தலை நடத்தினால் தனியாக அத்தொகுதிக்கு ஆகும் முன்னேற்பாடுகள், செலவினம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை குறைக்கலாம் என்று ஆணையம் கருதுகிறது.

    இந்த விவகாரத்தில் மாவட்ட தோ்தல் அதிகாரி, மாநில தோ்தல் அதிகாரி ஆகியோா் இடைத்தோ்தல் நடத்த தங்களுடைய நிா்வாகம் தயார் நிலையில் இருப்பதாக தோ்தல் ஆணையத்திடம் ஏற்கனவே தெரிவித்துள்ளனா்.

    இதையடுத்து ஜூன் 1-ந்தேதி இடைத்தோ்தல் நடத்துவதற்கான சாத்தியத்தை தலைமைத் தோ்தல் ஆணையம் பரிசீலித்து வருவதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

    • புகழேந்தி மரணம் அடைந்த நிலையில் அது பற்றி மாவட்ட கலெக்டர் தமிழக சட்டசபை செயலகத்துக்கு முறைப்படி சனிக்கிழமையன்று தகவல் தெரிவித்திருந்தார்.
    • ஒரு சட்டமன்ற உறுப்பினர் மரணம் அடைந்தால் 6 மாத காலத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

    சென்னை:

    விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி வெள்ளிக்கிழமையன்று தேர்தல் பிரசார மேடையில் மயங்கி விழுந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் காலை மரணம் அடைந்தார். அவரது உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

    புகழேந்தி மரணம் அடைந்த நிலையில் அது பற்றி மாவட்ட கலெக்டர் தமிழக சட்டசபை செயலகத்துக்கு முறைப்படி சனிக்கிழமையன்று தகவல் தெரிவித்திருந்தார். அதை பெற்றுக்கொண்ட சட்டசபை செயலகம் தேர்தல் கமிஷனுக்கு அறிக்கை அனுப்பி உள்ளது.

    விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ. மரணமடைந்த காரணத்தால் அந்த தொகுதி காலியிடமாக உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது.

    இது தொடர்பாக அரசிதழிலும் இன்று வெளியிடப்படுகிறது.

    ஒரு சட்டமன்ற உறுப்பினர் மரணம் அடைந்தால் 6 மாத காலத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் இப்போது நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற உள்ளதால் விக்கிரவாண்டி தொகுதிக்கு அடுத்த மாதத்திற்குள் (மே) இடைத்தேர்தல் நடத்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்திய தேர்தல் ஆணையத்துக்கு இதுபற்றி இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு டெல்லிக்கு அறிக்கை அனுப்பியவுடன் இது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்து அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விக்கிரவாண்டி தொகுதிக்கு மே மாதம் இடைத்தேர்தல் நடத்தப்படுமா? அல்லது பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு இடைத்தேர்தல் நடைபெறுமா? என்பது ஓரிரு நாளில் தெரிய வரும்.

    • விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினரான புகழேந்தி உடல்நலக் குறைவால் காலமானார்
    • அண்ணன் புகழேந்தி அவர்களுடைய மரணம் கழகத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் - உதயநிதி

    விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினரரான புகழேந்தி மறைவிற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில்,

    "விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளரும் - விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் புகழேந்தி அவர்கள் உடல்நலக் குறைவால் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தோம்.

    கழகப்பணி, மக்கள் பணி இரண்டிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, அர்ப்பணிப்போடு பணியாற்றிய ஆற்றல் மிகு செயல்வீரர். அண்ணன் புகழேந்தி அவர்களுடைய மரணம் கழகத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

    இத்துயரமான நேரத்தில் அண்ணன் புகழேந்தி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், கழகத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணன் அவர்களின் பணிகள் என்றும் நிலைத்திருக்கும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    • அயரா உழைப்பாலும், மக்கள் பணியாலும் படிப்படியாக வளர்ந்து, கழகத்தின் மாவட்டச் செயலாளராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் புகழேந்தி உயர்ந்தார்.
    • புகழேந்தியின் மறைவு, விக்கிரவாண்டி தொகுதிக்கும், விழுப்புரம் மாவட்டத்திற்கும் மட்டுமின்றி, கழகத்திற்கும் பேரிழப்பாகும்.

    சென்னை:

    தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

    விழுப்புரம் தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான அன்புச் சகோதரர் புகழேந்தி எதிர்பாராத வகையில் மறைவுற்ற நிகழ்வு, மிகவும், அதிர்ச்சியும் வேதனை தருகிறது.

    கடந்த சில நாட்களாக உடல்நலம் குன்றியிருந்த அவர், தன் உடல்நலன் பற்றியெல்லாம் சிந்திக்காமல் கழகத்தின் வெற்றிக்காகத் தேர்தல் பணிகளை ஆற்றி வந்தார். நேற்றைய என்னுடைய பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த அவர், சற்றே மயக்கம் வர, மருத்துவமனைக்குச் சென்றார். உடனடியாக நானும் மருத்துவர்களைத் தொடர்புகொண்டு, அவரது உடல்நலனைக் கவனித்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டிருந்தேன். நலன் பெற்று மீண்டு வருவார் என்று நம்பியிருந்த நிலையில், அவர் நம்மைவிட்டு பிரிந்த செய்தி வந்து நம்மைத் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

    1973-இல் கழகத்தின் கிளைச் செயலாளராகத் தமது அரசியல் வாழ்வைத் தொடங்கிய புகழேந்தி, தமது அயரா உழைப்பாலும், மக்கள் பணியாலும் படிப்படியாக வளர்ந்து, கழகத்தின் மாவட்டச் செயலாளராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் உயர்ந்தார்.

    1996-இல் ஒன்றியத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பான பணிகளை மேற்கொண்டவர். விக்கிரவாண்டி தொகுதி மக்களோடு, மக்களாக இருந்து அவர்களுக்கான அனைத்துப் பணிகளையும் அக்கறையுடன் மேற்கொண்டு வந்த புகழேந்தியை சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுத்து அந்த மக்கள் அனுப்பி வைத்தனர். எப்போது என்னைச் சந்திக்க வந்தாலும், தொகுதி மக்களுக்கான கோரிக்கைகளுடன்தான் வருவார். அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுச் செல்வார். கழகத் துணைப் பொதுச் செயலாளர் க.பொன்முடிக்கு உற்ற துணையாக விளங்கி - மக்களோடு மக்களாக வாழ்ந்த புகழேந்தியின் மறைவு, விக்கிரவாண்டி தொகுதிக்கும், விழுப்புரம் மாவட்டத்திற்கும் மட்டுமின்றி, கழகத்திற்கும் பேரிழப்பாகும்.

    ஈடுசெய்ய முடியாத அவரது பேரிழப்பால் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் மற்றும் கழகத் தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளர்.

    • மேடையில் அமர்ந்திருந்த எம்.எல்.ஏ. புகேழந்தி மயக்கம் ஏற்பட்டு மேடையிலேயே மயங்கி விழுந்தார்.
    • அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் புகழேந்திக்கு முதல் உதவி செய்தனர்.

    விக்கிரவாண்டி:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை. ரவிக்குமார், கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோரை ஆதரித்து விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.

    இதற்காக வேட்பாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் முன்னதாகவே வருகை தந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வருகைக்கு காத்திருந்தனர். நேற்று முன்தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்திருந்தார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருவதற்கு முன்பு மேடையில் அமர்ந்திருந்த எம்.எல்.ஏ. புகேழந்தி மயக்கம் ஏற்பட்டு மேடையிலேயே மயங்கி விழுந்தார். உடனே அருகில் இருந்த அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் புகழேந்திக்கு முதல் உதவி செய்தனர்.

    இதையடுத்து லட்சுமணன் எம்.எல்.ஏ. பதட்டத்துடன் அங்கு ஓடி வந்து மேடைக்கு கீழே அமர்ந்திருந்த அவரது மகன் செல்வகுமாருக்கு தகவல் தெரிவித்து மேடைக்கு அழைத்தார்.

    பின்னர் புகழேந்தி எம்.எல்.ஏ.வை கைத்தாங்கலாக அழைத்து சென்று முதலமைச்சருக்காக அமைக்கப்பட்டிருந்த சிறப்பு ஏ.சி. அறையில் ஓய்வெடுக்க வைத்தனர். ஆனாலும் அவருக்கு சரியாகாததால் பின்னர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரை அனுமதித்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று காலை 10.35 மணியளவில் புகழேந்தி எம்.எல்.ஏ. பரிதாபமாக உயிரிழந்தார்.

    மரணம் அடைந்த புகழேந்திக்கு கடந்த 4 வருடங்களாகவே கல்லீரல் பிரச்சனை இருந்து வந்தது. அதற்கு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் அவர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்ற பிறகுதான் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்றார். இந்த நிலையில்தான் அவர் மேடையில் மயங்கி விழுந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார்.

    புகழேந்தி எம்.எல்.ஏ. தற்போது விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராகவும் பதவி வகித்து வந்தார்.

    புகழேந்தி எம்.எல்.ஏ. மரணம் அடைந்ததை அறிந்ததும் அமைச்சர் பொன்முடி மருத்துவமனைக்கு விரைந்து சென்றார். அங்கு அவரது உடலை பார்வையிட்டார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

    ×