search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாக்டர் மஞ்சுநாத்"

    • யார் மீதும் பழி போடுவதில் அர்த்தமில்லை.
    • பொது இடங்களில் தேவையில்லாமல் அறிக்கை விடக்கூடாது.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் மொத்தம் 28 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளது. இதில் கடந்த தேர்தலில் 27 இடங்களில் காங்கிரஸ் கட்சி தோற்றது. ஆனால் பெங்களூர் புறநகரில் மட்டும் கர்நாடக காங்கிரஸ் தலைவரும், துணை முதல் மந்திரியுமான டி.கே.சிவகுமாரின் தம்பி டி.கே.சுரேஷ் வெற்றி பெற்றார்.

    பெங்களூர் புறநகர் டி.கே.சிவக்குமார், டி.கே. சுரேஷின் கோட்டையாக இருந்து வந்தது. இந்த தொகுதியில் கடந்த 2012-ல் நடந்த இடைத்தேர்தல், அதைத்தொடர்ந்து நடந்த 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் டி.கே.சுரேஷ் வெற்றி பெற்று எம்.பி. ஆனார்.

    இந்த நிலையில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 9 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனாலும் பெங்களூர் புறநகரில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் டி.கே.சுரேஷ் 2 லட்சத்து 68 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

    அவரை எதிர்த்து போட்டியிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரும், தேவகவுடாவின் மருமகனுமான டாக்டர் மஞ்சுநாத் வெற்றி பெற்றார்.

    இந்த தோல்வி டி.கே. சிவக்குமார் மற்றும் காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நிலையில் டி.கே.சுரேஷை திட்டமிட்டு கட்சியினர் தோல்வியடைய வைத்து விட்டனர் என்று டி.கே.சுரேசின் ஆதரவாளர்கள் பொதுவெளியில் பேச ஆரம்பித்தனர்.

    இந்த விவகாரம் கர்நாடக காங்கிரசில் பெரும் பூதாகரமாக வெடித்து உள்ளது. ஏற்கனவே முதல் மந்திரி சித்தராமையாவுக்கு ஆதரவாக சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும், துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு ஆதரவாக சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் பேசி வரும் நிலையில் டி.கே.சுரேஷ் தோல்வியால் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாகி உள்ளது.

    இந்த நிலையில் கர்நாடக காங்கிரஸ் தலைவரும், துணை முதல் மந்திரியுமான டி.கே.சிவக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சமீபத்திய தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு எச்சரிக்கை மணி. தோல்வி குறித்து மாநிலம் முழுவதும் உள்ள தொகுதிகளில் ஆய்வு கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த கூட்டங்களுக்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்.

    அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் இருந்தோம். ஆனால் அந்த எண்ணிக்கையை எட்ட முடியவில்லை. மக்களின் தீர்ப்பை ஏற்க வேண்டும். கட்சி தலைவர்களின் சொந்த கிராமங்கள் மற்றும் நகரங்களில் இருந்து வாக்குகள் கிடைக்கவில்லை.

    தேர்தல் தோல்விக்கு சில எம்.எல்.ஏ.க்கள் மீது அமைச்சர்கள் குற்றம் சாட்டுவது குறித்து கேட்டபோது இதுபற்றி யாரும் என்னிடம் புகார் செய்யவில்லை. யார் மீதும் பழி போடுவதில் அர்த்தமில்லை.

    தோல்விக்கான காரணம் குறித்து தொகுதி பொறுப்பில் உள்ள தலைவர்கள், தொண்டர்களிடம் பேசி அதற்கான காரணங்களை ஆராய வேண்டும். அதை விட்டுவிட்டு எம்.எல்.ஏ.க்கள் பொது இடங்களில் தேவையில்லாமல் அறிக்கை விடக்கூடாது. கட்சி தொண்டர்களுடன் அமர்ந்து பிரச்சினைகளை விவாதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×