search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆன்மீக சொற்பொழிவு"

    • விபத்து நடந்த சில நிம்டங்களிலேயே போலே பாபா அங்கிருந்து நழுவிச் செல்லும் சிசிடிவி காட்சிகளும் வெளியானது.
    • போலே பாபாவின் வழக்கறிஞர் ஏ.பி சிங் கூட்டநெரிசல் குறித்து கூறியுள்ள கருத்து விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

    உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் உள்ள கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் நடத்திய ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர். இதில் அதிகம் பேர் பெண்கள் ஆவர். 80,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் 2.5 லட்சம் பேர் ஒரே இடத்தில் கூடியதாலும், போலே பாபாவின் காலடி மண்ணை எடுக்க நெறுக்கியடித்ததாலும் இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்த சில நிமிடங்களிலேயே போலே பாபா அங்கிருந்து நழுவிச் செல்லும் சிசிடிவி காட்சிகளும் வெளியானது.

    இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் 9 பேரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் தேவப் பிரகாஷ் மதுக்கருக்கு அரசியல் கட்சியுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், நிகழ்ச்சிக்கு அரசியல் கட்சியின் பணம் செலவழிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இந்த வழக்கில் போலே பாபாவின் பெயர் சேர்க்கப்படாததையும் கவனிக்க வேண்டி உள்ளது. வட மாநிலங்களில் செல்வாக்கு மிக்க போலே பாபாவின் சொத்துமதிப்பு 100 கோடியாக உள்ளது என்ற தகவலும் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் போலே பாபாவின் வழக்கறிஞர் ஏ.பி சிங் கூட்டநெரிசல் குறித்து கூறியுள்ள கருத்து விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

    டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், போலே பாபாவின் அன்றைய கூட்டத்தில் சுமார் 15 முதல் 16 பேரின் கையில் விஷத் தன்மையுள்ள பொருள் அடைத்த பாட்டில்கள் இருந்துள்ளது என்றும், அதை அவர்கள் திறந்துவிட்டதாலேயே இந்த கூட்டநெரிசல் ஏற்பட்டுள்ளது என்றும் கூட்டத்தில் பங்கேற்ற சிலர் தன்னிடம் தெரிவித்துள்ளதாக பேட்டியளித்துள்ளார். மேலும், விஷ பாட்டில்களை வைத்திருந்த நபர்கள் தப்பிச் செல்ல கார்களும் அங்கு தயாராக இருந்துள்ளதாக குறிப்பிடடுள்ளார்.

    இதற்கான தகுந்த ஆதாரத்தை வெளியிடுவோம் என்றும் அவர் கூறியுள்ளார். போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதற்கு புறம்பாக போலே பாபாவின் வக்கீல் சொல்லும் புதிய குற்றச்சாட்டுகள் வழக்கை திசை திருப்பும் முயற்சியா என்ற கேள்வியும் பலர் மத்தியில் எழுந்துள்ளது.  

    ×