என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக செஸ் தினம்"

    • ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 20 ஆம் தேதி உலக செஸ் தினமாக கொண்டாடப்படுகிறது.
    • தமிழ்நாட்டின் செஸ் விளையாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பவர் விஸ்வநாதன் ஆனந்த்

    இன்று [ஜூலை 20] உலக செஸ் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1924 ஆம் ஆண்டு பாரிஸில் சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE) நிறுவப்பட்ட தேதியைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 20 ஆம் தேதி உலக செஸ் தினமாக கொண்டாடப்படுகிறது.

    இந்த தருணத்தில் இந்தியாவில் அதிக அளவில் கிராண்ட் மாஸ்டர்களைக் கொண்ட, உலக செஸ் போட்டிகளில் பெரிதளவில் பங்குபெறும் வீரர்களை உருவாக்கும் மாநிலமாக தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது என்பது நினைவுகூரத்தக்கது. தமிழக கிராண்ட் மாஸ்டர்களான பிரக்ஞானந்தா, அவரது சகோதரி வைஷாலி, குகேஷ் மற்றும் பல தமிழக வீரர்களின் சாதனைகள் இந்தியாவிற்கு தொடர்ந்து பெருமை சேர்த்து வருகின்றன.

    இந்தியாவில் இவர்கள் போன்ற பல சாதனையாளர்களை உருவாக்குவதிலும், தமிழ்நாட்டின் செஸ் விளையாட்டின் வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிப்பவர் ஐந்து முறை செஸ் உலக சாம்பியனும், மற்றும் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் (FIDE) துணைத் தலைவருமான கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்.

    உலக செஸ் தினத்தைக் கொண்டாடும் வகையில் நடந்த மாநில அளவிலான செஸ் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு விஸ்வநாதன் ஆனந்த் தனது சொந்த முயற்சியில் செஸ் போர்டுகளை ஆட்டோகிராஃபுடன், அன்பளிப்பாக வழங்கினார்.

     

    அதனுடன் செஸ் விளையாட்டில் தனது அனுபவம் குறித்த கடிதம் ஒன்றையும் அவர் மாணவர்களுக்கு வழங்கினார். அந்த கடிதத்தில் செஸ் விளையாட்டால் ஒருவரின் திறமைகள் எவ்வாறெல்லாம் வளர்கிறது என்றும் அதன் முக்கியத்துவம் குறித்தும் வலியுறுத்தியுள்ளார்,

    விஸ்வநாதன் ஆனந்தின் அயராத உழைப்பும், இது போன்ற பல ஈடுபாடுகளும் மாணவர்களுக்கு செஸ் மீதான ஈடுபாட்டை அதிகரிக்கும். இதன் மூலம் நம் மண்ணில் இன்னும் பல கிராண்ட் மாஸ்டர்கள் உருவாகுவார்கள் என்பது நிச்சயம். 

    ×