search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாய் கூண்டு"

    • நாய் அடைக்கும் கூண்டில் வெளிமாநில தொழிலாளி ஒருவர் தங்கியிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • சிறிய அறைக்குள்ளேய தங்கியிருந்தது மட்டுமின்றி, உணவு சமைத்தும் சாப்பிட்டுள்ளார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் பிறவம் என்ற பகுதி இருக்கிறது. அந்த பகுதியை சேர்ந்த ஒருவரின் வீட்டில் உள்ள நாய் கூண்டில் புலம்பெயர் தொழிலாளி ஒருவர் தங்கியிருப்பதை அப்பகுதி பொதுமக்கள் அறிந்தனர்.

    அதுகுறித்து அவர்கள் பேரூராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து பேரூராட்சி அதிகாரிகள், அந்த இடத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு ஜாய் என்பவரின் வீட்டில் இருந்த நாய் அடைக்கும் கூண்டில் வெளிமாநில தொழிலாளி ஒருவர் தங்கியிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    அந்த தொழிலாளி மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த ஷியாம் சுந்தர் ஆவார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு புலம்பெயர் தொழிலாளியாக கேரள மாநிலத்துக்கு வந்திருக்கிறார். கட்டிட வேலைகளுக்கு சென்று பிழைப்பு நடத்தி வந்த அவருக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை என தெரிகிறது.

    இதனால் குறைந்த வாடகைக்கு கிடைத்த வீட்டில் தங்கியிருந்து வேலை பார்த்திருக்கிறார். வாடகை கொடுக்கக்கூட பணம் இல்லாத காரணத்தால் அடிக்கடி வீட்டை மாற்றியபடி இருந்திருக்கிறார். இந்நிலையில் தான், தனது நண்பர் ஒருவரின் மூலம் ஜாய் வீட்டில் உள்ள நாய் கூண்டில் வாடகைக்கு தங்கி வந்திருக்கிறார்.

    அந்த இடத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் குடியேறியிருக்கிறார். அதற்கு மாத வாடகையாக 500 ரூபாய் கொடுத்துள்ளார். ஒரு நாய் தங்கக்கூடிய வகையில் இருந்த குறுகிய இடத்துக்குள் ஷியாம் சுந்தர் தங்கி வந்திருக்கிறார். அந்த சிறிய அறைக்குள்ளேய தங்கியிருந்தது மட்டுமின்றி, உணவு சமைத்தும் சாப்பிட்டுள்ளார்.

    இதனையறிந்த அதிகாரிகள் புலம்பெயர் தொழிலாளி ஷியாம் சுந்தர் மற்றும் அவர் தங்கியிருந்த நாய் கூண்டு இருந்த வீட்டின் உரிமையாளர் ஜாய் ஆகிய இருவரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். மனிதாபிமானமற்ற முறையில் நடந்த இந்த சம்பவம் குறித்து போலீசார் இருவரிடமும் விசாரணை நடத்தினார்கள்.

    நாய் கூண்டில் விரும்பி தங்கியதாக தொழிலாளி ஷியாம் சுந்தர் தெரிவித்திருக்கிறார். இதனால் வீட்டின் உரிமையாளர் ஜாய் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் ஷியாம் சுந்தரை அவர் தங்கியிருந்த இடத்தில் தொடர்ந்து தங்க அனுமதிக்க வில்லை.

    அவரை அவருடைய நண்பரின் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். நாய் கூண்டில் புலம்பெயர் தொழிலாளி வாடகை கொடுத்து தங்கியிருந்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ×