search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெட்பிக்ஸ் சேனல்"

    • ஜாமீன் கோரி ஃபெலிக்ஸ் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
    • நிபந்தனையுடன் பெலிக்ஸ் ஜெரால்டை ஜாமீனில் விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    காவல்துறை அதிகாரிகளையும் பெண் காவலர்களையும் ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்த வழக்கில், சவுக்கு சங்கரின் நேர்காணலை ஒளிபரப்பிய யூடியூப் சேனல் தலைமை நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இதனையடுத்து ஜாமின் கோரி ஃபெலிக்ஸ் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. இந்நிலையில் மீண்டும் ஜாமீன் கோரி ஃபெலிக்ஸ் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

    அந்த மனுவில், "நீண்ட நாட்கள் சிறையில் அடைத்து வைத்திருக்க வேண்டும் என்ற காரணத்துக்காக, ஒரே சம்பவம் தொடர்பாக பல வழக்குகள் தன்மீது தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே 80 நாட்களுக்கு மேல் சிறையில் உள்ளதாகவும், சாட்சிகளையும், ஆதாரங்களையும் நான் கலைக்கமாட்டேன் என்பதால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்" என ஃபெலிக்ஸ் தெரிவித்துள்ளார்.

    இந்த மனு மீதான விசாரணை நீதிபதி தமிழ்ச்செல்வி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

    மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான்சாத்தியன், "கடந்த 80 நாட்களுக்கு மேல் பெலிக்ஸ் சிறையிலிருந்து வருகிறார். சவுக்கு சங்கர் பேசிய அந்த கருத்திற்கும் தனது மனுதாரருக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை. இந்த விவகாரத்திற்காக அவர் மன்னிப்பு கோருகிறார்.

    இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து விட்டது. இதுவரை 87 ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. மனுதாரர் நீண்ட நாட்களாக சிறையில் இருப்பதை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்" என்று வாதிட்டார்.

    மேலும் இந்த வழக்கில் ஏற்கனவே சவுக்கு சங்கருக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கி உள்ளதையும் அவர் குறிப்பிட்டார்.

    காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மருதாச்சலம் ஃபெலிக்சுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.

    அப்போது பேசிய அவர், "உள்நோக்கத்துடன் இந்த கேள்விகளை மனுதார் கேட்டுள்ளார். காவல்துறையில் உள்ள பெண்களை இழிவுபடுத்தும் வகையில் உயர் அதிகாரிகளின் பெயர்களை குறிப்பிட்டு அவர் பேசியுள்ளார். தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை அவர் வாடிக்கையாக கொண்டுள்ளார்.

    சவுக்கு சங்கரை தூண்டும் வகையில் அவர் செயல்பட்டார். ஏற்கனவே இதே போல் பேட்டியை ஒளிபரப்பிய வழக்கில் அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. அதில் வழங்கிய உத்தரவாதத்தை அவரே மீறி உள்ளார். எனவே அவரது யூட்யூப் சேனலை மூட உத்தரவிட வேண்டும். அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என வழக்கறிஞர் மருதாச்சலம் வாதிட்டார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ரெட்பிக்ஸ் யூட்யூப் சேனலை மூட வேண்டும் என்றும் இந்த விவகாரம் குறித்து எந்த பேட்டியும் அளிக்க மாட்டேன் என்று நிபந்தனையுடன் பெலிக்ஸ் ஜெரால்டை ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டார்.

    ×