என் மலர்
நீங்கள் தேடியது "விசைப்படகுகள் பறிமுதல்"
- மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை அவர்களது படகையும் பறிமுதல் செய்துள்ளது.
- கைதான செய்யப்பட்ட மீனவர்களிடம் இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது.
சீர்காழி:
தமிழகம், பாண்டிச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர்களின் முக்கிய தொழிலாக மீன்பிடிதொழில் உள்ளது. இந்த தொழிலில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் இயற்கை சூழல்களால் அடிக்கடி அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும் கடலில் எல்லை தாண்டி வந்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அவ்வப்போது கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். இதற்கிடையே இலங்கை கடற்கொள்ளையர்களும் தமிழக மீனவர்களை தாக்கி தொழில் நுட்பபொருட்கள், மீன்கள், வலைகள், செல்போன்கள் ஆகியவற்றையும் கொள்ளையடித்து செல்லும் சம்பவங்களும் அடிக்கடி நடைபெற்று வருகின்றன.
இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க மத்திய-மாநில அரசுகளிடம் மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இந்த சம்பவம் தொடர்கதையாக உள்ளது.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து அழைத்து சென்றுள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வானகிரி மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் ராமையன். இவருக்கு சொந்தமான விசைப்படகில் அதேபகுதியை சேர்ந்த மீனவர்கள் ராஜேந்திரன், சிவதாஸ், குழந்தைவேல், ரஞ்சித், ராஜ், கலை, குகன், பிரசாத்,அகிலன், ஆகாஷ், ராபின், ராஜ்குமார் மற்றும் தரங்கம்பாடியை சேர்ந்த கோவிந்த், கடலூரை சேர்ந்த பாரதி ஆகிய 14 பேர் கடந்த 5 நாட்களுக்கு முன்பு தரங்கம்பாடியில் இருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.
அவர்கள் நேற்று இரவு கோடிக்கரைக்கு தென்கிழக்கு பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி கைது செய்தனர். பின்னர் அவர்களை விசைப்படகுடன் இலங்கைக்கு அழைத்து சென்றனர்.
இதனால் வானகிரி மீனவ கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட தகவல் தங்களுக்கு கிடைத்ததாகவும், அடுத்தகட்ட சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் மீனவ மக்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மீன்வளத்துறை அதிகாரிகள் கடலில் சோதனை நடத்தினர்.
- சீன என்ஜின்கள் பயன்படுத்தும் படகுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் மரத்தில் செய்யப்பட்ட மீன்பிடி விசைப்படகுகள் அரசு அனுமதி அளித்த குதிரைத்திறன் கொண்ட என்ஜின் பயன்படுத்தி மீன் பிடிக்க வேண்டும் என மீன்வளத்துறை அதிகாரிகள் வழிகாட்டு நெறிமுறைகளை விதித்துள்ளனர்.
இந்நிலையில் தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம்-1983 விதிகளை பின்பற்றாமல் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் தடை செய்யப்பட்ட அதிக குதிரை திறன் கொண்ட சீன என்ஜின்கள் பொருத்தப்பட்ட 4 மீன்பிடி விசைப்படகுகள் மீன்பிடிப்பதை கண்டறிந்த ராமேசுவரம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அப்துல் காதர் ஜெய்லானி, சம்பந்தப்பட்ட படகின் உரிமையாளர்களுக்கும் நோட்டீஸ் வழங்கி மீன் பிடி தொழிலில் ஈடுபடக்கூடாது என உத்தரவிட்டிருந்தார்.
அதனை மீறி அந்த 4 விசைப்படகுகளில் 2 படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த தகவலின் பேரில் ராமேசுவரம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அப்துல் காதர் ஜெய்லானி தலைமையில் அதிகாரிகள் கடலில் சோதனை நடத்தினர்.
அப்போது அந்த 2 படகுகளை கண்டுபிடித்து அதில் இருந்த வலைகள் மற்றும் மீன்பிடி சாதனங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும் தொழில் முடக்கத்துடன் வழக்குப்பதிவு செய்து படகை பறிமுதல் செய்து ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தினர்.
ராமேசுவரம் மீன்வளத் துறை அதிகாரி கட்டுப்பாட்டில் உள்ளதால் வழக்கு முடியும் வரை இந்த படகை அதன் உரிமையாளர் எடுக்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் அரசால் தடை செய்யப்பட்ட அதிக குதிரை திறன் கொண்ட சீன என்ஜின்கள் பயன்படுத்தும் படகுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ராமேசுவரம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அப்துல் காதர் ஜெய்லானி எச்சரித்து உள்ளார்.






