என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழிசை சவுந்தரராஜன்"

    • தமிழகத்தை சேர்ந்த 9 அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன.
    • இந்துக்கள் விழாவுக்கு கூட வாழ்த்து சொல்லாமல் மதவேற்றுமையை உருவாக்கி வருவது யார்?

    சென்னை:

    முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இன்று பாரதிதாசன் உருவ சிலைக்கு மரியாதை செலுத்தினார். அதன் பிறகு நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் மின் தடை நிலவுகிறது. எங்கள் பகுதியில் இரவில் மட்டும் 3 முறை மின்தடை ஏற்பட்டது. முன்பெல்லாம் பகலில் ஓடிய அணில்கள் இப்போது இரவிலும் ஓடுகிறது. மின் துறை, மருத்துவ துறைகளில் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. இல்லாத தடைகளை எல்லாம் சொல்லி தாண்டி கொண்டிருப்பது போல் கூறுகிறார்கள். முதலில் மின்தடையை நீக்குங்கள்.

    தி.மு.க. அரசு எல்லா துறைகளிலும் தோற்று வருகிறது. இப்போது மாநில சுயாட்சி பற்றி பேசுகிறார்கள். 1969-லேயே முதலமைச்சரின் அப்பா மரியாதைக்குரிய கலைஞர் முதல்வராக இருந்த போது மாநில சுயாட்சிக்காக ராஜ மன்னார் கமிட்டி அமைத்தார்கள். அந்த பரிந்துரையை தி.மு.க.வே பின்பற்றவில்லை. காரணம் அப்போது காங்கிரசுக்கு தி.மு.க. அடிமையாக இருந்தது. இப்போதும் அடிமையாகத்தான் இருக்கிறார்கள்.

    தமிழகத்தை சேர்ந்த 9 அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆட்சிக்கு வருவதே மக்கள் பணத்தை சுரண்டுவதற்கு தான். பா.ஜ.க. பிரிவினையை ஏற்படுத்துவதாக கூறி வருகிறார்கள். உண்மையில் மக்களிடையே வேற்றுமையை ஏற்படுத்தி வருவது தி.மு.க. தான். பாரதியை கொண்டாடியவர் பாரதிதாசன். இன்று பாரதிதாசனை கொண்டாடும் நீங்கள் பாரதியை கொண்டாடதது ஏன்? கம்பனை கொண்டாடதது ஏன்? தமிழிலும் வேற்றுமையை விதைத்தீர்கள். இந்துக்கள் விழாவுக்கு கூட வாழ்த்து சொல்லாமல் மதவேற்றுமையை உருவாக்கி வருவது யார்? வக்பு வாரியம் மூலம் அப்பாவி ஏழைகளின் பணம் சுருட்டப்படுகிறது. வக்பு பணம் சாமானியர்களுக்கு பயன்படுத்தப்பட்டு இருந்தால் இஸ்லாமியர்கள் அனைவரும் வசதி படைத்தவர்கள் ஆகி இருக்க வேண்டும். ஆனால் அவர்களை வாக்கு வங்கியாக மட்டும் பயன்படுத்தி கொள்கிறார்கள். உண்மையை உணர்ந்த மக்கள் இதை முறியடிப்பார்கள். பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணியை விமர்சிக்கிறார்கள். உங்கள் கூட்டணி நிலையை பாருங்கள். காங்கிரஸ், கம்யூனிஸ்டு, திருமாவளவன் நிலை என்ன என்பதை பாருங்கள். எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது.

    விஜய் இப்போதான் பூத் கமிட்டி கூட்டத்துக்கு இறங்கி வந்திருக்கிறார். அதன்பிறகு தான் அவரது அரசியல் நகர்வுகள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

    பாரதிதாசன் கவிதையில் 'செந்தாமரை காடு பூத்தது' என்று ஒரு வரி உண்டு. அதே போல் தாமரை பூத்த தமிழ்நாடாக மாறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கஸ்தூரி ரங்கன் தலைமையில் பல லட்சம் கல்வியாளர்களிடம் கருத்து கேட்டு கொண்டுவரப்பட்டது புதிய கல்விக் கொள்கை.
    • உங்கள் விருப்பு வெறுப்பிற்கு ஏற்ப தமிழக மாணவி மாணவர்களின் எதிர்காலத்தை சிதைத்து கொண்டிருக்கிறீர்கள்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்துவதற்காக பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மற்றும் பதிவாளர்களுடனான ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள், திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. மேலும் பல்கலைக்கழகங்களில் பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துகளை மாணவர்களிடையே பரப்பக்கூடாது என்று துணை வேந்தர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    இந்த நிலையில், இது குறித்து பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நீங்கள் நேற்று துணைவேந்தர்களை கூப்பிட்டு என்ன சொல்லி இருக்கிறீர்களோ அதுதான் புதிய கல்வி கொள்கை. நீங்கள் ஒருவர் பேசுவதற்காக மட்டும் எழுதி கொடுக்கப்பட்டது அல்ல அது. மரியாதைக்குரிய கஸ்தூரி ரங்கன் தலைமையில் பல லட்சம் கல்வியாளர்களிடம் கருத்து கேட்டு கொண்டுவரப்பட்டது புதிய கல்விக் கொள்கை.

    அதை அறிமுகப்படுத்தும் போது பாரத பிரதமர் மோடி சொன்னது நம் இந்திய குழந்தைகளை வகுப்பறையில் இருந்து உலக அரங்கிற்கு உயர்த்துவது தான் இந்த கல்வி. ஆக புதிய கல்விக் கொள்கையை முற்றிலுமாக படிக்காமல் மற்ற மாநிலங்கள் எல்லாம் பின்பற்றி மாணவ மாணவிகளை உலக அரங்கிற்கு உயர்த்திக் கொண்டிருக்கும்போது நீங்கள் மோடி எதிர்ப்பு என்ற கருப்பு கண்ணாடியை போட்டுக்கொண்டு உங்கள் விருப்பு வெறுப்பிற்கு ஏற்ப தமிழக மாணவி மாணவர்களின் எதிர்காலத்தை சிதைத்து கொண்டிருக்கிறீர்கள். உலகளாவிய தலைமையகமாக தமிழக பல்கலைக்கழகங்கள் திகழ வேண்டும் என்று சொல்லிவிட்டு பல்கலைக்கழகங்களை உங்கள் தலைமைக் கழக அலுவலகங்களாக மாற்றி விடாதீர்கள். அறிவு அரங்கமாக இருக்க வேண்டிய பல்கலைக்கழகங்களை உங்கள் அறிவாலயங்களாக மாற்றி விடாதீர்கள் என்று கூறியுள்ளார். 

      சென்னை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவரும், தமிழிசையின் தந்தையுமான குமரி அனந்தன் மறைவிற்கு அவரை நேரில் சந்தித்து அமித்ஷா ஆறுதல் கூறினார்.

      இதையடுத்து பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

      தந்தை மறைவுக்கு வருத்தம் தெரிவித்த பிரதமர் மோடி, நேரில் வந்து ஆறுதல் சொன்ன அமித்ஷா அவர்களுக்கும் நன்றி.

      தந்தை மறைந்த செய்தி கேட்டு மத்திய உள்துறை அமைச்சர் தொலைபேசியில் தொடர்புகொண்டு வருத்தம் தெரிவித்ததோடு, பா.ஜ.க. கட்சி உங்களோடு துணை நிற்கிறது என்று கூறினார்கள்.

      அதேபோல் ஜே.பி.நட்டா, சந்தோஷ், தமிழக முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், திருமாவளவன், செல்வப்பெருந்தகை உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

      உள்துறை அமைச்சர் அமித்ஷா எங்கள் இல்லத்திற்கு வந்தது மிகவும் மகிழ்ச்சி. அமித்ஷா அவர்களும் என் தந்தையை பற்றி அனைத்தும் தெரிந்து கொண்டு பேசினார்.

      இவ்வாறு அவர் கூறினார்.

      • மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று பல்வேறு கட்சி தலைவர்களை சந்திக்க உள்ளார்.
      • தமிழிசையின் தந்தை குமரி அனந்தன் மறைவிற்கு நேரில் சந்தித்து அமித்ஷா ஆறுதல் கூறினார்.

      பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்தார். இன்று பல்வேறு கட்சி தலைவர்களை அவர் சந்திக்க உள்ளார். இதனால் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி இன்று முடிவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

      இந்த நிலையில் கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் இருந்து விருகம்பாக்கத்தில் உள்ள பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இல்லத்திற்கு மத்திய அமைச்சர் அமித்ஷா புறப்பட்டு சென்றார்.

      காங்கிரஸ் மூத்த தலைவரும், தமிழிசையின் தந்தையுமான குமரி அனந்தன் மறைவிற்கு அவரை நேரில் சந்தித்து அமித்ஷா ஆறுதல் கூறினார்.

      • பாராளுமன்றத்தில் தமிழில் கேள்வி எழுப்பும் உரிமையைப் பெற்றுத் தந்து முதன்முதலில் பாராளுமன்றத்தில் தமிழில் உரையாற்றிய பெருமைக்குரியவர் குமரி அனந்தன்.
      • தந்தி விண்ணப்பங்கள், மணியார்டர் போன்றவற்றில் தமிழ் இடம் பெற போராடி தமிழ் மொழிக்கான உரிமைகளைப் பெற்றுத் தந்தவர்.

      தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் காலமானார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

      இந்த நிலையில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

      இலக்கியச் செல்வர் என்று அனைவராலும் போற்றப்பட்ட முதுபெரும் அரசியல் தலைவரும் புதுச்சேரியின் முன்னாள் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் தந்தையுமான குமரி அனந்தன் அவர்கள் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாக உள்ளது.

      சிறந்த தேசப் பற்றாளராக விளங்கிய அவர், நான்கு முறை தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை பாராளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். தமிழ்மொழி தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ்க் கலாச்சாரத்தின்மீது ஆழ்ந்த பற்று கொண்டு தமிழ் மொழிக்காகவும், தமிழர் நலனிற்காகவும் பல அரும்பணிகளை ஆற்றிய அவர், தமிழில் மிகச்சிறந்த பேச்சாளராகவும் திகழ்ந்தவர்.

      பாராளுமன்றத்தில் தமிழில் கேள்வி எழுப்பும் உரிமையைப் பெற்றுத் தந்து முதன்முதலில் பாராளுமன்றத்தில் தமிழில் உரையாற்றிய பெருமைக்குரிய குமரி அனந்தன், விமானங்களில் தமிழில் அறிவிப்பு வெளியிடவும், தந்தி விண்ணப்பங்கள், மணியார்டர் போன்றவற்றில் தமிழ் இடம் பெறவும் போராடி தமிழ் மொழிக்கான உரிமைகளைப் பெற்றுத் தந்தவர்.

      தமிழுக்குத் தொண்டாற்றி பெரும் தமிழ்ப்பற்றாளராக விளங்கிய தகைசால் தமிழர் குமரி அனந்தன் அவர்களின் மறைவு, தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய இழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் அவரைச் சார்ந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

      இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

      • மிகச் சிறந்த இலக்கியவாதியான குமரி அனந்தன் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன்.
      • குமரி அனந்தன் அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

      தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் காலமானார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

      இந்த நிலையில் குமரி அனந்தன் மறைவுக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

      தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மிகச் சிறந்த இலக்கியவாதியுமான குமரி அனந்தன் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன்.

      பாசமிகு தந்தையாரை இழந்து சொல்லொண்ணா துயரில் வாடும் அன்புச் சகோதரி பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

      மறைந்த குமரி அனந்தன் அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

      இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

      • குமரி அனந்தன் இன்று நம்மிடையே இல்லை என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
      • பனைமரங்கள் பாதுகாப்புக்காவும், நதிகள் இணைப்புக்காகவும், பாரதமாதா கோவில் அமைக்கவும், பாதயாத்திரைகள் மேற்கொண்டவர்.

      சென்னை:

      பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

      தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், பெருந்தலைவர் காமராஜர் அவர்களுடன் இணைந்து பணியாற்றிய பெருமைக்குரியவரும், அக்கா தமிழிசை அவர்களின் தந்தையாருமாகிய, இலக்கியச் செல்வர், ஐயா குமரி அனந்தன் அவர்கள், இன்று நம்மிடையே இல்லை என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.

      தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும், அப்பழுக்கின்றி பணியாற்றியவர். பல்வேறு தமிழ் இலக்கியங்கள் சார்ந்த நூல்களை எழுதியவர். பனைமரங்கள் பாதுகாப்புக்காவும், நதிகள் இணைப்புக்காகவும், பாரதமாதா கோவில் அமைக்கவும், பாதயாத்திரைகள் மேற்கொண்டவர்.

      தலைசிறந்த தேசியவாதியான ஐயா குமரி அனந்தன் அவர்களது மறைவு, தமிழகத்துக்கும், இலக்கிய உலகுக்கும் பேரிழப்பு. தகப்பனாரை இழந்து வாடும் அக்கா தமிழிசைக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா, இறைவன் திருவடிகளை அடைய வேண்டிக் கொள்கிறேன்.

      ஓம் சாந்தி!

      இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

      • கதரை தவிர வேறு எதையும் அணிய மாட்டார்கள்.
      • தமிழகத்தில் உள்ள எல்லா தலைவர்களிடமும் கட்சி எல்லை கடந்து மிகவும் அன்பாக பழகக்கூடியவர்.

      தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் (வயது 93) நேற்று இரவு 12.15 மணியளவில் காலமானார். அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது மகள் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.

      பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

      தமிழ்நாட்டையும் தமிழ் மக்களையும் தமிழ் மொழியையும் தேசியத்தையும் காந்தியத்தையும் வாழ்க்கை முறையாக கொண்ட எனது தந்தை குமரி அனந்தன் அவர்கள் 12.30 மணிக்கு தனது கடைசி மூச்சை தமிழ் மண்ணில் விட்டார்கள்.

      அவர்களை பொறுத்தமட்டில் அரசியலில் நேர்மையான அரசியல், துணிச்சலான அரசியல், கொள்கை பிடிப்புள்ள அரசியல், காமராஜரின் தொண்டன் என்பதுதான் எனது மிகப்பெரிய அடையாளம் என்று எப்போதுமே சொல்லிக்கொண்டு இருப்பார்கள்.

      கதரை தவிர வேறு எதையும் அணிய மாட்டார்கள். உள்ளாடைகள் கூட கதரில்தான் அணிவார்கள். அப்படி கொள்கைகளில் வாழ்ந்தார்கள். அப்படிப்பட்ட என் தந்தை 4 முறை தமிழகத்தில் சட்டமன்றத்தையும் ஒரு முறை பாராளுமன்றத்தையும் அலங்கரித்து இருக்கிறார்கள். 

      மொரார்ஜி தேசாய் அவர்கள் ஆட்சி செய்யும்போது பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, முதன்முதலில் தமிழில் பாராளுமன்றத்தில் கேள்வி கேட்டவர். முதல்முதலில் தமிழை பாராளுமன்றத்தில் ஒலிக்கச்செய்தவர். 8 முறை பாத யாத்திரை செய்து இருக்கிறார்கள். தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்து இருக்கிறார்கள். இன்னும் எவ்வளவோ சொல்லிக்கொண்டு போகலாம். தமிழ்... தமிழ்... தமிழ்... என்பது மிகவும் அவர்களின் உயிர் மூச்சு.

      தமிழகத்தில் உள்ள எல்லா தலைவர்களிடமும் கட்சி எல்லை கடந்து மிகவும் அன்பாக பழகக்கூடியவர். மிகச்சிறந்த பேச்சாளர். அன்பிற் சிறந்தீர் என்று தான் ஆரம்பிப்பார். அப்படி ஆரம்பிக்கும்போதே அதிகமான கைத்தட்டல்களை பெறுவார்.

      என் தந்தை சிறுவயது முதல் அவரை பார்த்து வளர்ந்தவள் நான். நான் வேறு இயக்கத்தை தேர்ந்தெடுத்தபோது சற்று கோபமாக இருந்தாலும் பின்பு எங்கே இருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும் என்று என்னை வாழ்த்தியவர். என்னை உயரத்தில் பார்த்து மகிழ்ந்தவர். இறுதி காலத்தில் இயற்கையோடு இருக்கவேண்டும் என்பதற்காக எங்களோடு தான் இருந்தார். கடைசி காலம் வரை எங்களோடு தான் இருந்தார்.

      அவர் மறைந்து விட்டார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அதனால் அவரை 93 வயது பிறந்தநாளையும் கொண்டாடினோம். அவருக்கு இறுதி சடங்கு மாலை 5 மணிக்கு ஊர்வலம் கிளம்பி விருகம்பாக்கம் இடுகாட்டில் நிறைவு செய்கிறோம்.

      நிறைவான வாழ்க்கை வாழ்ந்தவர். கடைசி காலத்தில் கூட தமிழக மக்களுக்கு வாழ்த்துகளை சொல்லுங்கள் என்று எங்களுக்கு அறிவுரை சொல்லி எங்களை வளர்த்திருக்கிறார்.

      தந்தை என்று இருந்ததை விட நாட்டுக்கு ஒரு தொண்டன் என்ற வகையிலேயே அவருடைய வாழ்க்கை இருந்து இருக்கிறது.

      உங்கள் அனைவரின் சார்பிலும் உங்கள் சகோதரியாக அவரின் ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என்று பிரார்த்தித்து ஒரு நல்ல மனிதர், நேர்மையான மனிதர், அரசியலுக்காக எந்த வகையிலும் தனது கொள்கையை விட்டுக்கொடுக்காதவர், நேர்மையை விட்டுக்கொடுக்காதவர், உழைப்பாளி, நல்ல பழக்கவழக்கங்கள் உள்ளவர், 4 மணியில் இருந்து இரவு 11 மணி வரைக்கும் வாழ்க்கையை நேரடியாக நேர்மறையாக நடத்தக்கூடியவர். படிப்பாளி. அந்த காலத்திலேயே 2 எம்.ஏ., படித்து இருக்கிறார்.

      புத்தகங்கள் தான் அவருடைய வாழ்க்கை. அப்படிப்பட்ட அப்பாவை இழந்து தவித்துக்கொண்டு இருக்கிறேன். போய் வாருங்கள் அப்பா. அடிக்கடி நான் சொல்வதுண்டு மருத்துவம் தானே படித்து இருக்கிறீர்கள். தமிழ் நன்றாக பேசுகிறீர்கள் என்று கேட்கும்போது, தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்லை. தமிழ் என்னை பெற்றதனால் நான் தமிழ் பேசுவேன் என்று பெருமையாக என்னை பேச வைத்தவர்.

      நேரடியாக என் அப்பா எனக்கு எதுவும் சொல்லிக்கொடுத்ததில்லை. ஆனால் அவருடைய ஒழுக்கத்தையும், நேர்மையையும் பார்த்து பார்த்து வளர்ந்தவள் நான். தேசமும் தெய்வீகமும் எனது 2 கண்கள் என்று சொல்லி வளர்த்தவர். அதனால் தான் இன்றும் நான் தேசியத்தையும் தெய்வீகத்தையும் 2 கண்களாக போற்றிக்கொண்டு இருக்கிறோம். தேச பக்தியும் தெய்வ பக்தியும் உள்ளவர். அவரை இழந்து வாடுகிறோம். ஆனால் துணிச்சலாக இருக்க வேண்டும். தமிழ் பேச வேண்டும். நேர்மையான அரசியல்வாதியாக இருக்க வேண்டும், எதற்கும் தலைகுனிய கூடாது என்ற அவருடைய வாழ்க்கையை பின்பற்றி, அவர் என்னவெல்லாம் தமிழக மக்களுக்கு செய்ய வேண்டும் நினைத்தாரோ அவர் வழியையொட்டி அதை நாங்கள் செய்து முடிப்போம். உங்கள் சகோதரியாக செய்து முடிப்பேன்.

      தந்தையை இழந்து வாடும் இந்த நேரத்தில் வந்து ஆறுதலை தந்த உங்களுக்கு என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

      இவ்வாறு அவர் கூறினார்.

      • விஜய் படங்களின் டிக்கெட் விலை என்ன?. பாமர மக்களுக்காக நடிக்கிறேன், குறைந்த விலையிலோ, இலவசமாகவோ டிக்கெட் கொடுக்கிறேன் என இருக்க வேண்டியதுதானே?
      • விஜய்க்கு சினிமாவில் நடிக்கவும், வசனம் பேசவும், நடனமாடவும், ஏமாற்றவும்தான் தெரியும். அரசியலோ, பொருளாதாரமோ தெரியாது.

      மத்திய அரசு சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை 50 ரூபாய் உயர்த்தியது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

      தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜயும் கண்டனம் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் "ஒன்றிய பாஜக அரசு அறிவித்துள்ள சமையல் எரிவாயு (Gas Cylinder) விலை உயர்வு, சாமானிய மக்கள் மீதான நேரடித் தாக்குதலாகும். மக்களின் அன்றாட வாழ்வே போராட்டமாக இருக்கின்ற சூழலில், ஒன்றிய அரசின் இந்த விலையேற்றம், மக்களை மேலும் வாட்டி வதைப்பதாகவே அமைந்துள்ளது.

      ஒவ்வொரு முறையும் சமையல் எரிவாயு வாங்கும்போது, அதற்கான மானியத் தொகை வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்ற அறிவிப்பைக் காற்றில் பறக்கவிட்ட ஒன்றிய ஆட்சியாளர்கள், மக்களை எளிதில் ஏமாற்றிவிடலாம் என்ற நினைப்பில் உள்ளனர்.

      தற்போது அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்ந்து விட்ட நிலையில், மக்களுக்குப் பொருளாதாரச் சுமையை ஏற்றும் வகையில் சமையல் எரிவாயு விலையை ஒன்றிய அரசு அதிரடியாக உயர்த்தியிருப்பது ஏற்கத்தக்கது இல்லை.

      தேர்தல் நெருங்கும் நேரத்தில் சமையல் எரிவாயு விலையைக் குறைப்பதையும், தேர்தலுக்குப் பின்னர் விலையை ஏற்றுவதையும் வாடிக்கையாக வைத்துள்ள ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு மக்கள் பாடம் புகட்டக் காத்திருக்கிறார்கள்" எனக் கூறியிருந்தார்.

      இந்த நிலையில் அறிக்கை வெளியிட்டுள்ள விஜயை தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார். விஜய் தொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-

      விஜய் படங்களின் டிக்கெட் விலை என்ன?. பாமர மக்களுக்காக நடிக்கிறேன், குறைந்த விலையிலோ, இலவசமாகவோ டிக்கெட் கொடுக்கிறேன் என இருக்க வேண்டியதுதானே? யார் தடுத்தார்கள்? உங்களுக்கு லாபமென்றால் பேச மாட்டீர்களா? ஒன்றும் தெரியாமல் விஜய் போன்றோர் பேச வேண்டாம்.

      விஜய்க்கு சினிமாவில் நடிக்கவும், வசனம் பேசவும், நடனமாடவும், ஏமாற்றவும்தான் தெரியும். அரசியலோ, பொருளாதாரமோ தெரியாது.

      பண மதிப்பிழப்பு (Demonetization) மூலம் கருப்பு பணத்தை பிரதமர் ஒழித்தாரே, அப்படி திரைத்துறையில் பிளாக் (Black) டிக்கெட் ஒழிக்கப்பட்டதா? அதை கட்டுப்படுத்தினீர்களா நீங்கள்? சினிாமாவில் Black-ல் டிக்கெட் விற்றீர்கள். சினிமா டிக்கெட் விலையை உயர்த்தினீர்கள். உள்ளே பாப்கார்கனை கூட உயர்த்திதான் விற்றீர்கள்.

      இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

      • பாரத பிரதமரை தமிழக முதல்வர் நேரில் சென்று வரவேற்றிருக்க வேண்டுமல்லவா?
      • அதை செய்ய தவறியது மன்னிக்க முடியாத குற்றம். வரலாற்றுப் பிழை.

      சென்னை:

      பிரதமர் மோடி நேற்று ராமேசுவரத்தில் பேசும் போது தமிழகத்துக்கு 3 மடங்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது என்று புள்ளி விபரங்களுடன் தெரிவித்தார். ஆனால் நிதி ஒதுக்கீடு வருடத்துக்கு வருடம் அதிகரிக்கும் என்பது பொருளாதாரம் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கே தெரியும் என்று ப.சிதம்பரம் விமர்சித்து இருந்தார்.

      இதற்கு பதிலடி கொடுத்து டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

      முதலாம் ஆண்டு படிக்கும் பொருளாதார மாணவ, மாணவியருக்கு கூட தெரியும் ஆண்டாண்டு காலமாக இதுதான் நடைமுறை என்பது. ஆண்டுக்கு ஒரு முறை எல்லாத் துறைக்குமான நிதி அதிகரிக்கும் என்பது முதல் ஆண்டு படிக்கும் பொருளாதாரம் மாணவர்களுக்கு கூட தெரியும் என்று பிரதமரை விமர்சிக்கும் நீங்கள் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு போதுமான நிதி தரவில்லை என்றும் ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை. வெறும் திருநெல்வேலி அல்வா கொடுக்கிறார்கள் என்றும் கேலி பேசும் உங்கள் கூட்டணியின் முதல்வர், துணை முதல்வர், தமிழக அமைச்சர்களுக்கும் பதில் அளிக்கும் விதமாகத்தான் நேற்றைய மேடையிலே தமிழக அமைச்சர்கள் முன்னிலையில் பிரதமர் சொன்ன விளக்கத்தை ஏற்க பயந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குளுகுளு ஊட்டியில் ஓய்வு எடுத்துக் கொண்டு தமிழகத்துக்கு மத்திய அரசு ஒன்றுமே தரவில்லை என்று அங்கே பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்.

      அதே நேரத்திலே இங்கே ரூ.8000 கோடிக்கு அதிகமான மக்கள் நலத் திட்டங்களையும் சாலை விரிவாக்கத் திட்டங்களையும் ராமேஸ்வரத்தில் அர்ப்பணித்துக் கொண்டிருந்தார் பிரதமர் மோடி. உண்மையை சொன்னால் அல்வா கூட கசக்கிறது. ராமேஸ்வரம் வந்த பாரத பிரதமரை தமிழக முதல்வர் நேரில் சென்று வரவேற்றிருக்க வேண்டுமல்லவா? அதை செய்ய தவறியது மன்னிக்க முடியாத குற்றம். வரலாற்றுப் பிழை.

      அதை விடுத்து தி.மு.க. செய்யும் விமர்சனத்திற்கு சிதம்பரம் போன்றவர்கள் வக்காலத்து வாங்குவது ஏதோ அறிவாலயத்தின் வாசலில் நின்று ஒவ்வொரு தேர்தலிலும் சில எம்.பி. சீட்டுக்களை பெறுவதற்கு தான் என்பதை மக்கள் உணர்வார்கள்.

      இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

      • பாஜக தலைவர் பதவிக்கான இடத்தில் நான் இல்லை.
      • புதிய தலைவர் பதவிக்காக யாரையும் கை காட்டவில்லை- அண்ணாமலை

      2026 சட்டமன்றத் தேர்தலுக்காக பாஜக- அதிமுக கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் இரு கட்சித் தலைவர்களின் சந்திப்பு அடுத்தடுத்து நிகழ்ந்து வருகின்றன.

      இதற்கிடையே தமிழக பாஜகவுக்கு புதிய மாநிலத் தலைவர் நியமிக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது. பாஜக-வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்றால் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என அதிமுக கண்டிஷன் போட்டதாக அரசியல் வட்டாரங்கள் கிசுகிசுகின்றன.

      இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் போட்டியில் தான் இல்லை என அண்ணாமலை தெளிவுபடுத்தியுள்ளார். இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "புதிய தலைவருக்கான போட்டியில் நான் இல்லை. புதிய மாநிலத் தலைவர் பதவிக்காக நான் யாரையும் கை காட்டவில்லை. புதிய மாநிலத் தலைவருக்கான தேர்தல் விரைவில் நடைபெறும். புதிய மாநிலத் தலைவர் தேர்வான பிறகு நிறைய பேசுவோம். தமிழ்நாட்டு அரசியலில் தொடர்வேன், டெல்லி செல்ல மாட்டேன். என்னுடைய அரசியல் பணி என்றைக்குமே தொடரும்" என்று தெரிவித்தார்.

      இதற்கிடையே மாநில தலைவர் தேர்தலில் போட்டியிடுவீர்களா? என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜனிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு "பாஜக-வில் தேர்தல் நடைமுறை என்பது கிடையாது. மேலிடம் முடிவு செய்தவதை நாங்கள் பின்பற்றுவோம்" என்றார்.

      அடுத்த தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரம், தமிழிசை சவுந்தரராஜன், எல். முருகன், வானதி சீனிவாசன் ஆகியோர் பெயர் அடிபடுகிறது.

      • விஜய்யின் பேச்சில் தெளிவற்ற தன்மைதான் உள்ளது.
      • செங்கோட்டையன் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தது ஏன் என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது.

      சென்னை:

      தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

      தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தி.மு.க.வுக்கும், த.வெ.க.வுக்கும்தான் போட்டி என்று பேசுகிறார். எதுகை மோனையில் வேண்டுமானால் அது சரியாக இருக்கலாம். ஆனால் நீங்கள் எதிரில் இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

      எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கட்சியில் அடிப்படையிலேயே மிக தீவிரமாக மக்கள் பணியாற்றி முன்னுக்கு வந்தனர்.

      விஜய் முதலில் தி.மு.க.வுக்கான எதிர்ப்பை தீவிரப்படுத்த வேண்டும். அந்த காலத்து நடிகர்களின் படங்கள் தமிழ்நாட்டுக்குள்ளேயே இருந்தது. ஆனால் இன்று விஜய் படம் தெலுங்கானாவில் ஓஹோவென்று ஓடுகிறது. உங்களுக்கு பல மொழிகள் தேவைப்படும் போது குழந்தைகளுக்கும் இணைப்பு மொழி தேவைப்படுகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

      உங்கள் படத்திற்கு பல மொழிகள் வேண்டும். பாடத்திற்கு பல மொழிகள் வேண்டாம் என்று சொன்னால் எப்படி? விஜய்யின் பேச்சில் தெளிவற்ற தன்மைதான் உள்ளது.

      எங்களை தி.மு.க.வின் பி அணி என்று விஜய் சொல்கிறார். தி.மு.க. சொல்வதைத்தான் நீங்களும் சொல்கிறீர்கள். நீங்கள்தான் தி.மு.க.வின் பி அணி.

      பரந்தூர் விமான நிலையம் வேண்டாம் என்று விஜய் சொல்கிறார். உங்களுக்கு பனையூர் வேண்டும். நீங்கள் சாலிகிராமத்தில் எனது வீட்டு அருகில் தான் சிறிய வீட்டில் இருந்தீர்கள். உங்கள் வாழ்க்கை விரிவடைய விரிவடைய உங்களுக்கு பனையூர் தேவைப்படுகிறது. அப்படியென்றால் தமிழக மக்களின் வாழ்க்கை விரிவடைய விரிவடைய பரந்தூர் தேவைப்படுகிறது. தமிழக அரசு கொடுக்கும் இடத்தில்தான் மத்திய அரசு விமான நிலையம் அமைக்கும்.

      பிரதமர் மோடியை எதிர்த்து பேசும் தைரியும் இருப்பதாக கூறும் விஜய் தனது தயாரிப்பாளரை எதிர்த்து பேசி இருப்பாரா? உங்களுடைய டைரக்டரை எதிர்த்து பேசி இருப்பீர்களா?

      விஜய் இன்னும் கொஞ்சம் அழுத்தமாகவும், ஆழமாகவும் அரசியலை கற்றுக் கொண்டு பேச வேண்டும். செங்கோட்டையன் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தது ஏன் என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது.

      இவ்வாறு அவர் கூறினார்.

      ×