search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96553"

    ராஜஸ்தானில் முதல் மந்திரி அசோக் கெலாட்டிற்கும், கட்சியின் முக்கிய தலைவரான சச்சின் பைலட்டிற்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாகக் கூறப்படுகிறது.
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அசோக் கெலாட் முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார். இவருக்கும் சச்சின் பைலட்டுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது.

    இதற்கிடையே, எதிர்க்கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு அமைச்சரவையில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது என விமர்சிக்கும் சச்சின் பைலட், அமைச்சரவையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். 

    எனவே, நவம்பர் 11-ம் தேதி முதல் மந்திரி அசோக் கெலாட் டெல்லி சென்று காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசினார்.

    இந்நிலையில், ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பிடித்துள்ள 21 அமைச்சர்களும் இன்று ராஜினாமா செய்துள்ளனர். நாளை அமைச்சரவை மாற்றி அமைப்பதற்கு ஏதுவாக, அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர். 

    நாளை பதவியேற்கும் புதிய அமைச்சரவையில் சச்சின் பைலட் ஆதரவாளர்கள் 12-க்கும் மேற்பட்டோருக்கு இடம் கிடைக்கும் என கூறப்படுகிறது. 

    வடமாநிலங்களில் பெய்து வரும் புயல் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். #RainStrom
    புதுடெல்லி:

    வடமாநிலங்களில் தற்போது புயல் மற்றும் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, ராஜஸ்தான், குஜராத், மத்தியப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் கனமழையில் சிக்கி மக்கள் பலியாகி வருகின்றனர்.

    ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளில் நேற்று புயல் தாக்கியதுடன் கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் சாலைகள், மரங்கள், மின்கம்பங்கள் சேதமடைந்தன.

    ராஜஸ்தானில் அதிகபட்சமாக 25 பேரும், மத்தியப்பிரதேசத்தில் 15 பேரும், குஜராத்தில் 10 பேரும் பலியாகினர். மேலும் மகாராஷ்டிராவில் 3 பேர் மழைக்கு உயிரிழந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    புயல் மழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார். அத்துடன்  மழையால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது. #RainStrom
    ராஜஸ்தானில் இரண்டு பேர் சொந்தம் கொண்டாடியதால் நீதிமன்றத்தில் கன்றுடன் பசு ஆஜர்படுத்தப்பட்டது சுவாரசியத்தை ஏற்படுத்தியது. #Cowbroughttocourt
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் மாண்டோர் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு புகார் பதிவானது. அதில், கான்ஸ்டபிள் ஓம் பிரகாஷ் மற்றும் ஆசிரியர் ஷியாம் சிங் ஆகியோர் ஒரு பசுவை சொந்தம் கொண்டாடினர். எனவே பசுவின் உரிமையாளரை கண்டுபிடிக்க வேண்டும்  என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    போலீசார் பசுவின் உரிமையாளரை கண்டுபிடிக்கவில்லை. இதையடுத்து இந்த வழக்கு ஜோத்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.



    இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது சொந்தம் கொண்டாடிய பசுமாட்டை கன்றுடன் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர்..

    இதுகுறித்து வழக்கறிஞர்கள் கூறுகையில், பசுவின் உரிமையாளர் யார் என முடிவாகவில்லை. இதையடுத்து பசுவை விலங்குகள் நல காப்பகத்தில் சேர்க்க இருவரும் ஒப்புதல் அளித்துள்ளனர். அடுத்த கட்ட விசாரணை வரும் 15ம் தேதி நடைபெறும் என நீதிபதி தெரிவித்தார்.

    ஒரு பசுவை இரண்டு பேர் சொந்தம் கொண்டாடியதால் நீதிமன்றத்தில் கன்றுடன் அந்த பசு ஆஜர்படுத்தப்பட்டது அப்பகுதியில் சுவாரசியத்தை ஏற்படுத்தியது. #Cowbroughttocourt 
    ராஜஸ்தான் மாநிலத்தின் சிரோஹி மாவட்டத்தில் இன்று எம்.ஐ.ஜி.27 ரகப் போர் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் அதில் இருந்த விமானி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். #IAFaircraft #MiG27aircraft #MiG27crashes
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் இருந்து வழக்கமான பயிற்சிக்காக இன்று காலை எம்.ஐ.ஜி.27 ரகப் போர் விமானம் புறப்பட்டு சென்றது. 

    பயிற்சியின் இடையில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் செங்குத்தாக கீழ்நோக்கி பாய்ந்து சிரோஹி மாவட்டத்தில் உள்ள கோடானா கிராமத்தில் ஒரு வயல்வெளியில் விழுந்து நொறுங்கியது.



    போர் விமானம் தரையில் மோதுவதற்குள் அதில் இருந்த விமானி பாரசூட் உதவியுடன் கீழே குதித்து உயிர் தப்பினார். இந்த விபத்துக்கான காரணம் தொடர்பாக விமானப்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த ஆண்டில் ஒன்பதாவது முறையாக பயிற்சியின்போது போர் விமானங்கள் கீழே விழுந்து நொறுங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. #IAFaircraft #MiG27aircraft #MiG27crashes
    நாட்டிலிருந்து வறுமையை விரட்டியடிக்க சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்துவோம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். #LSpolls #Congress #RahulGandhi #SurgicalStrike #PMModi
    ஜெய்ப்பூர்:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    அதன் ஒரு பகுதியாக, ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று பயணம் மேற்கொண்டார். அங்கு சுரட்கர் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

    நாட்டில் இருந்து வறுமையை விரட்டியடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். வறுமையை விரட்டியடிக்க சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்துவோம். இதன்மூலம் நாட்டில் எந்த ஒரு குடிமகனும் வறுமை நிலையில் இருக்கமாட்டார்கள். எந்த நாடும் இதுபோன்ற முயற்சியை எடுக்கவில்லை.



    காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு பணக்காரர்களுக்கு பணத்தை அள்ளி வழங்குகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சி ஏழைகளுக்கு மட்டுமே பணத்தை தரும்.

    ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது வறுமைக்கோட்டுக்கு கீழ் வசித்து வந்த 14 கோடி மக்களை மீட்டுள்ளோம். ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வசித்து வரும் மக்களின் எண்ணிக்கை 25 கோடியாக உயர்ந்துள்ளது அவமானமாக உள்ளது. 

    நாங்கள்  வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களை மீட்டோம். ஆனால் அவர்களை பாஜக அரசு மீண்டும் வறுகைக்கோட்டுக்கு கீழே கொண்டு வந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #LSpolls #Congress #RahulGandhi #SurgicalStrike #PMModi
    ராஜஸ்தானில் பாகிஸ்தான் உளவாளியாக செயல்பட்டவனை போலீசார் கைது செய்துள்ளனர். வாட்ஸ்அப் மூலம் பாகிஸ்தானுக்கு தகவல் அனுப்பி பணம் பெற்று வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய் சால்மர் மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லை பகுதியில் சந்தேகப்படும் வகையில் நபர் ஒருவர் சுற்றித்திரிந்தார். அவரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    அவரது பெயர் நவாப்கான் (36). ஜீப் டிரைவரான இவன் பாகிஸ்தான் எல்லை அருகேயுள்ள சாம் பகுதியை சேர்ந்தவன். அவன் பாகிஸ்தானுக்கு உளவாளிவாக செயல்பட்டு வந்தான்.

    எனவே அவனை போலீசார் கைது செய்தனர். அவன் ‘வாட்ஸ்அப்’ மூலம் பாகிஸ்தானுக்கு தகவல்களை அனுப்பி வந்தான். அதற்காக பாகிஸ்தானின் ‘ஐ.எஸ்.ஐ.’ உளவு நிறுவனத்திடம் இருந்து பணம் பெற்று வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

    இந்த தகவலை உளவுத்துறை கூடுதல் டைரக்டர் ஜெனரல் உமேஷ்மிஸ்ரா தெரிவித்தார்.

    நவாப்கான் கடந்த ஆண்டு பாகிஸ்தான் சென்று ஐ.எஸ்.ஐ. உளவு நிறுவனத்தினரை சந்தித்தான். அங்கு அவனுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள அவனிடம் பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    ராஜஸ்தான் மாநிலத்தின் கங்காநகர் பகுதியில் பறந்துகொண்டிருந்த பாகிஸ்தான் நாட்டு ஆளில்லா உளவு விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. #PakDrone
    ஜெய்ப்பூர்:

    புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய விமானப்படை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாமை தாக்கி அழித்தது. எல்லை தாண்டி வந்து இந்தியா தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுப்போம் என பாகிஸ்தான் கூறியதால் இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் கங்காநகர் செக்டார் அருகே ஹிந்துமால்கோட்டில் பாகிஸ்தானின் உளவு விமானம் இன்று அதிகாலை 5 மணிக்கு நுழைந்தது. இதைக் கண்ட இந்திய பாதுகாப்பு படையினர் சரமாரி தாக்குதல் நடத்தினர். 

    இதையடுத்து அந்த உளவு விமானம் பாகிஸ்தானை நோக்கி திரும்பிச் சென்று விட்டது. மீண்டும் இந்திய எல்லைக்குள்  வந்த பாகிஸ்தானின் உளவு விமானத்தை இந்திய ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    கடந்த மாதம் 26ம் தேதி நடைபெற்ற விமானப்படை தாக்குதலுக்கு பிறகு சுட்டு வீழ்த்தப்பட்ட 3-வது உளவு விமானம் இது என்பது குறிப்பிடத்தக்கது. #PakDrone
    ராஜஸ்தானின் டோங்க் என்ற பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, எங்களது போர் காஷ்மீருக்கானது, காஷ்மீர் மக்களுக்கு எதிரானது அல்ல என தெரிவித்துள்ளார். #PMModi
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம், டோங்க் மாவட்டத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார்.

    காஷ்மீர் தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தோடு இந்தியா மட்டுமல்லாமல், உலகமும் உள்ளது. காஷ்மீர் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் 100 மணி நேரத்திற்குள் பழிவாங்கியது. காஷ்மீர் மக்களும் பயங்கரவாதத்தால், 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அமைதியை தான் விரும்புகின்றனர்.

    காஷ்மீர் மாணவர்களை தாக்குவது போன்ற சம்பவம் இனி எங்கும் நடைபெறக்கூடாது. எங்களது போர் காஷ்மீருக்கானது மட்டுமே. காஷ்மீர் மக்களுக்கு எதிரானது அல்ல.



    பயங்கரவாதம், மனிதநேய எதிரிகளுக்கு எதிராகத்தான் நாம் போராடி வருகிறோம். காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

    எல்லைப்பகுதியில் உள்ள வீரர்கள் மீதும் மோடி அரசின் மீதும் நம்பிக்கை வையுங்கள். உரிய நேரத்தில் எல்லா கணக்கையும் தீர்த்து விடலாம் என தெரிவித்துள்ளார். #PMModi
    ராஜஸ்தானில் திருமண ஊர்வலம் சென்றுகொண்டிருந்த போது, லாரி மோதியதில் 13 பேர் பலியாகினர். மேலும் 15 பேர் படுகாயமடைந்தனர். #RajastanAccident
    பிரதாப்கர்:

    ராஜஸ்தான் மாநிலத்தின் பிரதாப்நகர் -ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு திருமண ஊர்வலம் நடைபெற்றது. மணமகள் மற்றும் உறவினர்கள் என ஏராளமானோர் ஊர்வலமாக வந்துகொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரி, கட்டுப்பாட்டை இழந்து ஊர்வலத்திற்குள் புகுந்தது. இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தனர். மணமகள் உட்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

    இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்,  விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். #RajastanAccident
    ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்மெர் மாவட்டத்தில் இன்று மாலை இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் விமானி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். #MIG27crashed #jaisalmerMIG27crashed
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்மெர் மாவட்டத்தில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் இருந்து வழக்கம்போல் பயிற்சியில் ஈடுபடுவதற்காக இன்று மாலை MIG 27 ரகத்தை சேர்ந்த ஒரு போர் விமானம் புறப்பட்டுச் சென்றது.

    அம்மாவட்டத்தின் போக்ரான் பகுதி அருகே உள்ள ஏட்டா கிராமத்தின் மீது பறந்து சென்றபோது மாலை 6 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது.  அதில் சென்ற ஒரு விமானி அவசர கதவு வழியாக பாரசூட் உதவியுடன் கீழே குதித்து உயிர் தப்பினார்.

    இவ்விபத்துக்கான காரணம் குறித்து விமானப்படை உயரதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். #MIG27crashed  #jaisalmerMIG27crashed 
    ஜெய்ப்பூரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா தனது தாயுடன் இரண்டாவது நாளாக இன்று ஆஜரானார். #RobertVadra
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானீரில் ராபர்ட் வதேராவுக்கு தொடர்புடைய நிறுவனம் கடந்த 2015ல் மிகவும் குறைந்த விலையில் நிலங்களை வாங்கியுள்ளது. அதன்பின்னர், அதிக விலைக்கு அந்த நிலம் ஒரு நிறுவனத்துக்கு விற்கப்பட்டுள்ளது.

    இதில் நடைபெற்றுள்ள பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. 
    இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி 3 முறை, அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் வதேரா ஆஜராகவில்லை. இந்த வழக்கில் வதேராவும், அவரது தாய் மவ்ரீனும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என ராஜஸ்தான் ஐகோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டது. 



    இந்நிலையில், ஜெய்ப்பூரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராபர்ட் வதேரா தனது தாய் மவ்ரீனுடன் இரண்டாவது நாளாக இன்று ஆஜரானார். அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அமலாக்கத்துறை முன் வதேரா ஆஜராவது இது நான்காவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. #RobertVadra
    ராஜஸ்தானில் 5 சதவீத இடஒதுக்கீடு கோரி குஜ்ஜார் சமூகத்தினர் ரெயில் மறியல் போராட்டம் நடத்தினார்கள். #Gujjar #Protest #Rajasthan
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தானில் 5 சதவீத இடஒதுக்கீடு கோரி குஜ்ஜார் சமூகத்தினர் ரெயில் மறியல் போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்தை கைவிட வேண்டும் என முதல்-மந்திரி அசோக் கெலாட் கோரிக்கை விடுத்து உள்ளார்.

    கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 5 சதவீத இடஒதுக்கீடு கோரி குஜ்ஜார் சமூகத்தினர் ராஜஸ்தான் மாநிலத்தில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியதை தொடர்ந்து குஜ்ஜார் சமூகத்தினர் மீண்டும் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    அவர்கள் நேற்று 2-வது நாளாக மாநிலம் முழுவதும் ரெயில் மறியல், தர்ணா உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். ரெயில் மறியல், தர்ணா போன்ற போராட்டங்களால் மாநிலத்தின் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல ரெயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டது.



    டெல்லி-மும்பை, டெல்லி-ஜெய்ப்பூர் ரெயில் பாதைகளிலும் போராட்டம் நடந்ததால் அந்த வழியாக செல்லும் 5 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.

    போராட்டம் குறித்து மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மறியலை கைவிடவேண்டும் என்றும், போராட்டக்காரர்கள் ரெயில் நிலையங்களில் இருந்து வெளியேற வேண்டும் என்றும், போராட்டக்காரர்களின் இடஒதுக்கீடு பிரச்சினை பற்றி பிரதமரிடம் எடுத்துச்செல்வேன்’ என்றும் கூறினார்.

    போராட்ட குழு உறுப்பினர் ஒருவர் கூறுகையில், ‘எங்களுக்கு நல்ல முதல்வரும், நல்ல பிரதமரும் கிடைத்து உள்ளார்கள். பிரதமரின் கவனத்துக்கு எங்கள் கோரிக்கையை கொண்டுசெல்லவே போராடுகிறோம். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளித்துள்ள நிலையில் நாங்கள் 5 சதவீத இடஒதுக்கீடு தான் கேட்கிறோம்’ என்றார். 
    ×