search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99961"

    உங்கள் குழந்தைகளை சிப்ஸ், நொறுக்குத்தீனிகள், ஜங்க் உணவுகளை சாப்பிடுவதற்கு அனுமதிக்காதீர்கள். ஏனெனில், இவற்றில் அளவுக்கதிகமான உப்பு நிறைந்துள்ளதால், பல்வேறு உடல் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
    வாழ்நாள் முழுவதும் ஆரோக்கிய வாழ்க்கை வேண்டுமெனில் சிறுவயதிலிருந்தே நாம் மேற்கொள்ளும் உணவுகளில் ஒரு வரைமுறை இருக்க வேண்டும்.

    வரைமுறையே இல்லாமல் உங்கள் குழந்தைகளுக்கு உணவுகளை கொடுத்து வந்தால் இதன் தாக்கம் அவர்கள் வளர ஆரம்பிக்கும்போது தெரியவரும்.
    குறிப்பாக, உங்கள் குழந்தைகளை சிப்ஸ், பாப்கார்ன், நொறுக்குத்தீனிகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஜங்க் உணவுகளை சாப்பிடுவதற்கு அனுமதிக்காதீர்கள்.

    ஏனெனில், இவற்றில் அளவுக்கதிகமான உப்பு நிறைந்துள்ளதால், உடல் பருமன் மற்றும் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. குழந்தைகள் ஒரு நாளைக்கு, 1000 முதல் 1500 மில்லி கிராம் வரை உப்பினை எடுத்துக்கொள்ளலாம்.

    அளவுக்கதிகமான சோடியம் சேருவதால், செல்களில் உள்ள நீர்ச்சத்தின் அளவில் இடையூறு ஏற்பட்டு அதிகம் தாகம் ஏற்படும். வயிற்று உப்புசம் ஏற்பட்டு உங்கள் குழந்தைகளால் சாப்பிட முடியாமல் போகலாம்.

    சோடியம் அதிகமானால், கை கால்களில் வீக்கம் ஏற்படும், எனவே உங்கள் குழந்தைகளின் கை கால்கள் வீங்கியிருந்தால், அவன் குண்டாக இருக்கிறான் என நினைத்துக்கொள்ளாமல் மருத்துவரை அணுகுவது நல்லது.



    அளவுக்கு அதிகமான சோடியம் எலும்புகளில் கால்சிய அளவை குறையச் செய்து, சிறுநீர் வழியே வெளியேற்றும். இதனால் எலும்புகள் மிகவும் பலவீனமாகிவிடும்.

    மேலும், இரத்தத்தில் நீரின் அளவு அதிகரித்து, அதனால் சிறுநீரகங்களின் வேலை அதிகமாக்கப்படும். அப்படி சிறுநீரகங்கள் ஓய்வின்றி வேலை செய்ய நேர்ந்தால், எலும்புகளில் இருந்து வெளியேறும் கால்சியம் சிறுநீரங்களில் அதிகம் படிந்து, கற்களாக உருவாகிவிடும். எனவே உங்களுக்கு சிறுநீரக கற்கள் ஏற்படுவதற்கு, அதிகளவு உப்பும் ஓர் காரணம் ஆகும்.

    அதிகளவு உப்பினால் உடலில் நீர்த்தேக்கம் ஏற்பட்டு, அதன் காரணமாக இரத்தத்தின் கன அளவு அதிகரித்து, அதனால் இதயம், மூளை, சிறுநீரகங்கள் போன்றவற்றில் அழுத்தம் அதிகரிக்கும். இப்படி தமனிகளில் அழுத்தம் அதிகரித்தால், வாழ்நாள் முழுவதும் உயர் இரத்த அழுத்த பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்கும்.

    குழந்தைகளுக்கு கீரை பருப்பு மசியல், வெஜிடபிள் சூப். தேங்காய் அவல். வெஜிடபிள் சாண்ட்விச், பயறு வகைகள், கோதுமை அடை, சோள உணவுகள், நட்ஸ் வகைகள், தானியங்கள் போன்றவற்றை சாப்பிடுவதற்கு கொடுங்கள்.
    குடும்பங்கள் தம் குழந்தைகளின் கல்விக்குக் கொடுக்கும் அக்கறைக்கு ஒரு துளியும் குறைவின்றி அரசும் எல்லாத் துறைகளையும் விட கல்விக்கு அதிக நிதி அளித்துள்ளது.
    2019-ம் ஆண்டின் சுட்டெரிக்கும் கோடை மெதுவாக விலக ஆரம்பிக்க, புதுக் கல்வியாண்டும் நெருங்கிவிட்டது. பல ஆயிரம் பெற்றோர்கள் தம் அரும்புக் குழந்தைகளின் கைப்பிடித்து கொஞ்சம் மகிழ்ச்சி, கொஞ்சம் மிரட்சி கலந்து அவரவர்கள் வசதிக்கேற்ப கூட்டிச் செல்வதும் நம் கண்ணில் விரிகிறது. அந்தக் காட்சிகளில் தம் குழந்தைகள் மேல் அவர்கள் ஏற்றிய கனவுகளும் தெரிகின்றன. அந்தக் கனவுகளின் பாதை அவர்களை இட்டுச் செல்வது அவர்களின் இன்றைய கனவுப் பள்ளிகள்.

    உலகில் எந்த நாட்டையும் விட தமது குழந்தைகளின் கல்வியில் அக்கறை செலுத்தும் மிக அதிகமான பெற்றோர்களை தன்னகத்தே கொண்டது தமிழ்நாடு. தனது பிள்ளைகளைத் தாண்டி, பேரன் பேத்திகளையும் கைபிடித்துக் கூட்டிச் செல்லும் தாத்தா பாட்டிகளும் நம்மிடையே உண்டு.

    குடும்பங்கள் தம் குழந்தைகளின் கல்விக்குக் கொடுக்கும் அக்கறைக்கு ஒரு துளியும் குறைவின்றி அரசும் எல்லாத் துறைகளையும் விட கல்விக்கு அதிக நிதி அளித்துள்ளது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஏராளமான விற்பன்னர்களை விவசாயம் முதல் விண்வெளி வரையிலான எல்லாத்துறைகளிலும் நமது கல்விக்கூடங்கள் உருவாக்கியுள்ளன.

    சுருங்கச் சொன்னால், பள்ளிக்கூட அறையிலிருந்து பல்கலைக்கழகங்கள் வரை, அணுவிலிருந்து சந்திரனைத் தாண்டி செவ்வாய்க்கிரகம் வரை தமிழகத்தில் படித்தவர்களின் உயரங்கள் சிறப்பாகவே உள்ளன.

    நாடு சுதந்திரம் பெற்ற பின், நாட்டின் முன்னேற்றத்திற்கு கல்வி முக்கியம் என்றுணர்ந்து ஏராளமான பள்ளி கல்லூரிகளை அரசு திறந்தது. பெருகி வரும் மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு ஈடுகட்டும் வகையில், கல்வி நிலையங்களை உருவாக்க முடியாத நிலை அரசுக்கும் உருவானது. அரசு உதவி பெரும் கல்வி நிலையங்களை தன்னார்வ நிறுவனங்களுடன் சேர்ந்து நடத்தும் நிலை முதலில் உருவானது.

    அதன்பின் அரசு அனுமதியுடன் சில ஆர்வலர்கள் பொருளாதார லாப நோக்கின்றி ஒரு சமுதாயத் தொண்டாய் மட்டுமே கல்வி நிலையங்களை உருவாக்கி நடத்த ஆரம்பித்தனர். இப்படி மூன்று வகையான கல்வி நிலையங்கள் இருந்தாலும் சமுதாய மற்றும் பொருளாதார அடிப்படையில் எந்த வித்தியாசத்தையும் கல்வி நிலையங்கள் ஒரு தனி மனிதனிடம் உருவாக்கவில்லை.

    நாம் பார்க்கும் அந்தச் சிறப்பான இடத்தில் தமிழகமும், தமிழர்களும் இன்று வரை இருக்கக் காரணம், தேவையான அளவில், சம வாய்ப்புடன் நமக்குக் கிடைத்த பள்ளிகளும், கல்லூரிகளும், நன்கு படித்துப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களும் பேராசிரியர்களும். பல ஆயிரம் குடும்பங்களில் முந்தைய தலைமுறைகளை விட அடுத்த தலை முறை தலை நிமிர்ந்து நடக்கும் ஒரு சமுதாய மாற்றத்திற்குக் காரணமான கோவில்களாகவும், கடவுள்களாகவும் எனக்கு அந்தக் கல்வி நிலையங்களும் ஆசிரியர்களும் தெரிவது ஒரு மிகையான கற்பனை அல்ல.

    இப்படிப் பார்த்தும், படித்தும் மகிழ்ந்து கொள்ளும் நமக்கு, இன்றைய சில செய்திகளைப் பார்க்கும்போது எதிர்காலம் பற்றி ஒரு பெரிய கேள்விக்குறியும் எழுகிறது.

    நான் பிறந்து, வளர்ந்து, படித்துப் பட்டம் பெற்ற கோவையில் ஒரு தாய் தனது மகனை ஒரு தனியார் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி வகுப்பில் சேர்ப்பதற்குத் தேவையான பணத்தை குறித்த காலத்திற்குள் கட்ட முடியாததால் மனம் வாடி தனக்குத்தானே தீயிட்டு இறந்த செய்தியைக் கேள்விப்பட்டு நான் எழுதியது,

    இது ஒரு தனிப்பட்ட பெண்ணின் தவறான முடிவாக நான் பார்க்கவில்லை. இன்று சமுதாயத்தில் மெதுவாகப் பரவி வரும் ஒரு பதைபதைக்கக் கூடிய எதிர் மறைச் சமுதாய மாற்றமாக நான் உணர்கிறேன்.

    ‘நோய்நாடி நோய்முதல் நாடியது தணிக்கும்
    வாய்நாடி வாய்ப்பச் செயல்’

    என்ற வள்ளுவனின் வாக்குப்படி, இதற்கு காரணம் தெரிந்தால் பின் அதைத் தடுக்கும் வழிகளும் புலப்படலாம்.

    அனைவருக்கும் கார் என்ற குறிக்கோளுடன் டாடா குழுவின் கண்டுபிடிப்புத்தான் இந்தியாவில் நானோ கார், “ஏழைகளின் கார்” என்ற விளம்பரத்துடன் வெளியிட்டதைப் பார்த்து மற்ற கார் உற்பத்தியாளர்கள் பயந்தனர். ஆனால் வர்த்தக ரீதியில் தோற்று, நானோ உற்பத்தியே மூடப்பட்டுவிட்டது. தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்ததில் ஏற்பட்ட அதிர்ச்சி, காரில் ஏதும் குறையில்லை, இருப்பினும் “ஏழைகளின் கார்” என்று விளம்பரப்படுத்தியதால் தோற்றதாம்!.

    “நானோவை” சாலையில் ஓட்டும்போது தன்னைத்தானே ஏழை என்று பறைசாற்றுவதாய் இருக்கும் எனவே அந்தக் காரை ஒதுக்கினார்களாம். இதை மனதில் வைத்து மேலே படியுங்கள், போன தலைமுறைப் பெற்றோர்களுக்கு, அதிகமான குழந்தைகள் இருந்தன. அப்போதைய கல்வி வளாகங்களுக்கிடையே பெரிய ஏற்றத் தாழ்வுகள் இருக்கவில்லை. எனவே தமது குழந்தைகளை வீட்டிற்கு அருகில் இருந்த பள்ளிக்கு அனுப்பினால் போதும் என்றிருந்தார்கள். ஆனால் இப்போது, வர்த்தக ரீதியாக ஆரம்பிக்கப்பட்ட கல்வி வளாகங்கள் தங்களுக்குள் ஏற்படுத்திக்கொண்ட போட்டிகள் விளையாட்டு மைதானங்களைத் தாண்டி வகுப்பறைகளுக்குள்ளும் நுழைந்தன.



    பெற்றோர்க்கிடையேயும், தனது குழந்தை மற்ற குழந்தைகளைக் காட்டிலும் தேர்வுகளில் முன்னிற்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பால் போட்டியில் முன்னிற்கும் கல்வி வளாகங்களை நோக்கிய கவனம் திரும்பியது. தன் குழந்தைகளை எப்படியாவது அத்தகு பள்ளிகளில் தான் சேர்க்க வேண்டும் என்ற வேட்கை பெற்றோர் மனதில் தோன்ற, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்ப்பவர்கள் குறைந்தார்கள்.

    இப்படிப்பட்ட சூழலில் சிக்கிய இன்றைய சமுதாயம் அவர்களை அறியாமல் அவர்கள் மேல் திணிக்கப்பட்ட மாயையால் பல அறிஞர்களை உருவாக்கிய தனக்கு அருகில் உள்ள அரசுப் பள்ளிகளைத் தவிர்த்து, தனது சக்திக்கு மீறிய தனியார் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்க முயன்றார்கள். அப்படி முயன்றவர்களில் ஒருவர்தான் நாம் இந்தக் கட்டுரையில் பார்த்த தனக்குத்தானே தீயிட்டு மடிந்த அந்தப் பெண்.

    அப்படி கஷ்ட கதியில் சேர்க்கப்பட்ட குழந்தைகளில் பலர் பள்ளியில் ஒரு வகையான தாழ்வு மனப்பான்மைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். வேறு சிலர் தான் படிக்கும் பள்ளிக்கும் தான் வசிக்கும் வீட்டிற்கும் இடையில் உள்ள வேறுபாட்டால் தனது பெற்றோரிடமிருந்து மனதால் விலக ஆரம்பித்திருக்கிறார்கள். சமுதாயத்தில் ஒரு வகையான மனப் பிணி உருவாகுகிறதோ என்ற அச்சம் கலந்த ஐயம் உருவாவதை இங்கு உணர முடியும்.

    இந்தப் பிணிகளையப்பட வேண்டுமானால் அவரவர் சக்திக்கேற்ற பள்ளிகளில், எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் தனது குழந்தைகளைச் சேர்ப்பதே சிறந்த தீர்வாகும். அரசுப்பள்ளிகளின் சிறப்பு, எல்லாப் பள்ளிகளிலும் முறையாகப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களே பணிபுரிகிறார்கள். மறு பயிற்சியும் தற்போது அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பலப்பல ஊக்கப் பரிசுகள் மற்றும் திட்டங்களையும் அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. அரசின் பங்கையும் தாண்டி முன்பு பள்ளிகளில் படித்து தேர்ந்து இப்போது நல்ல நிலையில் உள்ள முன்னாள் மாணவர்கள் சேர்ந்து அரசுப் பள்ளிகளுக்கு உயர்தர வசதிகள் செய்து தந்து அவற்றை “கனவுப் பள்ளி”களாக்கி விட்டார்கள்.

    எனவே, தமக்கு அருகில் உள்ள அரசுப் பள்ளிகளை நோக்கிப் பெற்றோர்கள் சென்று தமது குழந்தைகளைச் சேர்த்தால் அவர்களின் ஆரோக்கியமான கல்விக்கும் தங்களின் மேம்பட்ட சமுதாய வாழ்வுக்கும் அது வழி வகுக்கும் என நம்புகிறேன். இங்கே உங்களிடமும் அதைப் பகிர்ந்து கொள்கிறேன். நீங்களும் உங்கள் பங்கிற்கு இந்தப் பணியில் ஏதாவது செய்யலாமே?!

    விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, துணைத்தலைவர், தமிழ்நாடு அறிவியல் தொழிற்நுட்ப மையம்.
    உங்கள் குழந்தையை அவர்களுக்குத் தேவையானவற்றை தேர்ந்து எடுத்துக்கொள்ளவும், தனிப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்தவும் அனுமதியுங்கள். இவ்வாறு செய்வது, அவர்களுடைய விருப்பங்கள் மற்றும் தெரியப்படுத்த விரும்புகிறவற்றை பேசுவதற்கு துணை செய்யும்.
    ‘ஒன்றை நீ முடிவு செய்யகூடாது. ஏனென்றால், உனக்கு வயசு போதாது அல்லது பெரியவர்களுக்கு எல்லாம் தெரியும்’ அன்றாட வாழ்க்கையில் நாம் அடிக்கடி கேட்ககூடிய வார்த்தைகள்தான் இவை. உண்மையைச் சொல்வது என்றால் இவை போன்றவற்றைக் கேட்பது இனிமையான ஒன்றாக இருக்க வாய்ப்பு இல்லை. உதாரணத்துக்கு, உங்கள் குழந்தை தவறு இழைத்தல் என்பது ஒன்றும் மோசமான செயல் அல்ல.

    எந்த ஒரு குழந்தையின் கருத்து அடிக்கடி நிராகரிக்கப்படுகிறதோ அக்குழந்தை ஒருவிதமான பாதுகாப்பு அற்ற சூழலிலே வளரக்கூடும். உண்மையிலேயே, இது சரியான உணர்வைத் தோற்றுவிக்கும். உங்களுக்காக வேறொருவர் எல்லா முடிவுகளையும் மேற்கொள்ளும்போது, வாழ்க்கையிடம் இருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதை உங்களால் எவ்வாறு தெரிந்து கொள்ள முடியும்?

    உங்கள் குழந்தையை அவர்களுக்குத் தேவையானவற்றை தேர்ந்து எடுத்துக்கொள்ளவும், தனிப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்தவும் அனுமதியுங்கள். இவ்வாறு செய்வது, அவர்களுடைய விருப்பங்கள் மற்றும் தெரியப்படுத்த விரும்புகிறவற்றை பேசுவதற்கு துணை செய்யும்.

    மகிழ்ச்சியாக வைக்க மறுத்தல்குழந்தைப் பருவத்தின் இனிமையான நினைவுகள் மிகவும் மதிக்க தகுந்தவையாகும். அவற்றை யாராலும் நம்மிடம் இருந்து ஒருபோதும் எளிதாகப் பிரித்துவிட முடியாது.

    இன்னும் ஒருபடி மேலாக, சின்னசின்ன விடுமுறை காலங்கள் பின்னாளில், பெரிய நிறைவேறுதல்களாக உருமாற்றம் பெறுகின்றன. ஒரு குழந்தை ஆரோக்கியமான சூழலில் வளரும்பட்சத்தில், எண்ணற்ற புதிய அனுபவங்களைப் பெறுகின்றது. இது அவர்கள் விரைவாக வளர்வதைக் காட்டுகின்றது. மகிழ்ச்சி நிறைந்த குழந்தை எளிதாக வாலிபப் பருவத்தினை ஏற்றுக்கொள்வதோடு, புதிய வாழ்க்கையையும் தொடங்குகின்றது.



    உண்மை என்னவென்றால் பெற்றோராக மற்றவர்கள் கூறுவதைவிட எது குழந்தைக்கு நல்லது? எது கெட்டது? என்பது உங்களுக்குத்தான் நன்றாகத் தெரியும். மற்றவர்கள் கூறுகிற அறிவுரையை நீங்கள் கேட்கலாமே தவிர அவற்றைப் பின்பற்ற வேண்டும் என்ற அர்த்தம் இல்லை.

    தனிமைப்படுத்துதல் நமக்கு முக்கியத்துவம் இல்லாமல் தெரிகிற விஷயங்கள், குழந்தைகளுக்கு அதி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகத் தெரியலாம். அனைத்து மக்களுக்கும், குறிப்பாக, மழலைகளுக்குச் சிலராவது, அவர்களிடம் விழாக்காலங்களில் அன்பாக அரவணைப்பாக இருக்க வேண்டும் என்பது தேவையாக உள்ளது.

    உங்கள் குழந்தையின் பிறந்த நாள் விழாவில், பங்கேற்காமல் இருக்க சரியான காரணம் இருந்தாலும், அவ்வாறு நடக்க முயற்சி செய்யாதீர்கள். ஏனென்றால், எதிர்காலத்தில் எவ்வளவு முக்கியமான தருணத்தை இழந்து விட்டீர்கள் என்பதை உணர்ந்து, அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டிய நிலை உண்டாகும்.

    குழந்தைகளுடன் சேர்ந்து விழாக்காலத்தில் வீட்டினை அலங்கரிக்கவும், சினிமாவிற்குப் போகவும், பாட்டியுடன் ஒன்றாக இருக்கவும் நேஇரத்தை ஒதுக்கி கொள்ளுங்கள். ஏனென்றால் வாழ்வில் இவையெல்லாம் முக்கிய மணித்துளிகள். மழலைகள் வளரும்பட்சத்தில், இவற்றை நீங்கள் இழக்க நேரிடும்.

    குழந்தைகளுக்கு கடைகளில் பொருள்கள் வாங்கும்போது கணக்குப் பார்த்து, விலையை விசாரித்து, பிற கடைகளில் ஒப்பிட்டுப்பார்த்து வாங்க வேண்டும் என்பதை நாம் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.
    நாம் நமது குழந்தைகளை மருத்துவராக்க வேண்டும் என்றும், பொறியாளர் ஆக்க வேண்டும் என்றும், கலெக்டர் ஆக்க வேண்டும் என்றும் கடினமாக உழைக்கச் சொல்கிறோம். ஆனால் நாம் நமது பிள்ளைகளுக்கு நிதியைக் கையாள்வது குறித்தும், நிதி மேலாண்மை குறித்தும் இதுவரை சொல்லிக் கொடுத்தது இல்லை. பொருளை ஈட்ட வேண்டும் எனில் நல்லதொரு பணியையோ, தொழிலையோ தேட வேண்டும்.

    நல்ல ஒரு பணியைப் பெறுவதற்கு நமது தகுதியை வளர்க்கும் கல்வி வேண்டும். ஆனால் செல்வம் என்ற ஒன்றை நோக்கித்தான் நாம் அனைவருமே இயங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் உண்மை. இன்றைய இளைஞர்களுக்கும், சிறுவர்களுக்கும் பணத்தின் அருமை தெரிவதில்லை. பணத்தைச் செலவழிக்கும் விதமும் தெரியவில்லை. கடையில் பணம் கொடுத்து பொருள்கள் வாங்கிய பின்னர், தாங்கள் கொடுத்த பணத்தின் மீதம் எவ்வளவு பெறப்பட்டுள்ளது என்பதை எத்தனை நபர்கள் கணக்கிட்டுச் சரிபார்க்கின்றனர்.

    குழந்தைகளுக்கு கடைகளில் பொருள்கள் வாங்கும்போது கணக்குப் பார்த்து, விலையை விசாரித்து, பிற கடைகளில் ஒப்பிட்டுப்பார்த்து வாங்க வேண்டும் என்பதை நாம் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுப்பதில்லை. எந்தவொரு செலவு செய்வதற்கு முன்னும் அந்த செலவு அவசியம்தானா என்பதைப் பகுத்தாய்வதற்கு அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.



    அந்தச் செலவு செய்வதற்குப் பதிலாக அதற்கான பலனை வேறு குறைவான செலவுகளில் பெறுவதற்குண்டான வழிகளைக் கற்றுத் தரவேண்டும். அவர்களுக்குச் சிந்திக்கும் தன்மையையும், மாற்று வழிகளைத் தேர்ந்தெடுக்கும் தன்மையையும் பயிற்றுவிக்க வேண்டும்.

    தேவையற்ற செலவுகளை எந்நாளும் ஊக்கப்படுத்தாதீர்கள். உங்கள் குழந்தைகளுக்கு அன்றாடம் பணத்தைக் கொடுத்து பழக்கப்படுத்துவதை விட, ஒவ்வொரு மாதத் தொடக்கத்திலும் ஒரு குறிப்பிட்ட தொகையை அவர்கள் செலவுக்காக வழங்கினால், அது அவர்களிடையே ஒரு திட்டமிடுதலை ஏற்படுத்தும். மேலும், செய்கின்ற செலவுகளை எழுதி வைக்கச் சொல்லுங்கள், அது மட்டுமல்ல அதனை கடந்த மாதங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கச் சொல்லுங்கள்.

    அதன் மூலம் கூடுதலாகச் செய்த செலவுகளும், அனாவசியமாகச் செய்த செலவுகளும் தெரிய வரும். அதனைத் தவிர்ப்பதற்கு அவர்களுக்கு அது பேருதவியாக இருக்கும். இந்த பழக்கத்தை கடைப்பிடிப்பதன் மூலம் அவர்கள் எதிர்காலத்தில் ஒரு சிறப்பான, திட்டமிட்ட வாழ்க்கை வாழ அது வழி வகுக்கும். 
    நிறைய சம்பாதிக்கும் வழி வகையை கற்றுத்தருவதே சிறந்த கல்வி என்ற எண்ணம் அனைவரின் மனதிலும் உருவாகி விட்டது. ஆனால் அதில் மனிதனின் நல்ல பண்புகளை இழந்து விட வேண்டாம்.
    கல்லூரி வாசலில் காத்திருக்கும் மக்களின் முகங்கள், அலைமோதும் கூட்டங்களைப் பார்க்கையில் இன்றைய சமுதாய நிலை குறித்து ஒரு கவலை எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. நிறைய சம்பாதிக்கும் வழி வகையை கற்றுத்தருவதே சிறந்த கல்வி என்ற எண்ணம் அனைவரின் மனதிலும் உருவாகி விட்டது. ஆனால் அடிப்படையான மனிதத் தன்மையை அது அழித்து விட்டது என்று நாம் உணரவில்லை. லட்சங்களை கொட்டி குவித்து பிள்ளைகளை படிக்க வைத்து வெளிநாடு அனுப்பி விட்டு, அதைப் பற்றிய பெருமை, கர்வம் என்று நடமாடி கடைசியில் முதியோர் இல்லம் போகும் பெற்றோர்கள் ஒன்றை சிந்திக்க வேண்டும். சந்தையில் விலைக்கு வாங்கும் கல்வியும், பட்டங்களும் அடிப்படை மனித நேயத்தை, உறவுகளுக்கு இடையில் உள்ள நெருக்கம், அன்பு இவைகளை அழித்து விடுகிறது.

    உணவு, உடை, உறைவிடம் இவையே வாழ்வின் அடிப்படைத் தேவை. ஆனால் இவைகளால் மட்டும் வாழ்வு பூரணமாகி விடாது. அதற்கு தெளிந்த அறிவு வேண்டும். எது நல்லது, எது கெட்டது என்று பகுத்தறிந்து, அதன் வழி நின்று வாழ்வை செம்மையாக வாழ அறிவு வேண்டும். அதை சிறந்த கல்வியால் மட்டுமே தர முடியும். இன்றைய கல்வி வெளிநாட்டு மோகத்தை, ஆடம்பர வாழ்வின் மோகத்தை, அதிகரித்து மக்களை விட்டு வெகு தூரம் விலகிப்போக வைத்து விடுகிறது.

    சுயதேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் திறமையை, தன் காலில் நிற்கும் தைரியம், தன்னம்பிக்கையைத் தருவதில்லை. வெளிச்சூழ்நிலை ஒருவனின் மனதை மாற்றும்போது, கல்விதான் அவனின் அக ஒளியைப் பிரகாசிக்க வைக்க முடியும். அது சந்தைக் கல்வியாக, பட்டங்கள் விலை கொடுத்து வாங்கக் கூடியதாக இருக்கக் கூடாது.

    உண்மையான கல்வி மனதின் ஆற்றலை வளர்த்து, நேர்பாதையில் சிந்திக்க வைத்து, சமுதாயத்திற்கு ஒரு முன் மாதிரியாகச் செயல்பட வைப்பது. அன்றைய கல்வி இவைகளைக் கற்றுத் தந்தது. அதனால்தான், ஆர்யபட்டர், பாஸ்கராசார்யா, வராஹமிஹிரர், சாணக்கியர் என்று பலரைத் தந்தது. வானவியல், ஆயர்வேதம், மருத்துவ சிகிச்சை முறைகள், ஜோதிடம் என்று பல துறைகளில் பல கண்டுபிடிப்புகள் நிகழ்த்தி இன்றைய அறிவியல் சாதனைகளுக்கு அடிப்படையாக இருந்தார்கள்.

    இன்றைய கல்வி முறை எத்தனை சிந்தனைவாதிகளை உருவாக்குகிறது. இன்று கல்லூரிகளை தேர்ந்தெடுக்கும்போது, இங்கு நிறைய வெளிநாட்டு கம்பெனி வருகிறது. இதில் ஏதானும் ஒன்றில் செலக்ட் ஆகிவிட்டால் வெளிநாடு போய்விடலாம், அங்கேயே கம்பெனி மாறி சிறிது நாளில் அந்த நாட்டிலேயே நிரந்தரமாகத் தங்கி விடலாம் என்று கணக்குப்போடுகிறார்கள்.

    இதில் படித்தால் இவன் நல்ல பண்புகள், குணங்களுடன் வருவான். தான் வாழும் இந்த சமுதாயத்திற்கு தன்னால் முடிந்த பங்களிப்பைத் தருவான். இவனால் மனித சமுதாயத்திற்கு சிறந்த சேவை செய்ய முடியும் என்ற எண்ணத்துடன் அதிகம் பேர் பாடப்பிரிவுகளை, கல்லூரியைத் தேர்ந்தெடுப்பதில்லை. தன் மகன் ஒரு மருத்துவனாக, பொறியியலாளராக வர வேண்டும் என்று லட்சக்கணக்கில் செலவு செய்பவர்கள் அவன் சிறந்த மனிதனாக வர வேண்டும் என்று எத்தனை செலவு செய்கிறார்கள்? பெற்றோர்கள், ஆசிரியர்களை விட்டு வெகுதூரம் மாணவன் போய் விடுகிறான்.

    மிகப்பெரிய இடைவெளி. மனப்பாட எந்திரங்களாகி, மன ஒருமைப்பாடு என்பது இல்லை. சிறந்த கல்வியை உட்கிரகித்துக் கொள்ள மன ஒருமைப்பாடு அவசியம். அது அவனுக்குள் ஒரு பரந்த ஒளி மிகுந்த சாம்ராஜ்ஜியத்தை உருவாக்குகிறது. நல்ல உணர்வுகள் மனதில் விரிய, விரிய அது நமக்குள் வளர்கிறது. மனித சமுதாயத்துடன் நல்லுறவை வளர்க்கிறது. புத்தி, ஞாபகம், உடலின் வன்மை, ஐஸ்வர்யம், வளர மனதை ஒருமுகப்படுத்துங்கள் என்கிறது வேதங்கள்.

    குறுகிய வட்டத்திற்குள் சுற்றாமல் பரந்த, விசாலமான அறிவைத் தருவதே சிறந்த கல்வி. அதைத் தேடுங்கள். ஓடி, ஓடி அறிவைத் தேடுங்கள். ஆனால் அதில் மனிதனின் நல்ல பண்புகளை இழந்து விட வேண்டாம். “உண்மை பேசல், கற்ற கல்வியின் மூலம் சமுதாயத்திற்கு நன்மை செய்தல். நல்ல செயல்களில் இருந்து விலகாதிருத்தல், தீமை விளைவிக்கும் செயல்களைச் செய்யாதிருத்தல், பெற்றோர்கள், உறவுகள், சக மனிதர்களை மதித்தல், நல்ல பண்புகளை வளர்க்கும், பிறர் மதிக்கும் செயல்களைச் செய்தல் ஆகியவையே சிறந்த கல்விக்கு இலக்கணம். அறிந்து கொள், தெரிந்து கொள், ஆழமாகச் சிந்தனை செய், பின் அதன் வழி நில் என்கிறது வேதங்கள். இதையேதான் திருவள்ளுவர், ‘கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக’ என்கிறார். கல்வியை, சிறந்த படிப்பைத் தேர்ந்தெடுக்கும்போது இந்தக் குறளை நினைவில் நிறுத்தலாமே!!

    ஜி.ஏ.பிரபா, எழுத்தாளர்
    ஒவ்வொரு பெற்றோரும் தன் குழந்தை நடக்கும் அழகைக் காண உவகையோடு காத்திருப்பது இயல்பே ஆகும். குழந்தை நடக்க தொடங்கும் போது இந்த வழிமுறைகளை பின்பற்றலாம்.
    ஒவ்வொரு பெற்றோரும் தன் குழந்தை நடக்கும் அழகைக் காண உவகையோடு காத்திருப்பது இயல்பே ஆகும். உங்கள் குழந்தை நடக்கக் கற்றுக் கொண்ட பின் அவனது துள்ளல் நடையும், ஓட்டமும் உங்களை மிகவும் பூரிப்பு அடையச் செய்யும்.

    1. முதல் முயற்சியாக உங்கள் குழந்தையை எந்த ஒரு பிடிமானமும் அல்லது சாய்மானமும் இல்லாமல் உட்காரச் செய்யுங்கள். அப்படிச் செய்வதால் உங்கள் குழந்தையின் முதுகுத் தண்டில் பலம் ஏற்படுவதோடு, குழந்தை நிலையாக இருக்க கற்றுக் கொள்ளும். உடல் சமநிலையைக் குறித்த புரிதல் அவன் மூளையில் மெல்லப் பதியத் தொடங்கும். மேலும் உடம்பில் உள்ள பல தசைகள் பலம் பெற்று,குழந்தை நடப்பதற்கான சாத்தியக் கூறுகள் கூடி வரும்.

    2. உங்கள் குழந்தையின் நடக்கும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் சற்று தூரத்தில் நின்றபடி ஏதாவது பொருட்களை அசைத்துக் காட்டுங்கள். இல்லாவிடில் அவன் மிகவும் விரும்பி நேசிக்கும் பொருளைச் சற்று தெலைவில் அவன் கவனத்தை ஈர்க்கும் விதமாக வைத்து விடுங்கள். அதை அவனுக்கு எடுத்துக் கொடுக்காமல் அவனே வந்து எடுத்தக் கொள்ள ஆர்வத்தைத் தூண்டுங்கள்.’எங்கே இதைப் பிடி!எங்கே அதை எடுத்து வா!’என்பது போன்ற உற்சாகமான வாசகங்களைக் கூறுங்கள். இவ்வாறு செய்யும் போது குழந்தைக்கு அமர்ந்த நிலையிலிருந்து எழுந்து நின்று எதையாவது பிடித்துக் கொண்டபடியே அந்தப் பொருளை நோக்கி நடக்க வேண்டும் என்ற ஆர்வம் பெருகும்.

    3. உங்கள் குழந்தைக்குப் பிடிமானம் கொண்ட பாரம்பரிய நடை வண்டியை வாங்கிக் கொடுங்கள். அதை விடச் சிறந்த நடைப்பயிற்சி சாதனம் உலகில் வேறு இல்லை. அதைப் பிடித்துக் கொண்டு நடக்கும் ஆர்வத்தைக் குழந்தைக்கு ஏற்படச் செய்யுங்கள். இவ்வாறு செய்யும் போது அவனே யாருடைய உதவியும் இன்றி நடக்கத் தொடங்குவான்

    4. உங்கள் குழந்தை நடக்கத் தொடங்கும் போது அவனை வெறும் காலில் நடக்கத் தூண்டுங்கள். காலணிகள் போன்று எதுவும் அணியாமல் நடப்பது நல்லது. பாதங்களை மறைக்கும் காலணிகளை அணிவதால், குழந்தைக்கு தன் பாதங்களின் இயக்க நிலைகளைக் கவனிக்கும் வாய்ப்பு அற்றுப் போகும். குழந்தைகள் கண்களின் வழியே விசயங்களைக் கவனித்து கற்றுக் கொள்கிறார்கள். அதற்கு நாம் தடை விதிக்கக் கூடாது. மேலும் வெறும் கால்களோடு நடக்கும் போது, அவனது பாதங்களுக்கு பூமியோடு நல்ல பிடிமானம் ஏற்படுத்துவதோடு சிறப்பான முறையில் நடை பழகும் சூழல் அதிகரிக்கும். குழந்தையின் பாதங்கள் பூமியில் தொடர்பு கொள்ளும்போது உடலுக்குச் சரியான சமநிலை நூறு சதவீதம் கிட்டும். கூடுதலாகக் குழந்தையின் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். மேலும் உடல் முழுவதும் இருக்கும் தசைகள் வேலை செய்யத் தொடங்கும்.



    5. முழுமையாக உங்கள் குழந்தையின் கைகளைப் பிடித்துக் கொண்டு நடைப் பயிற்சி தராமல், அவன் பின் நின்று கொண்டு தேவைப் படும் போது மட்டுமே அவனுக்கு உதவி செய்யுங்கள். இப்படிச் செய்யும் போது அவன் சமநிலையைப் பெற முயற்சி செய்வான்.நீங்கள் அருகில் இருப்பது அவனுக்கு மிகுந்த நம்பிக்கையை அளிக்கும்.தற்சார்பு நிலைக் குறித்த புரிதல் குழந்தைக்கு மேலோங்கும்.

    6. உங்கள் குழந்தைக்கு நடக்கக் கற்றுக் கொடுக்கும் போது வீட்டில் ஆங்காங்கே இருக்கும் ஆபத்தை விளைவிக்கக்கூடும் பொருட்களை கைகளுக்கு எட்டாத் தூரத்தில் வைப்பது நல்லது. கூர்மையான பொருட்கள், கண்ணாடிப் பொருட்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் போன்றவைகளை உயரமான இடத்தில் மாற்றி வைக்கலாம். பெற்றோர்கள் இந்த விசயத்தில் எச்சரிக்கையோடு இருப்பது பெரிய ஆபத்துக்களை ஏற்படுத்தாமல் தவிர்க்கும்.

    7. பாதுகாப்பான மற்றும் உங்கள் குழந்தைக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத செல்லப் பிராணிகளை வீட்டில் வளர்ப்பதாலும் உங்கள் குழந்தை வேகமாக நடக்கத் தொடங்குவான். குழந்தைகள் பொதுவாகவே நாய்க் குட்டி, ஆடு, கோழி போன்ற செல்லப் பிராணிகளிடம் அன்போடு பழகுவார்கள். நீங்கள் வீட்டில் எதையாவது ஒன்றை வளர்க்க முனையும் போது குழந்தை அதோடு ஆர்வத்தோடு பழகத் தொடங்கி, பின் விளையாடத் தொடங்குவான். இதனால் அவன் வேகமாகவும் நடக்கத் தொடங்குவான்

    8. இது மிகவும் முக்கியமான ஒன்று. உங்கள் குழந்தையின் எலும்புகள் மெல்லியதாகவும் பலம் குறைந்தும் இருக்கும். அவன் திடமாக நடக்க அதிக சக்தி தேவை. இதனால் நீங்கள் உங்கள் குழந்தைக்குப் போதிய சத்தான உணவைத் தர வேண்டும். அப்படி செய்வதால் அவன் அதிக சக்தி மற்றும் பலம் பெற்று சுறுசுறுப்பாகவும் திடமாகவும் அதிக நேரம் சோர்வடையாமலும் நடப்பான். ஒரு சில குழந்தைகள் நடைபழக தாமதம் ஏற்பட இதுவே மிக முக்கியமான காரணமாகக் கருதப்படுகிறது.

    பெற்றோர்கள் குழந்தைகளின் ஊட்டச்சத்து விசயத்தில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.
    குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கம் மிகவும் இயல்பானதுதான். ஆனால், அதை அப்படியே விட்டு விட முடியாது. குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கத்தை நிறுத்த இந்த வழிகளை பின்பற்றுங்கள்.
    கட்டை விரல், ஆள்காட்டி விரல் அல்லது மற்ற விரல்கள் இப்படி ஏதேனும் ஒரு விரலைக் குழந்தைகள் வாயில் வைத்து சூப்பத் (thumb sucking or Finger sucking) தொடங்குகின்றனர். குழந்தைகள் இப்படி செய்வதைப் பார்க்க ஆரம்பத்தில் அழகாக இருக்கும். ஆனால், பிறகு அதே பழக்கம் தொடர்ந்தால் குழந்தை வளர்ந்த பிறகு மிகவும் சிரமமாக தெரியும்.

    சூழலை எதிர்நோக்குவதற்கு குழந்தைகள் தடுமாறும். குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கம் மிகவும் இயல்பானதுதான். ஆனால், அதை அப்படியே விட்டு விட முடியாது. 7 மாதத்திற்கும் பிறகும் கை சூப்பும் பழக்கத்தை நிறுத்தாவிட்டால், மேல் தாடையின் பற்கள் வெளியே நோக்கி வளரும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் குழந்தைகளின் முக அழகையே கெடுக்கும் வாய்ப்பு உள்ளது. ஆகவே 8-10 மாதங்களுக்குள் குழந்தைகள் கை சூப்பும் பழக்கத்தை விடும்படி செய்ய வேண்டும்.

    குழந்தைகள் கை சூப்ப சில காரணங்கள்

    குழந்தைகள் விரல் சூப்புவது சாதாரணமான ஒரு நிகழ்வுதான். குழந்தைகள் பிறந்தவுடன் தாய்ப்பால் கொடுக்க மார்பகங்களை சூப்பிதான் பால் அருந்துகின்றனர். இது அவர்களின் இயற்கையான செயல்பாடு. இப்படி கை சூப்பும் பழக்கத்தால் குழந்தைகளுக்கு உணவு கிடைப்பதாகவும், பாதுகாப்பாக உணர்வதாகவும், சௌகர்யமான ஒரு சூழல் இருப்பதாகவும் குழந்தைகள் நினைத்துக் கொள்கின்றனர்.

    சோர்வாக இருக்கும்போது
    பசி உணர்வு வந்தவுடன்
    போர் அடிக்கும் சூழலில் இருந்தால்
    யாரும் கவனிக்காத சூழலில் இருந்தால்
    உடல்நலம் சரியில்லை என்றாலோ
    மகிழ்ச்சியான மனநிலை இல்லை என்றாலோ
    சில குழந்தைகளுக்கு விரல் சூப்புவது ஸ்ட்ரெஸ் பஸ்டர் போல உணரலாம்.

    இது போன்ற பல்வேறு காரணங்களால் குழந்தைகள் விரல் சூப்பத் தொடங்குகின்றனர்.

    விரல் சூப்பும் பழக்கத்தை நிறுத்த வழிகள்

    * எதனால் உங்கள் கை சூப்பும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்கிறது எனக் கவனியுங்கள்.

    * பசி, போரடிக்கும் உணர்வு, கவனிக்காமல் இருப்பதாலா, சரியான நேரத்துக்கு தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பதாலா, தூக்கம் வருகிறதா எனக் கவனியுங்கள். பிரச்னை எது எனக் கண்டறிந்தாலே சரி செய்து விடலாம்.



    * போரடிக்கும் உணர்வாலோ கவனிப்பு இல்லாத சூழலால் கை சூப்பும் பழக்கத்தை மேற்கொண்டால், விரல்கள் மூலம் செய்யும் விளையாட்டுகளைக் குழந்தைக்கு நீங்கள் சொல்லிக் கொடுத்து கை சூப்பும் பழக்கத்தை மறக்க வைக்கலாம்.

    * கை சூப்புவதை நீங்கள் பார்த்தால், மெதுவாக மென்மையாக கை சூப்ப கூடாது எனச் சொல்லுங்கள். சத்தம் போடவோ மிரட்டுவதோ அடிப்பதோ கூடாது.

    * கை சூப்பும் நேரத்தில் குழந்தையின் கவனத்தைத் திருப்ப விளையாடுவது, வேடிக்கை காண்பிப்பது, பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும்.

    * தனியாக, பாதுகாப்பில்லாத உணர்வைப் போக்கி விட்டாலே குழந்தைக்கு கை சூப்பத் தோன்றாது.

    * கொஞ்சம் அதிகமாக விரல் சூப்பும் பழக்கம் கொண்ட குழந்தைகளை அடித்து மிரட்ட கூடாது. வீட்டில் மட்டும் கை சூப்ப அனுமதித்து, வெளி இடங்களில் கை சூப்பத் தவிர்ப்பதை அறிவுரையாக சொல்ல வேண்டும்.

    * விரல் சூப்புவதை குழந்தைகள் நிறுத்திவிட்டால் அவர்கள் கேட்கும் பொருளை வாங்கித் தருவதாக சொல்லி அதையும் நிறைவேற்ற வேண்டும்.

    * விரல் சூப்பும் குழந்தைகளின் வாயில் அடிப்பது, கேலி செய்வது, மற்றவர்களிடம் சொல்லி காண்பிப்பது இப்படியான செயல்களைத் தவிருங்கள்.

    * குழந்தைகள் வாயில் விரல் வைத்தால்… ‘வாயில் விரல் வைத்திருக்கிறாய்’ என ஞாபகப்படுத்தி விரலை எடுக்க சொல்ல வேண்டும்.

    * எந்தக் காரணத்துக்காகவும் குழந்தைகளின் கையில் நாற்றமடிக்கும் மருந்துகளையோ எண்ணெய்களையோ பூசவே கூடாது.

    * குழந்தைக்குப் பொறுமையாக, மென்மையாக, அன்பாக எடுத்து சொல்லி புரிய வைக்க வேண்டும். வாயில் கை வைக்க கூடாது. கிருமிகள் உள்ளே சென்று உடலைப் பாதிக்கும். மற்றவர்கள் கேலி செய்ய கூடும் என நிதானமாக எடுத்துச் சொல்லுங்கள்.

    * எவ்வளவு அன்பாக சொல்லியும் குழந்தைகள் கை சூப்ப நிறுத்தவில்லை என்றால் குழந்தைகள் நல மருந்துவரிடம் அழைத்து சென்று ஆலோசனை பெறுவது நல்லது. 
    குழந்தைகளுக்கு 6 மாதம் வரை தண்ணீர் கொடுக்கலாமா? வேண்டாமா? என்ற சந்தேகமும் பரவலாகக் காணப்படுகிறது. இதற்கான விளக்கங்களை அளிக்கும் பதிவுதான் இது.
    குழந்தைகளுக்கு 6 மாதம் வரை தண்ணீர் கொடுக்கலாமா? வேண்டாமா? என்ற சந்தேகமும் பரவலாகக் காணப்படுகிறது. இதற்கான விளக்கங்களை அளிக்கும் பதிவுதான் இது.

    தாய்ப்பாலிலே 85% நீர்ச்சத்து இருப்பதால், தனியாகக் குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. 6 மாத குழந்தைக்கு மினரல் வாட்டர், நிலத்தடி நீர் - குடிநீர் போன்ற எதுவும் தேவையில்லை.

    6 மாதம் முடியாத குழந்தைகளுக்கு, தண்ணீர் கொடுத்தால், தாய்ப்பாலில் உள்ள ஊட்டச்சத்துகளும் ஃபார்முலா மில்கில் உள்ள ஊட்டச்சத்துகளும் உறிஞ்சப்படும். உடலில் ஊட்டச்சத்துகள் சேராமல் தடுக்கப்படும். வயிறு விரைவில் நிறைந்துவிடும். இந்த உணர்வால் குழந்தைகள் தாய்ப்பாலை சரியாகக் குடிக்க மாட்டார்கள்.

    உடலில் உள்ள சோடியத்தை அதிக தண்ணீர் கரைத்து விடலாம். உடலில் எலக்ட்ரோலைட் சீரற்ற அளவில் இல்லாமல் போகலாம். திசுக்கள் வீக்கமடையும் பிரச்சனைகளும் வரலாம்.

    குழந்தையின் சிறுநீரகங்கள் அந்தளவுக்கு வளர்ச்சி பெற்றிருக்காது. அதிகபடியானத் தண்ணீர் குழந்தையின் முகத்தை வீக்கமடைய செய்யும். கண்களை சுற்றி பஃபினெஸ் பிரச்னை வரலாம்.

    வெப்ப காலமாக இருந்தாலும், பனிக்காலமாக இருந்தாலும் குழந்தைக்கு 6 மாதம் வரை தண்ணீர் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தாய்ப்பாலிலே நீர்ச்சத்துகளே போதும். அதுவே தண்ணீர் தாகத்தை தணிக்கும்.

    ஃபார்முலா மில்க் குடிக்கும் குழந்தையாக இருந்தாலும், 6 மாதம் வரை தண்ணீர் தனியாகக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. சில குழந்தைகள் அதிகமாகத் தண்ணீர் குடித்தால், வாட்டர் இன்டாக்ஸிஃபிகேஷன் (Water intoxification) எனும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

    6 மாதம் ஆன குழந்தைக்கு, தண்ணீர் கொடுக்கலாம். குழந்தைக்கு தண்ணீர் தேவைப்படும் போதெல்லாம் தண்ணீர் கொடுப்பது நல்லது.6-12 மாதங்கள் வரை, குழந்தை கேட்கும் போதெல்லாம் தண்ணீர் கொடுக்கலாம்.

    ஒரு வயது ஆன பிறகு, தண்ணீர் நன்றாகவே குடிக்க வைக்கலாம். குழந்தையை தண்ணீர் குடிக்க சொல்லி நீங்களும் நினைவுப்படுத்தலாம். குழந்தையின் 3 வயது வரை, வெந்நீரை கொதிக்க வைத்து ஆற வைத்துக் கொடுப்பது நல்லது. அதன் பிறகு பெரியவர்கள் குடிக்கும் தண்ணீரே குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.
    குழந்தைகளுக்கு பாதுகாப்பான பொம்மைகளை வாங்கி தருவது முக்கியம். எது பாதுகாப்பானது? எதை வாங்கி தரலாம் என இங்கு பார்க்கலாம்.
    குழந்தைகளுக்கு பாதுகாப்பான பொம்மைகளை வாங்கி தருவது முக்கியம். குழந்தைகளின் வாழ்வில் சில காலத்துக்கு நாயகர்களாக இருப்பது அவர்களின் பொம்மைகள்தான். வயதுக்கு ஏற்ற படி நிறைய பொம்மைகள் கிடைக்கின்றன. எது பாதுகாப்பானது? எதை வாங்கி தரலாம் என இங்கு பார்க்கலாம்.

    முதல் ஆறு மாதம் வரை குழந்தைகள் தங்களிடம் நெருங்கும் நபர்களைத்தான் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.அவர்களின் கண்களைத்தான் அதிகமாக குழந்தைகள் பார்ப்பார்கள். முகம், கண், கைகள் அசைவு, பளிச் நிற உடைகள் ஆகியவற்றை பார்ப்பார்கள்.

    கைகளில் பிடித்துக்கொள்ள ஏற்றதாக இருப்பதை, குழந்தைகள் வாயில் வைத்து சப்புவார்கள் என்பதால் பெரிய பொம்மைகளாக வாங்கி கொடுக்கலாம். சத்தம் வரக்கூடிய பொம்மைகளை வாங்கி தரலாம். பெரிய ரிங், ராட்டில்ஸ், ஸ்குவீஸ் டாய்ஸ், டீத்திங் டாய்ஸ், சாஃப்ட் டால்ஸ், டெக்ஸ்சர் பால்ஸ், வினைல், போர்ட் புக்ஸ் போன்றவை வாங்கி கொடுக்கலாம்.

    ரைம்ஸ் உள்ள சிடி போடுவது, சின்ன சின்ன மியூசிக் சிடி, தூங்க வைக்கின்ற தாலாட்டு பாடல்கள் போன்றவை வாங்கி ஒலிக்க செய்யலாம். சிறிய பொருட்களை வாங்கி தர கூடாது. வாயில் வைத்து விழுங்கும் அபாயம் உள்ளது.

    1 வயது வரை குழந்தைகள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு நகர கூடியவர்கள். உட்காருவது, புரள்வது, தவழ்வது, நிற்பது, நடப்பது, கத்துவது, அழுவது, இழுப்பது போன்றவற்றை செய்வார்கள்.

    தண்ணீர் டாய்ஸ், சக்கரம் உள்ள மரக்கட்டை பொம்மைகள், பிளாஸ்டிக் பொம்மைகள், பப்பட்ஸ், பெரிய பந்து, பெரிய சாஃப்ட் பிளாக்ஸ், கட்டையால் ஆன சதுரங்கள், தவழ்ந்து வரும் பொம்மைகள், எடை இல்லாத பொம்மைகள் வாங்கி கொடுக்கலாம்.

    முன்பு பயன்படுத்திய மரத்தால் தயாரித்த நடை வண்டி வாங்கி கொடுக்கலாம். வாக்கர் தவிர்க்கவும்.
    குழந்தைகளை சட்டப்படி தத்தெடுப்பதே பாதுகாப்பானது. குழந்தைகளை தத்தெடுப்பது எப்படி? அதற்கான நடைமுறைகள் என்னென்ன? என்பது பற்றி இப்போது பார்ப்போம்.
    குழந்தை தத்தெடுப்புக்காக தமிழகத்தில் 21 மையங்கள் செயல்பட்டு வருகின்றன. குழந்தை தத்தெடுப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது என்ற குற்றச்சாட்டு உண்டு. அதற்குக் காரணம் பதிவு செய்திருக்கும் அளவிற்கு குழந்தைகள் இல்லாததே. முன்எப்போதும் இல்லாத அளவுக்கு பெரும் பிரச்சினையாக ‘குழந்தைப் பேறின்மை’ உருவெடுத்து நிற்கிறது.

    நகரங்கள்தோறும் பெருகியிருக்கும் கருத்தரிப்பு மையங்கள், அதில் குவியும் இளைஞர்கள், நடுத்தர வயதினர் என சொல்லிக்கொண்டே செல்லலாம். அவற்றில், நேரத்தையும் பணத்தையும் செலவிட விரும்பாத சிலர், காப்பகங்களில் இருக்கும் ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க விரும்புகின்றனர். ஆனால், அதன் நடைமுறைகளை அறியாமல், இடைத்தரகர்கள், நண்பர்கள் காட்டும் குறுக்கு வழிகளில் சென்று சட்டத்துக்குப் புறம்பாக குழந்தைகளை வாங்குகிறார்கள். இதனால் குழந்தை கடத்தல் மற்றும் விற்பனை போன்ற குற்றவியல் நடவடிக்கைகள் பெருகியுள்ளன.

    குழந்தைகளை சட்டப்படி தத்தெடுப்பதே முறையானது. பாதுகாப்பானது. குழந்தைகளை தத்தெடுப்பது எப்படி? அதற்கான நடைமுறைகள் என்னென்ன? என்பது பற்றி இப்போது பார்ப்போம்.

    சமூகத்தில் ஆதரவற்ற, பராமரிப்பின்றி கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு குடும்பப் பாதுகாப்பை அமைத்துத்தருவதே தத்தெடுத்தலின் நோக்கம். இதற்காகவே மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ‘மத்திய தத்துவள ஆதார மையம்’ செயல்படுகிறது.

    சுருக்கமாக இதை ‘கர’ என்று அழைக்கிறார்கள். இதுபோக அனைத்து மாநிலங்களிலும் ‘மாநில தத்துவள ஆதார மையம்’ இருக்கின்றன. தமிழகத்தில், சமூக நலத்துறை ஆணையர் தலைமையில் ‘தத்துவள மையம்’ செயல்படுகின்றது.

    தத்தெடுக்க விரும்பும் பெற்றோர் குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் திருமண பந்தத்தில் உள்ளவராக இருக்க வேண்டும். 4 வயதுடைய குழந்தையை தத்தெடுக்க, அந்த தம்பதியின் கூட்டு வயது அதிகபட்சமாக 90-ஆக இருத்தல் அவசியம். இதில் தனிநபர் வயது 25-க்கு குறையாமலும் 50-க்கு மிகாமலும் இருக்கவேண்டும். 4 முதல் 8 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை தத்தெடுக்க, தம்பதியின் கூட்டு வயது 100-க்குள் இருக்கவேண்டும். இதில் தனிநபர் வயது 25-க்குக் குறையாமலும் 55-க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.

    தத்தெடுப்பவர் தனிநபராக இருக்கும் பட்சத்தில் தாய் அல்லது தந்தையின் வயது 30-க்கு குறையாமலும் 50-க்கு மிகாமலும் இருக்க வேண்டும். இதுபோன்ற பல்வேறு நிபந்தனைகளும் உள்ளன. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு குழந்தைகளை தத்தெடுப்பதே சிறந்த வழி. இடைத்தரகர்கள் மூலம் குழந்தைகளை தத்தெடுக்கும் போது, பல்வேறு சட்ட சிக்கல்களும் வரும். குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படலாம். பாசமாக வளர்த்த குழந்தைகளும் கைவிட்டு போகக்கூடிய சூழலும் வரலாம் என்பதால் இதில் மிகவும் கவனம் தேவை.
    தூக்கம் வரும் முன் குழந்தைகளின் செயல்களை அறிந்து கொள்ளுங்கள். இந்த அறிகுறிகள் தென்பாட்டாலே குழந்தைக்கு தூக்கம் வந்துவிட்டது என அர்த்தம்.
    குழந்தைகளை தூங்க வைப்பது பெரும் கஷ்டம் என இப்போதைய பெற்றோர் சொல்கின்றனர். தூக்கம் வரும் முன் குழந்தைகளின் செயல்களை அறிந்து கொள்ளுங்கள். இந்த அறிகுறிகள் தென்பாட்டாலே குழந்தைக்கு தூக்கம் வந்துவிட்டது என அர்த்தம்.

    குழந்தையின் தூக்க நேரத்தை முதலில் கவனியுங்கள். அந்த தூக்க நேரத்தில் அதிகமாக குழந்தைக்கு விளையாட்டு காட்ட கூடாது. குழந்தையை தூங்க வைக்கும் முயற்சியில் தான் இருக்க வேண்டும். தூங்கும் நேரத்தில் குழந்தைக்கு விளையாட்டு காட்டினால் குழந்தைகள் தூங்காமல் சுறுசுறுப்பாகி விடுகின்றனர். பின்னர் தூக்கம் கலைந்துவிடும். தூங்கும் நேரத்திலும் அதற்கும் முன்னும் குழந்தையிடம் விளையாட கூடாது.

    சிறு குழந்தைகள் நன்கு பால் குடித்தால் தூக்கம் வந்துவிடும். சில குழந்தைகள் பால் குடிக்கும்போதே தூங்கிவிடும். பால் குடித்து கொண்டே தூங்கிவிடும் குழந்தையை லேசாக கால் கட்டைவிரலை ஆட்டிவிட்டாலோ சுண்டிவிட்டாலோ குழந்தை மீண்டும் பால் குடிக்கும். பால், குழந்தைக்கு போதுமானதா எனத் தாய் கண்டறிந்த பின் குழந்தையை தூங்க விடலாம். சரியாக பால் குடிக்காத குழந்தைகள் பின் சீக்கிரமே பசிக்காக அழத் தொடங்கிவிடும்.

    * இரவில் வயிறு நிறைய பால் கொடுப்பது நல்லது. இதனால் குழந்தைகள் நன்கு தூங்கும்.

    * தாய்ப்பால் கொடுப்பவர்கள், புட்டிப்பால் தருபவர்கள் லைட்டை அணைத்து விட்டு இருளில் பால் கொடுக்கலாம். அல்லது குறைந்த வெளிச்சம் உள்ள லைட்களைப் பொருத்திய ரூமில் பால் தரலாம்.

    * வெளிச்சம் அதிகமாக உள்ள இடத்தில் குழந்தையை தூங்க வைக்க கூடாது.

    * குழந்தைகளின் தூங்கும் இடத்தை அடிக்கடி மாற்றகூடாது. ஒரே இடத்தில் தூங்க வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

    * லேசாக குழந்தையை ஆட்டி தாலாட்டு பாடலாம்.

    * சத்தம் போட்டு கொஞ்சினால், குழந்தையின் தூக்கம் களையும்.

    * மெதுவாக குழந்தையை வருடிவிட்டாலும் குழந்தை தூங்கும்.

    * குழந்தையை தூங்க வைக்க முதுகில் லேசாக தட்டி கொடுக்கலாம்.

    * ஈரத்துணி, ஈர நாப்கினை மாற்றி உலர்ந்த துணி, நாப்கின்னை அணிந்து தூங்க வைத்தால் குழந்தை உடனே தூங்கும்.
    குழந்தைகளுக்கு சரும பிரச்னைகள் எதுவும் வராமல் இருக்க குழந்தையின் துணியை சுத்தமாக பராமரிக்க வேண்டியதும் முக்கியம். அதைப் பற்றி இங்கு பார்க்கலாம்.
    குழந்தையின் சருமத்தில் நேரடியாக படும் துணியை மிக கவனத்துடன் பராமரிக்க வேண்டும். கிருமிகள் இல்லாத துணியாக இருப்பின், குழந்தைக்கு கிருமி தாக்குதல், சரும பிரச்னைகள் போன்றவை பெரிதும் தாக்காமல் தடுக்கலாம்.

    புதிய ஆடைகளை குழந்தைக்கு அணிவிப்பதற்கு முன் கட்டாயம் துவைத்துவிட்டு குழந்தைகளுக்கு அணிவிப்பதுதான் சரி. துவைக்காத புத்தம் புதிய ஆடையோ துவைக்காத ஆடையோ குழந்தைக்கு அணிவித்தால் பிரச்னை ஆரம்பிக்கும். சரும பிரச்னைகள் வரலாம். துணியில் உள்ள தூசு, ஸ்டார்ச், கெமிக்கல்கள், துணியை தயாரிக்க பயன்படுத்தும் நிறங்கள் ஆகியவற்றால் பாதிப்பு வரும்.

    குழந்தை துணிகளுக்கு என பிரத்யேக டிடர்ஜென்ட் பவுடர்கள் எதுவும் தேவையில்லை. குடும்பத்தில் அனைவருக்கும் பயன்படுத்த கூடிய அதே டிடர்ஜென்ட் பயன்படுத்தினாலே போதும்.

    குழந்தைகளின் துணியில் நீங்காத கறை படிந்துவிட்டால், அதை துவைப்பதற்கு முன் அந்த கறையை நீக்கி விட்டு குழந்தையின் துணியை துவைப்பது நல்லது. இதனால் துணியும் புதிதாகவே இருக்கும்.

    குழந்தையின் துணிகளை துவைக்கும்போது மற்றவர்களின் துணியுடன் சேர்த்து ஊறவைத்து துவைக்க கூடாது. அதுபோல் மெஷினில் மற்றவர்களது துணியுடன் குழந்தைகளுடைய துணியையும் போட வேண்டாம்.

    பெரியவர்களது துணியில் உள்ள கிருமிகள், குழந்தைகளின் துணியில் பரவும் என்பதால் குழந்தைகளின் துணியை தனியாக துவைப்பதே சரி.

    1 - 2 துளிகள் கிருமி நீக்கும் திரவங்களை துவைக்கையில் பயன்படுத்தலாம்.



    குழந்தையின் துணியை கட்டாயமாக வெயிலில் காயவைத்து உலர்த்த வேண்டும். வீட்டுக்குள்ளே குழந்தையின் உலர்த்த கூடாது. இதனால் கிருமிகள் நீங்காது.

    சூரிய வெளிச்சம் மற்றும் சுத்தமான காற்றும் குழந்தைகளின் துணியில் பட வேண்டும் என்பதால் வெயில் வரும் இடங்களில் துணியை உலர்த்த வேண்டியது அவசியம்.

    குழந்தையின் துணியை துவைப்பதற்கு முன் இளஞ்சூடான தண்ணீரில் துணிகளை ஊறவைக்க வேண்டியது அவசியம். இதனால் தூசு, கிருமிகள் ஆகியவை எளிதில் நீங்க உதவும்.

    தனியாக துவைத்த குழந்தைகளின் துணிகளை சுத்தமான இடத்தில் வைக்க வேண்டியதும் முக்கியம்.

    மழை காலத்தில் குழந்தையின் துணியை சுத்தமாக பராமரிக்க, கிருமிகளை நீக்க அயன் செய்வது சிறந்த வழி.

    முடிந்தவரை குழந்தைக்கு பருத்தி துணியால் தயாரிக்கப்பட்ட உடைகளை மட்டுமே அணிவிப்பது நல்லது.

    குழந்தையின் துணியை துவைத்து முடித்த பின் இறுதியாக கிருமி நீக்கும் திரவங்களை தெளித்த நீரில் அலசுவது நல்லது.
    ×