என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 95440"

    வயதான வீரர்களை கொண்ட அணி என்று அழைக்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களை மாற்றியமைப்பது அவசியம் என பிளெமிங் தெரிவித்துள்ளார்.
    ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த ஆண்டோடு 12 சீசன் வெற்றிகரமாக முடிந்துள்ளது. 10 வருடங்கள் முடிந்து கடந்த வருடம் 11-வது சீசனின்போது வீரர்கள் அனைவரும் பொது ஏலம் மூலம் எடுக்கப்பட்டனர். நான்கு வீரர்களைத் தவிர மற்ற வீரர்கள் அனைவரையும் 8 அணிகள் ஏலம் மூலமே எடுத்தது.

    டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெரும்பாலும் அனுபவ வீரர்களை தேர்வு செய்தது. இதனால் ‘Daddy Army’ என்றும் ‘Ageing Squad’ என்றும் அழைத்தனர். ஆனால் இதைப்பற்றி கவலைப்படாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடரை சந்தித்தது.

    கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இந்த சீசனில் இறுதிப் போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்து சாம்பியன் பட்டத்தை தழுவவிட்டது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சராசரியே 34 ரன்கள்தான். இதனால் அணியில் மாற்றம் செய்யப்பட வேண்டியது அவசியம் என தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து ஸ்டீபன் பிளெமிங் கூறுகையில் ‘‘இறுதிப் போட்டி தோல்வி குறித்த காயம் குறைய சற்று நேரம் கொடுக்க வேண்டும். நாங்கள் ஒருமுறை வெற்றி பெற்றுள்ளோம். 2-வது முறை இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ளோம். இரண்டு வருடங்கள் சிறப்பாக அமைந்துள்ளது. சிஎஸ்கே ஒரு ‘Ageing Team’ என்பதை நாஙகள் புரிந்துகொள்ள வேண்டும்.

    மீண்டும் சிறந்த அணியை உருவாக்க வேண்டும் என்பதை பற்றி சிந்திக்க வேண்டும். டோனியும் இதே எண்ணத்தில் உள்ளார். டோனி உலகக்கோப்பை தொடரில் விளையாட செல்கிறார். உலகக்கோப்பை தொடர் முடிந்த பின்னர் அடுத்த சீசன் குறித்து திட்டமிடப்படும்’’ என்றார்.
    பிரபலமான கிரிக்இன்போ இணையதளம் வெளியிட்டுள்ள ஐபிஎல் 2019 சீசன் கனவு அணிக்கு எம்எஸ் டோனி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    12-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றது. அந்த அணி பரபரப்பான இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்சை 1 ரன்னில் தோற்கடித்து 4-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது.

    இந்த ஐபிஎல் போட்டியையொட்டி கிரிக்கெட் இணைய தளமான ‘கிரிக்இன்போ’ கனவு அணியை வெளியிட்டுள்ளது. இந்த அணிக்கு டோனி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். வீரர்கள் வருமாறு:-

    வார்னர் (ஐதராபாத்), தவான் (டெல்லி), லோகேஷ் ராகுல் (பஞ்சாப்), ரி‌ஷப் பந்த் (டெல்லி), எம்எஸ் டோனி (கேப்டன்- சென்னை), ரஸல் (கொல்கத்தா), ஹர்த்திக் பாண்டியா (மும்பை), ஷ்ரேயாஸ் கோபால் (ராஜஸ்தான்), ரபாடா (டெல்லி), பும்ரா (மும்பை), இம்ரான் தாஹிர் (சென்னை).
    மும்பை அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் காலில் ஏற்பட்ட ரத்த காயத்துடன் வாட்சன் விளையாடியதற்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
    ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1 ரன்னில் மும்பையிடம் தோற்று கோப்பையை இழந்தது.

    சென்னை அணி தோற்றாலும் வாட்சன் கடைசி வரை தனி ஒருவராக போராடி சி.எஸ்.கே. ரசிகர்களின் பாராட்டை பெற்றார். அவர் 59 பந்தில் 80 ரன் எடுத்தார். இதில் 8 பவுண்டரியும், 4 சிக்சர்களும் அடங்கும். சமூக வலைதளங்களில் அவரது ஆட்டத்தை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி இருந்தனர்.

    இந்த நிலையில் காலில் ஏற்பட்ட ரத்த காயத்துடன் வாட்சன் விளையாடியது தெரிய வந்தது. இதை வாட்சன் இன்ஸ்டாகிராமில் தெரிவித்து புகைப்படத்தையும் வெளியிட்டு உள்ளார்.


    அதில் வாட்சனின் கால் பகுதியில் மிகப்பெரிய அளவிலான ரத்தக்கசிவு இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக ஹர்பஜன் கூறியதாவது:-

    வாட்சன் ரன் எடுக்க ஓடும் போது டைவ் அடித்ததில் அவரது காலில் காயம் ஏற்பட்டது. இதை யாரிடமும் தெரிவிக்காமல் கடைசி வரை ஆடினார். போட்டிக்கு பிறகு காலில் ஏற்பட்ட காயத்துக்கு 6 தையல் போடப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தற்போது இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. இதைத் தொடர்ந்து சி.எஸ்.கே. ரசிகர்கள் வாட்சனை மீண்டும் ஒருமுறை பாராட்டி உள்ளனர். வாட்சனின் அர்ப்பணிப்பு நமக்கு கிடைத்த மகுடம் என்று சொல்லி சூப்பர் கிங் அணியும் பாராட்டி உள்ளது.
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்து வரும் கேப்டன் டோனி, ஐ.பி.எல். போட்டியின் விக்கெட் கீப்பிங்கில் புதிய சாதனை படைத்துள்ளார்.
    12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் ஐதராபாத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 1 ரன் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி ‘திரில்’ வெற்றியை ருசித்தது.

    முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. பொல்லார்ட் (நாட்-அவுட்) 41 ரன்னும், தொடக்க ஆட்டக்காரர் குயின்டான் டி காக் 29 ரன்னும், இஷான் கிஷன் 23 ரன்னும், கேப்டன் ரோகித் சர்மா 15 ரன்னும் எடுத்தனர். சென்னை அணி தரப்பில் தீபக் சாஹர் 3 விக்கெட்டும், ஷர்துல் தாகூர், இம்ரான் தாஹிர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்து வரும் கேப்டன் டோனி, ஐ.பி.எல். போட்டியின் விக்கெட் கீப்பிங்கில் புதிய சாதனை படைத்துள்ளார்.

    இறுதிப்போட்டியில் மும்பை அணி வீரர்கள் குயின்டான் டி காக், ரோகித் சர்மா ஆகியோரின் விக்கெட்டுகளை டோனி தனது கேட்ச் மூலம் ஆட்டம் இழக்க வைத்தார். 190 ஐ.பி.எல். ஆட்டங்களில் விளையாடி இருக்கும் டோனி இதுவரை 132 விக்கெட்டுகளை (94 கேட்ச், 38 ஸ்டம்பிங்) வீழ்த்த காரணமாக இருந்துள்ளார்.

    இதற்கு முன்பு கொல்கத்தா அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான தினேஷ் கார்த்திக் 182 ஆட்டங்களில் 131 விக்கெட்டுகள் (101 கேட்ச், 30 ஸ்டம்பிங்) விழ காரணமாக இருந்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை டோனி தகர்த்துள்ளார்.





    மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றதைபோல், உலகக்கோப்பையிலும் சிறப்பாக விளையாடி கோப்பையை கைப்பற்ற விரும்புகிறேன் என ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
    ஐபிஎல் தொடர் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. அந்த அணியில் இடம்பிடித்துள்ள இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    ஹெலிகாப்டர் ஷாட் மூலம் ரசிகர்களை மகிழ்வித்தார். 11 விக்கெட்டுக்கள் வீழ்த்தியதுடன், 402 ரன்கள் குவித்தார். ஸ்டிரைக் ரேட் 191 ஆகும்.

    ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதுபோல், உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே விருப்பம் எனத் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து ஹர்திக் பாண்டியா கூறுகையில் ‘‘இந்த ஐபிஎல் சீசனில் நான் சிறப்பாக விளையாடினேன். ஆனால், தற்போது இதில் இருந்து நகர்ந்து செல்ல வேண்டும். ஐபிஎல் கோப்பையை வென்று முத்தமிட்டதுபோல், உலகக்கோப்பையையும் வென்று முத்தமிட விரும்புகிறேன்’’ என்றார்.
    ஐபிஎல் கோப்பையை ஐந்து முறை கைப்பற்றிய ஒரே வீரர் என்ற பெருமையை மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா பெற்றுள்ளார்.
    ஐபிஎல் 2019 சீசன் இறுதிப் போட்டி நேற்றிரவு ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் ஹிட்மேன் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் - தல எம்எஸ் டோனியின் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் பலப்பரீட்சை நடத்தின.

    இதில் ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்று கோப்பை 4-வது முறையாக கைப்பற்றியது. இந்த நான்கு முறையும் மும்பை இந்தியன்ஸ்  கேப்டனாக ஹிட்மேன் ரோகித் சர்மாவே இருந்துள்ளார். இதன்மூலம் ஐபிஎல் கோப்பையை நான்கு முறை வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.



    மேலும், டெக்கான் சார்ஜர்ஸ் அணி 2009-ம் ஆண்டு கில்கிறிஸ்ட் தலைமையில் கோப்பையை வெல்லும்போது அந்த அணியில் இடம்பிடித்திருந்தார். அதன்பின் 2013, 2015, 2017, 2019 ஆண்டுகளில் மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக கோப்பையை கைப்பற்றியுள்ளார்.

    இதன்மூலம் ஐந்து முறை கோப்பையை முத்தமிட்ட ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
    பிராவோ வீசிய கடைசி ஓவரில் ‘வைடு’ கொடுக்காததால் நடுவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடந்த பொல்லார்டுக்கு 23 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
    ஐபிஎல் 2019 சீசன் இறுதிப் போட்டி ஐதராபாத்தில் நேற்றிரவு நடைபெற்றது. பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஆடுகளம் என்று கணிக்கப்பட்டதால் மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நேர்த்தியான பந்து வீச்சால் மும்பை இந்தியன்ஸ் ரன் குவிக்க திணறியது. அதிரடி பேட்ஸ்மேன் பொல்லார்டு கடைசி வரை நின்று ஸ்கோரை முடிந்த அளவிற்கு உயர்த்தினார். 19 ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் 7 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்திருந்தது.

    கடைசி ஓவரை வெயின் பிராவோ வீசினார். முதல் பந்தில் ரன்ஏதும் எடுக்கவில்லை. 2-வது பந்தை வலது பக்கம் வைடாக வீசினார். பொல்லார்டு பேட்டை சுழற்றினார். ஆனால் பேட் பந்தில் படவில்லை. பொல்லார்டு பேட்டை சுழற்றாமல் இருந்திருந்தால் அந்த பந்து வைடாக கருதப்பட்டிருக்கும்.

    3-வது பந்தையும் அதேபோல் பிராவோ வீசினார். இந்த முறை பொல்லார்டு பேட்டை சுழற்றவில்லை. பந்து வைடாக சென்றது. ஆனால், நடுவர் ‘வைடு’ கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் பொல்லார்டு கடுங்கோபம் அடைந்தார். தனது பேட்டை மேல்நோக்கி வீசினார்.

    பின்னர் அடுத்த பந்தை பிராவோ வீச ஓடிவந்தார். பொல்லார்டு வலது பக்கம் நடந்து சென்றார். இதனால் பிராவோ பந்து வீசுவதை நிறுத்தினார். இரண்டு நடுவர்களுகம் பொல்லார்டு அருகில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின் கடைசி இரண்டு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார். இதனால் 25 பந்தில் 41 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.



    பொல்லார்டு மைதானத்தில் ஆக்ரோஷமாக செயல்படுவது வழக்கம். ஆனால், யாரிடமும் பெரிய அளவில் வாக்குவாதம்  செய்யப்பட்டார். அவருக்கான ஸ்டைலில் எதிர்ப்பு தெரிவிப்பார். ஒருமுறை மைதானத்தில் அதிகமாக பேசக்கூடாது என நடுவர் எச்சரிக்க, வாயை டேப் வைத்து ஒட்டுக்கொண்டு விளையாடினார். நேற்றைய போட்டியில் பேட்டை வீசிய விதிமுறைக்கு மாறான என, ஐபிஎல் நிர்வாகம் அவருக்கு 25 சதவீதம் அபராதம் விதித்துள்ளது.
    ஐதராபாத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 1 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற எம்எஸ் டோனியின் ‘ரன்அவுட்’தான் திருப்புமுனை என சச்சின் தெரிவித்தார்.
    ஐதராபாத்தில் நேற்றிரவு நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக 150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களம் இறங்கியது. பரபரப்பான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 148 ரன்கள் அடித்து 1 ரன்னில் வெற்றி வாய்ப்பை இழந்தது.

    மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற டோனியின் ‘ரன்அவுட்’தான் திருப்புமுனை என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகரும், கிரிக்கெட் சகாப்தமுமான சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து சச்சின் தெண்டுல்கர் கூறுகையில் ‘‘டோனியின் ‘ரன்அவுட்’தான் ஆட்டத்தின் திருப்புமுனை. அதுவே முக்கியமான தருணம். பும்ராவின் பந்து வீச்சும் முக்கிய பங்கு வகித்தது. மலிங்கா ஒரு மோசமான ஓவரை வீசினார். ஆனால், கடைசி ஓவரை சிறப்பாக வீசினார். 2 ஆண்டுகளுக்கு முன்பு 124 ரன்களை வதை்து கோப்பையை வென்றோம். இதனால் எனக்கு நம்பிக்கை இருந்தது’’ என்றார்.
    ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் டோனி கீப்பிங்கில் சாதனை படைத்துள்ளார்.
    கேப்டன் பதவி மற்றும் பேட்டிங்கில் ஜொலித்த டோனி. ஐ.பி.எல். போட்டியில் விக்கெட் கீப்பிங்கிலும் சாதித்து உள்ளார்.

    நேற்றைய இறுதிப்போட்டியில் அவர் 2 கேட்ச்களை (குயின்டன் டிகாக், ரோகித் சர்மா) பிடித்தார். ஐ.பி.எல். போட்டியில் அவர் 136 வீரர்களை அவுட் செய்ய காரணமாக திகழ்ந்தார். இதன் மூலம் டோனி புதிய சாதனை படைத்தார்.

    ஐ.பி.எல் போட்டியில் அதிகமான வீரர்களை அவுட் செய்ய காரணமாக இருந்த விக்கெட் கீப்பரில் முதல் இடத்தை பிடித்தார். அவர் தினேஷ் கார்த்திக்கை முந்தினார்.



    டோனி 190 ஆட்டத்தில் 94 கேட்ச் பிடித்துள்ளார். 38 ஸ்டம்பிங் செய்துள்ளார். மொத்தம் 132 வீரர்களை ‘அவுட்’ செய்ய காரணமாக இருந்தார். தினேஷ்கார்த்திக் 131 வீரர்களை (101 கேட்ச்+ 30 ஸ்டம்பிங்) அவுட் செய்ய காரணமாக திகழ்ந்தார்.

    ஐ.பி.எல். போட்டியில் 100 வெற்றிகளை பெற்ற ஒரே கேப்டன், 200 சிக்சர்களை அடித்த ஒரே இந்தியர் என்ற சாதனையிலும் டோனி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    இறுதிப்போட்டியில் மும்பையிடம் தோல்வி அடைந்தது மிகவும் காயப்படுத்தியதாகவும் அடுத்த ஐபிஎல் போட்டியில் விளையாடுவதாகவும் டோனி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    ஐதராபாத்:

    ஐ.பி.எல். பரபரப்பான இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1 ரன்னில் மும்பையிடம் தோற்று 4-வது கோப்பையை இழந்தது.

    இந்த சீசனில் ஒரு அணியாக சிறப்பாக செயல்பட்டோம். ஆனால் இறுதிப்போட்டிக்கு எப்படி நுழைந்தோம் என்று திரும்பி பார்க்கும்போது சிறப்பாக ஆடி இந்த இடத்திற்கு வந்ததாக தோன்றவில்லை. மிடில் ஆர்டர் வரிசை நன்றாக அமையவில்லை. இருந்தாலும் எப்படியோ சமாளித்து விட்டோம்.

    தோல்வி எப்போதுமே காயப்படுத்தும். இன்னும் கொஞ்சம் சிறப்பாக விளையாடி இருக்கலாம்.

    இறுதிப்போட்டி மிகவும் சிறப்பாக இருந்ததாக கருதுகிறேன். கடைசி பந்து வரை பரபரப்பு ஏற்பட்டது. இரு அணிகளிலுமே நிறைய வேடிக்கையான சம்பவம் நடந்தன. இரு அணிகளின் பக்கமும் கோப்பை கைமாறிக்கொண்டு இருந்தன. ஏனென்றால் இரு அணிகளுமே நிறைய தவறுகளை செய்தன. ஆனால் குறைந்த தவறுகள் செய்த அணி வெற்றி பெற்று இருக்கிறது.இறுதிப்போட்டியிலும் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். எப்போது தேவையோ அப்போது சரியாக விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.

    தவறுகள் எந்தெந்த இடங்களில் செய்தோம் என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஆனால் உண்மையில் அதற்கு தற்போது நேரமில்லை. உலககோப்பை செல்ல வேண்டி இருக்கிறது.

    அதற்கு பின் நேரம் கிடைக்கும்போது ஐ.பி.எல். தவறுகளை ஆராய முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அடுத்த ஐ.பி.எல். போட்டியில் உங்களை மீண்டும் காண முடியுமா? என்று டோனியிடம் டெலிவிசன் வர்ணனையாளர் சஞ்சய் மஞ்சரேக்கர் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் ஆம் நம்பிக்கை இருக்கிறது என்று பதில் அளித்தார்.



    உலககோப்பையுடன் டோனி ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அடுத்த ஐ.பி.எல். போட்டியில் அவர் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்காக டோனியிடம் அந்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் விளையாடுவேன் என்று தெரிவித்ததால் ரசிகர்கள் ஆரவாரம் அடைந்தனர்.
    மும்பை அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் தோனிக்கு அவுட் கொடுத்த அம்பயருக்கு குட்டி ரசிகர் அளித்த சாபம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
    ஐபிஎல் 2019 சீசன் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை அணிகள் மோதின. இப்போட்டியில் கடைசி பந்தில் 1 ரன் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி 4-வது முறையாக கோப்பை வென்றது மும்பை இந்தியன்ஸ் அணி.

    வெற்றி பெற்ற மும்பை அணிக்கு ரூ. 20 கோடி மற்றும் கோப்பையும், 2-ம் இடம் பிடித்த சென்னை அணிக்கு 12 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது.

    நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் தோனியின் ரன் அவுட் குழப்பத்தை ஏற்படுத்தியது.  அதிலும் மூன்றாவது அம்பயர் கொடுத்த தீர்ப்பு தவறு என்று ரசிகர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.



    இந்நிலையில் டோனி அவுட் குறித்து 7 வயது மதிக்கத்தக்க சிறுவன் அழுது கொண்டே பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    அதில் அச்சிறுவன் டோனி அவுட்டே இல்லை என்றும் சும்மானா அவுட்டுன்னு கொடுக்கறான். மூனாவது அம்பயர் தூக்கு மாட்டி செத்துடுவான் என்றும் அழுது கொண்டே கூறும் போது அச்சிறுவன் தாய் சமாதானப்படுத்துகிறார்.

    வீடியோவை காண..,

    ஐபிஎல் 2019 கோப்பையை மும்பை அணி கைப்பற்றிய நிலையில் இந்த சீசனில் பதிவான சாதனைகள் குறித்த விவரங்களை பார்க்கலாம்.

    ஐபிஎல் 2019 சீசனின் இறுதிப் போட்டி ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

    இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை மும்பை இந்தியன்ஸ் அணி தட்டி சென்றது. 2-வது இடத்தை பிடித்த சென்னை அணி 3 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்த ஐபிஎல் சீசனில் பதிவான சாதனை துளிகள் பற்றிய விவரத்தை பார்க்கலாம்.

    இந்த ஐபிஎல் சீசனில் மொத்த ஆட்டம் - 60
    சிக்சர்கள் - 785
    பவுண்டரிகள் - 1651
    விக்கெட்டுகள் - 682
    ரன்கள் - 19416
    சதங்கள் - 6
    அரை சதம் - 106
    அதிக பவுண்டரிகள் அடித்த வீரர் டெல்லி அணியை சேர்ந்த ஷிகர் தவான் - 64
    அதிக சிக்சர்கள் விளாசிய வீரர் கொல்கத்தா அணியை சேர்ந்த ரஸல் - 52
    அதிக பவுண்டரிகள் அடித்த அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் - 236
    அதிக சிக்சர்கள் விளாசிய அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 143
    ஒரு அணியின் அதிக பட்ச ஸ்கோர் 232/2 கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
    ஒரு அணியின் குறைந்த பட்ச ஸ்கோர் 70 பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்.
    ×