என் மலர்
நீங்கள் தேடியது "teynampet police station"
சென்னை:
தேனாம்பேட்டை பகுதியில் திருட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் செல்போன் திருட்டு தொடர்பாக 14 வயது சிறுவன் ஒருவனை போலீசார் கைது செய்தனர். செம்மஞ்சேரியை சேர்ந்த அந்த சிறுவனிடம் இருந்து 3 செல்போன்களும், ஒரு மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இச்சிறுவனுடன் தொடர்புடைய 2 பேர் தப்பி ஓடி விட்டனர். அவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடிப்பதற்காக சிறுவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
நேற்று காலையில் கழிவறைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற சிறுவன், போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டான். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் சிறுவனை தேடி வந்தனர். செம்மஞ்சேரி பகுதியில் பதுங்கி இருந்த அவனை நேற்று இரவு போலீசார் மடக்கி பிடித்தனர்.
தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு மீண்டும் அழைத்து வரப்பட்ட அவனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்க முடிவு செய்துள்ளனர்.
கடந்த 2 மாதத்துக்கு முன்னர் சிறுவன் செம்மஞ்சேரி போலீசாரால் கைது செய்யப்பட்டு சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டிருந்தான். சில நாட்களுக்கு முன்பு வெளியில் வந்த அவன் மீண்டும் கைவரிசை காட்டிய போதுதான் சிக்கியுள்ளான். சாலையோரமாக தூங்குபவர்களிடம் கைவரிசை காட்டுவதை சிறுவன் வழக்கமாக வைத்திருந்தது தெரியவந்துள்ளது.