என் மலர்
நீங்கள் தேடியது "TN Chief Minister"
- மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
- தூதரக முயற்சிகளைத் தீவிரப்படுத்துமாறு விடுத்த தனது முந்தைய கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் எழுதியுள்ள கடிதம் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 11 மீனவர்களை 27.03.2025 அன்று இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ள நிலையில், தமிழ்நாட்டு மீனவர்கள் அதிகளவில் தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், முத்தரப்புப் பேச்சைவார்த்தை நடத்திட ஏற்பாடு செய்யவும், இலங்கை சிறையில் உள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய தூதரக மற்றும் சட்ட உதவிகளை வழங்கிட வேண்டுமென்று வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்கு இன்று (27.03.2025) கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் 27.03.2025 அன்று, ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 11 மீனவர்களும், அவர்களது மீன்பிடிப் படகும் சிறைபிடிக்கப்பட்டுள்ளதை ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர், இலங்கைக் கடற்படையினர் கடந்த 3 மாதங்களில், 11 வெவ்வேறு சம்பவங்களில் 147 மீனவர்கள் மற்றும் 19 படகுகளை சிறை பிடித்துள்ளதை தனது கடிதத்தில் வருத்தத்தோடு குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சூழலில், 2024 டிசம்பர் மாதம் இலங்கை அதிபர் இந்தியாவிற்கு வருகை தந்தபோது, நமது மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படும் பிரச்சனையை இலங்கை அதிபரிடம் தனிப்பட்ட முறையில் எழுப்பியதாகவும், இந்திய மீனவர்களின் நலனை உறுதியாகக் காப்பதில் ஒன்றிய அரசு அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என்று ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் தனது 09.02.2025 நாளிட்ட கடிதத்தில் உறுதியளித்திருந்தபோதிலும், தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த சில மாதங்களில் அதிகரித்துள்ளதை தனது கடிதத்தில் கவலையோடு சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, நமது மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், முத்தரப்புப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யவும், தூதரக முயற்சிகளைத் தீவிரப்படுத்துமாறு விடுத்த தனது முந்தைய கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கை சிறையில் வாடும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க தேவையான அனைத்து தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், சட்ட உதவிகளை வழங்குமாறும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மத்திய பா.ஜ.க. அரசு, தமிழ்நாட்டை ஒவ்வொரு துறையிலும் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.
- தமிழ்நாட்டில் இந்தித் திணிப்புக்கு இடமில்லை என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது திராவிட மாடல் அரசு.
தமிழகத்தின் அனைத்து ஒன்றியங்களில் 29ம் தேதி நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்குமாறு திமுகவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை விடுக்கவில்லை என்றும் சிறப்பாகச் செயல்படுகின்ற மாநிலங்களைத் தண்டிப்பதையே கொள்கையாக மத்திய அரசு வைத்துள்ளது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் ஆர்ப்பாட்ட அழைப்பு மடல்.
தமிழ்நாட்டு மக்கள் நம்பிக்கையுடன் நம்மிடம் வழங்கிய ஆட்சியை அனைவருக்கும் பலனளிக்கும் சாதனைத் திட்டங்களுடன் நாம் நடத்திக் கொண்டிருந்தாலும், நாளொரு போராட்டத்தை முன்னெடுத்தே நம் உரிமைகளைப் பெறக்கூடிய வகையில் ஒன்றிய பா.ஜ.க. அரசு, தமிழ்நாட்டை ஒவ்வொரு துறையிலும் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.
ஒன்றிய அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு என்ற பெயரும் இல்லை, தமிழ்நாட்டிற்கான திட்டங்களும் இல்லை, தமிழ்நாட்டிற்குப் போதுமான நிதியும் ஒதுக்கவில்லை. இதனைக் கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கடந்த பிப்ரவரி 8-ஆம் நாள் தமிழ்நாடு முழுவதும் கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன.
ஆவடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உங்களில் ஒருவனான நான் பங்கேற்றுக் கண்டன உரையாற்றினேன்.
தமிழ்நாட்டின் உயிர்க்கொள்கையாக விளங்கும் பேரறிஞர் அண்ணா நமக்கு வழங்கிய - முத்தமிழறிஞர் கலைஞர் கட்டிக்காத்த இருமொழிக் கொள்கைக்கு எதிராக இந்தியைத் திணிக்க முயற்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஆதிக்கப் போக்கையும், மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகள் மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைத்து, மாநில உரிமைகளைப் பறிக்கும் ஜனநாயக விரோதப் போக்கையும் கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மார்ச் 12-ஆம் நாள் தமிழ்நாடு முழுவதும் கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. உங்களில் ஒருவனான நான் திருவள்ளூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன்.
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைக்கப்பட்டால், மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை முறையாக நிறைவேற்றி, மக்கள் தொகையை மனிதவள ஆற்றலாகச் சிறப்பாக மாற்றியுள்ள தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களும், ஒடிசா, பஞ்சாப், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களும் தங்கள் ஜனநாயகப் பிரதிநிதித்துவத்தை இழக்கும் என்பதை எடுத்துரைக்கும் வகையில் மார்ச் 5-ஆம் நாள் தமிழ்நாட்டில் உள்ள 54 கட்சிகள் பங்கேற்ற அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தைத் தலைமைச் செயலகத்தில் நடத்தியதுடன், தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்படும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்கள், கட்சித் தலைவர்கள் பங்கேற்ற கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தை கடந்த 22-ஆம் தேதி சென்னையில் நடத்தி, ஒருமித்த உணர்வுடன் ஜனநாயகத்தின் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்தோம். இருமொழிக் கொள்கையைப் பாதுகாத்திடச் சட்டமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்து, தமிழ்நாட்டில் இந்தித் திணிப்புக்கு இடமில்லை என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது திராவிட மாடல் அரசு.
மாநிலத்தில் ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களே தங்களின் நியாயமான உரிமைக்காகவும், மாநிலத்திலிருந்து வசூலிக்கப்பட்ட வரியிலிருந்து உரிய பங்கு கிடைப்பதற்காகவும் ஒன்றிய பா.ஜ.க. அரசிடம் ஒவ்வொரு நாளும் போராட்டம் நடத்த வேண்டியுள்ள நிலையில், 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும் ஏழை - எளிய தொழிலாளர்களின் வாழ்வு, பா.ஜ.க. ஆட்சியில் அவலமான நிலையில் உள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ், பொதுவுடைமை அமைப்புகள் உள்ளிட்ட ஜனநாயக இயக்கங்களின் ஆதரவுடன் 2004-இல் அமைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது, கிராமப்புற ஏழைத் தொழிலாளர்களின் பட்டினிச் சாவைத் தடுத்திடும் வகையில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு, குறைந்தபட்சம் 100 நாள் வேலை உறுதி செய்யப்பட்டது. மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் எதுவாக இருந்தாலும் அதனைச் சரியாகவும் முறையாகவும் நிறைவேற்றக்கூடிய மாநிலமான தமிழ்நாடு, 100 நாள் வேலைத் திட்டத்தையும் மிகச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது.
சிறப்பாகச் செயல்படுகின்ற மாநிலங்களைத் தண்டிப்பதையே தனது கொள்கையாகக் கொண்டிருக்கிற ஒன்றிய பா.ஜ.க. அரசு, 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை விடுவிக்காமல் இருப்பதைச் சுட்டிக்காட்டி, ஜனவரி 13-ஆம் நாள் மாண்புமிகு பிரதமர் அவர்களுக்குக் கடிதம் எழுதி, கிராமப்புற ஏழைத் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கிட ஏதுவாக அந்த நிதியினை விடுவிக்கக் கோரியிருந்தேன்.
அதன் தொடர்ச்சியாகத் தமிழ்நாட்டின் நிதியமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்கள், தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி அவர்களுடன் கடந்த ஜனவரி 27-ஆம் நாள் டெல்லியில் ஒன்றிய அரசின் நிதியமைச்சர் மாண்புமிகு நிர்மலா சீதாராமன் அவர்களைக் கழகத்தின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி அவர்களுடன் நேரில் சந்தித்து, 100 நாள் வேலைத்திட்டத்தில் ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறை மூலம் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனே விடுவிக்க வேண்டும் எனக் கோரி மனு அளித்தார்கள். தொடர்புடைய துறையின் அமைச்சரிடமும் வலியுறுத்தப்பட்டது.
ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு ஒதுக்க வேண்டிய நிதி தொடங்கி, ஒவ்வொரு திட்டத்திலும் தமிழ்நாட்டிற்குரிய நிதியை ஒன்றிய பா.ஜ.க. அரசு உரிய அளவிலும், உரிய நேரத்திலும் ஒதுக்குவதில்லை. அரசியல் பார்வையுடன் தமிழ்நாட்டை ஓரங்கட்ட நினைக்கிறது. இந்த நிலையிலும், உங்களில் ஒருவனான என் தலைமையிலான தமிழ்நாட்டின் திராவிட மாடல் அரசு, 100 நாள் வேலைத்திட்டத்தில் மாநில அரசின் பங்களிப்புக்குரிய நிதியின் மூலம் ஊதியத்தை வழங்கி வருகிறது.
எனினும், ஒன்றிய அரசின் நிதிப் பங்களிப்பே இதில் முதன்மையானது என்பதால் உழைக்கும் ஏழை - எளிய மக்களுக்கு முழுமையான அளவில் ஊதியம் வழங்கிட இயலவில்லை. தமிழ்நாட்டைப் போலவே கேரளா, மேற்கு வங்கம் போன்ற பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கும் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை கிடைக்கவில்லை என்ற முறையீடுகள் வைக்கப்பட்டுள்ளன.
உங்களில் ஒருவனான என் தலைமையில் நடைபெற்ற கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்குரிய நிலுவைத் தொகையான 4,034 கோடி ரூபாயை ஒன்றிய அரசு உடனே விடுவிக்க வேண்டும் என்றும், 5 மாதங்களாக இந்தத் தொகை விடுவிக்கப்படாமல் இருப்பதால் கிராமப்புற ஏழைத் தொழிலாளர்கள், குறிப்பாக பெண் தொழிலாளர்கள் வஞ்சிக்கப்படுவதையும் கழக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்.பி. மக்களவையில் எடுத்துரைத்தார்.
மாநிலங்களவையிலும் திருச்சி சிவா எம்.பி. இது குறித்துப் பேசினார். இரு அவைகளிலும் கழகத்தினரும் தோழமைக் கட்சியினரும் இது குறித்து வலியுறுத்தியும், நிலுவைத் தொகையை வழங்குவதற்குப் பதில், "உத்தர பிரதேசத்தைவிட தமிழ்நாட்டிற்குக் கூடுதல் நிதி விடுவிக்கப்பட்டிருக்கிறது" என்று திசைதிருப்பும் பதில்களே ஒன்றிய பா.ஜ.க அரசிடமிருந்து கிடைத்தது.
மாநிலங்களின் பரப்பளவையும் மக்கள்தொகையையும் காரணம் காட்டி, திறமையாகத் திட்டங்களைச் செயல்படுத்தும் மாநிலங்களின் உரிமைகளை நசுக்கி, மக்களை வஞ்சிக்கும் போக்கைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு.
மக்களவையிலும் மாநிலங்களவையிலும் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நமது உரிமைக்கான குரல் எழுப்பி வரும் நிலையில், மக்கள் மன்றத்திலும் அதனை எதிரொலித்திடச் செய்யும் வகையில், 100 நாள் வேலைத்திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிதியை உடனே விடுவிக்கக்கோரி, தமிழ்நாடு முழுவதும் ஒன்றிய அளவில் மார்ச் 29-ஆம் நாள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கழகத்தின் பொதுச்செயலாளர் அமைச்சர் அண்ணன் துரைமுருகன் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு ஒன்றியத்திலும் இரண்டு இடங்களில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது. இது நம் மாநில உரிமைக்கான போராட்டம் மட்டுமல்ல, நாள்தோறும் உழைத்து நாட்டை முன்னேற்றிடும் கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரத்திற்கான போராட்டம். எனவே, ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் இடங்களில், பாதிக்கப்பட்ட கிராமப்புற ஏழை ஆண் - பெண் தொழிலாளர்களையும் பங்கேற்கச் செய்திட வேண்டும். அவர்களின் உரிமை முழக்கமாக உடன்பிறப்புகள் களம் காண வேண்டும்.
வியர்வை காய்வதற்கு முன்பே உழைப்பிற்கான ஊதியத்தை வழங்குவதுதான் நியாயமான செயலாகும். உழைத்தவர்கள் ஓடாய்த் தேய்கிற வரை, அவர்களின் உழைப்பை உறிஞ்சிவிட்டு, ஊதியத்தைத் தர மறுக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு. அதன் உழைப்புச் சுரண்டலையும், உரிமைப் பறிப்பையும் உரக்க முழங்கிடுவோம். உரிமைகளை வென்றிடுவோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- இருமொழிக் கொள்கை என்பது நம் உயிர்க் கொள்கை!
- இது பணப்பிரச்சினை அல்ல; இனப் பிரச்சினை!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
நிதிக்காக இனமானத்தை அடமானம் வைத்து வெகுமானம் பெறும் கொத்தடிமைகளின் ஆட்சியல்ல இது; தடைக்கற்களை உடைத்தெறியும் தடந்தோள்கள் கொண்ட திராவிட மாடல் ஆட்சி இது!
இருமொழிக் கொள்கை என்பது நம் உயிர்க் கொள்கை!
இது பணப்பிரச்சினை அல்ல; இனப் பிரச்சினை!
தமிழ் காக்க - தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்ட - தமிழினம் உயர - மாநில சுயாட்சியை உறுதிசெய்ய விரைவில் முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறேன்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- காலம் காலமாக சிறுபான்மையின மக்களுக்கு நட்பாகவும் அரணாகவும் இருந்து திமுக தான்.
- அரசியல் ரீதியிலான அச்சுறுத்தல் வரும் போதெல்லாம் இஸ்லாமியர்களை காக்கும் அரசாக திமுக உள்ளது.
சென்னை திருவான்மியூரில் இஃப்தார் ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.
திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு சார்பில் ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில், பங்கேற்று நோன்பு திறந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்னர் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
காலம் காலமாக சிறுபான்மையின மக்களுக்கு நட்பாகவும் அரணாகவும் இருந்து திமுக தான்.
அரசியல் ரீதியிலான அச்சுறுத்தல் வரும் போதெல்லாம் இஸ்லாமியர்களை காக்கும் அரசாக திமுக உள்ளது.
பேரறிஞர் அண்ணாவையும், கலைஞரையும் இணைக்கும் பாலமாக இருந்தது இஸ்லாமிய சமூகம் தான்.
மற்ற மாநிலங்களில் வருந்தத்தக்க சூழல் இருந்தாலும் தமிழ்நாட்டில் மதரீதியிலான மோதல் ஏற்படாமல் திமுக அரசு காக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- மானியக் கோரிக்கையில், விலையில்லா மடிக்கணினி வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
- எப்படியும் இந்த ஆண்டு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க இயலாது என்று கல்வியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
மானியக் கோரிக்கையில் விலையில்லா மடிக்கணினி வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றும் எந்த நிதியை வைத்து மடிக்கணினி வழங்கப்போகிறார், எப்போது வழங்கப்போகிறார் என்பதையும் அமைச்சர் தெளிவுப்படுத்த வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
விளம்பரத்துக்காக திட்டங்களை அறிவித்துவிட்டு, அதைச் செயல்படுத்த நிதி ஒதுக்காமல், வெறும் கையில் முழம் போடுவதை திமுகவினரிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும்.
மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வாங்க இந்த ஆண்டு ரூ. 2,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக, சட்டசபையில் தமிழக நிதியமைச்சர் கூறியிருக்கிறார்.
ஆனால், உயர்கல்வி மானியக் கோரிக்கையிலோ அல்லது தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை மானியக் கோரிக்கையிலோ இந்தத் திட்டத்திற்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கப்படவில்லை. யாரை ஏமாற்ற முயற்சிக்கிறார் அமைச்சர்? தமிழக மாணவர்களையா?
எப்படியும் இந்த ஆண்டு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க இயலாது என்று கல்வியாளர்கள் தெரிவிக்கிறார்கள். பிறகு ஏன் இந்த வெற்று அறிவிப்பு? நிதியே ஒதுக்காமல், இந்த ஆண்டு, அடுத்த ஆண்டு என எப்படி கொஞ்சம் கூடக் கூச்சமே இல்லாமல் சட்டமன்றத்தில் பேசுகிறார் தமிழக நிதியமைச்சர்?
மானியக் கோரிக்கையில், விலையில்லா மடிக்கணினி வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. எந்த நிதியை வைத்து, மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப் போகிறார், எப்போது வழங்கப் போகிறார் என்பதை அமைச்சர் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ரூ.2000 கோடியில் தரமான லேப்டாபை வழங்கிட முடியுமா எனக் கேட்ட உறுப்பினருக்கு தக்க விளக்கம்.
- கலைஞர் வழங்கி இன்றும் ஓடிக்கொண்டிருக்கும் தொலைக்காட்சிப் பெட்டிகள் சொல்லும் திமுக அரசின் தரம் பற்றி.
யாருக்கும் ஓரவஞ்சனை காட்டாத, எந்த துறையையும் விட்டுவிடாத all-round TNBudget2025 என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
2000 கோடி ரூபாயில் அனைத்து மாணவர்களுக்கும் தரமான Laptop வழங்கிட முடியுமா எனக் கேட்ட உறுப்பினருக்குத் தக்க விளக்கத்தை வழங்கியிருக்கிறார் அமைச்சர் தென்னரசு அவர்கள்.
கலைஞர் வழங்கி இன்றும் ஓடிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சிப் பெட்டிகள் சொல்லும் கழக அரசின் தரம் பற்றி!
யாருக்கும் ஓரவஞ்சனை காட்டாத, எந்தத் துறையையும் விட்டுவிடாத all-round #TNBudget2025 அளித்து, பதிலுரையிலும் centum வாங்கியிருக்கும் நிதியமைச்சருக்குப் பாராட்டுகள்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- காலை உணவுத்திட்டம் குறித்து வெளியான செய்தியை சுட்டிக்காட்டி முதலமைச்சர் பதிவு.
- நன்கு ஊட்டமளிக்கப்பட்ட குழந்தை பள்ளியில் சிறப்பாகச் செயல்படுகிறது.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தால் குழந்தைகளின் நினைவாற்றல் மேம்பட்டுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காலை உணவுத்திட்டம் குறித்து வெளியான செய்தியை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குழந்தைகளின் கவனம், நினைவாற்றல், கற்றல் விளைவுகளை மேம்படுத்துகிறது.
சிந்தனையுடன் திட்டமிடுவது என்பது பிரச்சனைகளை தீர்ப்பது மட்டுமல்ல, நாம் நினைத்துப் பார்க்க முடியாத சமூகத்தை மாற்றுகிறது.
நன்கு ஊட்டமளிக்கப்பட்ட குழந்தை பள்ளியில் சிறப்பாகச் செயல்படுகிறது. இது நீண்டகால சமூக முன்னேற்றத்திற்கு வழிவகுக்கிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை என்றார் அமைச்சர் ரகுபதி.
- பாஜக ஆளாத மாநிலங்களில் எல்லாம் அமலாக்கத்துறை மூலமாக நெருக்கடி கொடுக்கப்படுகிறது.
டாஸ்மாக் நிறுவன அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனை குறித்து அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் ரகுபதி பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாற்று கட்சி ஆட்சி நடத்தும் மாநிலங்களை பழிவாங்க மாட்டோம் என பாஜகவினர் சொன்னார்கள்.
ஆனால், பாஜக ஆளாத மாநிலங்களில் பழிவாங்கும் நோக்கத்துடன் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது.
மாற்று கட்சியினர் எங்கெல்லாம் ஆட்சி செய்கிறார்களோ அங்கெல்லாம் மத்திய பாஜக அரசு பழி வாங்குகிறது.
அமலாக்கத்துறை வழக்கு தொடரப்பட்டவர்கள் பாஜகவில் சேர்ந்தவுடன் புனிதர்களாகி விடுகிறார்கள்.
பாஜக ஆளாத மாநிலங்களில் எல்லாம் அமலாக்கத்துறை மூலமாக நெருக்கடி கொடுக்கப்படுகிறது.
டெல்லி பாணியில் அரசியல் செய்யலாம் என்று பாஜக கனவு கண்டு கொண்டிருக்கிறது.
அமலாக்கத்துறையில் இருப்பவர்கள் எல்லாம் யோக்கியர்கள் அல்ல. அமலாக்கத்துறை அதிகாரியும் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துறை அதிகாரிகளே லஞ்சம் வாங்குகிறார்கள்.
டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழலுக்கு ஏதேனும் ஆதாரங்கள் இருக்கிறதா ?
அனுமதியின்றி போராடப் போகிறவர்களை முன்னெச்சரிக்கையாக கைது செய்வது தவறு இல்லை. முதலமைச்சர் வீட்டை முற்றுகையிட அண்ணாமலை வந்து பார்க்கட்டும்; என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம்.
டாஸ்மாக் ஊழல் தொடர்பாக மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை.
டாஸ்மாக் மதுபான விற்பனையால் இளம் விதவைகள் அதிகரிப்பதாக கூறுவதில் உண்மை இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- வைரமுத்துவை பாராட்ட பல்வேறு நாட்டு அறிஞர்கள் வந்தது பெருமைக்குரியது.
- பல்வேறு நாடுகளின் அறிஞர்கள், பேராசியிர்கள் உள்ளிட்ட 22 பேர் வைரமுத்தியம் விழாவுக்கு வந்துள்ளனர்.
சென்னை எம்ஆர்சி நகரில் வைரமுத்தியம் என்ற பெயரிலான கவிஞர் வைரமுத்துவின் படைப்பிலக்கிய பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது.
அங்கு வைரமுத்துவின் படைப்பிலக்கியம் பன்னாட்டு கருத்தரங்கத்தில் கட்டுரை நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதனை எம்பி ஜெகத்ரட்சகன் பெற்றுக் கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பொன்மாலை பொழுதில் தன் திரையிசை வாழ்வை தொடங்கிய வைரமுத்துவுக்கு இது உண்மையிலேயே பொன்னான நாள்.
இப்படி ஒரு கருத்தரங்கில் பங்கேற்பதை நான் மிகவும் பெருமையாக கருதுகிறேன்.
தமிழின் புகழை உலகெல்லாம் கொண்டு சேர்த்த வைரமுத்துவை பாராட்ட பல்வேறு நாட்டு அறிஞர்கள் வந்தது பெருமைக்குரியது.
பல்வேறு நாடுகளின் அறிஞர்கள், பேராசியிர்கள் உள்ளிட்ட 22 பேர் வைரமுத்தியம் விழாவுக்கு வந்துள்ளனர்.
உலக கவியாக அங்கீகரிக்கப்பட்டுவிட்டார் வைரமுத்து என்றே எண்ணத் தோன்றுகிறது.
கலைஞரின் இலக்கிய மகன் வைரமுத்து. வைரமுத்துவின் 17 படைப்புகளை கலைஞர் வெளியிட்டிருக்கிறார். வைரமுத்துவுக்கு கவிப்பேரரசர் என பெயரிட்டு அழைத்தவர் கலைஞர்.
இலக்கியத்தின் எல்லா பக்கங்களிலும் நுழைந்து வெற்றியை சாதித்து காட்டியவர் வைரமுத்து.
நமது ஜெகத்ரட்சகன் எம்பி வஞ்சனையில்லாமல் அனைவரையும் பாராட்டக் கூடியவர்.
இவ்வாறு கூறினார்.
- நாம் பட்ஜெட்டில் குறிப்பிட்ட ரூ என்பதை தமிழை பிடிக்காதவர்கள் பெரிய செய்தியாக்கிவிட்டனர்.
- மத்திய நிதி அமைச்சரே பலமுறை ரூ என்ற குறியீட்டை பயன்படுத்தியுள்ளனர்.
தமிழக பட்ஜெட்டில் ரூ என குறிப்பிடப்பட்டது பூதாகரமாக வெடித்தது ஏன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:-
மொழிக் கொள்கையில் நாம் எந்தளவுக்கு உறுதியுடன் உள்ளோம் என்பதை காட்டவே ரூ என்ற எழுத்தை பெரிதாக வைத்தோம்.
நாம் பட்ஜெட்டில் குறிப்பிட்ட ரூ என்பதை தமிழை பிடிக்காதவர்கள் பெரிய செய்தியாக்கிவிட்டனர்.
மத்திய நிதி அமைச்சரே பலமுறை ரூ என்ற குறியீட்டை பயன்படுத்தியுள்ளனர். கல்வி நிதி கேட்ட போதெல்லாம் பதில் பேசாத மத்திய நிதியமைச்சர் ரூ என்று மாற்றப்பட்டதை பற்றி பேசுகிறார்.
ஆங்கிலத்தில் கூட Rs என்றே பயன்படுத்துகின்றனர். அதெல்லாம் பிரச்சனையாக தெரியாதவர்களுக்கு ரூ மட்டும் பிரச்சனையாக உள்ளது" என்றார்.
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை குறித்து ஆங்கில நாளேடுகளில் வௌியான செய்திகளை சுட்டிக்காடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்தோடு கூறினார்.
அப்போது அவர்," தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை அனைத்து ஆங்கில நாளேடுகளும் பாராட்டியுள்ளன" என்றார்.
- நேற்று பட்ஜெட் தாக்கல் செய்துவிட்டு இன்று நீதிமன்றம் வந்திருக்கிறேன்.
- அண்மைக் காலமாக கூட்டாட்சி தத்துவம் பாதிக்கப்படும் நிலை உள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெறும் மெட்ராஸ் பார் அசோசியேசனின் 150வது ஆண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கே.வி.விஸ்வநாதன், ஆர்.மகாதேவன், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஜனநாயகத்தை செதுக்குவதில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் பங்கை பாராட்டுகிறேன். தமிழகத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் இந்திய அளவில் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கின்றனர்.
இந்தியாவிலேயே தலைசிறந்த பாரம்பரியம் கொண்டது சென்னை உயர்நீதிமன்றம். அரசமைப்பை பாதுகாப்பதில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய பங்காற்றி வருகிறது.
ஒரு நீதிபதி ஆங்கிலத்தில், ஒரு நீதிபதி தமிழில் பேசினார். இதுதான் இருமொழிக் கொள்கை. இரு மொழிக் கொள்கை கொண்ட தமிழ்நாட்டில் இக்கட்டான நிலை என்பது இல்லை.
சட்டம் ஒரு இருட்டறை, வழக்கறிஞர்கள் வாதம் அதில் விளக்கு என்றார் பேரறிஞர் அண்ணா. அரசமைப்புச் சட்டத்திற்கு மெருகேற்றும் பல தீர்ப்புகளை நமது நீதியரசர்கள் வழங்கியுள்ளனர்.
சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதில் வழக்கறிஞர்களின் பங்கு மிக முக்கியமானது. வழக்கறிஞர்கள் அநீதிகளை தடுத்து நீதியை பாதுகாப்பவர்கள்.
சுதந்திரமான நீதித்துறை என்பது அரசமைப்பினர் உயிர்ப்புக்கு மிக முக்கிய அம்சம். அண்மைக் காலமாக கூட்டாட்சி தத்துவம் பாதிக்கப்படும் நிலை உள்ளது.
திமுக ஆட்சியில் 73 புதிய நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றத்தை கணிகனிமயமாக்க நிதி ஒதுக்கப்பட்டது.
உச்சநீதிமன்ற கிளையை தமிழகத்தில் ஏற்படுத்த வேண்டும், தென்மாநில மக்களுக்கு அது வசதியாக இருக்கும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று உயரிய ஊக்கத்தொகையாக 20 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
- சேலஞ்சர்ஸ் பிரிவில் வெற்றி பெற்ற பிரணவ் வெங்கடேசுக்கு பரிசு தொகையாக 6 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
உலக ஜூனியர் செஸ் போட்டியில் சாம்பியன் தமிழக வீரர் பிரணவ் வெங்கடேசுக்கு ரூ.20 லட்சம் ஊக்க தொகை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மொண்டெனேகுரோ நாட்டின், பெட்ரோவாக்கில் நடைபெற்ற பீடே உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த 18 வயதான பிரணவ் வெங்கடேஷ் வெற்றி பெற்று வரலாறு படைத்ததற்காக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று உயரிய ஊக்கத்தொகையாக 20 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
பிரணவ் வெங்கடேஷ், 2022-ம் ஆண்டில், கிராண்ட் மாஸ்டர் பட்டத்திற்கு தகுதி பெற்றார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்திய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் போட்டியில் சேலஞ்சர்ஸ் பிரிவில் வெற்றி பெற்ற பிரணவ் வெங்கடேசுக்கு பரிசு தொகையாக 6 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் முருகானந்தம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, மற்றும் பிரணவ் வெங்கடேசின் பெற்றோர் உடன் இருந்தனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.