
மாரடைப்பால் உயிரிழந்த மனோஜ் உடலுக்கு திரைத்துறையினர், ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி
- மரணம் அடைந்த மனோஜ் உடல் நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.
- பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் திரையுலகின் புகழ்பெற்ற இயக்குனரான பாரதிராஜாவின் மகன் மனோஜ். இவர் குடும்பத்துடன் சென்னை சேத்துப்பட்டில் வசித்து வந்தார். சமீபத்தில் மனோஜுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
நேற்று இரவு மனோஜுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 48. மனோஜ் மறைவு திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனை தொடர்ந்து மனோஜ் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமைலை, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், நடிகரும் மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன், இசைஞானி இளையராஜா உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
மேலும், இயக்குனர்கள் தியாகராஜன், பேரரசு, நடிகர்கள் பார்த்திபன், சூர்யா, ரோபோ சங்கர், பாடலாசிரியர் சினேகன் உள்ளிட்ட பலரும் கண்ணீர் மல்க மனோஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
மரணம் அடைந்த மனோஜ் உடல் நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. நடிகர், நடிகைகள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து இன்று மாலை 3 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்படும் மனோஜ் உடல், பிறகு ஊர்வலமாக எடுத்துச் சென்று பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.