ரேஸ் பயிற்சியில் மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் கார்
- நடிகர் அஜித்குமார் துபாயில் நடைபெற்ற கார் பந்தய போட்டிகளில் கடந்த மாதம் பங்கேற்றார்.
- எங்களுக்கு மீண்டும் நல்ல நேரமாக அமைந்துள்ளது.
கார் பந்தயத்தில் ஈடுபடுவதில் அதிக ஆர்வம் கொண்டவரான நடிகர் அஜித்குமார் துபாயில் நடைபெற்ற கார் பந்தய போட்டிகளில் கடந்த மாதம் பங்கேற்றார். சர்வதேச அளவிலான இந்த போட்டியில் அஜித்குமார் 3-வது பரிசை வென்றார். முன்னதாக இதற்கான பயிற்சியில் ஈடுபட்ட அஜித்குமாரின் கார் விபத்தில் சிக்கியது.
இதில் அவர் உயிர் தப்பிய நிலையில்தான் போட்டியில் பங்கேற்று 3-வது இடத்தை பிடித்தார்.
இந்த நிலையில் போர்ச்சுக்கல் நாட்டில் நடைபெற்று வரும் கார் பந்தய போட்டிகளில் அஜித்குமார் கலந்து கொண்டுள்ளார். இதற்கான பயிற்சியில் அவர் ஈடுபட்டிருந்தபோது கார் விபத்தில் சிக்கியது. 2-வது முறையாக ஏற்பட்ட இந்த விபத்திலும் அஜித்குமாரின் உயிருக்கு ஆபத்து எதுவும் ஏற்படவில்லை. அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார்.
போர்ச்சுக்கல் நாட்டில் கார் பந்தய மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அஜித்குமார் விபத்தில் சிக்கியதுடன் உடனடியாக அவரை பத்திரமாக மீட்டுள்ளனர். இதில் காரில் மட்டும் சேதம் ஏற்பட்டு உள்ளது.
இந்த விபத்து தொடர்பாக அஜித்குமார் அளித்துள்ள பேட்டி வருமாறு:-
எங்களுக்கு மீண்டும் நல்ல நேரமாக அமைந்துள்ளது. எனது கார் சிறிய அளவிலான விபத்தில் சிக்கியது. யாருக்கும் எதுவும் நடக்கவில்லை. மீண்டும் பெருமையை நிலை நாட்டுவோம் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
விபத்து ஏற்பட்டவுடன் எங்களுக்கு உறுதுணையாக இருந்த நண்பர்களுக்கு இந்த நேரத்தில் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.