மீண்டும் ரிலீசாகும் ரஜினியின் பாட்ஷா திரைப்படம்
- 1995ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியான படம் ரஜினியின் 'பாட்ஷா'.
- படத்தில் இடம் பெற்ற பாடல்கள், தேவாவின் பின்னணி இசை பட்டித் தொட்டி எங்கும் எதிரொலித்தது.
1995ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியான படம் ரஜினியின் 'பாட்ஷா'. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் நக்மா, ரகுவரன், விஜயகுமார், தேவன், ஜனகராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேலாக திரையில் ஓடி பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்ற படம் 'பாட்ஷா'. இந்த படம் 2017-ம் ஆண்டு மீண்டும் டிஜிட்டலாக ரீஸ்டோர் செய்து வெளியிடப்பட்டது.
சாதாரண மனிதன் சந்தர்ப்ப சூழ்நிலையால் தாதாவாக மாறுவதும் பிறகு அதில் இருந்து விலகி ஊருக்கு சென்று ஆட்டோ ஓட்டி பிழைப்பதும் அங்கும் சில பிரச்சினைகளை எதிர்கொள்வதையும் திரைக்கதையாக அமைத்து சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார். இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக ரகுவரன் நடித்திருந்தார். ரகுவரன் ஏற்று நடித்திருந்த மார்க் ஆண்டனி கதாபாத்திரம் இன்று ரசிகர்கள் மாஸ் வில்லனாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளது.
படத்தில் இடம் பெற்ற பாடல்கள், தேவாவின் பின்னணி இசை பட்டித் தொட்டி எங்கும் எதிரொலித்தது. இன்றுவரை மக்களால் கேட்கப்பட்டு வருகிறது. திரைப்படத்தில் இடம் பெற்ற வசனங்கள், ஒரு தடவை சொன்னா 100 தடவை சொன்ன மாதிரி. மாணிக் பாஷா, மார்க் ஆண்டனி என இன்றும் டிரேட் மார்க் வசனமாக அமைந்துள்ளது.
இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, பாட்ஷா படம் 30 ஆண்டுகள் நிறைவு அடைந்ததையொட்டி படத்தின் ரீ-ரிலீஸ் குறித்து பேசினார். அதாவது "படம் 4கே டிஜிட்டல் வடிவத்தில், டால்பி அட்மாஸ் சவுண்ட் தொழில்நுட்பத்துடன் உருவாகி வருகிறது. வருகிற ஏப்ரல் மாதம் பாட்ஷா படம் ரீ-ரிலீஸ் செய்யப்படும்" என்று தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.