ஆன்மிகம்

புத்துமாரியம்மன் கோவில் செடல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2017-08-04 10:33 IST   |   Update On 2017-08-04 10:33:00 IST
குறிஞ்சிப்பாடி புத்து மாரியம்மன் கோவில் செடல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
குறிஞ்சிப்பாடி பஸ் நிலையம் அருகே புத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆடி மாதந்தோறும் செடல் திருவிழா 10 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி காலையில் முத்துமாரியம்மனுக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் என்று பல்வேறு வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. பின்னர் காலை 7 மணிக்கு கோவில் முன்பு உள்ள கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்து, விழா கொடியேற்றப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பி அம்மனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து மாலையில் அம்மன் வீதிஉலா நடந்தது.

விழாவில் இன்று(வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு மயில் வாகனத்திலும், நாளை(சனிக்கிழமை) சரஸ்வதி அலங்காரத்திலும், நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நாக வாகனத்திலும் அம்மன் வீதியுலா வர இருக்கிறார். வருகிற 7-ந்தேதி(திங்கட்கிழமை) இரவு 7 மணிக்கு தெருவடைச்சான் உற்சவம் நடக்கிறது. அதை தொடர்ந்து தினசரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்து சாமி வீதி உலா காட்சியும், 11-ந்தேதி செடல் உற்சவமும் நடக்க உள்ளது. விழாவின் நிகழ்ச்சியான தேரோட்டம் 12-ந்தேதி நடக்க உள்ளது.

Similar News