திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா: மிதவையில் சுற்றி வந்துஅருளாசி வழங்கிய சுப்பிரமணிய சுவாமி
- மூன்று முறை தெப்பத்தை சுற்றி வந்து சுவாமிகள் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
- சூரசம்கார லீலை நடைபெற்று வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள்.
திருப்பரங்குன்றம்:
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் தெப்ப திருவிழா கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்கமயில் வாகனம், பச்சைக்குதிரை வாகனம், வெள்ளி பூத வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.
விழாவின் ஒன்பதாம் நாளான நேற்று தெப்பம் முட்டுத்தள்ளுதல் மற்றும் தெப்பத் திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று தெப்பத் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது.
முன்னதாக உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட அபிஷே கங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள தெப்பத்தில் எழுந்தருளினார்.
அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தெப்ப மிதவையில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருள பக்தர்கள் வடம் பிடித்து தெப்ப மிதவையை இழுத்தனர். மூன்று முறை தெப்பத்தை சுற்றி வந்து சுவாமிகள் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
இதே போல இன்று இரவில் மின்னொளியிலும் சுவாமிகள் தெப்பத்தில் எழுந்தருளி மூன்று முறை சுற்றி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தொடர்ந்து தங்க குதிரை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி சன்னதி தெருவில் சூரசம்கார லீலை நடைபெற்று வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள். விழா விற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா பாலாஜி, அறங்காவலர்கள் சண்முகசுந்தரம், மணிச் செல்வன், பொம்மதேவன் ராமையா மற்றும் கோவில் துணை ஆணையர் சூரிய நாராயணன் மற்றும் பணி யாளர்கள் செய்துள்ளனர்.