திருவானைக்காவல் கோவிலில் ஆடிப்பூர தெப்ப உற்சவம்
- தெப்பத்தில் சுவாமி, அம்பாள் ஏகசிம்மாசனத்திலும், பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளினர்.
- இந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவிலில் ஆடிப்பூர தெப்பதிருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் சாமியும், அம்பாளும் ஒவ்வொரு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடிப்பூர தெப்ப உற்சவம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி மாலை 5.30 மணியளவில் கோவில் வளாகத்தில் உள்ள சூரியதீர்த்த தெப்பகுளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி, அம்பாள் ஏகசிம்மாசனத்திலும், பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளினர்.
பின்னர் அவர்கள் 5 முறை தெப்பக்குளத்தில் வலம் வந்தனர். பின்னர் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி சுவாமிகள் அங்குள்ள மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்த தெப்ப உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.