தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்கும்- கார்த்தி சிதம்பரம் பேட்டி
மதுரை:
சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரம் மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாட்டின் பொருளாதாரம் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த நிலையில் ஊரடங்கு காரணமாக பொருளாதாரம் மேலும் இறங்கு முகத்தில் உள்ளது. ஊரடங்குக்கு முன்பே சீர்குலைந்திருந்த தொழில் துறையை சீரமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வில்லை. ஊரடங்கு காலத்திலும் மத்திய அரசு தொழில் துறைக்கு எந்த சலுகைகளையும் வழங்கவில்லை.
அமெரிக்காவில் ஜி.டி.பி .யில் 10 சதவீதம் நிவாரணமாக அளிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின்போது தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சரியாக கையாளவில்லை.
பூரண மதுவிலக்கு தமிழகத்தில் சாத்தியமில்லை. பூரண மதுவிலக்கு அமல் படுத்தப்பட்டால் தமிழகத்தில் கள்ளச்சாராயம் அதிகரிக்கும்.
எனவே மதுபானங்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்வதை அரசு முறைப்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் என நடிகர் ரஜினிகாந்த் கூறும் கருத்து உண்மைதான். தமிழகத்தில் அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது. காங்கிரஸ் கூட்டணியுடன் தி.மு.க.தான் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.