உள்ளூர் செய்திகள்

கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நாகை மீனவர்கள் மாயம்: தேடும் பணி தீவிரம்

Published On 2025-03-18 10:15 IST   |   Update On 2025-03-18 10:15:00 IST
  • ஒருவரை படகுடன் காணவில்லை, மற்றொருவர் நிலை தடுமாறி விழுந்தார்.
  • கப்பல் மூலம் தீவிரமாக தேடி வருகின்றனர்.

நாகப்பட்டினம்:

நாகை அக்கரைப் பேட்டை திடீர் குப்பத்தை சேர்ந்தவர் கண்ணதாசன் (வயது 57). இவர் நேற்று முன்தினம் இரவு தனக்கு சொந்தமான பைபர் படகில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றார்.

நேற்று கண்ணதாசன் கரை திரும்பி இருக்க வேண்டும், ஆனால், அவர் கரை திரும்பவில்லை. பைபர் படகுடன் மாயமாகி விட்டார். இதையடுத்து அக்கரைப்பேட்டையில் இருந்து 5 படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்று மாயமான கண்ணதாசனை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், நீண்ட நேரம் தேடியும் அவர் கிடைக்க வில்லை.

பின்னர், இதுகுறித்து மீன்வளத்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மீன்வளத்துறையினர் இந்திய கடற்படைக்கு தகவல் தெரிவித்ததன் பேரில், அவர்கள் கடலில் மாயமான கண்ணதாசனை கடற்படை கப்பல் மூலம் தேடி வருகின்றனர்.

இதேபோல், நாகையை அடுத்துள்ள நாகூர் சம்பா தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (52). இவர் கடந்த 14-ந்தேதி நாகை மீன்பிடி துறை முகத்தில் இருந்து விசைப்படகில் 11 மீனவர்களுடன் மீன்பிடிக்க கடலுக்கு சென்றார்.

அப்போது ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது மாணிக்கம் நிலை தடுமாறி கடலில் விழுந்துவிட்டார். இதனை கண்ட விசைப்படகில் இருந்த சக மீனவர்கள் மீன்வளத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைதொடர்ந்து, மீன்வளத்துறை தெரிவித்த தகவலின் பேரில் இந்திய கடற்படையினர் கடலில் தவறி விழுந்த மாணிக்கத்தை கப்பல் மூலம் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நாகை மீனவர்கள் அடுத்தடுத்து மாயமான சம்பவம் மீனவ கிராமங்களில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

Similar News