சத்குருவை சந்தித்த விவகாரம்.. அது என் தனிப்பட்ட நம்பிக்கை - டி.கே. சிவகுமார்
- சமூக வலைதளங்களில் வெளியாகும் கருத்துக்களுக்கு பதில் அளிக்க முடியாது.
- அதனை யாரும் வரவரேற்க வேண்டிய அவசியம் இல்லை.
கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி திருவிழாவில் மத்திய அமைச்சர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அதன்படி கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவகுமாரும் சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டார்.
ஈஷா மைய சிவராத்திரி விழாவில் டி.கே. சிவகுமார் கலந்து கொண்டது சர்ச்சையானது. இது குறித்து விளக்கம் அளித்த டி.கே. சிவகுமார் தனது தனிப்பட்ட நம்பிக்கை மற்றும் மைசூரை பூர்விகமாக கொண்ட சத்குரு தன்னை தனிப்பட்ட முறையில் அழைத்த காரணத்தால் நான் சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டேன் என்று கூறினார்.
இது குறித்து பேசிய டி.கே. சிவகுமார், "ஈஷா மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி கொண்டாட்டங்களில் நான் கலந்து கொண்டேன். அது என் தனிப்பட்ட நம்பிக்கை. சமூக வலைதளங்களில் வெளியாகும் கருத்துக்களுக்கு பதில் அளிக்க முடியாது. அதனை பா.ஜ.க. அல்லது மற்றவர்கள் யாரும் வரவேற்க வேண்டிய அவசியம் இல்லை.
"இது குறித்து ஊடகங்களும் விவாதிக்க வேண்டாம். இது முழுக்க முழுக்க என் தனிப்பட்ட நம்பிக்கை. சத்குரு மைசூருவை சேர்ந்தவர், அவர் என்னை அந்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்திருந்தார்," என தெரிவித்துள்ளார்.