நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மருக்கு 15 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பிய இந்தியா
- நிலநடுக்கம் அண்டை நாடான தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உணரப்பட்டது.
- மியான்மரில் நேற்று நள்ளிரவு 11.56 மணிக்கு மீண்டும் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
மியான்மர் மற்றும் தாய்லாந்து நாடுகளில் நேற்று நண்பகலில் திடீர் நிலநடுக்கம் உணரப்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவானது. மியான்மர் நாட்டின் நிலநடுக்க நகரமாக கருதப்படும் மண்டலே நகரத்தில் இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. அதைத்தொடர்ந்து 6.4 ரிக்டரில் மீண்டும் அதிர்வு ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின.
இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 150க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர். 730-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதைத்தொடர்ந்து மியான்மரில் நேற்று நள்ளிரவு 11.56 மணிக்கு மீண்டும் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மருக்கு 15 டன் நிவாரணப் பொருட்களை இந்தியா அனுப்பியது.
இந்திய விமானப்படை விமானம் மூலம் 15 டன் நிவாரணப் பொருட்கள் மியான்மருக்கு வெளியுறவுத்துறை அனுப்பி வைத்தது.
இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள பதிவில்,
இந்திய விமானப்படையின் விமானம் இன்று அதிகாலை 4 மணியளவில் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை நிலையத்திலிருந்து மியான்மருக்கு புறப்பட்டது. இந்த விமானத்தில் கூடாரங்கள், போர்வைகள், உணவு, தண்ணீர் சுத்திகரிப்பான்கள், சுகாதார கருவிகள், சூரிய விளக்குகள், அத்தியாவசிய பொருட்கள், அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மீட்புக்குழுவும் செல்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.