மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.22,000 கோடி மீட்பு: பிரதமர் மோடி பெருமிதம்
- இன்று இந்தியா என்ன நினைக்கிறது என்பதை உலகம் அறிய விரும்புகிறது.
- இந்தியா எப்போதும் மனிதகுலத்திற்கு முன்னுரிமை அளித்து வருகிறது என்றார்.
புதுடெல்லி:
புதுடெல்லியில் நடைபெற்ற தனியார் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
இன்று உலகில் அதிக இளைஞர்கள் கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. இந்த இளைஞர்களின் திறன் மேம்பட்டு வருவதுடன், புதுமையான கண்டுபிடிப்புகளை ஊக்குவித்து வருகின்றனர்.
இந்தியாவின் வெளிநாட்டு கொள்கையின் தாரக மந்திரமாக நாடே முதன்மை என்பது உள்ளது. இன்று உலகம் இந்தியாவை உற்றுநோக்கி பார்த்து வருகின்றன.
கடந்த 70 ஆண்டுகளில் உலகின் 11-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறிய இந்தியா, அடுத்த 7-8 ஆண்டுகளில் உலகின் 5-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறியது எப்படி?
சர்வதேச நிதியத்தின் புதிய தரவுகள் வந்து கொண்டு உள்ளன. கடந்த 10 ஆண்டுகளில், இந்தியா தனதுபொருளாதாரத்தில் 2 லட்சம் கோடி அமெரிக்க டாலரை சேர்த்து உள்ளது. 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்.
உலகம் இந்தியாவின் முயற்சிகள், புதுமைகளை மதிக்கிறது. இன்று இந்தியா என்ன நினைக்கிறது என்பதை உலகம் அறிய விரும்புகிறது. இந்தியா உலக நாடுகளில் பங்கேற்பது மட்டுமல்லாமல், எதிர்காலத்தை வடிவமைப்பதிலும் பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியா எப்போதும் மனிதகுலத்திற்கு முன்னுரிமை அளித்து வருகிறது.
பல்வேறு துறைகளில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. இது துவக்கம்தான். சர்வதேச அமைப்புகளில் இந்தியாவின் செல்வாக்கு முன் எப்போதையும் விட அதிகரித்து காணப்படுகிறது.
பொதுமக்களிடம் இருந்து கொள்ளையடித்தவர்கள், திருடப்பட்ட பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும். இரவும் பகலும் விமர்சிக்கப்படும் அமலாக்கத் துறையானது இதுவரை ரூ.22,000 கோடி பணத்தைக் கைப்பற்றி உள்ளது. இந்தப் பணமானது திருடப்பட்டவர்களிடம் கொடுக்கப்பட உள்ளது என தெரிவித்தார்.