ஊக்க மருந்து பயன்படுத்திய விவகாரம்: இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனைக்கு நான்கு ஆண்டு தடை
- தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தி இருப்பது தெரியவந்தது.
- தவறை ஒப்புக்கொண்டதாக புரிந்து கொள்ளப்பட்டது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் புனேயில் நடந்த அரை மாரத்தான் போட்டியில் பங்கேற்ற 20 வயது இந்திய நீண்ட தூர ஓட்டபந்தய வீராங்கனை அர்ச்சனா ஜாதவிடம் உலக ஊக்க மருந்து தடுப்பு அதிகாரிகள் சிறுநீர் மாதிரியை எடுத்தனர்.
இதனை பரிசோதனை செய்து பார்த்ததில் 'ஆக்சன்ட்ரோலோன்' என்ற தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த விவகாரம் குறித்து உலக தடகள நேர்மை கமிட்டி விசாரணை நடத்தியது. இது குறித்து தனது தரப்பு விளக்கத்தை அளிக்கும் படி அர்ச்சனா ஜாதவுக்கு பலமுறை நினைவூட்டல் இ-மெயில் அனுப்பப்பட்டது.
அதற்கு அவர் முறையான பதில் எதுவும் அளிக்கவில்லை. இதனால் அவர் விசாரணையின்றி தனது தவறை ஒப்புக்கொண்டதாக புரிந்து கொள்ளப்பட்டது. எனவே உலக தடகள நேர்மை கமிட்டி அர்ச்சனா ஜாதவ் போட்டியில் பங்கேற்க 4 ஆண்டுகள் தடை விதித்து உத்தரவிட்டது. இந்த தடை கடந்த ஜனவரி 7-ம் தேதியில் இருந்து அமலுக்கு வந்தது.
2024-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதியில் இருந்து அவரது போட்டி முடிவுகள் அனைத்தும் தகுதி நீக்கம் செய்யப்படுவதுடன், அந்த காலகட்டத்தில் அவர் வென்ற பதக்கங்களும் பறிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.