பாரிஸ் ஒலிம்பிக் 2024

பாலின சர்ச்சைக்கு மத்தியில் தங்கம் வென்ற இமானே கெலிஃப்.. அவதூறுகளை எதிர்த்து சட்டப் போராட்டம்!

Published On 2024-08-11 06:07 GMT   |   Update On 2024-08-11 06:07 GMT
  • இமானே கெலிஃப்புக்கு ஆண் தன்மைக்குரிய ஹார்மோன் அதிகம் இருப்பதாக ஏற்கனவே சர்ச்சை கிளம்பியது
  • இனவெறியுடன் அவதூறுகளை கட்டவிழ்த்து விட்டவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தண்டனை வாங்கித் தரப்படும்

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவடைகின்றன. தொடங்க நிகழ்ச்சியில் நடந்த டிராக் குவீன் நிகழ்ச்சி முதல் மல்யுத்த வீராங்கனை வினேஷ் தகுதிநீக்கம் வரை சர்ச்சைகளுக்குக் குறைவில்லாமல் இந்த வருட ஒலிம்பிக்கானது நிறைவடைகிறது. குறிப்பாக அல்ஜீரிய குத்துச்சண்டை வீராங்கனை இமானே கெலிஃப் -பின் பாலினம் குறித்த சர்ச்சை விவாதங்களுக்கு வழிவகுத்தது.

 

66 கிலோ உடல் எடைப்பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இத்தாலியின் ஏஞ்சலா கரினி, அல்ஜீரியாவின் இமானே கெலிப்புடன் மோதினார். இதில் இமானே விட்ட குத்தில் கரினியின் மூக்கில் இருந்து ரத்தம் வடிந்தது.

முதல் சுற்றில் 46 வினாடிகள் மட்டும் ஆட்டம் நடந்த நிலையில் கரினி, தொடர்ந்து விளையாட மறுத்தார்.தனது விளையாட்டு வாழ்க்கையில் இவ்வளவு கடினமான குத்துகளை யாரிடமும் வாங்கியதில்லை என்று கண்ணீர் மல்க கூறி வெளியேறினார்.

இதைத்தொடர்ந்து இமானே கெலிஃப்புக்கு ஆண் தன்மைக்குரிய ஹார்மோன் அதிகம் இருப்பதாக ஏற்கனவே சர்ச்சை கிளம்பியது. ஆனால் ஒலிம்பிக் கமிட்டி அவருக்கு துணை நின்றது. உலகம் முழுவதும் அவருக்கு எதிராகவும் ஆதரவாகவும் சமூக வலைதளங்களில் விவாதங்கள் நடந்தது.

இதற்கிடையில் நேற்று முன் தினம் நடந்த இறுதிப்போட்டியில், சீன வீராங்கனை யாங்க் லியூவை வீழ்த்தி தங்கம் வென்றார் இமானே கெலிஃப். அனைவரையும் போல் தானும் ஒரு முழுமையான பெண்தான் என்று வெற்றிக்கு பிறகு அவர் தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில், பாலின ரீதியாக சமூக வலைதளங்களில் தன்மீது அவதூறு பரப்பியவர்களை சட்டரீதியாக தண்டிக்க வலியுறுத்தி பிரான்ஸில் இமானே புகார் அளித்துள்ளார். மேலும் தனது வழக்கறிஞர் மூலம் சட்டப்பூர்வமான போராட்டத்தை அவர் முன்னெடுக்க உள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து அவரது வழக்கறிஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இமானே மீது இனவெறியுடன் பாலின ரீதியான அவதூறுகளை கட்டவிழ்த்து விட்டவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவதே தங்கள் நோக்கம் என்று தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News