மதுராந்தகம் ரெயில் நிலையத்தில் ரெயிலில் இருந்து தவறி விழுந்த என்ஜினீயரிங் மாணவர் பலி
- விபத்தில் நேதாஜியின் இடுப்புக்கு கீழ் உள்ள உடல்பாகங்கள் முழுவதும் நசுங்கி துண்டானது.
- ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுராந்தகம்:
மதுராந்தகம், வன்னியர் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கேசவமூர்த்தி. இவரது மகன் நேதாஜி (வயது 19).இவர் தாம்பரத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த 22-ந்தேதி காலை நேதாஜி வழக்கம் போல் மதுராந்தகம் ரெயில் நிலையத்தில் இருந்து கல்லூரிக்கு செல்ல வந்தார். அப்போது விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற பயணிகள் ரெயிலில் அவர் ஓடிச்சென்று ஏற முயன்றார். இதில் நிலை தடுமாறிய நேதாஜி ரெயிலுக்கும் தண்டவாளத்திற்கும் இடையில் சிக்கி விழுந்தார்.
அவர் மீது ரெயில் பெட்டிகள் ஏறி இறங்கின. இந்த விபத்தில் நேதாஜியின் இடுப்புக்கு கீழ் உள்ள உடல்பாகங்கள் முழுவதும் நசுங்கி துண்டானது.
பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய நேதாஜியை மீட்டு சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு கடந்த 2 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி நேதாஜி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.