கிண்டியில் புதிய பல்நோக்கு ஆஸ்பத்திரி கட்டுமான பணிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார்.
கிண்டியில் கட்டப்படும் பல்நோக்கு ஆஸ்பத்திரி ஜூன் மாதம் திறக்கப்படும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
- கிண்டியில் ரூ.230 கோடி செலவில் புதிய பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டும் பணியை கடந்த மார்ச் மாதம் 21-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- கிண்டி பிரதான சாலையில் இருந்து 3 இடங்களில் நுழைவு வாயில் அமைக்கப்படுகிறது.
சென்னை:
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று கிண்டி கிங் இன்ஸ்டியூட் வளாகத்தில் கட்டப்பட்டு வரும் பல்நோக்கு ஆஸ்பத்திரி கட்டுமான பணிகளை பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கிண்டியில் ரூ.230 கோடி செலவில் புதிய பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டும் பணியை கடந்த மார்ச் மாதம் 21-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
5.50 லட்சம் சதுர அடியில் 7 தளங்களுடன் 1000 படுக்கை வசதிகளுடன் இந்த ஆஸ்பத்திரி கட்டப்படுகிறது. வருகிற 2023 செப்டம்பர் மாதம் பணியை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த பணியை விரைவுபடுத்த கடந்த 2 மாதங்களுக்கு முன்பும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். அதன் விளைவாக பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகிற ஜூன் மாதம் இந்த ஆஸ்பத்திரி திறக்கப்படும்.
கிண்டி பிரதான சாலையில் இருந்து 3 இடங்களில் நுழைவு வாயில் அமைக்கப்படுகிறது. அனைத்து நவீன வசதிகளுடன் ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் இந்த ஆஸ்பத்திரி உதவிகரமாக இருக்கும்.
அதே போல் இந்த வளாகத்தில் முதியோருக்காக தனியாக ஒரு ஆஸ்பத்திரி கட்ட கடந்த 2015-ம் ஆண்டு மத்திய அரசு ரூ. 87 கோடி ஒதுக்கியது.
இந்த ஆஸ்பத்திரி கட்டுமான பணிகள் 2019-ல் முடிவடைந்த நிலையில் கொரோனா ஆஸ்பத்திரியாக மாற்றப்பட்டது. இப்போது மீண்டும் ரூ. 4 கோடி மதிப்பில் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டு பணிகள் முடிந்துள்ளன. விரைவில் திறக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் செந்தில்குமார், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் விசுவநாத், மருத்துவ கல்வி பணிகள் இயக்குனர் டாக் டர் சாந்திமலர் ஆகியோரும் உடன் இருந்தனர்.
கிண்டியில் புதிய பல்நோக்கு ஆஸ்பத்திரி கட்டுமான பணிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார்.