தமிழ்நாடு

மிச்சாங் புயல் எச்சரிக்கை: சென்னையில் கட்டுமான பணிகளை நிறுத்த மாநகராட்சி அறிவுறுத்தல்

Published On 2023-12-02 16:11 IST   |   Update On 2023-12-02 16:11:00 IST
  • புயல் கரையை கடக்கும் 5-ந்தேதி 4 மாவட்டங்களில் மிக மிக பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
  • புயல் காரணமாக ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் பலத்த தரைக் காற்று மணிக்கு 70 முதல் 80 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

சென்னை :

வங்கக்கடலில் 'மிச்சாங்' புயல் சின்னம் உருவாகி உள்ளது. இந்த புயலானது வரும் 5-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை நெல்லூருக்கும், மசூலிபட்டனத்துக்கும் இடையே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களிலும் நாளை, நாளை மறுநாள் (ஞாயிறு, திங்கள்) கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. புயல் கரையை கடக்கும் 5-ந்தேதி இந்த 4 மாவட்டங்களிலும் மிக மிக பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

புயல் காரணமாக ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் பலத்த தரைக் காற்று மணிக்கு 70 முதல் 80 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். சென்னையிலும் தரைக் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டும் பணி உள்ளிட்ட அனைத்து கட்டுமான பணிகளையும் நிறுத்தி வைக்குமாறு மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும் கட்டுமான பணிகளை நிறுத்துவதுடன் அதற்கான பொருட்களை தரை தளத்தில் பாதுகாப்பாக வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News