தமிழ்நாடு (Tamil Nadu)

பாடகர் மனோவின் மகன்களுக்கு முன்ஜாமின் வழங்கியது நீதிமன்றம்

Published On 2024-09-21 05:48 GMT   |   Update On 2024-09-21 05:48 GMT
  • சாஹிர், ரபீக் ஆகியோரை இருசக்கர வாகனத்தில் வந்த 10-க்கும் மேற்பட்ட கும்பல் ஒன்று கல், கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரி தாக்கியது பதிவாகி இருந்தது.
  • ஜாமின் வழங்க கோரி பூந்தமல்லி நீதிமன்றத்தில் பாடகர் மனோவின் மகன்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

பாடகர் மனோவின் மகன்களால் தாக்கப்பட்டதாக மதுரவாயல் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த கிருபாகரன் என்ற வாலிபரும், 16 வயது சிறுவன் ஒருவரும் கடந்த வாரம் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

மதுபோதையில் சிறுவர் உட்பட இரண்டு பேரை தாக்கியதாக மனோவின் மகன்கள் மற்றும் அவர்களது நண்பர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் விக்னேஷ், தர்மா ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், தலைமறைவாக உள்ள மனோவின் மகன்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு பாடகர் மனோவின் மகன்கள் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதில் பாடகர் மனோ மகன்கள் சாஹிர், ரபீக் ஆகியோரை இருசக்கர வாகனத்தில் வந்த 10-க்கும் மேற்பட்ட கும்பல் ஒன்று கல், கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரி தாக்கியது பதிவாகி இருந்தது.

மனோவின் மகன்களும் எதிர்தரப்பால் தாக்கப்பட்ட வீடியோ வெளியான நிலையில், சம்பவம் நடந்த அன்று தன்னையும், தனது மகன்களையும் ஆயுதங்களைக் கொண்டு சிலர் தாக்கியதாக பாடகர் மனோவின் மனைவி ஜமீலா வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் தற்போது வளசரவாக்கம் போலீசார் தாக்குதல் நடத்திய 8 பேர் மீது ஆயுதங்களை கொண்டு தாக்குதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அந்த கும்பலை தேடி வருகின்றனர்.

இதனிடையே முன் ஜாமின் வழங்க கோரி பூந்தமல்லி நீதிமன்றத்தில் பாடகர் மனோவின் மகன்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், பாடகர் மனோவின் மகன்களான சாஹிர், ரஃபீக் ஆகியோருக்கு முன் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

30 நாட்கள் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையோடு பூந்தமல்லி நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கி உள்ளது.

Tags:    

Similar News