தமிழ்நாடு

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்ததை எதிர்த்த வழக்கு தள்ளுபடி- ஐகோர்ட்

Published On 2024-12-19 06:34 GMT   |   Update On 2024-12-19 06:34 GMT
  • மனுவை பரிசீலித்து நான்கு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு இந்த ஐகோர்ட் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
  • இந்த வழக்கு விளம்பரத்துக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை:

சென்னை ஐகோர்ட்டில், அ.தி.மு.க.வைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் மற்றும் கே.சி.சுரேன் பழனிசாமி ஆகியோர் தொடர்ந்துள்ள வழக்கில், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. தொண்டர்கள், கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதை தடுக்கும் வகையில், கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த பொதுக்குழுவில், கட்சியின் சட்ட விதிகள் திருத்தப்பட்டது.

இதை எதிர்த்து வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் வழக்கின் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்ற நிபந்தனையுடன், கட்சியின் திருத்தப்பட்ட விதிகளுக்கும், பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும் அங்கீகாரம் அளித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கட்சியின் எதிர்காலம் மற்றும் தொண்டர்களின் உரிமையை பாதுகாக்கும் வகையில், திருத்தப்பட்ட கட்சி விதிகளையும், எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராகவும் அங்கீகரித்ததை மறுபரிசீலனை செய்ய கோரி தேர்தல் ஆணையத்திடம் மனுக்கள் அளித்துள்ளோம்.

அந்த மனுக்களின் அடிப்படையில் நேரில் விளக்கம் அளிக்கவும், வழக்கு ஆவணங்களை அளிக்கவும் வாய்ப்பளித்து, அவற்றை பரிசீலிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் சி.குமரப்பன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, நிலுவை வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கூடாது என்ற கோரிக்கையுடன் அளித்த மனுவை பரிசீலித்து நான்கு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு இந்த ஐகோர்ட் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், இந்த வழக்கு விளம்பரத்துக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனால் தள்ளுபடி செய்கிறோம் என்று உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News