
தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது
- 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுத இருக்கிறார்கள்.
- மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடக்கிறது.
தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (ஏப்ரல்) 15ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தேர்வை 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 பள்ளி மாணவர்கள், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 பள்ளி மாணவிகள், 25 ஆயிரத்து 888 தனித்தேர்வர்கள், 272 சிறைவாசிகள் என மொத்தம் 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுத இருக்கிறார்கள்.
இதற்காக மாநிலம் முழுக்க 4 ஆயிரத்து 113 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு அறை கண்காணிப்பாளர் பணியில் 48 ஆயிரத்து 426 பேரும், தேர்வு கண்காணிக்கும் பணியில் 4 ஆயிரத்து 858 பேரும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முதல் நாளான இன்று தமிழ் மற்றும் இதர மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடக்கிறது.
காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த தேர்வு பிற்பகல் 1.15 மணி வரை நடைபெற உள்ளது. தேர்வின் முதல் 10 நிமிடம் வினாத்தாளை வாசிப்பதற்கும், அடுத்த 5 நிமிடம் சுய விவரங்களை விடைத்தாளில் பதிவு செய்வதற்கும், 10.15 மணி முதல் 1.15 மணி வரை தேர்வு எழுதுவதற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தேர்வு கடந்த 3ம் தேதி தொடங்கி கடந்த செவ்வாய் கிழமை (மார்ச் 25) நிறைவு பெற்றது. இதேபோல், பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத் தேர்வு கடந்த 5ம் தேதி தொடங்கிய நிலையில், அவர்களுக்கு நேற்றுடன் (வியாழக்கிழமை) முடிவடைந்தது.