அனைத்துக்கட்சி கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் பங்கேற்காது- ஜி.கே.வாசன் அறிவிப்பு
- மும்மொழிக் கொள்கை மற்றும் நீட் தேர்வுக்கு பெரும்பாலான பெற்றோர்களும், மாணவர்களும் ஆதரவாக இருக்கிறார்கள்
- தமிழ்நாட்டிற்கு தொகுதிகள் குறையும் என்று கூறுவது உண்மை நிலைக்கு எதிரானது.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 5-ந்தேதி நடைபெற உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நேற்று தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், பா.ஜ.க.வைத் தொடர்ந்து அதன் கூட்டணிக் கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் தமிழ்நாடு அரசின் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
தமிழக அரசு கூட்டியிருக்கும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) பங்கேற்காது.
மும்மொழிக் கொள்கை மற்றும் நீட் நுழைவுத் தேர்வு சம்பந்தமான மத்திய அரசின் கல்வி நிலைப்பாட்டிற்கு பெரும்பாலான பெற்றோர்களும், மாணவர்களும் ஆதரவாகவே இருக்கிறர்கள்.
தொகுதி மறுசீரமைப்பு குறித்து மத்திய அரசின் எந்த அதிகார பூர்வமான அறிவிப்பும் வராத நிலையில், தமிழ்நாட்டிற்கு தொகுதிகள் குறையும் என்று கூறுவது உண்மை நிலைக்கு எதிரானது.
கடந்த வாரம் 25.02.2025 தமிழகத்திற்கு வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர், தொகுதி மறுசீரமைப்பில் எந்த நிலைப்பாட்டையும் மத்திய அரசு இதுவரை எடுக்கவில்லை என்றும் அப்படி இருந்தாலும் கூட தமிழகத்திற்கு பாராளுமன்ற தொகுதிகள் கூடுமே தவிர குறையாது என்றும் தெளிவுப்பட கூறியிருக்கிறார்கள்.
தனிழகத்தில் தொடர்ந்து வளர்ந்துகொண்டு இருக்கும் பல்வேறு தீர்க்கப்படாத பிரச்சனைகள் இருக்கும் பொழுது, அதையெல்லாம் மக்களிடம் இருந்து திசைத் திருப்பவே இக்கூட்டம் நடைபெறுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் கருதுகிறது.
எனவே வருகிற 5-ஆம் தேதி நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.