தமிழ்நாடு

இரும்புக்கரம் என்று வாய் கிழிய வீரவசனம் பேசினால் மட்டும்... விவசாயத் தம்பதியினர் படுகொலைக்கு இபிஎஸ் கடும் கண்டனம்

Published On 2025-03-13 14:33 IST   |   Update On 2025-03-13 14:33:00 IST
  • நாட்டில் நடக்கும் கொலைகளை தனிப்பட்ட பிரச்சனைகள் என்று கடந்து செல்ல மட்டும் தானே முனைகிறீர்கள்.
  • விவசாயத் தம்பதி கொலையில் தொடர்புள்ளோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்.

தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே வயதான விவசாயத் தம்பதியினர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

இதே திருப்பூர் மாவட்டத்தின் பல்லடம் பகுதியில், இதேபோல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்ததும், அப்போது அந்த இறந்தவரின் மனைவி, உங்கள் அமைச்சரை சரமாரியாக கேள்வி கேட்டு சாடியதெல்லாம் நினைவில் இருக்கிறதா? இல்லையா?

திருப்பூர் பகுதியில் இது போன்ற தொடர் குற்றங்கள் அதிகம் நடந்து கொண்டிருக்கிற நிலையில்,

அன்றே இந்த விடியா திமுக அரசும் முறையான நடவடிக்கை எடுத்திருந்தால், இன்று இந்த கொலை நடந்திருக்குமா?

அது சரி- நாட்டில் நடக்கும் கொலைகளை "தனிப்பட்ட பிரச்சனைகள்" என்று கடந்து செல்ல மட்டும் தானே முனைகிறீர்கள்..

"வருமுன் காப்பதும் இல்லை- பட்டும் திருந்துவது இல்லை" என்ற நிலையில் சட்டம் ஒழுங்கை தறிகெட்ட நிலைக்கு இட்டுச் சென்று, மக்களின் உயிரைக் கையில் பிடித்துக்கொள்ளும் அளவிற்கு தனிமனித பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ள ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

விவசாயத் தம்பதி கொலையில் தொடர்புள்ளோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்.

தனது ஆட்சியில் நடக்கும் அனைத்து தவறுகளையும், எதை போட்டு மறைக்க என தெரியாமல், யாரொ கதை வசனம் எழுதி கொடுத்த திசை திருப்பும் நாடகங்களில் நடிக்க கிளம்பியிருக்கும் முதலமைச்சர் அவர்களே, வெற்று விளம்பரங்களால் மக்கள் வயிற்றை நிரப்ப முடியாது,

சர்வாதிகாரி என்று தன்னை தானே சொல்லி கொண்டால் மட்டுமே சட்டம் ஒழுங்கை சீர் செய்து விட முடியாது. இரும்புக்கரம் என்று வாய் கிழிய வீரவசனம் பேசினால் மட்டும் தனி மனித பாதுகாப்பை உறுதி செய்து விட முடியாது,

விடியா ஆட்சியில் மீதம் இருக்கின்ற சிறிது காலத்திலாவது, மக்கள் மீது உண்மையான அக்கறையுடன் ஆட்சி செய்து, சட்டம் ஒழுங்கில் கவனம் செலுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்க பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News