நீர்வரத்து இல்லாததால் அமராவதி அணையில் சரியும் நீர்மட்டம்
- அணையில் மொத்தமுள்ள 90 அடியில் 51.12 அடி நீர்மட்டம் உள்ளது.
- அணைக்கு வினாடிக்கு 74 கன அடி நீர்வரத்தும், அணையில் இருந்து பாசனத்திற்கு 170 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை வாயிலாக திருப்பூர், கரூர் மாவட்டத்தில் உள்ள 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கல்லாபுரம், ராமகுளம், குமரலிங்கம், கண்ணாடிபுத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர் ஆகிய 8 ராஜவாய்க்கால் பாசனத்திற்குட்பட்ட 7,520 ஏக்கர் நிலங்களில் இரண்டாம் போகம், சம்பா பருவ நெல் சாகுபடிக்காக வருகிற 30-ந்தேதி வரை அணையில் இருந்து நீர் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் புதிய ஆயக்கட்டு பாசனத்தின் கீழ் பயன்பெறும், 25,250 ஏக்கர் நிலங்களில் உள்ள நிலைப்பயிர்களை காப்பாற்றும் வகையில் வருகிற 20-ந்தேதி வரை நீர் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் அமராவதி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வறட்சி நிலை காணப்படுவதால் கடந்த 2 மாதமாக அணைக்கு நீர்வரத்து இல்லை. அணையில் இருந்து தொடர்ந்து பாசனத்திற்கு நீர் திறக்கப்படுவதால் அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. அணையில் மொத்தமுள்ள 90 அடியில் 51.12 அடி நீர்மட்டம் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 74 கன அடி நீர்வரத்தும், அணையில் இருந்து பாசனத்திற்கு 170 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
தாராபுரம் நகராட்சி மற்றும் வழியோர கிராமங்கள் குடிநீர் தேவைக்காக அணை நீராதாரத்தை நம்பியுள்ளதால், கோடை காலத்தை சமாளிக்க முடியாத சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே அணை நீர் நிர்வாகத்தை முறைப்படுத்தவும், பாசன நிலங்களுக்கு உயிர்த்தண்ணீர் மற்றும் குடிநீர் தேவைக்காக இருப்பு வைக்க வேண்டும் என 2 மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.